• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 15

Vishakini

Moderator
Staff member
பாகம் 15.
பரந்து விரிந்து நின்ற மாமரத்தின் இலைகள் சலசலவென்று அசைந்து ஒரு சங்கேத மொழி பேசியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக காய்த்திருந்த மாங்காய்கள் காற்றில் அசைந்து மகிழ்ந்தது. மாவிலைகளை அசைத்துச் செல்வதில், காற்று அடைந்த ஆனந்தம், சிறு ஒலியோடு வெளிப்பட்டது.
விசாலமான தோட்டத்தில் உள்ளே வருகிற படலையில் இருந்து வரிசையாக, பாதையை அழகுபடுத்த பூமரங்கள் நடப்பட்டிருந்தன. அந்தப் பாதை பிரிந்து ஒன்று வீட்டு வாசலுக்கும் மற்றது, தோட்டத்திற்கும் வந்தது.
முன்புறம் மலர்ச்செடிகளும் பெருமரங்களும் நின்றன, அவற்றின் பின்னால்தான், காய்கறிச்செடிகள், மூலிகைச் செடிகள் என வரிசையாக நடப்பட்டிருந்தன.
முடிவு வரை கண்களை மேயவிட்ட இசைநிலா,
மாமரத்தின் அடியில் வரிசை கட்டிச் சென்ற எறும்புகளின் நூதனத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
~இந்த எறும்புகள் தான் எவ்வளவு சுறுசுறுப்போடு நடைபோடுகின்றன....| தனக்குள்ளே நினைத்தவளாக,
மாமரத்திற்கு சற்றுத்தள்ளி நின்றிருந்த முல்லைக்கொடியை சற்றே அசைத்து, அதிலிருந்து விழுந்த பூக்களை கைகளில் ஏந்தியதோடு மண் தரையில் அமர்ந்திருந்து, விழுந்திருந்த பூக்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி உள்ளங்கையில் குவித்துவைத்து அழகு பார்த்தாள்.
பிறகு அவற்றை மூக்கின் அருகில் கொண்டு சென்று முகர்ந்து பார்த்துவிட்டு, அருகில் இருந்து அந்த நீர்த்தொட்டியில் கொட்டினாள்.
அவளது நளினங்களைத் தூத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த இளஞ்செழியன் நடந்து வந்தான்.
அருகில் யாரோ வருவது போன்ற உணர்வு உந்த, திரும்பினாள் இசைநிலா, மெல்லிய செருமலோடு புன்னகைத்தான் இளஞ்செழியன்.
பதிலுக்கு புன்னகைக்கலாமா. வேண்டாமா என்ற எண்ணத்தில் அவனையே பார்த்தாள்,
அந்த பார்வை சொன்ன சேதியின் வேகத்தில், மீண்டும், புன்னகைத்தான். அவளும் சின்னதாய் ஒரு முறுவலை வெளிப்படுத்திவிட்டு, அங்கிருந்து நகரமுற்பட, "நில்லுங்கோ...... நான் உங்களை கடிச்சுச் சாப்பிடமாட்டன், பயப்படாதேங்கோ" என்றான்.
பதில் சொல்ல வழிதெரியாது, அவள், அவனையே பரிதாபமாய் பார்க்க, அவளது அந்த பொருள் விளங்கா பார்வையில் குழம்பித் தவித்தான் இளஞ்செழியன்.
ஒரு போதுமே தன்னுடைய குறையை குறையாக எண்ணாது, தன்னம்பிக்கையோடு வாழும் அவளுக்கு, ஏனோ, இன்று அவனுடன் பேசமுடியாத போது தன்னுடைய குறை மிகப்பெரிதாகத் தோன்றியது.
கண்களில் கண்ணீர் கூட வந்துவிடும் போல தோன்ற, அங்கிருந்து நகர முற்பட்டாள், அவளது செய்கை கோபத்தை உண்டுபண்ண,
"என்ன பெண் நீங்கள், ஒரு மனுசர் கதைச்சா, திருப்பி கதைக்கவேணும் என்ற சின்ன பழக்கம் கூட இல்லையா?"
அவனது வார்த்தைகளின் வேகத்தில் அவனுக்கு கோபம் வந்துவிட்டதைப் புரிந்துகொண்டவள், பேசாமல் விலத்திக்கொண்டுசென்று சற்று தள்ளி நின்றுவிட்டாள்.
~சே......சரியான திமிர் பிடிச்ச பெண் போல..| என அவளுக்கு கேட்காதபடி மனதிற்குள் முணுமுணுத்தவன், போகத்திரும்பினான்,
அப்போது, தூரத்தில் பூவிழி வருவதைக்கண்டதும் தேநீர் தனக்கும்தான் என்பதை எண்ணி அவ்விடத்திலேயே நின்றான்,
முதலில் அவளருகே சென்ற பூவிழி, அவளைத் தட்டி, தேநீர் குவளையை கொடுக்க, அழகான சின்னப் புன்னகையோடு அதனை வாங்கியவள், அதே மென் சிரிப்புடன்,
கைகளில் சைகையால் நன்றி சொல்ல, பூவிழியும் மீண்டும் அவளிடம் ஏதோ கேட்க, அவள் சைகையிலேயே பதில் சொன்னாள்.
வழி விரித்தபடி பார்த்தான் இளஞ்செழியன்.
அவளிடம் கொடுத்துவிட்டு அவனருகில் வந்தவள்,
"என்ன இளா, என்ன யோசனை?" என்றதும்
"பூவிழி...அம்மா.., அது...அந்தப் பெண்?"
"எங்கட பத்மினி அம்மாவின்ரை மருமகள், நேற்று விருந்து நடக்கும்போது வந்தாளே, அவளுக்கு பன்னிரெண்டு மணிக்கு மேலதான் நேர்முகத்தேர்வு எண்டு சொன்னா, இன்னும் எந்த இடம் எண்டுகூட பாக்கேல்ல, நான்தான் கூட்டிக்கொண்டுபோகவேணும், அவளுக்கு இங்க யாரையும் தெரியாது இல்லையா, அதுதான்..." என்றாள் கோர்வையாய்..
"அது சரி.....அவ...வாய்....வாய்....பேச....." இவனுக்கு பேச்சு வரவில்லை.
"ம்...அவ வாய் பேசமாட்டா, காதும் கேட்காது, ஆனா நல்ல கெட்டிக்காரி, கலைநயம் நிறையவே இருக்கு, அதோடை, தையல், வரைதல் என்று எல்லாமே வரும்...என்ற பூவிழியிடம்...
"அப்பிடியா....அதனாலதான்...... இவ்வளவு நேரம்....."
"என்ன இவ்வளவு நேரம்.....?"
"அது ஒண்டும் இல்லை, அப்ப எப்பிடி கதைக்கிறதுக்கு பதில் சொல்றா?"
"எதிரில நிக்கிறவர்களுடைய வாய் அசைவை வைச்சு அவையள் என்ன கதைக்கினம் எண்டு கணிச்சிடுவா,"
"ஓ...... "
ஏனோ...இதுவரை தாக்காத ஒரு வலி மெல்லிய கோடாய் இதயத்தில் ஊடுருவியது இளஞ்செழியனுக்கு.
தானே பேசும் சக்தியை இழந்துவிட்டது போல மனதில் ஒரு பரிதவிப்பு. மனதால் நேசித்தவளை காயப்படுத்திவிட்டோமே என்ற குற்றஉணர்வு...
~சே.....மடத்தனம் பண்ணிவிட்டேனே| என மனம் கொதித்தது.
~பேச முடியாத ஒரு பெண்ணிடம் போய் பேசு, பேசு என்று வற்புறுத்தியது எவ்வளவு பெரிய தவறு, அது எத்தகைய முட்டாள்தனம்?|
~பாவம்...அவள்......அந்தக் கணத்தில் எப்படித் தவித்திருப்பாள்?| உள்ளம் தவிக்க நின்றிருந்தவனைக் கண்ட பூவிழி,
"என்ன இளா, என்ன விசயம்?" என்றாள்.
"அதொண்டு இல்லை பூவிழி அம்மா... அவ வாய் பேசமாட்டாள் எண்டு தெரியாம நான் பாட்டுக்கு ஏதேதோ கதை கேட்டுக்கொண்டு நிக்கிறன், பாவம் அவ, மௌனமா நிண்டிட்டா, என்ன நினைச்சாவோ தெரியேல்ல" தந்தியடித்தது வார்த்தைகள் இவனுக்கு.
"அவ அப்பிடி எல்லாம் ஒண்டும் நினைக்கமாட்டா, இசை நல்ல பிள்ளை, தவிர இதெல்லாம் அவ பழகின விசயங்கள் தானே, எல்லாத்தையும் தாங்கிறதுக்கு தயாரான தைரியமான பெண் அவ, தனக்கு இப்பிடி ஒரு குறை இருக்கிறதா அவள் எப்பவும் கவலைப்பட்டதே இல்லை எண்டு பத்மினி அம்மா சொல்லியிருக்கிறா, நான் இசைக்கு சொல்லுறன்,
இளா...இசைதான் அந்தக் குடும்பத்தினுடைய நம்பிக்கை, ஏலாத ஒரு தம்பி இருக்கிறானாம், அவனை குணப்படுத்தவேணும் எண்டுதான், இவ்வளவு தூரம் வேலைக்காக இசை வந்ததே, எப்பிடியாவது அந்த வேலை கிடைச்சிட்டுது எண்டால் பரவாயில்லை, ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்றுக்குத்;தான், விண்ணப்பிச்சிருக்கிறாவாம், பாப்பம்...| என்றவள் திரும்பி நடக்க ஆரம்பிக்க,
~பெண் பிள்ளைகள் குடும்ப பாரத்தை தங்கட தோளிலை சுமக்கிறதென்றது, சாதாரண விசயம் இல்லைதான்..பூவிழியம்மா,..அந்த வேலை கிடைக்கும்..| என்றான் இளஞ்செழியன் ஏதோ யோசனையுடன்.
இருவரும் கதைத்துக்கொண்டிருக்கும் போதே அருகில் வந்த இசைவிழி, இளஞ்செழியனைப் பார்த்து மெல்லிய முறுவலை உதிர்த்துவிட்டு, பூவிழியோடு கூட நடந்தாள்.
நேற்று மாலைப் பொழுதில் கண்டதில் இருந்து, ஒரு சிறு தேனீ போல அவனுடைய மனதில் அவள் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறாள்...என்பது அவனுக்கு மட்டும்தானே தெரியும்.
வாய் பேசமாட்டாள் என்பது பெரிய குறையா என்ன...அவள் பேசாவிட்டால் என்ன...அவன் பார்த்துக்கொள்ளுவான்தானே...
அவனுடைய தேவதையாய்...அவனுடைய திருமதியாய்..அவள் கூடவே இருந்தால் போதுமே...அவனுக்கு அதைவிட வேறெதுவும் தேவையில்லை...
திருமணத்திற்கு அடிப்படையான விசயம், அன்பும் புரிதலும்தானே, அவனுக்கு அவளிடம் இரண்டும் இருக்கிறது...அதுபோதும்...எண்ணங்கள் எங்கெங்கோ பறந்து திரிந்தது. கற்பனைகள் சிறகு விரித்துக்கொண்டிருந்தன.
குளிர்ந்து கிடக்கும் தந்திக்கம்பிகளை சூடேற்றி சூடேற்றி சுருதி கூட்டுவது வெட்கம் என எழுத்தாளர் காஞ்சனா ஜெயதிலகரின் புத்தகத்தில் அவன் வாசித்திருக்கிறான்.
அந்த வெட்கத்தை அவளிடம்தான் கண்டுகொண்டான்.
தன்னை ஒரு இறுக்கமான பெண்ணாக காட்டிக்கொள்ள அவள் முற்பட்டபோதும், ஏனோ, அந்த வெட்கம் அவளறியாமலே அவளிடம் வெளிப்பட்டதை இளஞ்செழியன் கண்டுகொண்டானே,
அவள் மீது துளிர்த்த இளம்பிரியம், அவனுக்கும் சிறு வெட்கத்தைக் கொடுத்தது. மனம் மறைவானதென்றாலும்; ஆண,; பெண் இருவருக்கும் உணர்வுகள் பொதுவானவைதானே, ஆண்கள் வெட்கப்படக்கூடாதா...
தானே தன்னைக்கேட்டுக்கொண்டான்..
பெட்டிக்குள் கிடக்கிற நண்டைப்போல எண்ணங்கள் அங்கும் இங்கும் நடைபோட்டன.
ஒரு மலரைப்போல எவ்வளவு இயல்பும் இனிமையுமாய் இருக்கிறாள்...அதுவும் பெயர் கூட சங்கீதமாகத்தானே இருக்கிறது...
இசைநிலா...அடடா...அவன் நேசிக்கிற இசையை அவள் தன் பெயரில் அல்லவா கொண்டிருக்கிறாள்...
அவன் முடிவு செய்துவிட்டான்..அவள்தான் தன் சரிபாதி என்பதை...
ஒற்றையாய் தூக்கி கட்டியிருந்த தலைமுடி, இடைக்கும் கீழே நீண்டிருக்க, அவள் நடந்து செல்லும் போது அங்கும் இங்குமாய் அசைந்த அந்த பின்னல் முடியில் இவன் மனமும் ஆடிக்கொண்டிருந்தது சுகமாய்.....
 
Top Bottom