• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 18

Vishakini

Moderator
Staff member
பாகம்18.

காலை வேளையில், வைத்தியசாலைக்குச் சென்று கையொப்பமிட்டுவிட்டு விடுப்பு அனுமதி பெற்று, சற்று நேரத்தில் திரும்பிய பூவிழி, தோட்டத்து மரத்தடியில் அமர்ந்திருந்த இளஞ்செழியனைக் கண்டதும்,
"என்ன இளா வேலைக்கு போகவில்லையா" என்றாள்.
"இல்லை, பூவிழிஅம்மா, இண்டைக்கு வேலைக்கு விடுப்பு...|
"ஓ.....சரி.. சரி, காலையிலேயே வெளிக்கிறனீங்கள்..மணி ஒன்பதாகிழயும் தோட்டத்திலை நிக்கிறியளே எண்டுதான் கேட்டன், ஏன் இளா, உடம்புக்கு ஏதேனும் சிரியில்லையே...?|
~சீச்சீ..இல்லை இல்லை.....நாங்கள் நண்பர்கள் எல்லாருமாந் சேர்ந்து ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஆரம்பிச்சிருக்கிறம் தானே..அதுக்கு இண்டைக்கு பண்யாளர்களுக்கான ஆட்கள் தெரிவு இருக்கு, அதுதான்..|
ஓ..அண்டைக்கு சொன்னனீ)ங்கள்தானே இளா, நானும் மறந்து போனன், அந்த நிறுவனம் எந்த இடத்திலை இருக்கு இளா?
~நெல்லியடி, பருத்தித்துறை வீதி...ஏன்...கேக்கிறியள்,?|
~இல்லை...இசையின்ர படிவத்தில கூட அப்பிடித்தான் இருந்தமாதிரி கிடக்கு, வாறன் ...| என்றுவிட்டு அவசரமாய் உள்ளே சென்று இசைநிலாவிடம் நேர்காணல் அனுமதிக் கடிதத்தை வாங்கிவந்தவள்,
"இந்த முகவரியா?" என்றதும் ஆச்சரியமாய் பார்த்த அவன்,
~அட, ஓமோம்....வந்த விண்ணப்பங்களைப் பாத்து நேர்காணல் கடிதங்கள் எல்லாம் உவங்கள்தான் அனுப்பினவங்கள், நான் பாக்கேல்ல!| என்றான்.
~அடடா...அவனுடைய நிறுவனத்தில் தானா அம்மணி வேலை செய்யப்போகிறா..சரி..சரி..என்ரை பொறுப்பை எல்லாம் அவவிட்டையே குடுக்கலாம்..|ஜிவ்வென்று காற்றில் பறப்பது போல இருந்தது இளஞ்செழியனுக்கு.
அவசரமாய் இளஞ்செழியனைப் பார்த்த பூவிழி, ~இளா, தெரிஞ்ச கம்பனி, நீங்கள்தான் முதலாளி, இதெல்லாம் தெரிஞ்சா இசை நிச்சயமா வேலையை வேண்டாம் எண்டு சொல்லிப்போடுவா, இசை, ......தன்னுடைய திறமைக்கு வேலை கிடைக்கவேணும் எண்டு யோசிக்கிற ஆளாம், பத்மினியம்மா சொல்லித்தான் எனக்கும் தெரியும், பாவம்..தன்னிலை இருக்கிற குறைக்காக மற்றவை தன்னிலை இரக்கப்பட்டு எதுவும் செய்யக்கூடாது எண்டு நினைக்கிறது நியாயம்தானே, அதனாலை..|
~ஓமோம்.....விளங்குது, நான் அதைப்பற்றி ஒண்டும் சொல்லேல்ல, உங்களோட வாறமாதிரி வாறன், பிறகு ஆறுதலா சொல்லிக்கொள்ளுவம்"
"சரி...சரி.....எனக்கென்னவோ இசைநிலாவில நிறைய மதிப்பும் மரியாதையும் வந்திட்டுது, வறுமையோடயும் போராடி, தன்னுடைய குறையை ஒரு குறையாகவே நினைக்காமல் தைரியமா, படிச்சு முடிச்சு, அதிலயும் கெட்டிக்காரியா சாதிச்சு நிமிர்ந்து நிக்கிறா, அவளின்ர குடும்ப நிலைமை சரியான கஸ்ரம்தானே, இந்த வேலை கிடைச்சிட்டா நிறைய உதவியா இருக்கும், அதனாலதான் அப்பிடி சொன்னன், உங்களுக்கு ஒண்டும் குறையில்லையே....."
~இப்பிடி தன்னம்பிக்கை உள்ள பெண்களுக்கு கிடைக்கிற வாய்ப்புகள் தான், அவையின்ரை சாதனைக்கு பாலமாக இருக்கும்... என்ன பூவிழியம்மா நீங்கள், என்னை அப்பிடி உணர்வுகள் புரியாதவன் எண்டு நினைச்சிட்டீங்களா, எனக்கும் இசையின்ர நிலை நல்லாவே புரியுது......|
~ஐயைய்யோ...நான் அப்பிடிச் சொல்லேல்ல, பொதுவா கேட்டன், அப்பா வளர்த்த பிள்ளைகள் நீங்கள், எப்பிடி பிறரின்ர உணர்வுகள் புரியாதவர்களா இருப்பீங்கள்|
பெருமையாய் சிரித்தபடி எழுந்துகொண்டவன், ~சரி....நான் போய் தயாராகிறன், நீங்களும் இசையும் தயராகுங்கோ....|என்றுவிட்டு தன்னுடைய அறைக்கு நடந்தான்.
அரைமணித்தியாலம் கடந்திருக்கும், கீழே வந்தவன், பூவிழியையோ, இசைநிலாவையோ காணாது அங்கும் இங்கும் பார்த்தான், அவனது பார்வையின் தேடலை புரிந்துகொண்ட பத்மினியம்மா, "இளாத்தம்பி....அவையள் அங்க தோட்டத்தில நிக்கினம், நீங்கள் வந்த உடனே கூப்பிடச் சொன்னவை, இதோ.....கூட்டிக்கொண்டு வாறன்.....|.என்றவர், மெல்லத் திரும்பி,
~பிள்ளை நேர்முகத்தேர்வுக்குப் போறது தம்பியின்ரை நிறுவனம்தான் எண்டு பூவிழி சொன்னவா, இசை நல்ல கெட்டிக்காரி, என்ன, .... வாய் பேசமாட்டா, அவளின்ர திறமையை பாத்து வேலை குடுத்தியள் எண்டால்......|
"நான்...... "....அவன் இழுக்கவும்
"தம்பி.... நான் இசையிட்ட சொல்லேல்ல......நான் கேட்டது தெரிஞ்சாலே அவளுக்குப்பிடிக்காது, ஆனால்..|
"ம்......எனக்கு விளங்குது பத்மினியம்மா..நீங்கள் யோசிக்காதேங்கோ..இசைக்கு நல்ல திறமை இருக்கு, அதோடை, தன்ரை திறமைக்கு வேலை கிடைக்கவேணும் எண்டு நினைக்கிறது நல்ல விசயம்தானே, அதுவும் இந்தக்காலத்திலை அப்பிடி நினைக்கிற ஆக்கள் குறைவு....நான் எல்லாம் பாக்கிறன்....|என்றுவிட்டு அன்பு ததும்ப தலையை ஆட்டினான் இளஞ்செழியன்.
~வறுமையிலும் செம்மை| என்பது இசையைப் போன்றவர்களைத் தானோ என நினைத்தான். பத்மினியம்மா கூட, அவளின்ர திறமையை பாத்து வேலை குடுங்கோ எண்டுதான் சொல்லுறா....தவிர, இசைநிலா கூட சிபாரிசில வேலை வேண்டாம் எண்டு மறுக்கிற ஆளென்றால்.....எண்ணமிட்டபடி பூவிழியிடம் கைகாட்டியபடியே காரை நோக்கி நடந்தான்.
இவன் புறப்பட்டுவிட்டதைக் கண்டுவிட்டு, அவசரமாய் ஓடிவந்த இசைநிலா, முன் அறைக்குள் செல்லவும் எங்கே போகிறாள் என எண்ணியபடி இவர்களும் பின்தொடர்ந்தனர்,
ஓடிச்சென்றவள், பரமானந்தத்தாரின் கால்களைத் தொட்டு நிமிர்ந்தாள். தந்தையின் அருகில் அமர்ந்திருந்த பொற்செழியனுக்கும் வியப்பு. காலையிலேயே அவளைப்பற்றி, பூவிழி சொல்ல கேட்டிருந்ததால், அவளின் தலைதொட்டு, "வெற்றி கிட்டும், போயிற்று வா" என்றார்.
மொட்டொன்று மலர்ந்தது போல அவள் உதடுகளின் புன்னகை உதித்தது, அவள் கொள்ளை அழகுடன் தெரிந்தாள் இளஞ்செழியனுக்கு, அவனையறியாமலே அவன் உதடுகளிலும் புன்சிரிப்பு ......
அருகில் சென்று இசைநிலாவின் கைபற்றிய பூவிழி, "போகலாமா" என்றாள்.
தலையை மேலும் கீழும் அவள் ஆட்டிய விதத்தில் அவள் காதோர முடி சலசலத்தது. ஒரு சித்திரத்தைப் பார்ப்பது போல அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் இளஞ்செழியன்.
இசைநிலாவின் விழிகளில் பூத்த அன்பில், ஒரு சகோதரியின் கரிசனையைக் கண்ணில் தேக்கியவாறு தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் பூவிழி.
மற்ற நால்வரும் வியந்துபோய் பார்த்தனர். பொற்செழியனுக்குத் தெரியும்.....அவளுக்குள் பரவிக்கிடக்கும் அன்பின் அளவு....அவள் யாருக்கும் அன்பை கொடுக்க தவறியதே இல்லை, அன்பை அள்ளிக்கொடுக்கும் அமுதசுரபி என நினைத்தவுடன் இதமான முறுவல் அவனிடமும்.
~ஏனப்பா......நீ மட்டும்தானே வீட்டில் நிக்கிறாய், வண்ணமதியும் இல்லை, நீயும் போயிட்டு வாவன் ராசா" என்ற தந்தையிடம்,
"அது....." அவன் சங்கடத்தில் நிற்க.. அண்ணனின் அருகில் சென்ற இளஞ்செழியன், ~வாங்கோ ..வாங்கோ....அண்ணா.... அலுவலகத்தை நீங்கள் பார்க்கேல்ல தானே, இண்டைக்கு வாங்கோ" அவசரமாய் அழைத்தான்.
சட்டென்று பூவிழியைப் பார்த்த பொற்செழியனுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாது அவள் விழிக்க, இசைநிலாவும் சம்மதமாய் தலையை ஆட்ட, எதுவும் சொல்லாமலே நடந்தாள் பூவிழி.
அவள் என்ன நினைக்கிறாளோ என்ற சங்கடத்துடனே., தம்பியுடன் சென்றான் பொற்செழியன்.
நகரின் மத்தியில், மக்கள் புழக்கம் அதிகம் இல்லாது சற்றே அமைதியான நிலப்பரப்பில் அமைந்திருந்தது அந்தக் கட்டடம். இரண்டு மாடிகள் கொண்ட வட்ட வடிவமான அதன் முகப்பில், ~துளிர்| என்ற எழுத்துக்களைத் தாங்கி பளபளத்தது தங்க நிற கேற்.
பெயின்ற் வாசனை .....இன்னும் மெலிதாக மூக்கைத் துளைத்தது. தான், வேலைதேடி முதல் முதலாக நேர்காணலுக்காக வந்த இடத்தை உவகையோடு பார்த்தாள் இசைநிலா. அவளுக்கு மட்டும் இந்த வேலை கிடைத்துவிட்டால் ......போதும், அவர்கள் குறிப்பிட்டிருந்த சம்பள அளவின் படி கிடைத்தால், தம்பிக்கு உடனடியாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்துவிடலாம், அம்மாவும் அப்பாவும் தம்பியுமாக வைத்தியம் செய்யுமிடத்தில் தங்கி சிகிச்சை செய்வார்கள்.....எண்ணங்கள் அவளைவிட விரைவாக ஓடியது.
திகைத்து நின்றுவிட்டவளை, கைபற்றி தட்டிய பூவிழியை சங்கடமாய் பார்த்தவள், 'என்ன' என்பது போன்ற பார்வைக்கு 'ஒன்றுமில்லை' என்பது போல தலையை அசைத்தாள்.
இறுக்கமாய் இசைநிலாவின் கையை ஒருமுறை பற்றி விடுவித்த பூவிழி, தானே முன்னால் நடந்தாள்.
"இளா....இதென்ன துளிர்?| அண்ணன் தொடங்கவும், எங்கே இசைநிலாவிற்கு கேட்டுவிடுமோ என்ற பதற்றத்தில் கண்களால் சைகை செய்தான் இளஞ்செழியன். தம்பியின் பார்வையில் ஏதோ இருக்கிறதென எண்ணிய பொற்செழியனும் பேசாமல் கூடவே நடந்தான்.
மற்றவர்களும் ஏற்கனவே வந்டது காத்திருந்தனர். விண்ணப்பித்தவர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். அலுவலகத்தில் நண்பர்களிடம் விடயத்தைச் சொல்லிவிட்டு, வேறொரு அறையில் அமர்ந்திருந்து, நேர்காணலைப் பார்த்துக்கொண்டிருந்தான் இளஞ்செழியன். அண்ணனும் பூவிழியும் அவன் வற்புறுத்தி அழைத்தும் அவனோடு இந்த அறைக்கு வரமறுத்து விருந்தினர் அறையில் அமர்ந்துவிட்டனர்.
ஒவ்வொருவராக வந்து செல்ல, எப்போது இசைநிலா வருவாள் என்றிருந்தது, இளஞ்செழியனுக்கு, அவளுக்காக எந்த விசேட சலுகையும் செய்யவேண்டாம் என்று பூவிழி சொன்னதற்காய் ஓடரின் படியே வரட்டும் என்று காத்திருந்தான்.
பத்து பேரிற்கு மேல் வந்து சென்றுவிட்டனர். பூவொன்று நடந்து வருவது போல அறைக்குள் நுழைந்தாள் இசைநிலா, நிமிர்ந்து அமர்ந்தான் இளஞ்செழியன்.
கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்தவள், நிமிர்ந்து அமர்நதாள்.
அவளது மனத்திடம், அந்த நிமிர்வில் தெரிந்தது, கண்களின் தெளிவு, நேரான பார்வை, உதட்டில் வெளிப்பட்ட புன்னகை இவையெல்லாம் அவளது அளுமையைப் பறைசாற்றின. நண்பர்கள் மாறி மாறி கேள்விகள் கேட்டனர். தன்னிடமிருந்த தன்னுடைய சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை நீட்டினாள் அவள்,
அவளது சான்றிதழ்கள் அடங்கிய கோப்பை பிரித்தனர், கமராவில் தெளிவாகத் தெரிந்தது இவனுக்கு.
படிப்பு, விளையாட்டு, வரைதல், என அத்தனையிலும் அவள் கெட்டிக்காரியாகவே இருந்தாள். ஆச்சரியம் நண்பர்களுக்கு மட்டுமல்ல, இளஞ்செழியனுக்கும்தான்.
'குறையை நிறையாக்கிய' ஒரு வெற்றிப்பெண்ணாகவே அவள் தெரிந்தாள்.
நண்பன் ஒருத்தனின் தந்தையார்தான் மேலாளர் பதவிக்கு தீர்மானிக்கப்பட்டிருந்தார். நேர்முகத்தேர்வின் பொறுப்பாளராகவும் அவரே இருந்தார். பெரிய நிறுவனம் ஒன்றில் பணி செய்து ஓய்வு பெற்றிருந்தவரை, இளஞ்செழியனின் அழைப்பு இங்கு கூட்டிவந்திருந்தது. இளைஞர்களான தங்களை வழிநடத்தவும் தொழில் சார்ந்த அனுபவத்தை புகட்டவும் தொழில் தெரிந்த ஒருவர் வேண்டும் என்பதற்காகவே அவரை இங்கு அழைத்திருந்தான் இளஞ்செழியன்.
அந்த வயதான மனிதர் தானே எழுந்து நின்றுவிட, சட்அடன்று துள்ளி எழுந்த இசைநிலா, அவர் தனது கைகளை நீட்டவும் சற்றுப் பதற்றமாகி, பின்னர் வெட்கமும் நெகிழ்ந்த பெருமிதமுமாக தன்னுடைய கைகளை நீட்டினாள்.
மனம் உவந்து சொல்றன், ~நீ கெட்டிக்காரிதான்மா, இண்டைய தலைமுறைக்கு நீ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு| என்றார்.
அவளுக்கு பெருமையோ இல்லையோ இளஞ்செழியனுக்கு பெருமையாக இருந்தது.
மனதில் முடிவே செய்துவிட்டான், ~என் பிள்ளைகளின் அம்மா இவள்தான்....இவளேதான்.....என்ன நடந்தாலும் எனக்கு மனைவி என்ற இடத்தில் இசைநிலா மட்டும்தான் ...வேறு யாருக்கும் அந்த இடம் கிடையவே கிடையாது.....|
அவளே அதற்கு சம்மதிக்கமாட்டாள் என்பது அவனுக்கு தெரியாதே, அவளுக்காக உலகத்தின் அத்தனையையும் கொடுத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணமே அவனுக்கு அப்போது தோன்றியது.
 
Top Bottom