அத்தியாயம் 6
பெற்றவர்களையும் தம்பிகளையும் இழந்த துக்கத்தில் இருந்த நாவினி, ஆரம்பத்தில் இந்த வீடு பற்றிய நினைப்பே இல்லாமல்தான் இருந்தாள். ஆனால், அவர்களின் இறப்பை லங்கா ஸ்ரீ என்கிற வலைத்தளத்தில் புகைப்படங்களோடு அறிவிப்பாகக் கொடுத்து, தொடர்புகொள்ளும் இலக்கங்களாகத் தன்னுடையதையும் மேனகாவினதையும் கொடுத்திருந்தார் சிவதாசன்.
பரமேஸ்வரன் அந்த வீட்டை விற்கப் போகிறாராம் என்று கேள்விப்பட்ட நாகரத்தினத்தின் தூரத்து உறவினர்கள், அந்த இலக்கத்துக்கு அழைத்துத் தகவல் சொல்லியிருந்தார்கள்.
முதலில் அதைக் குறித்து நாவினி அக்கறை கொள்ளவில்லை. மொத்தக் குடும்பத்தையும் இழந்துவிட்டு நிற்கிறாள். அந்த வீட்டை வைத்து என்ன செய்யப்போகிறாள்? அதைவிட இனி என்றும் அவள் அங்குப் போகப் போவதே இல்லை என்கையில் அதை யார் எடுத்தால் என்ன என்று நினைத்தாள்.
ஆனால், மேனகா விடவில்லை. அவருக்கு முதலே நடந்த அனைத்தும் தெரியும். நாகரத்தினமும் அபிராமியும் சொல்லியிருந்தார்கள். அப்போதே தன் தமையனைக் குறித்துச் சொல்லி, அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம், பயப்பட வேண்டாம் என்று தைரியம் சொன்னவர் இப்போது விடுவாரா?
என்ன இருந்தாலும் பரமேஸ்வரனின் தங்கை மகள் நாவினி. பெற்ற தாயைச் சிறு வயதிலேயே இழந்ததுமல்லாமல், அதன் பிறகு அமைந்த குடும்பத்தையும் மொத்தமாகப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள். அப்படி இருந்தும் அவளுக்கென்று கடைசியாக எஞ்சியிருக்கும் அந்த வீட்டையும் பறிக்க நினைப்பவருக்கு அது சேரவே கூடாது என்று நினைத்தார்.
அந்த வீடு அவளுக்கு ஏன் முக்கியம் என்று எடுத்துச் சொல்லி, அவளின் அப்பா அந்த வீட்டுக்காக எவ்வளவு கவலைப்பட்டார் என்பதையும் நினைவூட்டிவிட்டார்.
அதுவே அவள் விழித்துக்கொள்ளப் போதுமாயிற்று. அந்த வீட்டிற்காக அவள் தந்தை எந்தளவில் அவமானப்பட்டார் என்று அவளுக்குத் தெரியுமே. அத்தனையும் அவளுக்காக. அவளின் அன்னையின் சொத்து அவளுக்குப் பொருளாகிவிட வேண்டும் என்பதற்காக. அப்படியிருக்க அவள் அதைச் சும்மா தூக்கிக் கொடுப்பதா?
கூடாது என்றுதான் புறப்பட்டு வந்துவிட்டாள். அனைத்தையும் முறையாகச் செய்து, அந்தக் காணியை அவள் பெயரில் மாற்றிக்கொள்வதற்கு ஒரு வாரம் பிடித்திருந்தது. அதன் பிறகு மாதவன் தாமதிக்கவில்லை. ஏழாலை காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு, உடனடியாகப் பரமேஸ்வரன் குடும்பத்தை நாவினியின் வீட்டிலிருந்து வெளியேறச் சொன்னார்.
இத்தனை வருடத்தில் பரமேஸ்வரன் அதைத் தன் சொந்த வீடாகவே பாவிக்க ஆரம்பித்திருந்தார். நாவினியின் குடும்பமே வாகன விபத்தில் காலமானதை அறிந்து, முதலில் அதிர்ச்சியுற்றாலும் பிறகு பிறகு இனி அந்த வீடு தனக்குத்தான் என்றெண்ணி இரகசியமாக மகிழ்ச்சி கொண்டார்.
ஆனாலும் அடுத்தவரின் பொருளைச் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்கிற உறுத்தலா, இல்லை அந்த வீட்டுக்கு உரியவள் இன்னும் இருக்கிறாள் என்பதில் உண்டான எச்சரிக்கை உணர்வா தெரியவில்லை.
தம்மிடம் இருந்த தாய் உறுதியை வைத்து, அந்தக் காணியை விற்றுக் காசாக்கும் முயற்சியில் அவர் இறங்கிய வேளையில்தான் இப்படி ஒரு இடி அவர் தலையில் வந்து இறங்கியிருந்தது.
அவரும் தன்னால் முயன்றவரையில் போராடிப் பார்த்தார்.
உண்மை அவள் பக்கம் இருந்ததும், மாதவன் போன்ற உயர் காவல் அதிகாரி அவளோடு நின்றதும் அவரைத் தோல்வியையே தழுவ வைத்தன.
நாவினியோடு கதைக்கலாம் என்றால் அவள் இலங்கையில் நிற்கிறாள் என்பதைத் தவிர்த்து எங்கு நிற்கிறாள் என்கிற தகவல் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. கிடைக்க விடவில்லை மாதவன். அனைத்தையும் அவரே முன்னின்று பார்த்துக்கொண்டார்.
பல வருடங்களாக அந்த வீட்டிலேயே வசித்து, அது தன் வீடு என்பதுபோல் அந்த ஊருக்குள் வாழ்ந்துவிட்ட பரமேஸ்வரனால், இப்படிக் காவல்துறை வந்து நின்று கையோடு அவர்களை வெளியேற்றும் அவமானத்தை எதிர்கொள்ள இயலவில்லை.
ஊர்ச் சனம் மொத்தமும் அவரைப் பார்த்துச் சிரிப்பது போலொரு தோற்றம். யாரையும் நிமிர்ந்து பாராமல், பார ஊர்தியைக் கொண்டுவந்து அத்தனை பொருள்களையும் ஏற்றினார்.
பருத்தித்துறையிலிருந்து புறப்படுகையிலேயே அவள் அவளாக இல்லை. ஏழாலைக்குப் போகப்போகிறோம், பிறந்து வளர்ந்த மண்ணில் கால் பதிக்கப்போகிறோம், குடும்பமுமாக வாழ்ந்த வீட்டைத் தனி ஒருத்தியாகச் சென்று பார்க்கப்போகிறோம் என்றெல்லாம் நினைக்கையிலேயே நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது.
வழியும் கண்ணீரைத் துடைக்கும் தெம்புகூட இல்லாதவளாக காரினுள் அமர்ந்திருந்தாள். ஏழாலையை நெருங்க நெருங்க வேடனின் அம்பினில் மாட்டிக்கொண்ட புறா துடிப்பதுபோல் அவள் உள்ளம் துடித்தது. நெஞ்சு வெடித்துச் சிதறிவிடும் போன்று வலித்தது.
“இன்னும் வீட்டுச் சாமான் எல்லாம் ஏத்தி முடியேல்ல போல.” இவர்கள் வீட்டின் முன்னே நின்ற பார ஊர்த்தியைக் கண்டுவிட்டுச் சொன்ன மாதவன், தன் காரைச் சற்றே ஒதுக்கி நிறுத்தினார்.
நாவினிக்குக் கால்கள் நடுங்கின. காரை விட்டு இறங்கவே முடியவில்லை. அன்னையோடு அமர்ந்திருந்து விளையாடிய மாடி பால்கனியை பார்த்தாள். அங்கே நின்று அவர்கள் நால்வரும் கையை ஆட்டி அவளை அழைப்பதுபோல் இருந்தது. ஹோ என்று நெஞ்சினுள் பெரும் இரைச்சல். இந்த நிமிடமே அவர்கள் எல்லோரும் வேண்டுமே வேண்டும் என்று உள்ளம் கதறி அழுதது. ஐயோ ஐயோ என்று உள்ளத்தில் ஒரு ஓலம்.
தான் மட்டும் ஏன் உயிரோடு தப்பினோம் என்று நினைத்த கணத்தில் விம்மி அழுதாள். அவளும் சேர்ந்து போயிருக்க இந்த வேதனையை எல்லாம் அனுபவித்திருக்க மாட்டாளே.
“அம்மாச்சி!” அவளை அரவணைத்துப் பிடித்த வைதேகிக்கும் கண்ணீர் கொட்டியது.
“அழக் கூடாது குஞ்சு. இறங்கம்மா.” மெல்ல அவளை இறக்கி அழைத்துவந்தார்.
அவர்கள் வரப்போவதை யாரிடமும் சொல்லவில்லை. அதில் அந்த நேரத்தில் நாவினி வருவாள் என்று பரமேஸ்வரன் எதிர்பார்க்கவில்லை.
கார் வந்து நின்றதைக் கண்டுவிட்டு யார் என்று பார்த்தார். இறங்கி வந்த நாவினியைக் கண்டதும் திகைத்து நின்றது ஒரு கணம்தான். அடுத்த வினாடியே கண் முகமெல்லாம் சிவந்து கொதிக்க, அவளை அடிக்கப் பாய்ந்தார்.
மாதவன் நடுவில் புகுந்து மறித்தார். அவரிடமிருந்து விடுபட்டு அவளை நெருங்க முயன்றபடியே, “தாயில்லா பிள்ளை எண்டு உன்னப் பாத்து பாத்து வளத்ததுக்குத் தெருவில நிப்பாட்டிப்போட்டாய் என்ன? அதான் கடவுளா பாத்து அனாதையா நில்லு எண்டு விட்டிருக்கிறார்.” என்றதும் வைதேகிக்கே தாங்கிக்கொள்ள இயலாது போயிற்று.
“என்ன தம்பி கதைக்கிறீங்க? சின்ன பிள்ளை அவா. அவாவப் பாத்து…” நெஞ்சு கோபத்தில் குமுறியதில் அவருக்குப் பேச்சுத் தடைப்பட்டுப் போயிற்று.
“சின்ன பிள்ளையோ? சின்ன பிள்ளைதான் சொந்த மாமனை வீட்டை விட்டுத் துரத்திறாள் போல.”
“தேவை இல்லாத கதை எல்லாம் இஞ்ச வேணாம். கெதியா எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு நடையக் கட்டுங்கோ!” தன் பதவிக்கு உண்டான அதிகாரக் குரலில் அதட்டிச் சொன்னார் மாதவன்.
“நீங்க போலீஸ் எண்டதும் பயந்திடுவன் எண்டு நினைச்சீங்களோ? விடமாட்டன். இவள் ஜெர்மன் நஷனாலிட்டி. வெளிநாட்டுக்காரர் உள் நாட்டில சொத்து வச்சிருக்கேலாது. கோர்ட், கேஸ் எண்டு இழுத்து ஜெர்மனுக்குத் திரும்பிப் போகேலாத மாதிரிச் செய்றனா இல்லையா எண்டு பாருங்க.”
“உங்களுக்கே இவ்வளவு தெரிஞ்சிருக்கு எண்டேக்க அரசாங்க உத்தியோகத்தில இருக்கிற எனக்குத் தெரியாதா? புதுசா இஞ்ச சொத்து வாங்கிறதுக்குத்தான் அவாக்கு அனுமதி இல்லை. மற்றும்படி அம்மா அப்பான்ர சொத்தைப் பெயர் மாத்துறதோ, ஏற்கனவே அவான்ர பெயர்ல இருக்கிற சொத்துப் பத்தை அவாவே வச்சிருக்கிறதோ சட்டப்படி பிழை இல்ல. அதால நீங்க செய்றதைச் செய்ங்க. இப்ப நடவுங்க!” என்று அவரின் மூக்கை உடைத்தார் மாதவன்.
கணவரின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த பரமேஸ்வரனின் மனைவியும் நாவினியைக் கண்டு திகைத்து நின்றது ஒரு கணம்தான். அடுத்த நொடியே அந்த வீட்டின் வாசல் மண்ணையே எடுத்து அள்ளித் தூற்றினார்.
“நீ நல்லாவே இருக்க மாட்டாய். நாசமாத்தான் போவாய்! நாங்க என்ன எங்களுக்குச் சொந்தமில்லாத வீட்டையோ கேட்டனாங்க. எங்கட வீடு இது. நாங்களா பாத்து உன்ர அம்மாக்குக் குடுத்தது. அதுதான் நாங்க செஞ்ச பிழை. ஆனா நீ நல்லாவே இருக்க மாட்டாய்.”
நாவினி ஒரு வார்த்தை திருப்பிக் கதைக்கவில்லை. அது அவளும் இல்லை. அவளுக்கு ஏனோ வலிக்கவும் இல்லை. அவர்கள் திட்டி அவளுக்குப் பலிப்பதற்கு இன்னும் ஏதாவது இருக்கிறதா என்ன? அதுதான் எல்லாவற்றையும் இழந்துவிட்டாளே.
பரமேஸ்வரனும் அவர் மனைவியும் அதன் பிறகும் அவளைத் திட்டி திட்டித்தான் அனைத்தையும் ஏற்றி முடித்தார்கள். வீட்டுத் திறப்பைக் கையில் தராமல் முற்றத்தில் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள்.
ஒன்றுமே சொல்லாமல் சென்று திறப்பை எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த கணத்தில் மொத்தமாக உடைந்தாள் நாவினி.
ஒரு பொருள் கூட இல்லாத வெறும் வீடு, அவள் கதறிய கதறலில் அதிர்ந்து அடங்கியது. மாதவன், வைதேகி, இதற்குள் சத்தம் கேட்டுக் கூடிய அயலட்டை மனிதர்கள் என்று யாராலும் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் அழுது தீர்க்கட்டும் என்று விட்டுவிட்டார்கள்.
வெய்யிலில் பிடுங்கிப்போட்ட வாழை மரமாக விறாந்தையின் தரையில் விழுந்து கிடந்து கண்ணீர் உகுத்துக்கொண்டே இருந்தாள் நாவினி. பார்த்திருந்தவர்களும் சேர்ந்து அழுதனர்.
பெற்றவர்களையும் தம்பிகளையும் இழந்த துக்கத்தில் இருந்த நாவினி, ஆரம்பத்தில் இந்த வீடு பற்றிய நினைப்பே இல்லாமல்தான் இருந்தாள். ஆனால், அவர்களின் இறப்பை லங்கா ஸ்ரீ என்கிற வலைத்தளத்தில் புகைப்படங்களோடு அறிவிப்பாகக் கொடுத்து, தொடர்புகொள்ளும் இலக்கங்களாகத் தன்னுடையதையும் மேனகாவினதையும் கொடுத்திருந்தார் சிவதாசன்.
பரமேஸ்வரன் அந்த வீட்டை விற்கப் போகிறாராம் என்று கேள்விப்பட்ட நாகரத்தினத்தின் தூரத்து உறவினர்கள், அந்த இலக்கத்துக்கு அழைத்துத் தகவல் சொல்லியிருந்தார்கள்.
முதலில் அதைக் குறித்து நாவினி அக்கறை கொள்ளவில்லை. மொத்தக் குடும்பத்தையும் இழந்துவிட்டு நிற்கிறாள். அந்த வீட்டை வைத்து என்ன செய்யப்போகிறாள்? அதைவிட இனி என்றும் அவள் அங்குப் போகப் போவதே இல்லை என்கையில் அதை யார் எடுத்தால் என்ன என்று நினைத்தாள்.
ஆனால், மேனகா விடவில்லை. அவருக்கு முதலே நடந்த அனைத்தும் தெரியும். நாகரத்தினமும் அபிராமியும் சொல்லியிருந்தார்கள். அப்போதே தன் தமையனைக் குறித்துச் சொல்லி, அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம், பயப்பட வேண்டாம் என்று தைரியம் சொன்னவர் இப்போது விடுவாரா?
என்ன இருந்தாலும் பரமேஸ்வரனின் தங்கை மகள் நாவினி. பெற்ற தாயைச் சிறு வயதிலேயே இழந்ததுமல்லாமல், அதன் பிறகு அமைந்த குடும்பத்தையும் மொத்தமாகப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள். அப்படி இருந்தும் அவளுக்கென்று கடைசியாக எஞ்சியிருக்கும் அந்த வீட்டையும் பறிக்க நினைப்பவருக்கு அது சேரவே கூடாது என்று நினைத்தார்.
அந்த வீடு அவளுக்கு ஏன் முக்கியம் என்று எடுத்துச் சொல்லி, அவளின் அப்பா அந்த வீட்டுக்காக எவ்வளவு கவலைப்பட்டார் என்பதையும் நினைவூட்டிவிட்டார்.
அதுவே அவள் விழித்துக்கொள்ளப் போதுமாயிற்று. அந்த வீட்டிற்காக அவள் தந்தை எந்தளவில் அவமானப்பட்டார் என்று அவளுக்குத் தெரியுமே. அத்தனையும் அவளுக்காக. அவளின் அன்னையின் சொத்து அவளுக்குப் பொருளாகிவிட வேண்டும் என்பதற்காக. அப்படியிருக்க அவள் அதைச் சும்மா தூக்கிக் கொடுப்பதா?
கூடாது என்றுதான் புறப்பட்டு வந்துவிட்டாள். அனைத்தையும் முறையாகச் செய்து, அந்தக் காணியை அவள் பெயரில் மாற்றிக்கொள்வதற்கு ஒரு வாரம் பிடித்திருந்தது. அதன் பிறகு மாதவன் தாமதிக்கவில்லை. ஏழாலை காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு, உடனடியாகப் பரமேஸ்வரன் குடும்பத்தை நாவினியின் வீட்டிலிருந்து வெளியேறச் சொன்னார்.
இத்தனை வருடத்தில் பரமேஸ்வரன் அதைத் தன் சொந்த வீடாகவே பாவிக்க ஆரம்பித்திருந்தார். நாவினியின் குடும்பமே வாகன விபத்தில் காலமானதை அறிந்து, முதலில் அதிர்ச்சியுற்றாலும் பிறகு பிறகு இனி அந்த வீடு தனக்குத்தான் என்றெண்ணி இரகசியமாக மகிழ்ச்சி கொண்டார்.
ஆனாலும் அடுத்தவரின் பொருளைச் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்கிற உறுத்தலா, இல்லை அந்த வீட்டுக்கு உரியவள் இன்னும் இருக்கிறாள் என்பதில் உண்டான எச்சரிக்கை உணர்வா தெரியவில்லை.
தம்மிடம் இருந்த தாய் உறுதியை வைத்து, அந்தக் காணியை விற்றுக் காசாக்கும் முயற்சியில் அவர் இறங்கிய வேளையில்தான் இப்படி ஒரு இடி அவர் தலையில் வந்து இறங்கியிருந்தது.
அவரும் தன்னால் முயன்றவரையில் போராடிப் பார்த்தார்.
உண்மை அவள் பக்கம் இருந்ததும், மாதவன் போன்ற உயர் காவல் அதிகாரி அவளோடு நின்றதும் அவரைத் தோல்வியையே தழுவ வைத்தன.
நாவினியோடு கதைக்கலாம் என்றால் அவள் இலங்கையில் நிற்கிறாள் என்பதைத் தவிர்த்து எங்கு நிற்கிறாள் என்கிற தகவல் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. கிடைக்க விடவில்லை மாதவன். அனைத்தையும் அவரே முன்னின்று பார்த்துக்கொண்டார்.
பல வருடங்களாக அந்த வீட்டிலேயே வசித்து, அது தன் வீடு என்பதுபோல் அந்த ஊருக்குள் வாழ்ந்துவிட்ட பரமேஸ்வரனால், இப்படிக் காவல்துறை வந்து நின்று கையோடு அவர்களை வெளியேற்றும் அவமானத்தை எதிர்கொள்ள இயலவில்லை.
ஊர்ச் சனம் மொத்தமும் அவரைப் பார்த்துச் சிரிப்பது போலொரு தோற்றம். யாரையும் நிமிர்ந்து பாராமல், பார ஊர்தியைக் கொண்டுவந்து அத்தனை பொருள்களையும் ஏற்றினார்.
பருத்தித்துறையிலிருந்து புறப்படுகையிலேயே அவள் அவளாக இல்லை. ஏழாலைக்குப் போகப்போகிறோம், பிறந்து வளர்ந்த மண்ணில் கால் பதிக்கப்போகிறோம், குடும்பமுமாக வாழ்ந்த வீட்டைத் தனி ஒருத்தியாகச் சென்று பார்க்கப்போகிறோம் என்றெல்லாம் நினைக்கையிலேயே நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டு வந்தது.
வழியும் கண்ணீரைத் துடைக்கும் தெம்புகூட இல்லாதவளாக காரினுள் அமர்ந்திருந்தாள். ஏழாலையை நெருங்க நெருங்க வேடனின் அம்பினில் மாட்டிக்கொண்ட புறா துடிப்பதுபோல் அவள் உள்ளம் துடித்தது. நெஞ்சு வெடித்துச் சிதறிவிடும் போன்று வலித்தது.
“இன்னும் வீட்டுச் சாமான் எல்லாம் ஏத்தி முடியேல்ல போல.” இவர்கள் வீட்டின் முன்னே நின்ற பார ஊர்த்தியைக் கண்டுவிட்டுச் சொன்ன மாதவன், தன் காரைச் சற்றே ஒதுக்கி நிறுத்தினார்.
நாவினிக்குக் கால்கள் நடுங்கின. காரை விட்டு இறங்கவே முடியவில்லை. அன்னையோடு அமர்ந்திருந்து விளையாடிய மாடி பால்கனியை பார்த்தாள். அங்கே நின்று அவர்கள் நால்வரும் கையை ஆட்டி அவளை அழைப்பதுபோல் இருந்தது. ஹோ என்று நெஞ்சினுள் பெரும் இரைச்சல். இந்த நிமிடமே அவர்கள் எல்லோரும் வேண்டுமே வேண்டும் என்று உள்ளம் கதறி அழுதது. ஐயோ ஐயோ என்று உள்ளத்தில் ஒரு ஓலம்.
தான் மட்டும் ஏன் உயிரோடு தப்பினோம் என்று நினைத்த கணத்தில் விம்மி அழுதாள். அவளும் சேர்ந்து போயிருக்க இந்த வேதனையை எல்லாம் அனுபவித்திருக்க மாட்டாளே.
“அம்மாச்சி!” அவளை அரவணைத்துப் பிடித்த வைதேகிக்கும் கண்ணீர் கொட்டியது.
“அழக் கூடாது குஞ்சு. இறங்கம்மா.” மெல்ல அவளை இறக்கி அழைத்துவந்தார்.
அவர்கள் வரப்போவதை யாரிடமும் சொல்லவில்லை. அதில் அந்த நேரத்தில் நாவினி வருவாள் என்று பரமேஸ்வரன் எதிர்பார்க்கவில்லை.
கார் வந்து நின்றதைக் கண்டுவிட்டு யார் என்று பார்த்தார். இறங்கி வந்த நாவினியைக் கண்டதும் திகைத்து நின்றது ஒரு கணம்தான். அடுத்த வினாடியே கண் முகமெல்லாம் சிவந்து கொதிக்க, அவளை அடிக்கப் பாய்ந்தார்.
மாதவன் நடுவில் புகுந்து மறித்தார். அவரிடமிருந்து விடுபட்டு அவளை நெருங்க முயன்றபடியே, “தாயில்லா பிள்ளை எண்டு உன்னப் பாத்து பாத்து வளத்ததுக்குத் தெருவில நிப்பாட்டிப்போட்டாய் என்ன? அதான் கடவுளா பாத்து அனாதையா நில்லு எண்டு விட்டிருக்கிறார்.” என்றதும் வைதேகிக்கே தாங்கிக்கொள்ள இயலாது போயிற்று.
“என்ன தம்பி கதைக்கிறீங்க? சின்ன பிள்ளை அவா. அவாவப் பாத்து…” நெஞ்சு கோபத்தில் குமுறியதில் அவருக்குப் பேச்சுத் தடைப்பட்டுப் போயிற்று.
“சின்ன பிள்ளையோ? சின்ன பிள்ளைதான் சொந்த மாமனை வீட்டை விட்டுத் துரத்திறாள் போல.”
“தேவை இல்லாத கதை எல்லாம் இஞ்ச வேணாம். கெதியா எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு நடையக் கட்டுங்கோ!” தன் பதவிக்கு உண்டான அதிகாரக் குரலில் அதட்டிச் சொன்னார் மாதவன்.
“நீங்க போலீஸ் எண்டதும் பயந்திடுவன் எண்டு நினைச்சீங்களோ? விடமாட்டன். இவள் ஜெர்மன் நஷனாலிட்டி. வெளிநாட்டுக்காரர் உள் நாட்டில சொத்து வச்சிருக்கேலாது. கோர்ட், கேஸ் எண்டு இழுத்து ஜெர்மனுக்குத் திரும்பிப் போகேலாத மாதிரிச் செய்றனா இல்லையா எண்டு பாருங்க.”
“உங்களுக்கே இவ்வளவு தெரிஞ்சிருக்கு எண்டேக்க அரசாங்க உத்தியோகத்தில இருக்கிற எனக்குத் தெரியாதா? புதுசா இஞ்ச சொத்து வாங்கிறதுக்குத்தான் அவாக்கு அனுமதி இல்லை. மற்றும்படி அம்மா அப்பான்ர சொத்தைப் பெயர் மாத்துறதோ, ஏற்கனவே அவான்ர பெயர்ல இருக்கிற சொத்துப் பத்தை அவாவே வச்சிருக்கிறதோ சட்டப்படி பிழை இல்ல. அதால நீங்க செய்றதைச் செய்ங்க. இப்ப நடவுங்க!” என்று அவரின் மூக்கை உடைத்தார் மாதவன்.
கணவரின் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து ஓடி வந்த பரமேஸ்வரனின் மனைவியும் நாவினியைக் கண்டு திகைத்து நின்றது ஒரு கணம்தான். அடுத்த நொடியே அந்த வீட்டின் வாசல் மண்ணையே எடுத்து அள்ளித் தூற்றினார்.
“நீ நல்லாவே இருக்க மாட்டாய். நாசமாத்தான் போவாய்! நாங்க என்ன எங்களுக்குச் சொந்தமில்லாத வீட்டையோ கேட்டனாங்க. எங்கட வீடு இது. நாங்களா பாத்து உன்ர அம்மாக்குக் குடுத்தது. அதுதான் நாங்க செஞ்ச பிழை. ஆனா நீ நல்லாவே இருக்க மாட்டாய்.”
நாவினி ஒரு வார்த்தை திருப்பிக் கதைக்கவில்லை. அது அவளும் இல்லை. அவளுக்கு ஏனோ வலிக்கவும் இல்லை. அவர்கள் திட்டி அவளுக்குப் பலிப்பதற்கு இன்னும் ஏதாவது இருக்கிறதா என்ன? அதுதான் எல்லாவற்றையும் இழந்துவிட்டாளே.
பரமேஸ்வரனும் அவர் மனைவியும் அதன் பிறகும் அவளைத் திட்டி திட்டித்தான் அனைத்தையும் ஏற்றி முடித்தார்கள். வீட்டுத் திறப்பைக் கையில் தராமல் முற்றத்தில் தூக்கி எறிந்துவிட்டுப் போனார்கள்.
ஒன்றுமே சொல்லாமல் சென்று திறப்பை எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த கணத்தில் மொத்தமாக உடைந்தாள் நாவினி.
ஒரு பொருள் கூட இல்லாத வெறும் வீடு, அவள் கதறிய கதறலில் அதிர்ந்து அடங்கியது. மாதவன், வைதேகி, இதற்குள் சத்தம் கேட்டுக் கூடிய அயலட்டை மனிதர்கள் என்று யாராலும் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் அழுது தீர்க்கட்டும் என்று விட்டுவிட்டார்கள்.
வெய்யிலில் பிடுங்கிப்போட்ட வாழை மரமாக விறாந்தையின் தரையில் விழுந்து கிடந்து கண்ணீர் உகுத்துக்கொண்டே இருந்தாள் நாவினி. பார்த்திருந்தவர்களும் சேர்ந்து அழுதனர்.