“சரிப்பா, நீங்க மூன்று பேருமாக எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தி அடுக்குங்க, நான் அம்மாக்குச் சமையலுக்கு உதவப் போறன்.” என்று சொல்லிக்கொண்டு நகர்ந்தார் குட்டி. இவரை நான் இதுவரை முறைசொல்லி அழைத்ததில்லை. இனி அடிக்கடி கதைக்க வேண்டி வருமே எப்படி அழைப்பது?
குழப்பத்துக்கு முடிவாக ‘அக்கா; என்போம் எனத் தீர்மானித்தேன்.
“இல்லக்கா இல்ல, இனி இதெல்லாம் நாளைக்குப் பார்க்கலாம்; நாங்களும் வாறம்.”
ஒரு பயணப்பையிலிருந்த ஆடைகள் அனைத்தும் அலுமாரிக்குள் வைத்தாகிவிட, அந்தப் பையை எடுத்து அலுமாரியின் மீது வைத்துவிட்டுச் சொன்னேன்.
“அக்காவா?” முறுவலித்தவர், “நான் அக்கா எண்டா முறையெல்லாம் பிழைக்குமே உதயா! பேசாமல் மச்சாள் என்று சொல்லும்.” என்றார், சந்தோசமாக.
“இப்ப இங்க எல்லாமே சரியாத்தான் நடக்குது, முறை பிழைக்க!” வெடுக்கென்று சொல்லிவிட்டாள் கவி.
“வேணாம் செல்லம்; நீ வீணா வாங்கிக் கட்டப் போற; இப்ப நான் உதயாவோட தான் கதைச்சனான். நீ இடையில வராத சரியா?” கண்டித்தார்.
“நாங்க அப்பிடித்தான் இடையில வருவம்.” தீபி.
“அய்யோ சும்மா இருங்கடி!” நானும் சொல்ல, முகம் சுண்டிப் போனது இருவருக்கும்.
அப்பவும் “அக்கா, கடைசிவரை இவையள நம்பாதீங்க!” எச்சரித்தாள் கவி.
“அடங்குறாள்கள் இல்லயே!”
அவர் வாயினுள் முணுமுணுத்தது எங்களுக்கு நன்றாகவே கேட்டது.
“அது விளங்கினால் சரிதான்.” என்றாள் தீபி.
“இதில நின்றனோ ரெண்டுபேரும் வாங்கிக் கட்டுவீங்க!” எரிச்சலை மறைக்காது சொல்லிவிட்டு, “நீர் நாளைக்குப் பள்ளிக்கூடமும் போக வேணும் தானே? அந்த வேலைகளைப் பாருங்க!” என்று வற்புறுத்தி எங்களை அங்கேயே இருத்திவிட்டு, அவர் அப்பால் சென்ற பிறகு என்னையே பார்த்தபடி வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டாள் கவி.
டியூசனிலிருந்து திரும்பி வந்த தங்கைகள் நான் இங்கு வரப்போவதைத் தீர்மானமாகச் சொன்ன பின்னர் வாய் திறந்து ஒத்தவார்த்தை கதைக்கவில்லை.
என்னதான் வெளிப்டையாகச் சொல்லவில்லை என்றாலும், நான் இங்கு வருவதில் அவர்களுக்குத் துளியும் விருப்பமில்லை என்று எனக்குத் தெரியாதா என்ன?
இருவரும் தம்முள் குசுகுசுவென்று கதைத்துக் கொண்டார்கள். அதே வேகத்தில், “அந்த வீட்டுக்கு அக்காவத் தனியா எல்லாம் விடேலாது; நான் கொஞ்ச நாளைக்கு அக்காவோட போய் நிக்கப் போறன்.” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய பொருட்களையும் எடுத்து வைத்திருந்தாள் தீபி.
சித்தியும் ஏனோ வாயே திறக்கவில்லை; பார்வையாளராக ஒதுங்கி நின்றார்.
“எனக்கும் வரத்தான் விருப்பம், ஆனால், இங்க அம்மா தனிய…” முணுமுணுப்போடுதான் கவியும் வந்திருந்தாள்.
இந்நினைவோடு, முகத்தில் மலர்வில்லாது அமர்ந்திருந்த கவியின் அருகில் சென்றமர்ந்தேன்.
“என்ன கவி ஒரு மாதிரி இருக்கிற? நல்லாப் பொழுதும் பட்டுட்டு! சித்தி தனியா இருப்பார். எத்தினைக்கு உன்ர ஃபிரெண்ட் வருவா?”
இயல்பாகக் கேட்க நினைத்தாலும் முடியாது தடுமாறினேன் தான். தீபி அங்கிருந்தாலும் பரவாயில்லை, இவள் இன்றைக்குத் தனிச்சுப் போகப் போறாளே என்ற கவலை வாட்டியது. எனது மறுபுறமாக வந்தமர்ந்தாள் தீபி.
“இரவுக்கு மட்டும் தானே கவி, விடிய பள்ளிக்கூடத்தில சந்திக்கலாம்.”
அவள் கரத்தைப் பற்றிச் சமாதானம் செய்ய முயன்றேன்.
அவளோ என்னைப் பார்க்கவில்லை . அறையைச் சுற்றி வந்தது அவள் பார்வை. சேர்ந்து சுற்றியது என் பார்வை.
ஒரு மூலையில் சதுர மேசையும் இரண்டு கதிரைகளும் கிடக்க, இந்த இரட்டைக் கட்டில் போடப்பட்டிருந்தது. ஆளுயர அலுமாரியும்.
இது குட்டி அக்கா உபயோகிக்கும் அறை என்று தெரியும். அவர் அம்மம்மாவோடு போயிருந்து கொண்டு எனக்கு இதைத் தந்துள்ளார்.
“பச்!” சுழன்று வந்த கவியின் பார்வை சலிப்பும் அதிருப்தியுமாக என்னில் படிந்தது.
“ஒரு எட்டுமணிபோல வாறன் என்றவள் அக்கா. அவள்ட பெரியம்மா வீடு இங்க பக்கத்தில தான். அவளும் அவள்ட அம்மாவும் அங்க வந்து நிக்கீனம். போகேக்க என்னையும் கூட்டிக்கொண்டு போறன் என்றவள்.” எனச் சொல்லிக் கொண்டே என் மறுபக்கமாக அமர்ந்த்திருந்த தீபியைப் பார்த்தாள்.
அவள் முகத்திலும் செழிப்பில்லை.
“ஏன் ரெண்டு பேரும் இப்பிடி இருக்கிறீங்க? தீபி, நீ இங்க வர வெளிக்கிட நான் ஒண்டும் சொல்லேல்ல எண்டாலும் வீட்டில கவி தனிச்சிருவாள், நீயும் போவன். ” என்றேன் நான்.
“அதெல்லாம் ஒண்டும் தேவையில்ல.” வெடுக்கென்று பதில் வந்தது, கவியிடமிருந்து.
“ஏன் இப்படி இருக்கிறீங்க என்றால்? பிறகு எப்பிடிக்கா இருக்கிறது?” தீபி தான், நெற்றியைச் சுருக்கியபடி கேட்டாள் .
“என்னடி ரெண்டு பேரும் எனக்கு அக்கா போல வெருட்டுறீங்க?”
பகிடியாகக் கதைத்து நிலைமையை இலகுவாக்க முயன்றேன். அதற்கு எந்தப் பிரதிபலிப்பும் அவர்களிடம் இருக்கவில்லை.
ஆனால், முகத்தில் தீவிரபாவத்தோடு என்னைப் பார்த்தாள் கவி.
“அக்கா நீங்க வடிவா யோசிச்சுத்தானே இந்த முடிவுக்கு வந்தீங்க?”
பெரியவளாக, குரலில் ஏகத்துக்கும் விசாரணையோடு கேட்கவும் செய்தாள்.
மெல்லிய முறுவல் என் உதடுகளில்.
“பச்! இப்ப இதில சிரிக்க என்னக்கா இருக்கு!” அதிருப்தியைக் காட்டினார்கள்.
“நர்மதாக்கா வீட்டாக்கள், புனிதம் ஆன்ட்டி இவையளுக்கு எல்லாம் என்ன நடந்திட்டு?
இந்தக் கலியாணம் பிடிக்காமல் தானே புனிதம் ஆன்ட்டி கலியாணத்துக்கே வரேல்ல.
நர்மதாக்கா வீட்டாக்கள் அண்டைக்கு என்ன எல்லாம் சொன்னவே? ‘கலியாணமும் மண்ணாங்கட்டியும் ஒண்டுமே செல்லாது போ!’ எண்டெல்லாம் சொல்லேல்லையா?”