முதலில் சிறிது நேரம் என்ன நடக்கின்றதென்றே என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இப்படித் தூரப் பிரயாணங்கள் என்று பெரிதாக நான் செய்ததும் இல்லை. அப்படியே போனாலும் இரவு நேரங்களில் அவ்வளவாக அசந்து உறங்கிவிடமாட்டேன். என்னை நான் பார்த்துக்கொள்ளவோ, கூட வரும் தங்கைகளின் பொறுப்போ இருப்பதால் விழிப்பே ஆட்சியில் இருக்கும்.
இன்று மட்டும் எப்படி? அருகில் அமர்ந்திருந்தவரோடு தேவையற்று ஒரு வார்த்தை கதைக்கவிட்டாலும் அவர் இருக்கிறார் என்ற உணர்வே என்னை உறங்கச் செய்துவிட்டதோ!
நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன் என்று மட்டும் புரிந்தது.
கிடுகிடுவென்று உடல் நடுங்க அப்படியே வளைந்து கீழே விழும் போதும் இறுக என்னை வளைத்துப் பிடித்திருந்தது ஒரு கரம்.
திமிறினேன்; விடுபட முடியவில்லை. சரிந்து கொண்டிருக்கிறோமோ!
கால்கள் மடிய விழுந்ததில் முழங்கால் முட்டியில் நோவெடுத்தது. ‘முகம் எதில் அழுந்தியிருக்கு? மூச்சு முட்டும் போலிருந்தது. தடதடத்த அந்த ஒலி?
ஒன்றுமே இல்லை; நான் தான் கனவேதும் காண்கிறேனோ என்று கூட நினைத்துவிட்டேன் .
இல்லை, எல்லாமே நிஜம் என்றுணர்த்தியது சூர்யாவின் குரல்.
“ஒன்றுமில்ல உதயா பயப்படாத!” என்று, அவர் சொன்ன போது தான் தாறுமாறாகத் தட தடத்த அந்த ஒலி அவரின் இதயத் துடிப்பென்றே உணர்ந்துகொண்டேன்.
அதேவேளை நடந்துவிட்ட விபரீதமும் புரிந்துவிட்டது.
மின்னல் வேகத்தில் கண்ட கண்ட யோசனைகளும் படையெடுக்க, கண்களைத் திறந்தால் கும்மிருட்டில் எதுவும் தெரியவில்லை. வாய்விட்டுக் கத்தினேன். அவசரம் அவசரமாக விலகவும் முனைந்தேன். விட்டால்தானே?
‘கடைசியில், இப்படி, ஒரு இரவோடு இரவாக அனாமத்தாகப் போகவா இத்தனையும்?’ இப்படித்தான் எண்ணியது என்னுள்ளம்.
“சூர்யா!” தொண்டைக்குழியில் இருந்து வெளிவந்த வார்த்தை ஒலி வடிவம் பெற்றதா என்று கூட யோசிக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்தேன்.
‘எனக்கு உண்மையில உங்களில எந்தக் கோவமும் இல்ல; இண்டைக்குவரையும் என்னை ஒரு மனுசியாக மதிக்க உங்களால முடியேல்லையே எண்ட வருத்தம் மட்டும் தான்.’
சாகப் போகிறோமோ என்னவோ, சொல்லிட்டே போவோம் என்றெண்ணினேன். அதற்குள்… “உதயா இங்க பார்!” என் முகத்தில் சற்றே பலமாகத் தட்டினார்.
“மெல்ல மெல்ல வெளியே போகலாம் போல இருக்கு…போ!” என்றார்.
இருட்டில் அவர் முகம் தெரியவில்லை என்றாலும் அவர் குரலின் நடுக்கத்தைத் துல்லியமாகவே உணர முடிந்தது.
அவரை அப்படியே விட்டு விட்டுப் போவதா? என்று நான் தயங்கியபோதுதான் அவர் தலையில் அந்தப் பெட்டி விழுந்தது.
பலமாகவே அலறினார் என்றால் வலித்திருக்கு என்றுதானே அர்த்தம்.
அதே, இறங்கிய வேகத்தில் “உனக்கு ஒன்றுமில்லையே உதயா?” என்று பதறியபடி என்னைத்தான் ஆராய்ந்தார்.
அலங்க மலங்க நின்ற நான் சமாளித்து “உங்களுக்கு?” என்றபடி அவரைப் பார்க்க நினைக்கையில், “எனக்கு ஒண்ணுமில்லை …” நகர்ந்தார்.
நான் என்னதான் செய்தேன்?
‘பஸ்ஸினுள் விழுந்து கிடக்கையில், இது நாள்வரை எத்தனை எத்தனை அல்லல்கள்? எதிர் நீச்சல், போராட்டங்கள்? கடந்து வரமுடியாத கோபங்கள்? இதோ, கண் மூடிக்கிடக்கையில் வாழ்வு முடிந்துவிட்டதே!’ என்று தீர்மானமே செய்திருந்தேன் தானே? அதைக்கடந்து வெளியில் வந்து நின்ற போதோ, அப்படியெதுவும் இல்லை மிச்சம் மீதியையும் வாழ்ந்து பாரேன் என்றுணர முடிந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மிக மிக அரிதான பொக்கிசமாகத் தெரிந்தது. அதையுணர்ந்த கணம் தான், அத்தனை வேகமாக அவரைக் கட்டிப் பிடிக்க வைத்தது.
‘என் மனம் உணர்ந்தது போல் அவரும் உணர்ந்தாரா?’ என்றெல்லாம் நான் நினைத்துப் பார்க்கவிலை. அக்கணம் அவரின் கரம் என் தலையில் பரிவோடு பதிந்ததை என்னால் துல்லியமாய் உணர முடிந்தது. அப்போ, அவரும் உணர்ந்திருப்பாரோ!
இருந்தும் அவசரம் அவசரமாகப் பிரித்து நிறுத்திவிட்டு நகர்ந்தார். அப்போதுதான் அவர் முகம் பார்த்தேன் .
அங்குமிங்குமாக அலைந்து திரிந்த டார்ச் வெளிச்சத்தில் அவர் முகத்தைப் பார்த்த அந்தக் கணம்…
என் நெஞ்சு தன் இயக்கத்தை நிறுத்தி உடலை விறைக்க வைத்தது.
நான் அதிர்ந்து நின்றதை அவர் உணரவில்லை போலும்.
முகத்தில் கோடாக வழிந்த இரத்தத்தை உணராது, “எனக்கு ஒண்டுமில்ல இதிலயே நில்லு!” என்று விட்டுப் போகின்றாரே!
“சூர்யா!” தொண்டைக்குழி வெடித்துவிட்டதோ என்றளவில் அலறிக்கொண்டு ஓடினேன்.
அதிர்ந்து போய்த்தான் திரும்பினார். எனக்குத்தான் ஏதோவென்று நினைத்து விட்டாரோ!
“என்ன உங்கட முகத்தில ரெத்தம்?” அழுதுகொண்டே, பயத்தில் உடல் நடுங்க அவரை நெருங்கிய அந்தக் கணத்தில், தேவையே இல்லாமல் அஞ்சலியும் ஜெய்யும் நடித்த படமொன்றும் நினைவில் வந்து தொலைத்தது.
என் நிலை புரியாத அவரோ, “என்ன ரெத்தமா? என்று சாதாரணமாகத் துடைத்து விடுகிறாரே!
“அதெல்லாம் ஒன்றுமில்ல உதயா; எங்கயாவது சின்னனா அடிபட்டிருக்கும்; நீ அங்க கொஞ்சம் தள்ளி நில்லு, வாறன்.” என்று சொல்லிவிட்டு திரும்பவும் நகர்ந்தவரை எட்டி இழுத்துப்பிடித்து நிறுத்துவதில் என் உடலிலிருந்த சக்தியெல்லாம் வடிந்தே போயிற்று!
நான் கண்விழித்த போது வைத்தியசாலையில் இருக்கிறேன் என்பதை நாசியில் மோதிய மருந்து நெடி உணர்த்தியது.
அந்த நீண்ட கூடத்தில் சுவர் ஓரமாகக் கிடந்த கட்டிலில் படுத்திருந்தேன். அந்த இடமெல்லாம் ஒரே சனநடமாட்டமாக இருந்தது. தத்தளித்துக் கொண்டே அந்த இடத்தை அலசின, என் விழிகள். சூர்யாவை மட்டும் காணவில்லையே!
“நான்…நான் எப்பிடி இங்க வந்தன்? எனக்குத்தான் ஒண்டும் நடக்கேல்லயே! சூர்யா? சூர்யாவுக்கு…”
நடுங்கித் துடித்த உதடுகள் முணுமுணுத்தன. அப்படியே மயங்கிவிட்டேன் என்பது தெள்ளெனப் புரிந்தது.
முகத்தில் இரத்தத்தோடு அவர் பார்த்த பார்வை என் உடலைத் தூக்கிப் போட, விருட்டென்று எழுந்து கட்டிலைவிட்டு இறங்கினேன். நடக்க முடியாது துவண்ட கால்களை ஊன்றிக்கொள்ளவே பெரும் பாடுபடவேண்டியிருந்தது .