இதயத் துடிப்பாய்க் காதல் 20.2

அந்த அமைதியைத் தாங்க முடியாது, “இனிமேல் நான் சண்டையே பிடிக்கமாட்டேன். அன்று நடந்ததற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் வேடிக்கைக்குத் தன்னும் இப்படிப் பேசாதீர்கள். எனக்கு வேதனையாக இருக்கிறது..” என்றவளின் குரல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் இதோ இதோ என்று துளிர்த்தது. அழுதால் அவனுக்குப் பிடிக்காதே என்று கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.

“ப்ச்!” என்று சலித்தான் அவன். அடுத்தவருக்கு விளக்கம் சொல்லிப் பழக்கம் இல்லாததால் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி பேசத் தொடங்கினான்.

“எதையும் நான் வேடிக்கைக்கும் சொல்லவில்லை. விளையாட்டுக்கும் சொல்லவில்லை. அதை முதலில் நன்கு புரிந்துகொள்!” என்று அழுத்திச் சொன்னவன், தான் சொன்னதை அவள் உணர்ந்துகொள்ள அவகாசம் கொடுப்பது போல் சற்று அமைதியாக நின்றான்.

அவளோ அவன் பேசும் மொழியே புரியாதவள் போல் திகைத்து நின்றாள்.

“நிதானமாக இருந்து யோசித்தால், நமக்குள் ஒத்துவராது என்பது உனக்கே புரியும். நமக்குத் திருமணம் நடந்தாலும் இரண்டு நாட்களில் பிரிந்து நிற்போம். அதற்கு அது நடக்காமல் இருப்பதே மேல். அதுதான் பிரிந்துவிடலாம் என்கிறேன். எனக்கு நீ ஒத்துவர மாட்டாய். உனக்கு நான் ஒத்துவர மாட்டேன்.” என்றான் அவன் பிசிறற்ற குரலில்.

பேச்சு மூச்சற்றுப் போனது அவளுக்கு. இந்த மூன்று நாட்கள் பிரிவையே தாங்க முடியாது அவள் தவிக்கையில் நிரந்தரப் பிரிவா? அவனின்றி வாழ அவளால் முடியுமா?

அவளால் வாயை திறக்கவே முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிய, “ஏ..ன் இப்படியெல்லாம் சொல்கிறீர்கள் சூர்யா. வேண்டாமே.. என்னால் தாங்கமுடியவில்லை…” என்றாள் வேதனையோடு.

“நீங்கள் சும்மா… சும்மாதானே இதெல்லாம் சொல்கிறீர்கள்…” ஆமாம் என்று சொல்லிவிடு என்று மன்றாடியது அவள் குரல்.

“நான் சும்மா சொல்லவில்லை!” என்றான் அவன் கடினமான குரலில்.

அவள் அவனைத் திகைப்போடு பார்க்க, “உன்னோடு பழகுவது எனக்கு மூச்சு முட்டுகிறது. அன்பு என்கிற பெயரில் உனக்கு அடிமையாக வாழ என்னால் முடியாது. பாசம் காட்டுகிறேன் என்று நீ செய்யும் செயல்கள் சினமூட்டுகிறது.” என்றான் கடினப்பட்ட குரலில். அடக்கப்பட்ட ஆத்திரம், இதுநாள் வரை அடக்கிவைத்திருந்த கோபம் அத்தனையையும் இன்று காட்டினான்.

அவன் அவள் அடிமையா? என்ன கதை இது? அவள் தானே அவன் அடிமை. அதுவும் இஷ்டப்பட்டு அவன் காலடியில் அவள்தானே கிடக்கிறாள். கடைசிவரையும் அவன் காலடிதான் வேண்டும் என்று அவள் நெஞ்சம் கதறுவது அவன் காதில் கேட்கவில்லைய?

“ஒருவர் மேல் அளவற்ற அன்பு காட்டுவது குற்றமா சூர்யா..?” நொந்த குரலில் கேட்டாள் சனா.

“நீ காட்டியது அன்பல்ல, அடக்குமுறை!” என்றான் அவன் இரக்கமே இல்லாமல்!

“என்னது அடக்குமுறையா?” அதிர்ந்துபோய் அவள் கேட்க, “அடக்குமுறை இல்லாமல் வேறென்ன?” என்று வெடித்தான் அவன்.

“எப்போ பார், மெசேஜ் மெசேஜ்! சாப்பிட்டாயா?தூங்கினாயா? இருந்தாயா? எழுந்தாயா? என்று மனிதனை ஒரு நிமிடமாவது நிம்மதியாக இருக்க விடுகிறாயா? காலையில் தூங்க விடுவதில்லை. நண்பர்களோடு இருக்க விடுவதில்லை. என் விருப்பப்படி ஒன்றையும் செய்ய முடியவில்லை.உடுத்தும் உடையில் இருந்து தலை முடியின் நிறம் வரை உன் விருப்பப் படிதான் இருக்கவேண்டும் என்றால், எப்படி? ஒரு கிளாஸ் வைன் குடிப்பதற்கு கூட உன்னிடம் கெஞ்ச வேண்டும் என்றால், என்ன வாழ்க்கை இது?” என்று அவன் எரிமலையாக வெடித்தபோது, விக்கித்து நின்றாள் லட்சனா.

என்னவெல்லாம் சொல்கிறான். அதைக் கேட்டு அவள் உள்ளம் பலமாக அடிவாங்கியது. யார் மேல் உயிரையே வைத்தாளோ அவனே உயிரைப் பறிப்பது போல் உணர்ந்தாள். அந்தளவுக்கு வலித்தது. அவள் அடக்குமுறை செய்தாளா? அவனையா? ஏன் இப்படி அநியாயமாகப் பேசுகிறான் என்று தவித்தது அவள் உள்ளம்.

“உங்கள் மேல் கொண்ட அன்பால், அக்கறையால், காதலால் நான் காட்டிய பாசம் சூர்யா.. அது தப்பா?” என்று அவனுக்குத் தன் அன்பைப் புரியவைக்க முயன்றாள்.

“இப்படி ஒருவனை அவன் விருப்பத்துக்கு இருக்க விடாமல் எப்போது பார்த்தாலும் தொனதொனப்பதுதான் காதல் என்றால், அந்தக் காதலும் எனக்கு வேண்டாம். ஒரு கருமமும் வேண்டாம். இடையில் வந்த காதல் இடையிலேயே போகட்டும்!” என்றான் அவன்.

அவள் காட்டிய காதல் கருமமா? இடையில் வந்தாலும் வாழ்வின் இறுதிவரை தொடர்வது இல்லையா காதல்? அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் அதிலும் தொடர வேண்டியதல்லவா காதல். இது புரியவில்லையா அவனுக்கு?

“சரி சூர்யா. இனி நான் உங்களோடு சண்டை பிடிக்கவில்லை. அடக்குமுறை செய்யவில்லை. உங்கள் விருப்பம் போல் நீங்கள் இருங்கள். இனி மெசேஜ் எதுவும் அனுப்பவில்லை.சரிதானா? தயவு செய்து இப்படி எல்லாம் கதைக்காதீர்கள். எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்கிறது.. வலிக்கிறது.” என்றாள் தழுதழுத்த குரலில்.

அது அவனையும் பாதித்ததோ.. எழுந்து, சற்றே முன்னே சென்றவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றான்.

“இல்லை. நமக்குள் என்றும் சரியாக வராது. கலாச்சாரம், கட்டுப்பாடு என்று உன் பழக்கவழக்கம் வேறு. ஆசைகளை அடக்கிப் பழக்கமில்லாத என் பழக்கவழக்கம் வேறு.” என்றான் அவன் இரக்கமற்று.

அவன் எதைச் சொல்கிறான் என்று புரிய, “இனி.. இனி நீங்கள்.. என்னை தொட்டாலும்.. அது எவ்வ..ளவு தூரத்துக்கு என்றாலும் நான்.. நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் சூர்யா. உங்.. உங்கள் விருப்பபடி செய்யுங்கள்…” என்று உயிரினும் மேலாய்க் காக்க வேண்டிய கற்பைக் கூட அவனுக்குப் பரிசளிக்கத் தயாரானது அவள் காதல் நெஞ்சம்.

“என்னை என்ன காமப் பேய் என்று நினைத்தாயா அல்லது உன் உடம்புக்கு அலைபவன் என்று நினைத்தாயா..?” என்று அவன் உறும, “இல்லை. அப்படி இல்லை…” என்றவளைப் பேசவிடாது, “உன் விளக்கம் எனக்குத் தேவையில்லை.” என்று இடைமறித்தான் அவன்.

விளக்கத்தைக் கேட்காமல், குற்றம் சாட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுந்தபோதும், அதை வாய்விட்டுச் சொல்லும் துணிவற்று ஊமையாகிப் போனாள் லட்சனா. ச்அந்தளவுக்குக் கடினமாக இருந்தது அவன் முகம்.

அவள் காதல் கொண்ட முகமா என்கிற சந்தேகமே வந்தது. காதலில் கனிந்து, கண்களால் அவளை வசியம் செய்து, புன்னகையால் உலகத்தையே மறக்க வைக்கும் அவன் முகம் இன்று கல்லை விடக் கடினமாக இருந்தது.

அதுநாள் வரை காதலில் பளபளத்த கண்கள் கண்ணீரில் பளபளக்க அவனையே பாத்திருந்தவளிடம், “நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேள்.” என்று ஆரம்பித்தான் அவன்.

அதைக் கேட்டு அவள் நெஞ்சு நடுங்க ஆரம்பித்தது. ‘இல்லை! கேட்கமாட்டேன்!’ என்று காத்த வேண்டும் போல் இருந்தது. அவளால் தாங்கவே முடியாத ஒன்றை அவன் சொல்லப் போகிறான் என்று உள்மனம் உணர்த்தியது.

“சூர்யா…” எதுவும் சொல்லாதீர்களேன் என்று கெஞ்ச வாயெடுத்தவளை, கையைத் தூக்கிக் காட்டி அவள் பேச்சை நிறுத்தினான்.

“நான் முடிக்கும் வரை குறுக்கே பேசாதே!” என்றான் அதிகாரமாக. வாயடைத்துப் போனாள் லட்சனா. இந்த அதிகாரம் கூட அவனிடம் அவளுக்குப் புதிதாகப் பட்டது.

“உன்னை உண்மையாகத்தான் நேசித்தேன். அதனால்தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கேட்டேன். அதை நீ தள்ளிப் போட்டது கூட நல்லதுக்குத்தான் என்று இப்போது தோன்றுகிறது. அல்லது காதல் முறிவு என்பது திருமண முறிவாக முடிந்திருக்கும்..” என்றான் அவன்.

error: Alert: Content selection is disabled!!