இதயத் துடிப்பாய்க் காதல் 25 – 3

 

“நிச்சயமாக மாறமாட்டேன். இந்த ஜென்மத்தில் எனக்கு நீ மட்டும்தான். என்னை நம்ப மாட்டாயா?”

 

“எப்படி நம்பச் சொல்கிறீர்கள்? அன்று உங்களை மலைபோல நம்பினேனே.. என் வாழ்க்கையே நீங்கள் என்று நினைத்தேனே.. இனி எல்லாம் சுகம்தான் என்று கனவு கண்டேனே.. அனைத்தையும் ஒரு நொடியில் தவிடுபொடியாக்கவில்லை நீங்கள்? மீண்டும் எந்த நம்பிக்கையில் உங்களை நம்பச் சொல்லிக் கேட்கிறீர்கள்?”

 

“தயவு செய்து என்னை புரிந்துகொள் சனா. அன்று என்னை நானே அறிந்துகொள்ளாமல் பேசியது அது. உன்னைப் பிரிந்தபிறகுதான் நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பதையே உணர்ந்தேன். இலங்கையில் தாத்தா பாட்டி என்னைக் கவனித்துக் கொண்டார்கள். சொந்த பந்தங்கள் என்னைச் சுற்றி இருந்தார்கள். அம்மா அப்பா, நண்பர்கள் எல்லோரும் தினமும் என்னோடு தொலைபேசியில் பேசினார்கள். ஆனாலும், என் மனம் உன்னை மட்டும்தான் நாடியது. உன்னோடு கதைக்கமாட்டோமா? உன்னோடு கைகோர்த்து நடக்கமாட்டோமா என்றுதான் தவித்தேன். என்னருகில், என் காதலியாக, மனைவியாக நீயிருந்தால் மட்டுமே என் வாழ்க்கை பூரணமாகும்! அதை மட்டும்தான் என் இதயம் ஏற்கும் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நான் உணர்ந்துகொண்டேன். எல்லோரும் இருந்துமே, நீ இல்லாமல் ஒன்றுமே இல்லாததுபோல் தான் இவ்வளவு நாளும் இருந்தேன்.” என்றவனை, சிறு திகைப்போடு நோக்கினாள் சனா.

 

அவளும் இதேமாதிரி நினைத்திருக்கிறாள். எல்லோரும் இருந்தும், அவன் இல்லாமல் யாருமே இல்லாதது போல் அவளும் உணர்ந்திருக்கிறாள்.

 

நினைவுகளில் கூட அவர்களுக்குள் எவ்வளவு ஒற்றுமை. ஆனால்.. என்ன ஒற்றுமை இருந்து என்ன பிரயோசனம்? அவனோடு வாழ அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லையே. தொண்டை அடைத்தது.

 

“இல்லை. நீங்கள் என்ன சொன்னாலும், இனி நமக்குள் எதுவும் சரிவராது. பிரிந்தது பிரிந்ததாகவே இருக்கட்டும்..” என்றாள், குரலடைக்க.

 

“ஏன்?” என்றவனின் குரலில், அவனது பிடிவாதம் மீண்டிருந்தது.

 

“என்ன ஏன்? ஐந்தறிவு படைத்த பூனையே ஒருதடவை சூடு பட்டால் அந்த இடத்துக்கு மறுபடியும் போகாது. நான் என்ன அந்தப் பூனையை விடக் கேவலமானவளா? எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் மீண்டும் மீண்டும் உங்களை நம்ப?

 

“ஏன் சனா இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறாய்?”

 

“இது பிடிவாதம் அல்ல. என்னுடைய இயலாமை. இனியும் உங்களை நம்பி ஏமாறும் சக்தி எனக்கில்லை. சுதந்திரமாக வாழ்ந்து பழகிய உங்களுக்கு, என் செயல்கள் விலங்கு.. விலங்காக..” அந்த வார்த்தைகளைச் சொல்லவே அவளுக்குத் தொண்டை அடைத்தது.

 

அவளின் தவிப்பைத் தாங்க முடியாமல், “அந்தப் பேச்சு வேண்டாமே..” என்றான் சூர்யா.

 

ஒருவித பிடிவாதம் முகத்தில் தோன்ற, “இல்லை, இன்றாவது இருவரும் பேசித் தீர்த்துவிடலாம். என் செயல்கள், நான் காட்டிய அன்பு உங்களுக்கு விலங்காக இருந்திருந்தால், நீங்கள் அதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா? நீங்கள் எதைச் சொன்னாலும் நான் கேட்டிருப்பேனே.. யாருமே இல்லை என்று தவித்துக் கொண்டிருந்த எனக்கு, நீங்கள்தான் விடிவெள்ளியாகத் தெரிந்தீர்கள். அதனால்தான் என் உள்ளத்து அன்பு முழுவதையும் உங்கள் மீது கொட்டினேன். அது ஒரு தப்பா?” என்று கேட்டவளின் விழிகளில் கலங்கியது.

 

“அது தப்பில்லை சனா. ஆனால், அதை நான்தான் உணர்ந்துகொள்ளவில்லை.” என்றான் தவிப்போடு.

 

அவன் பேச்சு அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. இவ்வளவு நாளும் உள்ளே குமுறிய மனக்குமுறலை கொட்டிக் கொண்டிருந்தாள்.

 

“அன்று என்னவெல்லாம் சொன்னீர்கள்? அடக்குமுறை என்றீர்கள், அடிமைப் படுத்துகிறேன் என்றீர்கள், இன்னும் சினமூட்டுகிறேன், உங்களை என்னிடம் கெஞ்ச வைக்கிறேன் என்று என்னவெல்லாம் சொன்னீர்கள்? எப்படி அப்படிச் சொல்ல முடிந்தது உங்களால்? உங்கள் அம்மா உங்களைக் கண்டித்தால், இனி எனக்கு அம்மா வேண்டாம் என்று அவர்களையும் பிரிந்து விடுவீர்களா?” என்று அவள் கேட்டபோது, அதிலிருந்த உண்மை அவனைப் பலமாகத் தாக்கியது.

 

“என்னிடம் உங்களை இன்றுபோல் அன்று விளக்கியிருக்க வேண்டாமா? பிரிந்துவிடலாம் என்று எவ்வளவு இலகுவாகச் சொன்னீர்கள். அன்று என் நிலையைக் கொஞ்சமாவது யோசித்தீர்களா? சுயநலமாகத்தானே முடிவெடுத்தீர்கள்? அந்த முடிவு எனக்கும் நல்லது என்று, நீங்களாக எப்படி முடிவு செய்தீர்கள்? உங்களுக்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தது?” அவளின் ஒரு கேள்விக்குக் கூட அவனிடம் பதிலில்லை. வாயடைத்து நின்றான்.

 

“யாரோடும் ஆத்மார்த்தமாக ஒட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தவள், உங்களைக் கண்டதும் இனி எல்லாமே நீங்கள்தான் என்று நினைத்தேனே, அதற்கு நீங்கள் தந்த பரிசு என்ன? நான் இறந்தாலும் மாறாத மனக்காயம். உங்களுக்கு எல்லாச் சொந்தமும் இருந்தது. அதனால் உங்கள் அன்பை எல்லோருக்கும் பங்கு போட்டீர்கள். ஆனால் எனக்கு? நீங்கள் மட்டும்தானே மொத்த சொந்தமாகத் தெரிந்தீர்கள். அதனால்தானே நேசம், பாசம், அன்பு, காதல், கோபம் என்று அனைத்தையும் உங்களிடம் கொட்டினேன். இந்த உலகில் என்னைப் புரிந்துகொண்டவர் நீங்கள் மட்டும்தான் என்று இருந்தவளின் தலையில், மின்னாமல் முழங்காமல் இடியை அல்லவா அன்று போட்டீர்கள். இன்று எந்த முகத்தோடு வந்து என் முன் நிற்கிறீர்கள்?” வேதனையில் முகம் கசங்க, கண்களில் கண்ணீர் வழிய, ஆவேசத்தோடு அவனைப் பார்த்து அவள் கேட்க, சூர்யா துடித்துப் போனான்.

 

எந்தளவுக்கு அவனை அவள் நேசித்திருக்கிறாள். மூடன் போல் அதைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டானே.

 

“உன்னுடைய எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதிலில்லை சனா. ஆனால், இனி என்னால் என்றும் உன்னை விடமுடியாது. விடமாட்டேன்!” என்றான் உறுதியான குரலில்.

 

“நீங்கள் என்ன என்னை விடுவதும் விடாததும்? நான் விடுகிறேன் உங்களை! நீங்கள் வேண்டாம் எனக்கு!” என்றாள், உறுதியான குரலில்.

 

“பொய் சொல்லாதே! உன் மனதிலும் என் மீது அன்பு இருக்கிறது என்பதற்குச் சாட்சி நீ வடிக்கும் இந்தக் கண்ணீர். பிறகும் ஏன் இந்த வீண் பிடிவாதம்?” என்று நயமாகக் கேட்டான் சூர்யா.

 

“இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதிலைச் சொல்லிவிட்டேன், உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதாக” என்றவள், அதற்கு மேல் அவனைப் பேசவிடாது, “எனக்கு நேரமாகிறது. நான் வீட்டுக்குப் போகவேண்டும்.” என்றுவிட்டுக் காருக்குள் ஏறினாள்.

 

அவனுக்கும் அதற்கு மேல் அவளைக் கஷ்டப் படுத்த இயலவில்லை. அவன் செய்த செயலுக்கு, உடனேயே அவள் மனம் மாறும் என்று எதிர்பார்க்க முடியாமல், “என்னை பெட்ரோல் செட்டில் விட்டுவிடு..” என்றபடி, அவனும் ஏறிக்கொண்டான்.

 

காரை இயக்கியவளுக்கு அதனை ஓரடி கூட நகர்த்த முடியவில்லை. இதுநாள் வரை மனதுக்குள்ளேயே வைத்துக் குமுறியவைகளை வெளியே கொட்டியதாலோ என்னவோ, கைகால்கள் நடுங்கியது. வீதியில் பார்வையைப் பதித்தால், கண்ணீர் அதை மறைத்தது.

 

கியரில் கையை வைத்தவளின் கை நடுக்கத்திலிருந்தே அவளின் நிலையை நொடியில் ஊகித்துக்கொண்டான் சூர்யா. உள்ளம் வலித்தது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது தான்தான் என்கிற உண்மை சுட, “நீ இறங்கு. நான் ஓட்டுகிறேன்..” என்றான் மென்மையாக.

 

“தேவையில்லை!” என்றாள், அப்போதும் வீம்பாக.

 

அவள் பேச்சைக் காதில் விழுத்தாது, இறங்கி அவள் புறமாக வந்தவன், அவள் கையைப் பிடித்து, “வெளியே வா..” என்றான்.

 

அவனிடமிருந்து தன் கரத்தை உருவ முயன்றபடி, “மாட்டேன்..” என்றாள் அடமாக.

 

அவளின் அடத்தில் அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

 

“நீ இறங்காவிட்டால், உன்னைத் தூக்கிக்கொண்டுபோய் அந்தப் பக்கம் இருத்துவேன். அதுதான் உன் விருப்பம் என்றால், எனக்கும் ஓகே..” என்றபடி அவன் குனிய, அவனை முறைத்துவிட்டு இறங்கி, அந்தப் பக்கம் ஏறிக்கொண்டாள் சனா.

 

 

 

error: Alert: Content selection is disabled!!