நீ வந்து தங்கிய நெஞ்சில் 12.1

அத்தியாயம் 12

அவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அத்தனையும் ஒரு நிலைக்கு வருவதற்கே நடுச்சாமமாயிற்று. இதற்குள் அவர்களோடு சேர்ந்து தானும் ஆடும் அளவிற்கு வந்திருந்தான் திவாகர்.

அவரவரே எடுத்து உண்பதுபோல்தான் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமக்குப் பிடித்தவற்றைத் தட்டில் எடுத்துக்கொண்டு நின்றபடி, நடந்தபடி, பேசியபடி என்று சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அடிக்கடி மித்ரன், மகேஷ், அசோகன், நவீன் குழுவில் யாரோ ஒருவரோ இருவரோ காணாமல் போனார்கள். பிறகு வந்தார்கள். நிரோஜன் சாப்பிடுவதாக இல்லை.

இதையெல்லாம் கவனிக்காததுபோல் கவனித்த யாமினிக்குப் புரிந்துபோயிற்று. நிரோஜனை முறைத்து முறைத்துப் பார்த்தாள். அவன் இவள் பார்வையைச் சந்திக்க வேண்டுமே. தங்களைக் கண்டுகொண்டாள் என்று தெரிந்ததால் தப்பி ஓடிக்கொண்டிருந்தான்.

ஒரு சிறு அரங்கினுள் எந்தளவு தூரத்திற்கு அவனால் அவளிடமிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்?

“சாப்பிடேல்லையா?” அவனைத் தேடிப்போய்க் கேட்டாள் யாமினி.

ஒரு கணம் தடுமாறிவிட்டு, “நாங்களே பார்ட்டிய அரேஞ்ச் பண்ணிப்போட்டு நாங்களே முதல் ஆளா நிண்டு சாப்பிடுறதா? என்ன யமி நீ?” என்றான் அவன்

“ஓ! அந்தளவுக்கு நல்லவன் நீங்க?”

“இல்லையா என்ன? உன்ர ஃபிரெண்ட் எண்டுதானே இத்தனை ஏற்பாடு.” என்று அவளைக் குளிர்விக்க முயன்றான்.

“நடிக்காதீங்க. முள்ளுக் கரண்டியாலயே தொண்டைல ஏத்தி விட்டுடுவன். டிரிங்க்ஸ் வாங்கி வச்சிருக்கிறீங்க என்ன? அதான் சாப்பிடாம திரியிறீங்க. உங்கட ஆக்கள் வேற அடிக்கடி காணாம போயினம். எல்லாரின்ர கண்ணும் மின்னுது. காரணமே இல்லாம அத்தனை பல்லையும் காட்டி இளிக்கிறது, கேக்க முதலே எதையாவது எடுத்துக்கொண்டு வந்து தாறது. இதையெல்லாம் பாத்த பிறகும் கண்டுபிடிக்க மாட்டன் எண்டு நினைச்சீங்களா?”

‘இவள் போன பிறகு ஆரம்பிங்கடா எண்டு சொன்னதைக் கேட்டாங்களா, ராஸ்கல்ஸ்!’ என்று தலையைக் கோதிவிட்டவனுக்கு அவளை எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை.

“நீங்களும் குடிச்சனீங்களா?”

“இன்னும் இல்ல.” என்றான் அவன் அவசரமாக.

“இன்னும் இல்ல?”

‘அடேய்! உளறாதடா!’ என்று உள்ளே அலறினாலும், “ப்ச் யமி! என்னை நம்ப மாட்டியா?” என்று அதட்டினான்.

“இல்ல, நம்ப மாட்டன்!” என்றாள் அவள் உடனேயே. “ஊதுங்க முதல், நாறுதா எண்டு பாக்கிறன்.”

“அடியேய் உன்னில சத்தியமா குடிக்கேல்ல நான்.”

“அப்ப ஊதுங்க.”

“யமி!”

“ஊதச் சொன்னனான்!”

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு இலேசாக அவள் முகத்தருகே நெருங்கி ஊதினான் அவன்.

அவன் இன்னும் மது அருந்தவில்லை என்று அவளுக்கு முதலே தெரியும். ஆனாலும், கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட மனமில்லை. இப்படி, தன் முன்னே அடங்கி, தவறு செய்த குழந்தை போல் நிற்கும் அவனை அவளுக்கு மிக மிகப் பிடிக்கும். அதனாலேயே சும்மா மிரட்டினாள்.

“லைட்டா நாறுற மாதிரி இருக்கே.” உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியபடி வேண்டுமென்றே சொன்னாள்.

அவன் பல்லைக் கடித்தான். “சேட்டை உனக்கு? தொட்டுக்கூடப் பாக்காதவனிட்ட நாறுது என்ன?” என்று சீறினான்.

அதற்குப் பதில் சொல்லாமல், “இன்னும் சாப்பிடாம என்ன செய்றீங்க நீங்க?” என்று கேட்டாள்.

“இப்ப என்ன உனக்கு? நான் சாப்பிடோணும். அவ்வளவுதானே? நீயே தா!” என்றான் அவன்.

அவள் முறைத்தாள்.

“இந்த நேரம் எங்களைக் கவனிக்க ஆருமே இல்ல. நீ தா!”

அவளும் பார்வையைச் சுழற்றினாள். யாரும் இவர்களைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. அவள் ஆசை மனதும் உந்த, தன் தட்டில் இருந்த ஃபிரைட் ரைஸை கரண்டியில் அள்ளி, அவனுக்குக் கொடுத்தாள்.

“இப்ப சந்தோசமா? போகவா?” அந்த ஒற்றை வாயோடு தப்பியோட முயன்றான் அவன்.

அவள் விடவில்லை. அவன் நெஞ்சு சட்டையிலேயே பிடித்து அவனைச் சுவரோடு சுவராகச் சாற்றினாள்.

அவன் அதிர்ந்து பார்த்தான். “ஏய் என்னடி இது? ஒரு ஆம்பிளைய இப்பிடிக் கொடுமப் படுத்திப் பழகாத!” என்று சட்டையை நேராக்கிவிட்டவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அடுத்தடுத்து உணவை அள்ளி அவன் வாய்க்குள் அடைந்தாள்.

அவனைப் போதும் என்று சொல்வதற்குக் கூட விடவில்லை. “ம்ம்ம்!” என்று அவன் என்ன முயன்றும் தட்டில் இருந்த முழுவதையும் அவன் வாய்க்குள் அடைந்துவிட்டே விட்டாள்.

சாப்பிட்டுவிட்டால் மது அருந்த மாட்டான். ஒற்றை பியர்தான். என்றாலும் அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

கடைசி வாயையும் விழுங்கிவிட்டு, “பொம்பிளையாடி நீ?” என்றான் அவன், போட்டுவைத்த அத்தனை திட்டங்களும் வீணாகிப்போன கடுப்புடன்.

அவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. தம்மைச் சுற்றிப் பார்த்துவிட்டு அவனை நெருங்கி, “அதான் நவீனை நாலு மாசம் ஆக்கினீங்களா?” என்று கேட்டாள்.

நொடியில் அவன் மனநிலையே மாறிற்று. விசமச் சிரிப்புடன் என்னவோ சொல்ல வந்தவனை முந்திக்கொண்டு, “மூச்! வாயே திறக்கக் கூடாது. போங்க! போய் வேலையப் பாருங்க!” என்று அவனை துரத்தினாள்.

ஆனால், அவன் எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், அவன் விழிகளில் கசிந்த குறும்பிலேயே அவள் மொத்தமாகச் சிவந்துபோனாள்.

அதைக் கண்டு சத்தமாக நகைக்கப் போனவனின் வாயை மூடி, “போங்க பேசாம!” என்று துரத்தியவளின் விழிகளில் அத்தனை சிரிப்பு.

அப்படியே அவளை அள்ளிக் கொஞ்சும் ஆசை அவனுக்கு. சூழ்நிலை சரியாக இல்லை என்பதில் பேசாமல் போனான்.

அதுவரையில் தம்மை யாரும் கவனிக்கவில்லை என்றுதான் எண்ணியிருந்தனர். இல்லாவிட்டாலும் அவர்கள் காதலர்கள் என்று அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும். அருகருகே நின்று பேசிக்கொள்வதில் என்ன இருக்கிறது என்று நினைத்தார்கள்.

ஆனால், மற்றப் பெண்களோடு நின்றிருந்தாலும் திலினியின் பார்வை இவர்களிடம்தான். கவனிக்க வேண்டும் என்று நினைத்து அவள் கவனிக்கவில்லை.

அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யம் அவளைக் கவர்ந்ததென்றால், எத்தனை அடாவடியாக இருந்தாலும் அவளுக்கு அடங்கிப் போகும், அவளையே சுற்றி சுற்றி வரும் நிரோஜன் கவனிக்க வைத்தான்.

அப்படிப் பார்த்த வரையில் யாமினி கொடுத்துவைத்தவள் என்றே தோன்றிற்று. இத்தனை துள்ளலும் துடிப்பும் நிறைந்த ஒருவன் கிடைத்தால் வாழ்க்கை மொத்தமும் அழகாகிவிடாதா என்ன? தனக்கும் அப்படி ஒருவன் கிடைக்க மாட்டானா என்கிற ஏக்கம் அவளுக்குள் உண்டாயிற்று.

திவாகருக்குக் கொழும்பு புது இடம் என்பதும், இன்னும் மணமாகாத ஜோடியை இரவு நேரத்தில் தனியாக வெளியே அனுப்பியதும், பார்ட்டி என்கிற ஒற்றைச் சொல்லே கண்ட கண்ட கற்பனைகளை வளர்த்துவிடுவதிலும் நேரம் பன்னிரண்டைத் தொட்டதும், திவாகரின் அன்னை அழைத்து அவர்களை வரச் சொன்னார்.

அடுத்த நாள் ஊருக்குப் புறப்பட வேண்டும் என்பதும் சேர அவர்களும் புறப்பட்டார்கள். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நன்றி சொல்லி, விடைபெற்றனர்.

error: Alert: Content selection is disabled!!