அத்தியாயம் 15
இரவிரவாக ஒரு பொட்டுத் தூக்கமில்லாமல் அழுததாலோ என்னவோ யாமினியின் கண் முகமெல்லாம் வீங்கிப்போயிருந்தன. காலையிலும் அவள் மனத்திலும் முகத்திலும் தெளிவென்பது மருந்துக்குமில்லை.
அதில் அன்று அவள் அலுவலகத்திற்குச் செல்லவில்லை. ‘வெர்க் ஃப்ரொம் ஹோம்’ கேட்டு எடுத்துக்கொண்டாள். காலையிலேயே மீட்டிங் இருந்தது.
அதற்கு முதல் இரவே யோசித்து வைத்தது போன்று, இங்கே அணிவதற்கென்று கொண்டுவந்து வைத்திருந்த நகைகளில் சிலவற்றை அடகு வைப்பதற்காகப் பார்த்து எடுத்துவைத்தாள்.
மீட்டிங்கிற்கு தயாராகி, தேநீர்க் கோப்பையுடன் வந்து அமர்ந்தாள். அதைப் பருக முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டேயிருந்தது. நீ மட்டும் வாங்கிய பணத்தைத் திருப்பி தந்தாயா என்று அவன் கேட்ட கேள்வியிலேயே காயப்பட்டுப்போயிருந்தாள் அவள்.
அது போதாது என்று பார்வை, பேச்சு, செயல் என்று அத்தனையாலும் அவள் இதயத்தை நொருக்கிவிட்டானே. தன் நிரோஜனா அது என்று இப்போதும் சந்தேகப்பட்டாள்.
அவள் முன்னேயே மது அருந்தியது போதாது என்று அவனைக் குடிக்க வேண்டாம் என்று சொல்ல அவள் யாராம்? அறையக் கையை ஓங்கிக்கொண்டு வந்தானே. அந்த அறை மட்டும் பட்டிருந்தால் அவள் கன்னம் கழன்று கைக்கு வந்திருக்கும். அவ்வளவு ஆவேசம் அந்த அறையில்.
அவளும் அடித்தாள்தான். அது சிறு பிள்ளையின் அடிகள். அடித்தவளுக்கே வலிக்கவில்லை. அவனுக்கா வலித்திருக்கும்? அதற்குப் பதிலாக அவன் செய்தது?
உதடுகள் அடக்கிய அழுகையில் நடுங்கின. தேநீரை வேக வேகமாகப் பருகித் தன்னைக் கொஞ்சம் சமன்படுத்தினாள்.
நேரமாகவும் கூகுள் மீட்டினுள் நுழைந்து, காதில் வயர்லெஸ் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டாள்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களாக வைத்துக் கழுத்தறுத்தார்கள். அதன் முடிவில் அவளுக்கு நான்கு ப்ராஜெக்டுகள் வழங்கப்பட்டன.
இன்றே முடித்தாக வேண்டிய அசைன்மென்ட்டுகளை கடகடவென்று முடித்து, மெயில் அனுப்பிவிட்டு நிமிர்ந்தபோது, பொழுது பகலைத் தாண்டிக்கொண்டிருந்தது.
காலை உணவின் நினைவே இல்லை. பகலுக்கும் எதுவும் செய்யவில்லை. இனிச் செய்ய மனமுமில்லை. வேலையைத் தவிர்க்க முடியாது என்பதில்தான் இத்தனை நேரமாக ஒரு இடத்திலேயே இருந்து அதை முடித்தாள்.
இப்போது முதல் வேலையாக அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகுதான் அவள் உள்ளம் கொஞ்சமேனும் அமைதியாகும். எழுந்து புறப்பட்டாள்.
அடகுக்கடை சென்று, நகையை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு போய் வங்கியில் போட்டாள். அங்கேயே நின்று இணைய வாயிலாக அவனுக்குக் கொடுக்க வேண்டிய தொகையை அனுப்பிவிட்டாள்.
இதை முதலே செய்திருக்கலாம். எல்லாம் பட்டுத் தெளியவேண்டியிருக்கிறது. ஒரு நெடிய மூச்சுடன் பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
அங்கே நிரோஜனும் இன்று அலுவலகம் செல்லவில்லை. ‘வெர்க் ஃப்ரொம் ஹோம்’ல்தான் இருந்தான். அவன் மனமும் ஒரு நிலையில் இலை. என்ன இருந்தாலும் அவள் முன்னே மது அருந்தியதும், அடிக்கக் கையை ஓங்கியதும் பெரும் தவறு என்று அவனுக்கே புரிந்தது. அவள் மீதிருந்த கோபமும், உள்ளே போயிருந்த மதுவும் பார்த்த வேலை அது.
அதுவே அவனுள் ஒருவகை அழுத்தத்தை உண்டாக்காகி, அதற்கும் அவளையே காரணமாக்கிற்று. அவனை அப்படியெல்லாம் செய்ய வைத்தது அவளாயிற்றே. இனி இதை எப்படி அணுகுவது என்று யோசித்துக்கொண்டிருக்கையில்தான் வங்கியிலிருந்து மெசேஜ் வந்து விழுந்தது.
எடுத்துக் பார்த்தவனின் முகம் கடுத்தது. அதை அப்படியே அவளுக்கு புலனத்தின் வாயிலாக அனுப்பி, “என்ன இது?” என்று எழுதிக் கேட்டான்.
அன்றைக்குச் சமைக்கும் உத்தேசம் இல்லாததால் வரும்போதே உணவுப் பார்சல் வாங்கி வந்திருந்தாள் யாமினி. அதை எடுத்துக் பிரித்துக்கொண்டிருக்கையில்தான் அவனிடமிருந்து குறுந்தகவல் வந்து விழுந்தது.
சற்று நேரத்திற்கு அதையே பார்த்திருந்துவிட்டு, “உங்களுக்கு நான் தரவேண்டிய காசு.” என்று பதில் அனுப்பிவிட்டாள்.
“நான் உன்னைக் கேட்டனானா?” கண்முன்னே நின்று சீறுவது போலவே அந்தக் கேள்வி மிக வேகமாகப் பறந்து வந்தது.
அப்படிக் கேட்டிருந்தால் கூட அவளுக்கு இந்தளவில் வலித்திருக்காதே. கண்ணோரங்கள் மீண்டும் கரிக்க, அந்தக் கேள்விக்குப் பதில் அனுப்பாமல் பேசாமல் இருந்துகொண்டாள்.
சற்று நேரத்தில் அவளுக்கு வங்கியிலிருந்து குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்தது. எடுத்துப் பார்த்தாள். அவள் அனுப்பிய பணத்தை அவன் திருப்பி அனுப்பியிருந்தான்.
என்ன இது விளையாட்டு? நேற்று அப்படிக் கேட்பானாம். இன்று அவள் கொடுத்த பணத்தைத் திருப்பி அனுப்புவானாம். என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் அவளைப் பற்றி?
பிடிவாதத்தில் உதடுகள் அழுந்த திரும்பவும் அவனுக்கு அதை அனுப்பிவிட்டு, “அந்தக் காசை வாங்கேக்கையே திருப்பித் தருவன் எண்டு சொல்லித்தான் வாங்கினனான். நீங்களும் ஓம் எண்டு சொல்லித்தான் தந்தனீங்க. அதே மாதிரி நேற்று நீங்க அப்பிடிக் கேட்டபிறகும் அதைத் தராம இருக்கிற அளவுக்கு நான் இஞ்ச ரோசமானம் இல்லாம இல்ல நிரோஜன். திருப்பி அனுப்பியிருக்கிறன். நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ.” என்று வாயால் பேசி அனுப்பிவிட்டாள்.
சூடாக அவனிடமிருந்து பதில் வரப்போகிறது என்று சாப்பிடுவதையும் விட்டுவிட்டு அவள் காத்திருக்க அவனிடமிருந்து பதிலும் இல்லை, பணம் திரும்பி வரவும் இல்லை.
ஏதோ ஒரு வகையில் அதுவும் வலித்தது. அதே நேரத்தில் அவள் செய்ததில் தவறு எதுவும் இருப்பதாகவும் அவளுக்குத் தெரியவில்லை. பசியும் மந்தித்துவிட்டதில் எழுந்துபோய்க் கட்டிலில் விழுந்தாள்.
உள்ளம் தந்தையின் அண்மைக்காக ஏங்கிற்று. அவர் இருந்திருக்க இதெல்லாம் நடந்திருக்காது. அவளும் எப்போதும்போல் நொடி நேரத்தையும் அனுபவித்து வாழும் பட்டாம் பூச்சியாக வாழ்ந்திருப்பாள்.
இரவு முழுக்க உறங்காதது, நடந்த சண்டை, அழுதது, நிறைய நேரமாக இருந்து கணனியில் பார்வையைப் பதித்து வேலை பார்த்தது என்று எல்லாம் சேர, கண்கள் சொக்கின அவளுக்கு. அந்த நேரத்தில் படபடவென்று அவள் அறையின் கதவு தட்டப்பட்டது. திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். நிரோஜனோ என்று தோன்றவும் வேகமாக எழுந்துபோய்ப் பார்த்தாள்.
அவன்தான். இறுகிய முகத்துடன் நின்றிருந்தான். அடுத்த சண்டையா? உள்ளம் படபடக்க வேகமாகக் கதவைத் திறந்தாள்.
உண்மையில் சண்டை பிடிக்கிற அளவு கோபத்துடன்தான் புறப்பட்டு வந்தான் நிரோஜன். ஆனால், கண் மடல்கள் தடித்து வீங்கியிருக்க, முற்றிலுமாகச் சோர்ந்து நின்றவளைக் கண்டு சற்றே அவன் கோபம் மட்டுப்பட்டது.
“என்ன நினைப்பில அந்தக் காசைத் திருப்பித் தந்திருக்கிறாய் யாமினி?” என்றான் கண்களில் கூர்மையுடன்.
“மெசேஜ்ல சொன்னதுதான். திருப்பித் தருவன் எண்டு சொல்லித்தான் வாங்கினனான். சொன்ன மாதிரித் திருப்பித் தந்திருக்கிறன்.” என்று பதிலிறுத்தாள் அவள்.
“ஆனா நான் அதத் திருப்பி வாங்கிற எண்ணத்தோட உனக்குத் தரேல்ல எண்டு உனக்கு விளங்கினதா இல்லையா?”
ஏன் விளங்காமல்? என் நிரோஜன் அதை நான் திருப்பிக் கொடுக்கையில் கோபப்படுவான் என்று கூடத்தான் பெருமையாக நினைத்தாள். ஆனால் நடந்தது?
கண்களும் முகமும் அழுகைக்குத் தயாராகிச் சிவந்துகொண்டு வரவும் பெரும் பாடு பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்தினாள்.
“இப்ப என்ன உனக்காக நான் எதுவும் செய்யக் கூடாதா? செய்தா திருப்பித் தந்திடுவியா?”
அந்தக் கேள்வியை எப்படி எடுப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அதற்கு என்ன பதில் சொல்வது என்றும் புரியவில்லை. ஆனாலும் அவள் முகம் கன்றியது. அவளுக்கு பலமுறை உடைகள் வாங்கித் தந்திருக்கிறான். அவளும் வாங்கி கொடுத்திருக்கிறாள் என்றாலும் அவன்தான் அதிகம். நகைகளும் கூட.
“இந்தக் காசைத் திருப்பித் தந்து கணக்கை முடிக்கிறதில உறுதியாய் இருக்கிறாய் எண்டா, எனக்கும் உனக்குமான உறவை முறிக்கிறதில உறுதியா இருக்கிறாய் எண்டு நான் அர்த்தம் எடுக்கவா யாமினி?” என்றவனின் கேள்வியில் துடித்து நிமிர்ந்தாள் யாமினி.
உறவை முறிப்பதா? என்ன பேசுகிறான் இவன்? அவளுக்கு மூச்சடைத்து இருட்டிக்கொண்டு வந்தது.
இங்கே நடுவில் அகப்பட்டு நசிப்படுவது அவளின் சுயமரியாதை. அவனானால் அதைக் கொன்றுவிட்டு அவனுக்கும் அவளுக்குமிடையிலான உறவைத் தக்கவைத்துக்கொள் என்கிறான். சும்மாவல்ல. மிரட்டலாக.
அதன் பிறகு அவள் வாயைத் திறக்கவில்லை. திறக்க முடியவில்லை. அவன் அனுப்பிய பணம் வந்து சேர்ந்துவிட்டதாக அவள் கைப்பேசி ஒலி எழுப்பிச் சொல்லிற்று.
அவனாலும் இலகுவாக அங்கிருந்து போக முடியவில்லை. அதே நேரத்தில் நடந்தவற்றை மறந்தோ கடந்தோ அவளைச் சமாதானம் செய்யவும் முடியவில்லை அவளையே பார்த்து நின்றான். அவள் அசைவதாக இல்லை என்றதும் அங்கிருந்து வெளியேறினான்.
அப்படியே தொய்ந்து சோபாவில் விழுந்தாள் யாமினி.

