நீ வந்து தங்கிய நெஞ்சில் 16.1

அத்தியாயம் 16

யாமினி மொத்தமாகத் துவண்டு போயிருந்தாள். தெளிவாக எதையும் சிந்திக்க இயலவில்லை. அவ்வளவில் அவனுக்கும் தனக்குமான அந்தப் பந்தத்தைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, தான் நினைத்ததைச் சாதித்துக்கொண்ட அவன் செயலை எண்ணியெண்ணி மருகினாள்.

உறவை முறிக்கத் தயாராக இருக்கிறாயா என்று எவ்வளவு இலகுவாகக் கேட்டான்? அவளுக்கு நெஞ்சமெல்லாம் படபடத்துப் போயிற்றே. அதை எண்ணிப் பார்க்கும் தைரியம் கூட அற்றவளாக நின்றுவிட்டாளே. அப்படியான தவிப்புகள் துடிப்புகள் எதுவும் அவனுக்கு இல்லையோ? அதுதான் வெகு சாதாரணமாகக் கேட்டானோ?

அந்தளவில் அவர்கள் உறவு சாதாரணமானதா என்ன? பிடிவாதமாக நின்று பணத்தை அவள் கொடுத்திருந்தால் சொன்னதுபோல் உறவை முடித்துக்கொண்டிருப்பானா?

அந்தப் பணத்தை அவள் எதுவுமே செய்யவில்லை. நகையை மீட்கவும் இல்லை. வங்கியில் அப்படியே கிடந்தது. அதன் பாரம் மட்டும் அவள் நெஞ்சை அழுத்தியது.

இரண்டு நாட்கள் கடந்திருந்தன. அவன் புறமிருந்து சிறு குறுந்தகவல் கூட இல்லை. அப்படியானால் அவன் பேசியது, நடந்துகொண்டது அனைத்தும் சரியே என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறானா? அதுதான் அவளைத் துன்பத்தில் ஆழ்த்தின.

ஆனால் அவள்? அவனால் ஆழமாகக் காயப்பட்டிருந்தபோதிலும் ஒவ்வொரு விநாடியையும் கைப்பேசியின் திரையை வெறித்துப் பார்த்தபடியே கழித்துக்கொண்டிருந்தாள்.

ஒரு முறை அழைக்க மாட்டானா, எதையாவது சொல்லி அவள் மனக்காயங்களை ஆற்றிவிட மாட்டானா, அவளைப் பழையபடி மாற்றிவிட மாட்டானா என்று, இத்தனைக்குப் பிறகும் அல்லாடிக்கொண்டிருக்கிறாள்.

அவளுடைய தன்மானம் அவளை மௌனமாக இருக்கச் சொன்னது. இருந்து அவன் தவறை அவனுக்கு உணர்த்தச் சொன்னது. மனம் அவனிடமிருந்து ஒரு விளக்கத்தை எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தது.

அஜந்தாவின் திருமணத்திற்கு மூன்று வாரங்களே இருந்தன. ஒரு வாரம் முதலே விடுமுறை எடுத்துக்கொண்டு வவுனியாவிற்குப் புறப்படுகிறாள். அதற்கு முதல் முடிக்க வேண்டிய ப்ராஜெக்டுகளை, அசைமெண்டுகளை முடிப்பதில் மும்முரமாக இருந்தாள் அவள்.

அதைவிட ஊரில் நடக்கும் திருமண ஏற்பாடுகளில் அவளின் விருப்பு வெறுப்புகளும், ஆலோசனைகளும் இரு தரப்பு வீட்டினருக்கும் தேவையாக இருந்ததில் கையில் கைப்பேசியுடனேயே அலைந்தவள் இவளை உற்றுக் வனிக்க மறந்துபோனாள்.

அப்போதும் ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என்று அவள் கேட்காமலில்லை. ஒன்றுமில்லை என்று சொல்லிச் சமாளித்தாள். யாரிடமும் சொல்ல முடியாத, சொல்லத் தெரியாத உயிர் வலியின் பெயர் ஒன்றுமில்லைதானே. அதையே அவளும் சொன்னாள்.

என்னவோ தான் மிகவும் தனியாகிவிட்டது போலொரு உணர்வு. தனது இயல்பு நிலைக்குத் திரும்பப் போராடினாள். அவளை நோகடித்துவிட்டு, அவள் எப்படியிருக்கிறாள் என்று அறிந்துகொள்ளாமல் அவனால் இருக்க முடிகிறது என்றால், உனக்கும் அப்படி இருப்பதற்கு என்ன என்று அறிவு கேட்காமல் இல்லை.

பாழாய்ப்போன இந்த மனம்தான் அவளைப் போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்றுகொண்டிருந்தது.

அன்று அவள் வேலை முடிந்து கிளம்புகிற நேரத்தில் ஆதவன் அழைத்தான். அவளுக்கு நரேன் என்று ஒரு வரன் வந்திருப்பதைச் சொல்லி, அவன் கொழும்பு வந்திருப்பதால் அவளை ஒரு முறை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறான் என்றும் சொன்னான்.

யாமினிக்குத் திகைப்பு. என்ன சொல்வது என்று தெரியவில்லை. தானாக அக்கறை எடுத்து, அவளுக்கு ஒரு நல்லதைச் செய்துவிட நினைக்கிற அவனிடம் கோபப்பட முடியுமா? இல்லை, இப்போது போய் அவள் காதலைப் பற்றிச் சொல்லத்தான் முடியுமா?

அவள் நிலையை உணர்ந்தாற்போல், “இன்னும் எல்லாம் ஆரம்ப நிலைலதான் இருக்கு யாமினி. போய்ப் பாருங்கோ. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா நம்பிக்கையோட மேல கதைக்கலாம். இல்லாட்டி இப்பவே நிப்பாட்டலாம்தானே. அதுதான் நானும் சரி எண்டு சொன்னனான். உங்கட நம்பர் குடுத்திருக்கிறன். மெசேஜ் பண்ணுவார்.” என்று சொல்லிவிட்டு வைத்தான் அவன்.

சில நொடிகளில் அவன் புகைப்படமும், அவன் பற்றிய தகவல்களும், கைப்பேசி இலக்கமும் இவள் கைப்பேசிக்கு வந்து விழுந்தன.

அப்படியே அமர்ந்துவிட்டாள் யாமினி. தன்னிடம் சொல்லாமல் இந்த ஏற்பாட்டைச் செய்த அத்தானிடம் கோபப்பட முடியவில்லை. அவள் அன்னை கூடச் சொல்லவில்லையே.

உடனேயே அவருக்கு அழைத்து, “ஒண்ட செய்றதுக்கு முதல் ஒரு வார்த்த சொல்ல மாட்டீங்களாம்மா? ஆர், எவர் எண்டு தெரியாம திடீரெண்டு போய்ப் பார் எண்டு சொல்லுவீங்களா? நான் என்ன இஞ்ச வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கிறேனா?” என்று சூடாகக் கேட்டாள்.

அவர் அமைதியாகவே பதிலளித்தார்.

“என்ன நடந்தது எண்டு தெரியாம சும்மா கோபப்படக் கூடாதம்மா. அவர் கொழும்புக்கு வந்திருக்கிறது எங்களுக்குத் தெரியாது. அவரின்ர அப்பா இப்ப கொஞ்சத்துக்கு முதல்தான் அத்தானுக்கு எடுத்துக் கேட்டவராம். அத்தானுக்குமே இப்பிடித் திடீரெண்டு கொழும்பில நிண்டுகொண்டு கேட்டது கொஞ்சம் பிடிக்கேல்ல. ஆனா, இந்தக் காலத்தில சும்மா சந்திச்சுக் கதைக்கிறதில என்ன இருக்கு எண்டுபோட்டுத்தான் ஓம் எண்டு சொன்னவர். எங்கட பொம்பிளைப் பிள்ளைக்குப் பிடிச்சாத்தான் எதுவும் எண்டுறதையும் தெளிவா சொன்னவராம்.” என்று முறையான விளக்கம் தந்தார் அவர்.

கூடவே, “நீங்க படிச்ச பிள்ளை. வேலைக்கும் போறனீங்க. ஆம்பிளை பொம்பிளை வித்தியாசம் பாக்காம பழகிற ஆக்கள். ஒருக்கா நேர்ல போய்க் கதச்சுப்போட்டு வாறதில என்னம்மா இருக்கு? போயிட்டு வாங்கோ!” என்றும் சொன்னார்.

அவளுக்கு அதுவா பிரச்சனை? அதே நேரத்தில் அவர் சொன்னது போன்று ஒருமுறை பேசிப் பார்ப்பதில் என்ன இருக்கிறது, இதன் பொருள் எதற்கும் அவள் சம்மதிப்பதாக ஆகாதே என்று அவளுக்கும் தோன்றியது.

ஆனாலும் மனதில் ஒரு கலக்கம். சாதாரணமாக ஒருவனைச் சந்திப்பது வேறு, திருமணத்திற்குப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற அடிப்படையின்கீழ் சந்திப்பது வேறாயிற்றே.

அவள் அவரோடு கதைத்துக்கொண்டிருக்கையிலேயே தான் யார் என்று சொல்லிவிட்டு, “உங்களைச் சந்திக்கலாமா?” என்று கேட்டு நரேன் அனுப்பிய குறுந்தகவல் அவளுக்கு வந்து விழுந்தது.

அதைத் திரையில் பார்த்தாலும் உடனேயே பதில் சொல்லவில்லை அவள். மனத்தளவில் இந்தச் சந்திப்பிற்குத் தயாரானாலும், அவனுக்குப் பதில் அனுப்புவதில் ஏனோ ஒரு தயக்கம். அவன் காட்டும் இந்த வேகம் வேறு இன்னுமே கலக்கத்தை உண்டாக்கிற்று.

error: Alert: Content selection is disabled!!