அவளுக்குக் காது மடல்கள் வரை முகம் இரத்தமாகச் சிவந்துபோயிற்று. உடைகளைக் கைகள் ஆராய்ந்தாலும் அவன் காதோரமாக வந்து கிசுகிசுக்க விதமும், சொல்லிவிட்டு ஓடிய அழகும் அவளுள் கிச்சுகிச்சு மூட்டியபடியே இருந்தன.
திரும்பி அவன் வருகையில் அவன் கையில் சேலை ஒன்று இருந்தது. அதைக் காட்டி, “நல்லாருக்கா?” என்று கேட்டான்.
அது திருமணத்திற்கு அணியும் பட்டுச் சேலை. இதை யாருக்கு எடுத்திருக்கிறான் என்று உள்ளே ஓடினாலும் தலையை அசைத்தாள்.
“காவியான்ர கலியாணத்துக்கு நீ கட்டுறதுக்கு.” என்றான் அவன்.
அவளுக்குச் சட்டென்று முகம் மாறிப்போயிற்று. மூக்கு நுனி முதற்கொண்டு முகமெல்லாம் சிவந்து, கண்கள் கரித்தன. “இல்ல…” என்று ஆரம்பித்தவளை அவன் பார்வை அடக்கிற்று.
ஆனால், செய்வதை எல்லாம் செய்துவிட்டுச் சேலை எடுத்துத் தந்தால் ஆயிற்றா என்று மனம் புழுங்கிற்று. அல்லது, ஒற்றைச் சேலையை வாங்கித் தந்து, நடந்தவற்றை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்க முயல்கிறானா? உள்ளே உள்ளம் குமுறினாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை அவள்.
அதன் பிறகும் காவ்யா சொன்ன மற்றப் பொருள்களை வாங்குவதற்கு பேன்சி கடை முதற்கொண்டு பல கடைகளுக்கு ஏறி இறங்கினார்கள். அப்படியே அந்தச் சேலைக்குத் தோதாக அவளுக்குத் தேவையானவற்றையும் அவன் வாங்கினான். அவள் என்ன சொல்லியும் கேட்கவில்லை.
அந்தப் பொழுதுகளில் தவிர்க்க முடியாமல் சந்தித்துக்கொண்ட பார்வைகளைத் தவிர்த்து அவளாக அவன் விழிகளோடு தன் பார்வையைக் கலக்க முயலவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் கவனமெடுத்துத் தவிர்த்தாள்.
அந்தளவில் நேரமாக நேரமாக அவன் அண்மை அவளைப் பலகீனப்பப்டுத்திக்கொண்டே போயிற்று. அதுவும் ஆரம்பத்தில் அவளைப் போலவே இறுக்கமாக இருந்தவன் போக போக இலகுவாகிக் கண்ணால் சிரிப்பதும், கரம் பற்றி நகர்த்துவதும் என்று நெருக்கத்தைக் காட்ட, காயங்கள் ஆறாத நிலையில், அவன் மீது கொண்ட தீராத நேசத்தையும், அவன் தட்டி எழுப்பும் அவன் பாலான அவள் உணர்வுகளையும் வைத்துக்கொண்டு தனக்குள் தத்தளித்தாள் அவள். சமாதானமும் ஆக முடியவில்லை. சண்டை பிடிக்கத் தெம்பும் இல்லை.
மனத்தில் இருக்கிற அனைத்தையும் கொட்டி, பேசி, அழுது, ஆத்திரப்பட்டு அத்தனை அழுத்தங்களையும் வெளியேற்றிவிட்டு அவன் தோளில் சாய வேண்டும் போலும் இருந்தது. அதே நேரத்தில் அதையெல்லாம் செய்ய முடியாதபடிக்கு ஒரு இறுக்கம் கவ்விப்பிடித்தது.
கடைகளைச் சுற்றி வாங்கவேண்டியவற்றை எல்லாம் வாங்கியாயிற்று. மொத்தமாகக் களைத்துப்போயிருந்தார்கள். இனிப் புறப்பட வேண்டும்.
ஆனால், அன்றைய நாள் முழுக்க ஒன்றாகவே சுற்றியதில் இருவருக்குமே மற்றவர்பால் இருந்த மனத்தாங்கல், கோபம், குறைகளை எல்லாம் தாண்டிக்கொண்டு மற்றவரின் அண்மை தேவையாக இருந்தது.
விடைபெற்றுக்கொள்வதில் விருப்பமே இல்லை. ஆனால் அந்த விடைபெறுதல் நடந்தே ஆக வேண்டும். அதற்கு நடுவில் ஏதாவது சொல்வானா என்கிற எதிர்பார்ப்புடன் அவனையே பார்த்தாள் யாமினி.
இதுநாள் வரை அவனிடமிருந்து ஒரு மன்னிப்பையோ நடந்தவைக்கான விளக்கத்தையோ பெரிதளவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவள் இன்று அந்த நிமிடத்தில் ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை அவன் தரப்பிலிருந்து உண்மையாக வந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்திருந்தாள்.
அதற்கு மாறாக, “வெளிக்கிடுவமா?” என்று அவன் கேட்டபோது, அவளது உலகம் ஒரு கணம் ஸ்தம்பித்தது. அவளது கண்கள் கண்ணீரில் பளபளத்தன.
நொடி நேரம் அவனையே பார்த்துவிட்டுத் தலையசைத்தாள். வார்த்தைகளைத் தவிர்த்தாள். அந்த மௌனத்திற்குள் கேவி கேவி அழுதாள்.
அவனுக்குள்ளும் போராட்டம்தான். அவனுக்குள்ளும் அவளுக்குள் இருக்கும் அத்தனை தவிப்புகளும் கொஞ்சமும் குறையாமல் அப்படியே இருந்தன.
என்ன, நடந்தவை மீதான இருவர் நிலைப்பாட்டிலும் இன்னுமே எந்த மாற்றமும் இல்லை என்கையில் அதை மீண்டும் பேசினால் திரும்பவும் சண்டை மட்டுமே வரும் என்று அவன் ஆழமாய் நம்பினான்.
அதற்கு பேசாமல் அதைக் கடந்து போவது நல்லது என்று நினைத்தான்.
அவளுக்கு அதைப் பேசித் தீர்க்க வேண்டும். அவனுக்கு முடிந்ததைக் கடந்துபோய் வேண்டும்.
அவன் பைக்கை உதைத்துக் கிளப்பவும் பெரும் ஏமாற்றத்துடன் பின்னால் ஏறி அமர்ந்தாள். அவன் அவள் அறைக்கு விடாமல் கூல்பார் ஒன்றுக்கு விட்டான்.
இது எதற்கு? அந்தச் சேலை போல் இன்னொன்றா? மனம் குமுறிற்று. என்னையும் என் உணர்வுகளையும் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் என்று அவன் சட்டையைப் பிடிக்கும் வேகம் உண்டாயிற்று. அடக்கிக்கொண்டு போய் அமர்ந்தாள்.
இருவருக்கும் குளிர்பானம் வந்தது. எடுத்துப் பருகினர்.
அவர்களுக்கிடையிலான இந்த மௌனம், அவர்கள் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக்கொண்டதன் விளைவாக உருவானது. அதை எப்படிக் கடப்பது என்று தெரியாமல் நின்றான் நிரோஜன்.
“அஜந்தா கலியாணத்துக்குப் பிறகும் இஞ்சதான் வேலை செய்யப்போறாவா?”
“ஆரம்பத்துக்கு அப்பிடித்தான். வவுனியால வேலை கிடைச்சதும் அங்க போயிடுவாள்.”
“நீ எப்ப ஊருக்குப் போறாய்?”
“கலியாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முதல்.”
அவர்கள் பேச வேண்டியது வேறு ஒன்றைப் பற்றி. அதை விட்டுவிட்டு என்னென்னவோ கேட்டுக்கொண்டிருந்தான் அவன். அவளும் அடைக்கும் தொண்டையையும் கரையுடக்க நிற்கும் விழிகளையும் அடக்கிக்கொண்டு ஏதோ சொன்னாள்.
அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். வாங்கியவற்றை எல்லாம் கொண்டுவந்து அவள் அறையில் வைத்தான் அவன். “போறதுக்கு முதல் வீட்டு திறப்பை தந்தித்துப் போ. நான் வெளிக்கிடேக்க வந்து இது எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போறன்.” என்றான் அவன்.
அவன் திருமணத்திற்கு முதல் நாள் நேராகத் திருகோணமலை சென்றுவிட்டு, திருமண நாள் அன்று திருமணத்திற்கு வவுனியா வருவான் என்பதில் சொன்னான்.
அவள் சரி என்று தலையை அசைத்தாள்.
“உன்ர பிளவுஸ் போய் எடுத்திட்டியா?”
ஆம் என்று இப்போதும் தலையைத்தான் அசைத்தாள்.
வேறு என்ன? அவனுமே சாதாரணமாகப் பேசத் திணறினான். கடைசியில், “வரட்டா?” என்று அவன் கேட்டபோது, கண்ணில் மல்கிவிட்ட கண்ணீருடன் தலையை அசைத்தவள், “சாப்பாடு?” என்றாள் கேள்வியாக.
“இருக்கா?”
“இருக்கு. விடியவே சமச்சிட்டன்.”
“அப்ப போடு!” என்றுவிட்டுப் போய்க் கையைக் கழுவிக்கொண்டு வந்தான்.
இருவருமே சாப்பிட்டார்கள். ஆனால், இருவருமே அந்த உணவின் சுவையை உணரவில்லை. யாராவது ஒரு வார்த்தை பேசினால், அது பெரிய வெடிப்பைத் தந்துவிடுமோ என்கிற பயம் இருவருக்கும்.
அவன் சாப்பிட்டு முடித்துவிட்டு, தன் கைகளைக் கழுவிக்கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவள் நடுங்கும் இதழ்களை அழுத்தி மூடியபடி நின்றிருந்தாள். “வாறன் போயிற்று!” என்றுவிட்டு வாசல் நோக்கி நடந்தவன் நின்று திரும்பிப் பார்த்தான். அவள் வழிந்த கண்ணீரைத் துடைப்பது தெரியவும் ஒரு வேகத்துடன் வந்து அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
யாமினி எதிர்க்கவெல்லாம் இல்லை. எதிர்க்கும் தெம்பு அவளுக்கு இருக்கவில்லை. அவன் தந்த காயத்தை அவனால் மட்டுமே ஆற்ற முடியும் என்கையில் அவளும் என்ன செய்வாள்? அவன் மார்பில் புதைத்து சத்தமில்லாமல்கண்ணீர் உகுத்தாள்.
அணைத்து, ஆறுதல்படுத்தி, முதுகை வருடிக்கொடுத்து, உச்சி முத்தம் பதித்து என்று அவளை ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு நிறைய நேரமாயிற்று.
“என்னடி நீ இப்பிடி அழுறாய்?” என்று அவள் முகம் தாங்கிக் கண்களைத் துடைத்துவிட்டான் அவன்.
அப்போதும் அவள் மூக்கு நுனி சிவந்து கண்கள் நீர் சேரவும், “யமி!” என்று அவள் உதட்டில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான். அதிர்ந்து பார்த்தாள் அவள்.
என்ன என்று புருவங்களை உயர்த்தினான் அவன். ஒன்றுமில்லை என்று அவள் தலையசைக்க, அந்த விசைக்கு ஏற்ப அவள் விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் உருண்டன. அவற்றைத் தன் உதடுகளாலேயே ஒற்றி எடுத்தான் அவன். முகம் தாங்கி முத்து முத்தாக முத்தமிட்டான்.
அவளை ஒருமுறை பார்த்துவிட்டு இதழ்களைச் சிறை செய்தான் நிரோஜன். அப்படி அவர்கள் இதழ்களில் முத்தமிட்டுக்கொண்ட தருணங்கள் மிக மிகக் குறைவு. இருவருமே தவிர்த்துவிடுவார்கள்.
இன்று இருவராலும் முடியவில்லை. பெரும் ஆறுதல் ஒன்று தேவையாய் இருந்தது. வார்த்தைகள் அற்ற மொழி ஒன்றினால் ஒருவர் மற்றவருக்கு ஆறுதல் சொல்லவும் அன்பைப் பரிமாறவும் இதைத் தவிர சிறந்த வழி ஏதுமில்லை என்றே நினைத்தனர்.
அவன் அணைப்பு இறுகி, இன்னுமின்னும் அவளில் ஆழ்ந்துபோகவும் அவள் பயந்துபோனாள். பதறிப்போய் வேகமாக அவனிடமிருந்து விலக்கியவளாள் அவன் முகம் பார்க்க முடியவில்லை.
முதலில் திகைத்தாலும் அவனும் தடுமாறிப்போனான். சட்டென்று முதுகு காட்டித் திரும்பித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “வாறன்!” என்று அவளை பாராமலேயே சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

