அத்தியாயம் 22
திருமண மண்டபத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தாலும் அவன் அறைந்த அதிர்விலிருந்து யாமினியால் வெளிவர முடியவில்லை. அந்தப் பக்கத்துக் கன்னம் இன்னுமே இழுத்து வலித்தது.
அதை முதலில் கவனிக்க எண்ணி, அங்கிருந்த கழிவறைகள் அடங்கிய பகுதிக்குள் நுழைந்தாள். அந்தப் பக்கத்துக் கன்னம் இலேசாகத் தடித்திருப்பதைக் கண்ணாடியில் கண்டு அவள் கண்கள் கலங்கிப்போயின.
அவள் உயிராய் நேசிக்கிறவன் தந்த பரிசு அது. உதடுகள் அழுகையில் துடிக்கப் பார்த்தன. ஆனாலும் அடக்கிக்கொண்டு கைப்பையில் கொண்டு வந்திருந்த பவுடரை எடுத்துக் கன்னத்தில் ஒற்றி, அடித்த தடத்தை மறைத்தாள்.
தண்ணீர் அருந்தி, கண்களில் அழுத தடம் தெரிகிறதா என்று கவனித்து, ஆழ்ந்த மூச்சை வாயால் இழுத்துவிட்டுத் தன்னைக் கொஞ்சம் சமன்படுத்திக்கொண்டு வெளியே வந்தாள்.
அன்றே ரிசப்ஷனும் வைப்பதால் மேடையில் அதற்கான அலங்காரம் மாற்றப்பட்டுக்கொண்டிருக்க, மணமக்கள் உடை மாற்றப் போயிருந்தார்கள்.
இவளைக் கண்டுவிட்டு, “பிரெண்ட்ஸை தேடிக்கொண்டு கொழும்பு வரைக்கும் போயிட்டீங்களோ எண்டு நினைச்சன் யாமினி.” என்று சிறு கேலியுடன் சொன்னான் ஆனந்தன்.
“எங்களைத் தனியா விட்டுட்டு ஓடுறதையே இண்டு முழுக்க வேலையா பாக்கிறாள் அவள்.” என்றாள் மாதங்கி.
தமக்கை சொன்னதற்கு ஒன்றும் சொல்லாமல், “ஆக்களைக் காணவே இல்ல அத்தான். தேடிக்கொண்டு போனா மண்டபத்துக்குப் பின்னால இருக்கிற பூங்காக்க நிக்கினம். நடந்து நடந்து எனக்குக் கால் வலி வந்ததுதான் மிச்சம்.” என்று அவனுக்குப் பதில் சொன்னபடி தாயின் அருகில் அமர்ந்தாள்.
“இப்ப எங்க ஆக்கள்?”
“போ வாறம் எண்டு சொன்னவே. வருவினம்.” என்றவளுக்கு வருவார்களா என்கிற பதைப்பு.
ஆனால், நவீன் சொன்னது போன்று ஐந்து நிமிடத்தில் எல்லோரும் வந்தார்கள். நிரோஜனை மட்டும் காணவில்லை. கேள்வியாக அவர்களை ஏறிட்டாள்.
அவர்களின் முகங்கள் எதுவும் இயல்பாக இல்லை. அவள் புறம் திரும்பவோ, அவளோடு பேசவோ அவர்கள் விரும்பவில்லை என்று அவர்களது முகபாவனைகளே சொல்லின.
அவளுக்கு எதுவும் புரியவில்லை. அவள் என்ன தவறு செய்தாள்? அறைந்தது கூட அவர்களின் நண்பனாயிற்றே. மனத்தில் எழுந்த வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஒவ்வொருவரையும் தன் குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தினாள்.
“இன்னொருத்தரும் இருந்தாரே.” இவள் காட்டுகிற புகைப்படங்களில் எப்போதும் நடுநாயகமாக நிரோஜன் இருப்பான் என்பதிலும், இன்று கவனித்ததை வைத்தும் கேட்டான் ஆனந்தன்.
“ஓம் அது நிரோ… நிரோஜன்.” என்றவள் தவிப்புடன் நவீனைப் பார்த்தாள்.
“அது… அவனுக்கு கோல் வந்திட்டுது. அதான். வருவான்.” என்று சமாளித்தான் நவீன்.
ஆனந்தன் அவர்களோடு பேசிக்கொண்டிருக்க யாரும் அறியாமல் நிரோஜனுக்கு அழைத்து அழைத்துத் துண்டித்தாள். அவன் வந்த பாடாக இல்லை.
மெதுவாக விலகி வந்து, “ப்ளீஸ் நிரோ, எங்களுக்க என்ன சண்டை இருந்தாலும் பிறகு பேசித் தீர்க்கலாம். இப்ப வாங்க. வந்து ஒரு ஹலோ சொல்லிப்போட்டுப் போங்க. உங்கட அம்மா அப்பாக்கு நான் இப்பிடிச் செய்தா உங்களுக்கு எப்பிடி இருக்கும்? அத்தான் உங்களுக்காக வெய்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார். வாங்க ப்ளீஸ்!” என்று தழுதழுத்த குரலில் பேசி அனுப்பிவிட்டாள்.
அப்போதும் அவன் வருவதாக இல்லை. அவள் விழிகள் தவிப்புடன் நவீனைத் தொட்டு தொட்டு மீண்டது.
அதைக் கவனித்த நவீனுக்குப் பாவமாயிற்று. “டேய்! வந்துட்டுப் போ!” என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டான்.
கொஞ்ச நேரத்தில் வந்தான் நிரோஜன். “ஹாய் அண்ணா, சொறி ஒரு கோல் வந்திட்டுது. நான் நிரோஜன்.” என்று ஆனந்தனுக்குக் கை கொடுத்தான்.
அதைத் தாண்டி அவள் வீட்டினரோடு சுமூகமாகவோ, நல்ல விதமாகவோ பேச எந்த முயற்சியும் அவன் எடுக்கவில்லை. எல்லோரும் ஒரு இடத்தில் சுற்றியிருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அதில் ஒருவனாகத் தானும் அமர்ந்துகொண்டான். அவ்வளவுதான். ஆனந்தன் ஏதாவது கேட்டால் மட்டும் பதில் சொன்னான்.
அவனுக்கும் சேர்த்து நவீனும் மித்ரனும் சேர்ந்து பேசிச் சமாளித்தார்கள். திலினி சிங்களப் பெண் என்பதில் நாகேஸ்வரிக்கும் மாதங்கிக்கும் குறுகுறுப்பு. அதுவும் அவள் தமிழர்கள் அணிவதுபோல் சேலை வேறு அணிந்திருக்க, அவளைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்டனர்.
அப்போதுதான் அவள் அணிந்திருக்கும் சேலை நிரோஜன் வீட்டினர் கொடுத்தது என்பதும், அவள் தங்கியிருப்பதும் அங்குதான் என்பதும் தெரிய வந்தது. அதிர்ந்து நிரோஜனைப் பார்த்தாள் யாமினி. ஒரு வார்த்தை சொல்லவில்லையே.
மாதங்கி வேறு, “அந்த நிரோஜன் இந்தச் சிங்களப் பெட்டையை விரும்புதோ?” என்று இவளிடம் இரகசியமாகச் சந்தேகம் கேட்டாள்.
அதிர்ந்துபோனாள் யாமினி. “அக்கா, நாங்க எல்லாரும் ஒரே இடத்தில ஒண்டா வேலை செய்ற ஆக்கள். அப்பிடி எல்லாம் இல்ல. தேவை இல்லாம எதையாவது கதைச்சு வைக்காதீங்க.” என்று அவளை அடக்கினாலும் இப்படி ஒரு பேச்சு எழுவதற்கு வழி செய்துவிட்டான் என்றெண்ணி வேதனையுற்றாள்.
கேட்டுக்கொண்டு போனால் அதற்கும் அவள்தான் காரணம் என்று ஏதாவது ஒரு கதை சொல்லுவான். உள்ளே உள்ளம் விரக்தியில் துவள அவனைப் பார்த்தாள். அவன் இவள் புறம் திரும்பவே இல்லை.
அறைந்தபோதுதான் கோபத்தில் அறைந்துவிட்டான் என்றால் அதற்குப் பிறகும் கூடவா தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று அவனுக்குப் புரியவில்லை? அல்லது, அடித்தது சரி என்று நினைக்கிறானா? அதனால்தான் அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லையா?
ஆனந்தனுக்கு என்னவென்று புரியாத போதிலும், ஏதோ ஒன்று அவர்களுக்கு இடையே சரியில்லை என்று புரிந்துபோயிற்று. அதில், நிறைய நேரத்திற்கு அவனும் அவர்களைப் பிடித்து வைக்கவில்லை.
“தனியா கொழும்பில இருந்து வேலை செய்றா. அதான் அவாட ஃபிரெண்ட்ஸோட அறிமுகமாகுவமே எண்டு நினைச்சன். உங்க எல்லாரையும் பாத்துக் கதைச்சது சந்தோசம். அவசரம் ஆபத்து எண்டு வந்தால் ஒருக்கா அவாவைப் பாத்துக்கொள்ளுங்கோ. கிளிநொச்சிப் பக்கம் வந்தா கட்டாயம் வீட்டுக்கும் வாங்கோ. இப்ப போய் என்ஜோய் பண்ணுங்கோ.” என்று அங்கே ரிஷப்ஷனும் ஆரம்பித்துவிட்டதில் நல்லபடியாகவே பேசி, அவர்களை அனுப்பிவைத்தான்.
அவர்கள் போனதும், “ஏதும் பிரச்சினையா யாமினி?” என்றான் ஆனந்தன் அவளிடம் நேராக.
யாமினி அதிர்ந்துபோனாள். “அத்தான்… ஏன் அது… இப்பிடிக் கேக்கிறீங்க?” என்று தடுமாறினாள்.
“தெரியா. ஆனா என்னவோ நிரடுது.”
சட்டென்று கண்கள் கலங்கிவிடப் பார்த்தது. அவள் சமாளிப்பதற்குள், “என்ன எண்டாலும் மனம் விட்டுச் சொல்லோணும். அப்பா இல்லையே, அம்மாவால என்ன செய்யேலும், அக்கா அத்தானிட்ட எப்பிடிச் சொல்லுறது எண்டெல்லாம் யோசிக்கக் கூடாது சரியா? என்ன நடந்தாலும் உங்கட அக்காவும் அத்தானும் இருக்கிறோம்.” என்றதும் அவள் விழிகள் நிரம்பிப்போயின.
“எனக்குத் தெரியாதா அத்தான்.” என்று சிரிக்க முயன்றவளின் கன்னங்களில் கண்ணீர் இறங்கியது. அதை வேகமாகத் துடைத்துக்கொண்டாள்.
“அதுக்கேன் அழுறீங்க? அவ்வளவு மோசமாவா கதைக்கிறன்?” என்று கேட்டான் ஆனந்தன்.
“அத்தான்!” என்று சிரித்தாலும் அப்போதும் விழிகளும் சேர்ந்து கலங்கின அவளுக்கு. மனத்தளவில் முற்றிலுமாக நொருங்கிப்போயிருந்தவளை அனுசரணையான ஒரு பேச்சு மொத்தமாக உடைத்திருந்தது.
ரிசப்ஷன் ஆரம்பித்தது. அன்று கணவன் மனைவியாகிப்போனவர்கள் மோதிரம் மாற்றி, கேக் வெட்டி மகிழ்ந்தார்கள். இன்னொரு முறை எல்லோரும் அவர்களுடன் நின்று புகைப்படங்கள் எடுத்து முடிய, மாப்பிள்ளையும் பெண்ணும் மேடையை விட்டு இறங்கி வந்து, திருமணத்திற்கு வந்தவர்களை ஒவ்வொரு மேசையாகச் சந்தித்துப் பேச ஆரம்பித்தனர்.
அங்கே மணமேடையில் ஆடல் பாடல் என்று கச்சேரி களைகட்ட ஆரம்பித்தது. இதற்காகத்தானே அவன் நண்பர்கள் காத்திருந்தார்கள். அவனையும் இழுத்துக்கொண்டு மேடையேறினார்கள்.
அவன் இருந்த மனநிலைக்கு முதலில் அவனால் ஆட முடியவில்லை. அவர்கள் விடாமல் அவனைச் சுற்றி சுற்றி ஆட, ஒரு கட்டத்துக்கு மேல் அவனும் சேர்ந்துகொண்டான்.
ஏதோ ஒரு வகையில் இது நடக்கும் என்று யாமினி எதிர்பார்த்துதான் இருந்தாள். ஆனாலும் வலித்தது. எவ்வளவு சொன்னாள்? அதையெல்லாம் கேளாமல் என்ன செய்கிறான்?
மண்டபத்தில் இருந்த அத்தனைபேரும் பாடலுக்கு அப்படியே பொருந்திப்போகும் அவனின் நுணுக்கமான நேர்த்தியான நடன அசைவுகளைக் கண்டு கை தட்டி ஆர்ப்பரித்தனர். யாமினியால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.
அவன் ஆட்டத்தில் ஒரு ஆத்திரம் வெளிப்பட்டது. ஒரு விதப் பிடிவாதத்துடன் விடாமல் ஆடிக்கொண்டேயிருந்தான். அதுவும் ஒரு இடத்தில் திலினியின் தோள்கள் இரண்டையும் பற்றிக்கொண்டு அவன் ஆட, “பாத்தியா கூத்த? நான் சொல்ல அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை எண்டு சொன்னாய்? இப்ப என்ன சொல்லுறாய்?” என்று திலினியையும் அவனையும் காட்டிக் கேட்டாள் மாதங்கி.
யாமினிக்கு ஆத்திரமும் அழுகையும் அடக்க முடியாமல் பொங்கின. அது சாதாரணத் தொடுகைதான். தன் முன்னே நிற்பது திலினி என்று கூட அவன் கவனித்திருக்க மாட்டான் என்று அறிவுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும் வலித்தது. காரணம் இது அவன் அவளுக்குத் தரும் பதிலடி. அவளுக்கு வலிக்க வேண்டும் என்பதற்காகவே செய்கிறான். பொறுத்து பொறுத்துப் பார்த்தாள். அவன் முடித்துக்கொள்வதாக இல்லை.
அஜந்தா வேறு அழைத்து, “என்னடி நடக்குது?” என்று கேட்டாள்.
என்ன சொல்லுவாள்? கலங்கிய விழிகளைக் கட்டுப்படுத்த முயன்றவாறே, “நான் இஞ்ச இருக்கிற வரைக்கும் இது முடியாது அஜூ. நாங்க வெளிக்கிடவாடி? குறை நினைக்காத ப்ளீஸ்.” என்றாள் கெஞ்சலாக.
“என்னடி பிரச்சினை?”
“ப்ளீஸ்டி. இப்ப ஒண்டும் கேக்காத. நீ கொழும்புக்கு வா. எல்லாம் கதைப்பம்.” என்றவள் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு தன் குடும்பத்தினரோடு புறப்பட்டுவிட்டாள்.

