அத்தியாயம் 23
இரண்டு நாள்கள் வீட்டினரோடு இருந்துவிட்டுக் கொழும்பு புறப்பட்டு வந்திருந்தாள் யாமினி. அதுவரை நிரோஜனோடு பேசுவதற்கு எந்த முயற்சியையும் அவள் எடுக்கவில்லை. அந்தளவில் காயப்பட்டிருந்தாள்.
கன்னத்திலிருந்த தடத்தைக் கெட்டித்தனமாக யாருமறியாமல் மறைத்துவிட்டாள். இன்று அது அவள் கன்னத்திலிருந்தும் மறைந்திருந்தது. அதனால் அவள் உள்ளத்தில் உண்டாகிப்போயிருந்த புண் மட்டும் மாறவேயில்லை.
அஜந்தாவின் திருமண நாளை மிக மிக ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருந்தவள் அவள். இன்றோ என்றுமே மறக்க முடியாத காயத்தைத் தந்த நாளாகியிருந்தது.
அவள் கொழும்பு வந்த அடுத்த நாள், நிரோஜனிடமிருந்து குரல் வழிக் குறுந்தகவல் ஒன்று வந்திருந்தது.
“உனக்கு நான் கை நீட்டியிருக்கக் கூடாது யாமினி. சொறி அதுக்கு. ஆனா, நீயும் அப்பிடிக் கதச்சிருக்கக் கூடாது. எனக்கு என்ர நிலைப்பாட்டில மாற்றம் இல்ல. உனக்கும் உன்ர நிலைப்பாட்டில மாற்றம் இல்லை எண்டேக்க, அதப் பற்றி எப்ப கதச்சாலும் அதுவும் இன்னொரு சண்டைலதான் போய் முடியும். அதுதான் அதக் கதைக்காமயே தவிர்த்தனான். அதுக்கும் அண்டைக்கு உன்ர அறைல வச்சு நடந்துக்கும் சம்மந்தமே இல்ல. அது ஆத்மார்த்தமா நடந்த ஒண்டு. அதைப் போய் நீ தரக்குறைவா கதைச்சிருக்கக் கூடாது. அதுவும் என்னவோ நான் பிளான் பண்ணி செய்த மாதிரி சொன்னியே ஒரு வார்த்தை, இண்டைக்கு அதச் செய்ததுக்காக என்னை வெக்கப்பட வச்சிட்டாய். எனக்கே நான் சீப்பா நடந்திட்டேனோ எண்டு சந்தேகம் வந்திட்டுது. ஏன்டா அந்த வேலை பாத்தாய் எண்டு என்னை நானே கேக்கிற அளவுக்குக் கொண்டுவந்திட்டாய். கை நீட்டுற அளவுக்கு என்னைத் தள்ளினது உன்ர வார்த்தைகள்தான் எண்டாலும் அது பிழைதான். அத நான் எத வச்சும் நியாயப்படுத்த விரும்பேல்ல. அதுக்கு சொறி!” என்று அனுப்பியிருந்தான்.
கண்ணோரம் கரிக்க அப்படியே அமர்ந்திருந்தாள் அவள். இத்தனை நாள் இடைவெளிக்குள் அவளுக்கும் தன் தவறு புரிந்துதான் இருந்தது. அதுவும் இப்போது அவனே ஆத்மார்த்தமாக நடந்த ஒன்று என்று குறிப்பிட்டுச் சொன்னபோது கண்ணீர் அரும்பிற்று அவளுக்கு.
ஆனால், அவன் குரலில், வார்த்தைகளில், பேசிய தொனியில் தன்னை உயிராக நேசிக்கும் ஒருத்தியை அறைந்துவிட்டோமே என்கிற பரிதவிப்போ, அவளைச் சமாதானம் செய்துவிடத் துடிக்கிற தவிப்போ இல்லை. அந்நியத்தனம்தான் அப்பட்டமாகத் தெரிந்தது.
அவன் செய்த தவறு என்ன என்று சொல்லி, அதற்கு மன்னிப்புக் கோரியிருந்தான். யாமினியாம். அதுவே அவன் அவளை விட்டு எவ்வளவு தூரத்தில் தள்ளி நிற்கிறான் என்று சொல்லிற்று.
அதற்கு அவள் பதில் போடப் போகவில்லை. முதலில் இதற்கு என்ன பதில் அனுப்புவது என்று அவளுக்குத் தெரியவில்லை.
மனதெல்லாம் ஏதோ ஒரு வகையில் துவண்டுபோயிருந்தது. அவள் இருக்குமிடம் அவனுக்குத் தெரியும். இந்த மன்னிப்பை மனத்திலிருந்து கேட்க நினைத்திருந்தால், நடந்தவற்றைப் பேசித் தீர்க்க எண்ணியிருந்தால், அவளோடு சமாதானமாக விரும்பியிருந்தால் அவளைத் தேடி அவள் வீட்டுக்கே வந்திருப்பான்.
வந்து விளக்கம் சொல்லியிருப்பான்; மன்னிப்புக் கேட்டிருப்பான்; சமாதானம் செய்திருப்பான். இத்தனை காலமும் அதுதான் நடந்திருக்கிறது.
ஆனால் இந்த முறை, அலுவலகத்தில் செய்த தவறு ஒன்றுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்புவதுபோல், இந்த மன்னிப்பைக் கேட்டிருக்கிறான்.
அதன் பிறகு அவனிடமிருந்தும் எந்தவிதமான குறுந்தகவலும் இல்லை.
அவர்களின் நாட்கள் வழமைக்குத் திரும்பியிருந்தன. எல்லோரும் மறுபடியும் கொழும்பு வந்து சேர்ந்திருந்தார்கள். அஜந்தா உட்பட.
அதன் பிறகுதான் யாமினியை அழைத்து, என்ன நடந்தது என்று கேட்டாள் அஜந்தா. முதலில் இதையெல்லாம் சொல்வதா என்று தடுமாறினாள் யாமினி. ஆனால், அவளைத் தவிர்த்து நடந்ததை எல்லாம் சொல்லி, ஆறுதல் தேடவோ, ஒரு தெளிவைப் பெறவோ அவளுக்கும் வேறு யாரும் இல்லை.
கடைசியில் அஜந்தா விடுத்து விடுத்துக் கேட்டதில் அவர்களுக்கு வைத்த பார்ட்டியில் நடந்தது முதற்கொண்டு அனைத்தையும் சொன்னாள் யாமினி. அவர்கள் முத்தமிட்டுக்கொண்டது உட்பட.
அவன் அவள் அறைக்கு முதல் முறை வந்துவிட்டுப் போனபோதே குறிப்பிட்ட எல்லையை எந்தக் காலத்திலும் தாண்டிவிடக் கூடாது என்று கடுமையாக எச்சரித்திருந்தாள் அஜந்தா. அப்படியானவளிடம் மறைக்க முடியவில்லை.
அதைவிட, இங்கே யார் பக்கம் தவறு, இனி அவள் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவும் தேவையாக இருந்தது.
நிரோஜன் கை நீட்டியதை அறிந்து அஜந்தாவுக்கும் அதிர்ச்சிதான். அதே நேரத்தில் யாமினியின் தவறுகளும் தெளிவாகப் புரிந்தன.
“அத்தனை பேருக்கு முன்னால அவர் குடிச்சதும், உன்னை அறையக் கை நீட்டினதும் பிழை எண்டா அவருக்கு நீ அடிச்சதும், அதே எல்லாருக்கும் முன்னால போய் அவரோட சண்டை பிடிச்சதும் கூடப் பிழைதான் யமி. அவர் குடிக்கிறதக் கண்டுட்டு நீ அந்த இடத்தில இருந்து வெளில வந்திருந்தா கட்டாயம் அவரும் பின்னால வந்திருப்பார். அப்ப நீ கேக்கிறத கேட்டிருக்கலாம்.” என்று அவள் சொன்னபோது இதை ஏன் தான் செய்யாமல் போனோம் என்று யோசித்தாள் யாமினி.
“எங்கட கலியாண வீட்டில வச்சு நீ கதச்சது சரியெண்டு உனக்குப் படுதா யமி? அண்டைக்கு உனக்கும் அவருக்கும் இடையில் நடந்தது எப்பிடியான ஒண்டு எண்டு உன்னைத் தவிர இன்னொருத்தரால சொல்லவே ஏலாது. நீ சொன்ன மாதிரிதான் நீ உணந்தியா? அவர் உண்மையிலேயே அந்த எண்ணத்திலதான் உன்னை நெருங்கினவரா?” என்று அவள் கேட்டபோது, இல்லையே என்றுதான் அவள் உள்ளம் உடனேயே சொல்லிற்று.
அது ஒரு ஏக்கத்தின் வெளிப்பாடு. அன்பின் உந்துதல். அவனே சொன்னானே அது ஒரு ஆத்மார்த்தமான தேடல் என்று. அதைப் போய்த் தரமற்றுப் பேசிவிட்டாளே.
இன்னும் சொல்லப்போனால் வாங்கிய பைகளைக் கொண்டுவந்து வைத்துவிட்டு அப்படியே போகத்தான் அவன் நின்றான். அவள்தான் சாப்பாட்டைப் பற்றிப் பேசித் தடுத்தாள். அதன் பிறகும் ஒரு சிறு ஆறுதல் தந்துவிட மாட்டானா என்று ஏக்கத்தோடு அவனை அவனைப் பார்த்ததும் அவள்தான்.
இப்படி, நடந்த அனைத்திலும் சரி சமமான பங்கு அவளுக்கும் உண்டு. அப்படி இருக்க திட்டம் போட்டு என்னை வளைத்தது நீதான் என்று பதிலுக்கு அவன் சொல்லியிருந்தால் என்னாகியிருக்கும்? மேலே யோசிக்கக் கூட முடியாமல் முகம் கன்ற நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டாள் யாமினி.
“இப்ப போடுற சண்டையை விட ஓராயிரம் சண்டை கலியாணத்துக்குப் பிறகு போடுவீங்க. அப்ப எல்லாம் இரவில உங்களுக்க நடக்கிறத, பகல்ல நடக்கிற சண்டையில சொல்லிக் காட்டிக் கதைப்பியா நீ? அப்பிடி அத இழுத்து நீ கதச்சதே பிழை. இதுல கேவலமான டெக்னிக் எண்டு வேற சொல்லி இருக்கிறாய். உண்மையச் சொல்லப்போனா உனக்கும் அவருக்குமான உறவை, நெருக்கத்தை நீதான் கொச்சைப் படுத்தியிருக்கிறாய்.” என்று அஜந்தா சொன்னதும், யாமினியின் முகம் கன்றிப்போனது.
அன்றைக்கு மனம் குமுறிப் போயிருந்த நிலையில், அவன் நடந்த பிரச்சனையைப் பற்றிப் பேசாமல், சேலை வாங்கித் தந்து, கூல்பாருக்கு அழைத்துப்போய் மறைமுகமாக அவளைச் சமாதானப்படுத்திவிட முயன்றது, பெரும் குமுறலாக அவள் உள்ளத்தில் தங்கியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக வீட்டில் வைத்து அவன் முத்தமிடவும் அதையும் அப்படியே நினைத்துவிட்டாள். இல்லை என்று ஆழ்மனத்திற்குத் தெரிந்திருந்தாலும், அந்த நேரத்தில் அவளும் அவன் அண்மைக்கும் அணைப்பிற்கும் ஏங்கிப்போயிருந்த போதிலும், அவன் தந்த முத்தம் அவளுக்குள் பெரும் நம்பிக்கையையும் திட்டத்தையும் தந்திருந்த நிலையிலும், பேசித் தீர்த்து வெளியேற்றாத கோபங்களும் குமுறல்களும் வார்த்தைகளை விட வைத்து, பெரும் பிளவு ஒன்றை அவர்களுக்குள் உண்டாக்கியிருந்தது.

