“திரியத் தூண்டிவிட்டா விளக்கு ஆங்காரமாத்தான் எரியும். பிறகு வந்து நெருப்புக் கையச் சுட்டுட்டுது எண்டு சொல்லுறதில அர்த்தம் இல்ல. நீயும் அந்த வேலையைத்தான் பாத்திருக்கிறாய். இதுவரைக்கும் நடந்த எல்லா பார்ட்டிக்கும் நானும் உன்னோட வந்திருக்கிறன். எப்பயாவது குடிப்பாராம் எண்டு நீ சொல்லித்தான் எனக்கும் தெரியும். ஒரு நாள் கூட அவர் குடிச்சு நான் பாத்ததே இல்ல. அப்பிடி இருக்க அண்டைக்கு ஒரு நாள் நடந்தத வச்சு எங்கட கலியாண வீட்டில நீ கதைச்சதும் பிழை யமி. அவர் சொன்ன மாதிரி அவருக்கும் எல்லாம் தெரியும். அங்கங்க சப்போர்ட்டாவும் எடுத்துச் சொல்லுற துணையாவும்தான் நாங்க இருக்கோணும் தவிர, அவருக்கு ஒண்டும் தெரியாத மாதிரி நாங்க கதைக்கப் போகக் கூடாது.”
“இப்ப என்னடி, எல்லா பிழையையும் நான்தான் செய்தனான் எண்டு சொல்லுறியா?” அவள் சொல்வது எல்லாம் புரிந்தாலும் அவனைப் போலவே அவளும் இவள் தவறுகளை மாத்திரமே சுட்டிக்காட்ட, கண்ணீருடன் வினவினாள்.
“இல்லை. நீ செய்த பிழைகள் என்ன எண்டு உனக்கு விளங்கப்படுத்திறன். இனி நீ எதில எல்லாம் கவனமா இருக்கோணும் எண்டு சொல்லுறன். அதுக்காக அவர் செய்தது எல்லாம் சரி எண்டு சொல்லேல்ல. அதுவும் உன்னை அறைஞ்சது இருக்குதானே…” என்ற அஜந்தாவுக்கு அந்த விடயத்தில் நிரோஜன் மீது பெரும் அதிருப்தி.
“எல்லாத்தையும் விட எவ்வளவு பெரிய சண்டையா இருந்தாலும் ஆம்பிளைகள் எங்களில கை வைக்கிற அளவுக்கு அத நாங்க கொண்டுபோகக் கூடாது யமி. பிறகு அவேக்கு அது பழக்கமா போயிடும். முதல்முறை எண்டுறதுக்குத்தான் எப்பவுமே பயப்பிடவோ, பதறவோ, துடிக்கவோ செய்வம். அடிச்சிட்டமே எண்டு குற்ற உணர்ச்சியாவும், வருத்தமாவும் இருக்கும். அதுவே தொடந்து நடக்க ஆரம்பிச்சிட்டா அவசரத்தில ஏறி விழுற மாதிரி, யோசிக்காம வார்த்தைகளை விடுற மாதிரி, கை நீட்டுறதும் அவேக்கு சாதாரணமா போயிடும். விடிய அடிச்சுப்போட்டுப் பின்னேரம் வந்து மன்னிப்புக் கேக்கிறதோட அதை அவே முடிச்சிடுவினம். இனியாவது இப்பிடி ஒண்டு நடக்காத மாதிரி கவனமா இரு.”
யாமினிக்கும் புரிந்தது. அன்று அறையக் கையை நீட்டிவிட்டு நிறுத்தினான். இன்று அறைந்திருக்கிறான். இனி அவள் இந்த விடயத்தில் மிகக் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.
அஜந்தாவுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அவள் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்துவிட்டு, “உன்ர எதிர்காலம் மொத்தமும் அவரோடதான் எண்டேக்க நீயும் கவனமா இருக்கோணும் யமி. நான் எங்க, எப்பிடி எண்டில்லாம கதைப்பன், என்ன வார்த்தையையும் விடுவன், அவர் மட்டும் என்ர மானம் மரியாதையக் காப்பாத்தோணும் எண்டு எதிர்பாக்கிறதில என்ன நியாயம் இருக்கு சொல்லு? அதுக்காக அவர் நடந்த விதம் எல்லாம் ஆக ஓவர். திவாகரே என்ன இது, நிரோஜன் ஏன் வித்தியாசமா நடக்கிறார் எண்டு கேட்டவர். சோ கொஞ்சம் விட்டுப்பிடி. உன்னை மாதிரி அவரும் நடந்துகளின்ர சரி பிழைய தனியா இருந்து யோசிக்கட்டும். யோசிச்சிட்டு அவரா வரட்டும். கொஞ்சம் வெய்ட் பண்ணு.” என்றாள் ஆறுதலாக.
அவளும் காத்திருக்க ஆரம்பித்தாள். தன் பக்கத் தவறுகள் என்னவென்று தெளிவாகப் புரிந்துபோனதில் பொறுமையாகக் காத்திருக்க முடிவு செய்தாள்.
ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று அந்த வளாகத்தில் இருக்கிற மூன்று ஐடி நிறுவனங்களும் சேர்ந்து ஒரு ஒன்றுகூடலை நடத்தின. குறைந்தது வருடத்தில் இரண்டு முறையாவது இப்படியான ஒன்றுகூடல்களை நடத்துவார்கள்.
அவர்களுக்குள் இருக்கிற நட்புப் பெருகவும், ஒருவர் மற்றவர்களின் பிராஜெக்டுகளுக்கு உதவியாக இருப்பதற்கும், தேவையான பொழுதுகளில் ஆட்களை மாற்றி எடுத்துக்கொள்வதற்கும் அது உதவும் என்று நினைப்பார்கள்.
நிறைய நாள்களுக்குப் பிறகு நிரோஜனை அங்கு வைத்துப் பார்த்தவள் விழிகள் கரிக்க ஆரம்பித்தன. அவன் புறம் ஓடும் விழிகளைத் தடுத்து, நடக்கும் ஒன்றுகூடலில் கவனம் வைப்பது என்பது பெரும் சவாலாயிற்று. வந்து பேசுவான் என்று பெரிதும் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் வரவில்லை.
நடந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டிக்கொண்டு இப்படி விலகியே நிற்கப்போகிறானா என்கிற கேள்வி எழுந்து வந்து அவளை மருட்டியது.
அதற்குமேல் அங்கே இருக்க முடியாமல், கூட்டமும் முடிந்துவிட்டதால் நேரே கேண்டீனுக்கு வந்து அமர்ந்தாள்.
“ஏய் என்னடி?” தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்து வினவினாள் அஜந்தா.
“என்ன முடிவில இருக்கிறார் எண்டு விளங்கேல்ல அஜூ. இப்பிடிப் பக்கத்தில பாத்தும் வந்து கதைக்கேல்ல எண்டா என்னடி இது?”
அவளும் இதை யோசித்தாள்தான். அதைச் சொல்லாமல், “நான் கதைக்கவா?” என்று கேட்டாள்.
சில கணங்களுக்கு யோசித்துவிட்டு மறுப்பாகத் தலையை அசைத்தாள். “நானே கதைக்கிறன். நான் பிழையா கதைச்சதாலேயே அவர் அடிச்சதா இருக்கட்டும். நானே இறங்கிப்போறன்.”
இதற்குள் ஒன்றுகூடல் முடிந்துவிட்டதால் பக்கத்தில் இருந்த அந்தக் கேண்டீனுக்குத்தான் எல்லோருமே வந்தனர். அதைக் கவனித்துவிட்டு, “லைன் வர முதல் ஓடிப்போய் ரெண்டு கோப்பி வாங்கிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு எழுந்துபோய் இரண்டு கோப்பிகளுக்குச் சொல்லிவிட்டு நின்றாள்.
கோப்பி வந்ததும் பணம் செலுத்த கைப்பேசியை நீட்டப்போனவள் அப்போதுதான் கவனித்தால் மேசையில் இருந்த அஜந்தாவின் கைப்பேசியை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாள் என்று.
அவளுடையது அந்த வருடம் வந்த ஆப்பிள் கைப்பேசி. அஜந்தாவுக்கும் திவாகர் அதையே வாங்கிப் பரிசளித்திருந்தான்.
அவள் வேறு அவனைப் பார்த்ததில் நிதானத்தில் இல்லை. தடுமாறிக்கொண்டிருந்தாள்.
“ஒரு நிமிஷம் அண்ணா. ஃபோன மாத்தி எடுத்துக்கொண்டு வந்திட்டன்.” என்றுவிட்டுத் தம் மேசைக்கு ஓட முயன்றவள் முன்னே தன் கைப்பேசியை நீட்டினான் நிரோஜன்.
அங்கே அவனை எதிர்பாராமல் ஒரு கணம் திகைத்தாலும் அவன் பார்வையைச் சந்தித்த கணத்தில் தந்தையை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது. காட்டிக்கொள்ளாமல் அதை வாங்கிக் கடவு இலக்கத்தை அழுத்தினாள். அது தவறானது என்று சொன்னது. திரும்பவும் அவள் அழுத்தப்போக, அவளைப் பாராமல் வாங்கி, தடையை நீக்கிவிட்டு மறுபடியும் அவளிடம் நீட்டினான் அவன்.
இந்த முறை அவளால் அதை வாங்க முடியவில்லை. வேதனையில் விழிகள் அகல அவனையே வெறித்தாள். கண்களில் நீர் சேர ஆரம்பிக்கவும் வேகமாகச் சென்று தன் கைப்பேசியை எடுத்துக்கொண்டு திரும்பியபோது, அவர்களுக்கான கோப்பிகளைக் கொண்டுவந்து அவர்களின் மேசையில் வைத்தான் அவன்.
ஒரு கணம் நின்று அவனையே பார்த்தவள் அஜந்தாவையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து நடந்தாள்

