நீ வந்து தங்கிய நெஞ்சில் 24.1

அத்தியாயம் 24

இப்போதெல்லாம் அவன் தன்னைத் தவிர்க்கிறானோ என்று எப்போதோ யாமினிக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. ஆனாலும் கூட நடந்த பிரச்சனைகளும், அதனால் அவன் கொண்ட கோபமும் காரணமாயிருக்கும் என்று எண்ணிக்கொண்டு, அவனுக்கு அழைக்காமல், அவனைச் சென்று பாராமல் அவனாகக் கோபம் விடுத்து வரட்டும் என்று பொறுமை காத்திருந்தாள்.

ஆனால், காவியாவின் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக ஏதாவது பேசும் நிலை வந்தால் அவளால் தவிர்க்க முடிவதில்லை.

அப்படி ஒரு நாள் அவள் அழைத்தபோது மீட்டிங்கில் இருக்கிறேன் என்று தகவல் அனுப்பியிருந்தான் அவன். அவளும் ஏன் அழைத்தால் என்று குறுந்தகவலாகவே எழுதி அனுப்பியிருந்தாள்.

அதிலிருந்து தவிர்க்க முடியாமல் ஏதாவது பேசும் நிலை உருவானால் குறுந்தகவல் மூலமே பேசிக்கொண்டார்கள். அதுவும் மிக மிகச் சுருக்கமாகப் பேச வேண்டியதை மட்டுமே பேசினார்கள். அவனுடைய யமி, யம்மு, ஜும்க்கா அனைத்தும் காணாமலேயே போயிருந்தன.

அன்றுபோல் காவியாவைக் காரணமாக வைத்துக்கூட அவளோடு பேச அவன் முயலவில்லை. அதில் யாமினிக்கு ஒரு பயம் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது.

அப்படி இருக்கையில்தான் இப்படி ஒரு நிகழ்வு.

தன் இருப்பிடத்தில் வந்து அமர்ந்துகொண்ட யாமினிக்குக் கொஞ்ச நேரத்திற்கு எதையும் சிந்திக்கக் கூட முடியவில்லை.

பின்னாலேயே வந்து அவள் தோளை ஆதரவாகத் தொட்ட அஜந்தாவிடம், “நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கோணுமடி.” என்றாள் கலங்கிச் சிவந்துவிட்ட விழிகளோடு.

“சண்டை எண்டு வந்திட்டா ப்லொக் பண்ணுறது, ஆன்சர் பண்ணாம இருக்கிறது, பாஸ்வேர்ட் மாத்திரத்து எல்லாம் நடக்கிறதுதான். பெருசா எடுக்காத சரியா?” என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு விலகிச் சென்றாள் அஜந்தா.

யாமினிக்கு அதை அப்படி எடுக்க முடியவில்லை. அப்படித்தான் என்றால் முதல் வேலையாக அவளைக் கைப்பேசியில் தடை செய்திருப்பான். அவளின் குறுந்தகவல்களுக்குப் பதில் சொல்லாமல் இருந்திருப்பான்.

இது அதுவன்று. அவள் எண்ணியது போல் அவளைத் தள்ளி நிறுத்துகிறான் அவளின் நிரோ. அது மட்டும் மிகத் தெளிவாகப் புரிந்தது. எது வரை? இது எதன் அறிகுறி? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறான்? மேலே எதையும் சிந்திக்க முடியாமல் அவள் உள்ளம் நடுங்கியது.

வேறு ஏதும் காரணத்திற்காக மாற்றியிருந்து, அவர்களைச் சுற்றி ஆள்கள் இருந்ததனால் சொல்லாமல் விட்டிருந்தால் கூட இவ்வளவு நேரத்திற்குள் அவளுக்கு அழைத்து, இதுதான் நடந்தது, இதனால்தான் மாற்றினேன், இதுதான் புதுக் கடவு இலக்கம் என்று சொல்லியிருப்பான்.

அவள் வந்து இத்தனை நேரமாகியும் அவனிடமிருந்து சிறு குறுந்தகவல் கூட இல்லை. மனத்தை பெரும் பயம் கவ்விப்பிடித்தது. கைகால்கள் எல்லாம் நடுங்கின.

உடனேயே கைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைத்தாள். அவன் ஏற்கவில்லை. “மீட்டிங்ல இருக்கிறன்.” என்று குறுந்தகவல் வந்து விழுந்தது.

இப்போதெல்லாம் இப்படித்தான் சொல்கிறான். உள்ளூர ஒரு வலி பரவ, “எனக்கு உங்களோட கதைக்கோணும். நீங்க எப்ப ஃபிரீ எண்டு சொல்லுங்க.” என்று அனுப்பினாள் இவள். அவளுக்கு அதற்கு மேலும் அவன் செயல்கள் ஒவ்வொன்றும் தரும் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சில கணங்கள் அமைதியில் கழிய, “பின்னேரம் அஞ்சு மணிக்குப் பிறகு?” என்று கேட்டு அனுப்பினான் அவன்.

“ஓகே!”

அப்போதானால் அவளும் அறைக்குத் திரும்பிவிடுவாள். இதுவரையில் நடந்ததுபோல் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடாமல் கதைப்பதை நிதானமாக, தெளிவாகக் கதைக்கலாம் என்னு எண்ணிக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தினாள்.

இங்கே நிரோஜனுக்கு எந்த மீட்டிங்கும் இல்லை. அவளோடு கதைப்பதைத் தள்ளிப்போடும் நோக்கில்தான் அப்படிச் சொன்னான்.

அன்று திவாகர் அஜந்தாவிற்கு நடந்த பார்ட்டியில் வைத்து அவனின் வங்கிக் கணக்கை அவள் ஆராயப்போய்த்தான் அத்தனையும் நடந்தன. அந்தக் கோபத்தில் அடுத்த நாளே கைப்பேசி கடவு இலக்கத்தை மாற்றியிருந்தான்.

பிறகும் அவனுக்கு அதை மாற்ற விருப்பமில்லை. இருவரிடமும் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது, அதனால் அவர்களுக்குள் ஒரு பிரச்சனை வரக்கூடாது என்றுதான் இருவருமே எல்லாவற்றையும் பரிமாறிக்கொண்டார்கள். கடைசியில் அப்படி ஒளிவு மறைவில்லாமல் இருப்பதாலேயே பிரச்சனை வருகிறது என்றால் அது வேண்டாம் என்று நினைத்தான்.

ஆனால் என்ன, அவள் பணம் செலுத்த முடியாமல் அத்தனை பேருக்கு முன்னால் தடுமாறி நிற்கையில் தன்னை மீறி, பழக்கதோசத்தில் கைப்பேசியை நீட்டிவிட்டான்.

அதுதான் அவன் செய்த தவறு. அறை வாங்கிய குழந்தையாக அவள் தன்னை வெறித்த காட்சி இப்போதும் மனத்தை என்னவோ செய்தது.

நிச்சயம் அதைப் பற்றிப் பேசத்தான் அழைக்கிறாள். இது அடுத்த சண்டைக்கு அடிகோலப்போகிறது. அதுதான் அந்தச் சண்டையைத் தள்ளிப்போட்டான். சலிப்பாக உணர்ந்தான் நிரோஜன்.

ஒரு காலத்தில் அவளோடு பேசுவதற்குத் தவம் கிடந்திருக்கிறான். சில நொடிகள் பேசினாலும் நாள் முழுக்க அதையே நினைத்து மகிழ்ந்திருக்கிறான். ஆனால் இன்று அத்தனையும் கசந்தன. இப்படி அவளிடமிருந்து விலகி ஓடுகிறோம் என்பதும், அவளைத் தள்ளி நிறுத்துகிறோம் என்பதுமே வலித்தன.

வேறு வழியும் தெரியவில்லை. என்ன பேசப்போனாலும் அது

மாலையானதும், “என்ன மச்சான், வெளிக்கிடேல்லையா?” என்றுகொண்டு இவன் அறைக்குள் உள்ளிட்டான் நவீன்.

“இல்ல. நீ போ நான் வாறன்.”

அவர்கள் எல்லோரும் ஒன்றாகத் தங்கியிருப்பதால் அங்கு வைத்து எதையும் பேச விரும்பவில்லை அவன்.

சரியாக ஐந்து மணிக்கு யாமினி அழைத்தாள்.

“ஹலோ!” என்றான் அவன் அழைப்பை ஏற்று.

ஹலோவாம். முன்னரானால் ‘ஒய் ஜும்க்கா!’ என்பான். எத்தனை அழகான நாள்கள். அவற்றைத் தந்தவனே இப்போதெல்லாம் ஆறாத காயங்களையும் தந்துகொண்டிருக்கிறான். உள்ளத்தில் மண்டிய வேதனையை விழுங்கிக்கொண்டு, “எப்பிடி இருக்கிறீங்க நிரோ?” என்றாள் கமறிய குரலில்.

“இருக்கிறன்.” என்றான் அவன் சுருக்கமாக.

“ஆனா நான் நல்லாவே இல்ல நிரோ. பயமா இருக்கு. பதட்டமா இருக்கு. என்னவோ நடக்கக் கூடாதது எல்லாம் நடக்கப்போற மாதிரி இருக்கு.” என்றவளுக்கு வார்த்தைகளை முந்திக்கொண்டு கண்ணீர்தான் முணுக்கென்று வந்தது.

ஏன் உன் கடவு இலக்கத்தை மறைத்து என்னைத் தள்ளி வைத்தாய் என்று சண்டையிடும் தெம்பினைக் கூட இழந்திருந்தாள்.

“உனக்கு என்ன விசரா? அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல.” என்றான் அவன். ஆனால் அவை வெறும் வாய் வார்த்தைகளாக மட்டுமே வந்தன. அவள் மீது அக்கறை கொண்ட அவன் கோபம் எப்படி இருக்கும் என்று அவளுக்குத் தெரியாதா என்ன?

“பிறகு ஏன் என்னோட கதைக்காமயே இருக்கிறீங்க? இண்டைக்கு அவ்வளவு பக்கத்தில பாத்தும் வந்து கதைக்கேல்லையே நீங்க.”

“நீயும்தான் வந்து கதைக்கேல்ல.”

“நான் கதைச்சிருந்தா நீங்க கதைச்சிருப்பீங்களா?”

அவன் மௌனமாய் இருந்தான். அவள் உள்ளத்தில் வேதனை மண்டிற்று.

“இப்பவும் நானாத்தான் உங்களோட கதைக்கோணும் எண்டு கதைக்கிறன். ஆனா நீங்க ஒட்டாமையே பதில் சொல்லுறீங்க நிரோ.” அவள் குரல் உடைந்து வந்தது.

“நீயா நினைக்கிறதுக்கு எல்லாம் நான் பொறுப்பில்லை யாமினி.”

“இப்பவும் அப்பிடித்தான் கதைக்கிறீங்க நீரோ. இப்பிடி என்னைவிட்டு விலகி நிக்காதீங்க ப்ளீஸ். பயமா இருக்கு. என்னவோ என்னை விட்டு நீங்க தள்ளி தள்ளிப் போற மாதிரியே இருக்கு.”

ஒரு கணம் அமைதி காத்தாலும், “வேற என்ன செய்யச் சொல்லுறாய்? நான் பக்கத்தில வர, பிறகு நீ நான் சீப்பா நடக்கிறன் எண்டு சொல்லவா?” என்று சுள்ளென்று கேட்டான் அவன்.

ஒரு கணம் விக்கித்து நின்றுவிட்டாள் யாமினி. அவசரப்பட்டுப் பேசியதன் விளைவு. “நான் அண்டைக்குக் கதைச்சது பிழைதான். எனக்கே அது விளங்கிட்டுது. சொறி நிரோ.” என்றாள் கெஞ்சலாக.

“இந்த சொறிய கேட்டு கேட்டு அலுப்பா இருக்கு யாமினி. நீ சொல்லுற இந்த சொறிக்கு எந்த அர்த்தமும் இல்லை மாதிரி இருக்கு. உணாந்து கேட்டா அடுத்த முறை அந்தப் பிழை நடக்கக் கூடாது. இது கதைக்கிற எல்லாத்தையும் கதைச்சுப்போட்டு ஒரு மன்னிப்பில அதையெல்லாம் முடிக்க நினைக்கிற மாதிரி இருக்கு.”

“அப்ப அப்பிடித்தான் என்னை அறஞ்சிட்டு நீங்க கேட்ட மன்னிப்புமா?”

“இதுதான் நீ. நான் ஒண்டு சொன்னா அதுக்கு இன்னொண்டு தூக்கிக்கொண்டு வருவாய். இதாலதான் எனக்கு இப்ப எல்லாம் உன்னோட கதைக்க விருப்பம் வாறதே இல்ல.” என்றதும் உடைந்துபோனாள் அவள்.

“இப்பிடி எல்லாம் சொல்லாதீங்க நிரோ.”

“நான் உண்மையைத்தான் சொல்லுறன் யாமினி. அப்போத எனக்கு எந்த மீட்டிங்கும் இருக்கேல்ல. அடுத்த சண்டைக்குத்தான் நீ கோல் பண்ணுறாய் எண்டு தெரிஞ்சது. அதுதான் மீட்டிங் இருக்கு எண்டு சொன்னனான்.”

“இப்பிடிச் சொன்னா எப்பிடி நிரோ? நான் என்ன கதைக்க வந்தாலும் கோவப்பட்டு சண்டையா மாத்திறது நீங்க.”

“அதானே பாத்தன். என்னடா எடுத்து இவ்வளவு நேரமாச்சே, இன்னும் நீ என்னில பழிய போடேல்லையே எண்டு நினச்சு முடிக்க முதலே சொல்லிட்டாய்.” என்று கோபப்பட்டவனிடம் என்ன சொல்வது என்றே அவளுக்குத் தெரியாகிவில்லை.

error: Alert: Content selection is disabled!!