அத்தியாயம் 25
மிகுந்த அவமானத்தில் கொதித்துப்போய் நின்றிருந்தான் நிரோஜன். யாமினி இத்தனை அநாகரிகமாக நடப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை. அலுவலகத்திற்கே தேடி வந்து, கண்ணீர் விட்டு, அவன் என்னவோ அவளுக்குத் துரோகம் செய்வதுபோல் காட்டி, திலினியிடம் கோபப்பட்டு என்று எல்லாவற்றையும் யோசிக்க யோசிக்க மனம் கசந்து வழிந்தது.
“நிரு!” திலினி அவன் பின்னால் வந்து நின்று அழைத்தாள். நிரோஜனுக்கு முகம் கன்றிப்போனது. அவளை எதிர்கொள்ளவே வெட்கினான். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “சொறி திலினி. அவள் ஏதோ கோபத்தில…” என்று மன்னிப்புக் கேட்டான்.
“பரவாயில்ல. ஆனா ஏன்?” திடீரென்று மூர்க்கத்தனமாக யாமினி கோபப்பட்ட அதிர்ச்சியில் உறைந்திருந்தவளுக்கு உண்மையில் காரணம் புரியவில்லை.
நிரோஜன் சொன்ன பிறகுதான் அவள் போட்ட பிக்னிக் புகைப்படங்கள் யாமினியின் பார்வைக்குப் போயிருக்கின்றன என்று புரிந்தது.
அவள் போட்டிருந்த புகைப்படங்களை வாங்கிப் பார்த்தான் நிரோஜன். அத்தனையிலும் அவனும் அவளும். தவறாக ஒன்றுமில்லை. அவர்கள் நெருக்கமாகவும் இல்லை. ஆனால், அத்தனை புகைப்படங்களில் அவனும் அவளும் இருந்தார்கள்.
அந்த நாள்களில் பிரித்தறிய முடியாத ஒரு வகைக் குழப்ப மனநிலையில் இருந்தான் நிரோஜன். இருவர் மனத்திலும் பழைய கோபதாபங்கள் மூட்டை மூட்டையாக நிறைந்திருக்கையில் புதிதாக ஒரு பிரச்சனை வரும்போது அதை நிதானமாகக் கையாள முடியவில்லை. பேசித் தீர்க்கப்படாத பழைய கோபங்களும் சேர, பட்டு பட்டென்று கோபப்பட்டு, வார்த்தைகளை விட்டு ஒருவர் மற்றவரைக் காயப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் நண்பர்கள் பிக்னிக்குக்கு அழைத்தார்கள். முழுமையான ஒப்புதல் இல்லாமல்தான் போனான். அங்கே ஒரு புகைப்படம் கூட அவன் எடுக்கவில்லை. அவளானால் இந்த வேலை பார்த்து வைத்திருக்கிறாள்.
உண்மையில் திலினியும் அதை வேண்டுமென்று செய்யவில்லை. நன்றாக இருக்கிறது என்று மனத்திற்குப் பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தாள். என்ன, அவனோடு நின்ற புகைப்படங்கள்தான் அவளுக்குப் பிடித்திருந்தன.
அத்தனையையும் அந்த நிமிடமே எடுக்கச் சொன்னான் நிரோஜன். யாமினியின் கோபத்திற்கான காரணம் புரிந்தபோதும் திவாகர் அஜந்தாவிற்கு வைத்த பார்ட்டி, திருமண மண்டபம், இன்று அலுவலகம் என்று எப்போதும் பொது இடங்களில் வைத்து அவனை அவமானப்படுத்திக்கொண்டே இருக்கும் யாமினியை அவனால் மன்னிக்க முடியவில்லை.
இத்தனை வருடங்களாகக் காதலிக்கிறார்கள். பல்கலை தொடங்கி இன்றுவரை ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்துதான் பழகுகிறார்கள். அவனைப் பற்றியும் அவளுக்குத் தெரியும். அப்படியிருக்க ஒரு சில புகைப்படங்கள் போதுமா அவளுக்கு அவனைச் சந்தேகப்படவும், அலுவலகம் வரை தேடி வந்து இப்படிக் கத்திக் கூச்சல் போடவும்.
சமீப காலமாக அவள் இயல்பாக இல்லை, எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாள் என்று அவனே அவனுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தாலும் அவனால் ஆறுதல் கொள்ளவே முடியவில்லை. மனம் புழுங்கிற்று.
திலினி அவனைப் பற்றி என்ன நினைப்பாள், அவள் மூலம் நாலு பேருக்கு அலுவலகத்தில் செய்தி போகையில் அவர்கள் என்ன நினைப்பார்கள்? அவன் ஒரு டீம் லீடர். அவனைப் பற்றிய தவறான செய்தி பரவாதா?
*****
யாமினி முற்றிலுமாக இடிந்துபோயிருந்தாள். எதையும் பிரித்தறிந்து ஆராயும் தெளிவோ, திடமோ அவளை விட்டு அகன்றிருந்தன. எது நடந்துவிடுமோ என்று அவள் ஆழ்மனம் பயந்ததோ, எதைப் பற்றிச் சிந்திக்கவே பயந்துகொண்டிருந்தாளோ அது நடந்துவிட்டதோ என்றெண்ணிப் பதறினாள்.
அவளுடைய அழகிய உலகம், அவளுடைய எதிர்காலம், அவளுடைய கற்பனைகள், அவளுடைய கனவுகள் அத்தனையும் அவள் கண்முன்னே மெல்ல மெல்ல மறைந்துகொண்டிருப்பதைப் போன்ற ஒரு மாய உணர்வு அவளைச் சூழ்ந்தது.
யாரிடம் சொல்வது? யாரிடம் தெளிவைப் பெறுவது? அடுத்து என்ன செய்வது என்றே அவளுக்குப் புரியவில்லை.
ஐயோ ஐயோ என்று ஒரு தவிப்பு இடையறாது அவள் நெஞ்சைப் போட்டுத் தின்றது. சுவாசிக்கக் கூட முடியவில்லை. பயம், பதற்றம், பாதுகாப்பற்ற நிலை என்று அத்தனை எதிர்மறை உணர்வுகளும் அவளைப் போட்டுப் பந்தாடின.
சதா அவன் நினைவு. உறங்க முடியவில்லை. உண்ண முடியவில்லை. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. எந்த நேரமும் ஒரு துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டேயிருந்தது.
நிதானமாக, பொறுமையாகக் கதைக்க வேண்டும் என்று போய்விட்டு, திலினியைக் கண்டு கோபப்பட்டுக் கத்திய தன் மடத்தனத்தை எண்ணியெண்ணி நொந்தாள். அது நடக்காமல் இருந்திருந்தால் சமாதானமாகப் பேசியிருக்கலாம், அவன் கோபத்தைக் குறைத்திருக்கலாம் என்று ஒரு பைத்தியக்காரியைப் போல் என்னென்னவோ எல்லாம் யோசித்தாள்.
இத்தனை நாள்களும் பொறுமையாக இருந்ததுபோல் இந்தமுறை இருக்க முடியவில்லை. வீட்டுக்கு வந்த அடுத்த நிமிடமே, “நிரோ, சொறி நிரோ! திலினிட்ட நான் அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. அதுக்காக என்னை வெறுத்திடாதீங்க ப்ளீஸ்!” என்று குறுந்தகவல் அனுப்பினாள்.
அவனிடமிருந்து பதிலே இல்லை. அப்படி மௌனமாய்க் கழியும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் அவள் நெஞ்சை அறுத்தன. பொறுத்திருக்க முடியவில்லை. நெஞ்சைச் சூழ்ந்துவிட்ட அந்தப் பயம், அப்படி எதுவுமில்லை என்கிற உறுதியைப் பெற்றுவிடு என்று உந்தித் தள்ளிற்று.
கைகள் நடுங்க, “நிரோ ப்ளீஸ், இப்பிடி என்னைத் தவிர்க்காதீங்க. ஆன்சர் பண்ணுங்க. இனி அப்பிடி எல்லாம் நடக்க மாட்டன். வேணுமெண்டா திலினிட்ட மன்னிப்புக் கூடக் கேக்கிறன்.” என்று எழுதி அனுப்பினாள்.
அப்போது மட்டுமல்ல இரவிரவாக என்னென்னவோ எழுதி அனுப்பினாள். அவர்கள் கொண்ட காதலை, இனிமையாகக் கழித்த பொழுதுகளை, பரிமாறிக்கொண்ட அழகிய நிகழ்வுகளை எல்லாம் அவனுக்கு நினைவூட்ட முயன்றாள்.
எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, நேசம் சொட்டும் குரலில் எப்போதோ அவன் அனுப்பிய செய்திகளைத் திரும்ப அவனுக்கே அனுப்பினாள். “இப்பிடித்தான் நிரோ நீங்களும் நானும் இருந்தனாங்க. இப்ப ஆர் கண் பட்டது எண்டு தெரியேல்லையே. ஏன் என்னை விட்டுத் தள்ளி தள்ளிப் போறீங்க? பிளீஸ் நிரோ என்னோட கதைங்க.” என்று அனுப்பினாள்.
ஆனால், ஒரு காலத்தில் இரண்டு வழிச் சாலையாய் இருந்து, ஒரு வழிப் பாதையாய் மாற்றப்பட்ட வீதியைப் போன்று, அவர்களின் சேட்டில் அவளின் குறுந்தகவல்கள் மட்டுமே போய்க்கொண்டிருந்தன.
இரண்டு நாள்கள் கழிந்திருந்தன. உணவு உறக்கம் எதுவுமற்று ஒரு பைத்தியக்காரியாகவே மாறிப்போனாள். அவசரப்படாதே, பொறுமையாக இரு என்று அவளே அவளுக்குச் சொல்லிக்கொள்வாள். சில நிமிடங்களுக்கு மட்டுமே அவளால் அப்படி இருக்க முடிந்தது.
அவன் காட்டும் அந்த அழுத்தமான மௌனம் அவளைப் பதற வைத்தது. ஆற்றுவாரும் இல்லாமல், தேற்றுவாரும் இல்லாமல் நடு இரவில் கட்டிலில் எழுந்து அமர்ந்துகொண்டு அழுதாள். அந்த நேரத்திலும் கைப்பேசியில் இருந்த அவன் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தாள். அவன் தந்த நம்பிக்கைகள், பேசிய வார்த்தைகள், எதிர்காலம் குறித்து அவர்கள் போட்ட திட்டங்கள் அத்தனையும் நினைவில் வந்து கண்ணீர் சொரிய வைத்தன.
அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு, தோளில் தாடை பதித்து நிற்கும் அவன், அருகில் அமர்ந்து அவளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு அவனே எடுத்த சுயமி, அவளைச் சுற்றி சுற்றி வந்து அவன் ஆடியபோது நண்பர்கள் எடுத்துத் தந்த புகைப்படங்கள் என்று ஓராயிரம் புகைப்படங்கள். அதற்கு மேல் அவளால் முடியவேயில்லை. குலுங்கி குலுங்கி அழுதாள்.
“நிரோ, கோல் மீ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!” என்று அந்த நேரத்திலும் அனுப்பிவிட்டாள்
முதல் முறை போன்று அவனுடைய அலுவலகத்திற்கே சென்று அவனைச் சந்திக்கப் பயந்தாள். வழமையாக அவன் வரும் கேண்டீனில் போய் அமர்ந்துகொண்டு தவம் கிடந்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் நவீனுக்கு அழைத்தாள். “அண்ணா, நிரோ என்னோட கதைக்கிறாரே இல்ல. ஒருக்கா எனக்கு கோல் பண்ணச் சொல்லுங்க. ஒரேயோருக்கா ப்ளீஸ்!” என்று அவனிடமும் அழுதாள்.
யார் யாரிடமோ எல்லாம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே அவளுக்கு இல்லை. எப்படியாவது அவனோடு பேச முடிந்துவிட்டால் போதும் என்கிற நிலையில் இருந்தாள்.
நவீனுக்கு மிகவுமே கஸ்டமாகிப்போயிற்று. நடந்தவற்றைத் திலினி சொல்லி, நிரோஜனிடம் கேட்டு அறிந்துகொண்டிருந்தான். அவனுக்கும் இப்படி நிரோஜனைப் போட்டு நெருக்கும் யாமினி குறித்து என்ன முடிவுக்கு வருவது என்று தெரியவில்லை. ஆனாலும், நிரோஜனிடம் வந்து சொன்னான்.
அவனுக்கு அதிர்ச்சி. “உனக்கு என்னத்துக்கடா எடுத்தவள்?” என்றான் கோபத்துடன்.
“நீ எடுக்காட்டி அவா என்ன செய்வா?”
“அதுக்கு உனக்கு எடுப்பாளா?” என்று ஆத்திரப்பட்டான்.
நவீனுக்கும் அதில் ஒப்புதலே. என்னவென்றாலும் அவர்களுக்குள் வைத்துக்கொள்வதுதானே சரி. அதைச் சொல்லாமல், “இப்ப என்ன, எனக்குத்தானே எடுத்தவா. நீ கொஞ்சம் பொறுமையா கதைச்சுப் பிரச்சினையை முடி.” என்றுவிட்டுப் போனான்.
பேசி பேசி பிரச்சனைகளும் வெறுப்பும் மட்டுமே வளர்ந்துகொண்டிருக்கையில் இன்னொருமுறை எதைப் பேசித் தீர்ப்பது? அவள் அனுப்பிய எந்தக் குறுந்தகவலையும் அவன் கேட்கவில்லை. ஏனோ கேட்கப் பிடிக்கவில்லை. அவனை அவன் பாட்டிற்கு கொஞ்ச நாள்களுக்கு விடமாட்டாளா என்றிருந்தது.

