அத்தியாயம் 25
யாமினி முற்றிலுமாக இடிந்துபோயிருந்தாள். எதையும் பிரித்தறிந்து ஆராயும் தெளிவோ, திடமோ அவளை விட்டு அகன்றிருந்தன. எது நடந்துவிடுமோ என்று அவள் ஆழ்மனம் பயந்ததோ, எதைப் பற்றிச் சிந்திக்கவே பயந்துகொண்டிருந்தாளோ அது நடந்துவிட்டதோ என்றெண்ணிப் பதறினாள்.
அவளுடைய அழகிய உலகம், அவளுடைய எதிர்காலம், அவளுடைய கற்பனைகள், அவளுடைய கனவுகள் அத்தனையும் அவள் கண்முன்னே மெல்ல மெல்ல மறைந்துகொண்டிருப்பதைப் போன்ற ஒரு மாய உணர்வு அவளைச் சூழ்ந்தது.
யாரிடம் சொல்வது? யாரிடம் தெளிவைப் பெறுவது? அடுத்து என்ன செய்வது என்றே அவளுக்குப் புரியவில்லை.
ஐயோ ஐயோ என்று ஒரு தவிப்பு இடையறாது அவள் நெஞ்சைப் போட்டுத் தின்றது. சுவாசிக்கக் கூட முடியவில்லை. பயம், பதற்றம், பாதுகாப்பற்ற நிலை என்று அத்தனை எதிர்மறை உணர்வுகளும் அவளைப் போட்டுப் பந்தாடின.
சதா அவன் நினைவு. உறங்க முடியவில்லை. உண்ண முடியவில்லை. வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. எந்த நேரமும் ஒரு துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டேயிருந்தது.
நிதானமாக, பொறுமையாகக் கதைக்க வேண்டும் என்று போய்விட்டு, திலினியைக் கண்டு கோபப்பட்டுக் கத்திய தன் மடத்தனத்தை எண்ணியெண்ணி நொந்தாள். அது நடக்காமல் இருந்திருந்தால் சமாதானமாகப் பேசியிருக்கலாம், அவன் கோபத்தைக் குறைத்திருக்கலாம் என்று ஒரு பைத்தியக்காரியைப் போல் என்னென்னவோ எல்லாம் யோசித்தாள்.
இத்தனை நாள்களும் பொறுமையாக இருந்ததுபோல் இந்தமுறை இருக்க முடியவில்லை. வீட்டுக்கு வந்த அடுத்த நிமிடமே, “நிரோ, சொறி நிரோ! திலினிட்ட நான் அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது. அதுக்காக என்னை வெறுத்திடாதீங்க ப்ளீஸ்!” என்று குறுந்தகவல் அனுப்பினாள்.
அவனிடமிருந்து பதிலே இல்லை. அப்படி மௌனமாய்க் கழியும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் அவள் நெஞ்சை அறுத்தன. பொறுத்திருக்க முடியவில்லை. நெஞ்சைச் சூழ்ந்துவிட்ட அந்தப் பயம், அப்படி எதுவுமில்லை என்கிற உறுதியைப் பெற்றுவிடு என்று உந்தித் தள்ளிற்று.
கைகள் நடுங்க, “நிரோ ப்ளீஸ், இப்பிடி என்னைத் தவிர்க்காதீங்க. ஆன்சர் பண்ணுங்க. இனி அப்பிடி எல்லாம் நடக்க மாட்டன். வேணுமெண்டா திலினிட்ட மன்னிப்புக் கூடக் கேக்கிறன்.” என்று எழுதி அனுப்பினாள்.
அப்போது மட்டுமல்ல இரவிரவாக என்னென்னவோ எழுதி அனுப்பினாள். அவர்கள் கொண்ட காதலை, இனிமையாகக் கழித்த பொழுதுகளை, பரிமாறிக்கொண்ட அழகிய நிகழ்வுகளை எல்லாம் அவனுக்கு நினைவூட்ட முயன்றாள்.
எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, நேசம் சொட்டும் குரலில் எப்போதோ அவன் அனுப்பிய செய்திகளைத் திரும்ப அவனுக்கே அனுப்பினாள். “இப்பிடித்தான் நிரோ நீங்களும் நானும் இருந்தனாங்க. இப்ப ஆர் கண் பட்டது எண்டு தெரியேல்லையே. ஏன் என்னை விட்டுத் தள்ளி தள்ளிப் போறீங்க? பிளீஸ் நிரோ என்னோட கதைங்க.” என்று அனுப்பினாள்.
ஆனால், ஒரு காலத்தில் இரண்டு வழிச் சாலையாய் இருந்து, ஒரு வழிப் பாதையாய் மாற்றப்பட்ட வீதியைப் போன்று, அவர்களின் சேட்டில் அவளின் குறுந்தகவல்கள் மட்டுமே போய்க்கொண்டிருந்தன.
இரண்டு நாள்கள் கழிந்திருந்தன. உணவு உறக்கம் எதுவுமற்று ஒரு பைத்தியக்காரியாகவே மாறிப்போனாள். அவசரப்படாதே, பொறுமையாக இரு என்று அவளே அவளுக்குச் சொல்லிக்கொள்வாள். சில நிமிடங்களுக்கு மட்டுமே அவளால் அப்படி இருக்க முடிந்தது.
அவன் காட்டும் அந்த அழுத்தமான மௌனம் அவளைப் பதற வைத்தது. ஆற்றுவாரும் இல்லாமல், தேற்றுவாரும் இல்லாமல் நடு இரவில் கட்டிலில் எழுந்து அமர்ந்துகொண்டு அழுதாள். அந்த நேரத்திலும் கைப்பேசியில் இருந்த அவன் புகைப்படங்களை எடுத்துப் பார்த்தாள். அவன் தந்த நம்பிக்கைகள், பேசிய வார்த்தைகள், எதிர்காலம் குறித்து அவர்கள் போட்ட திட்டங்கள் அத்தனையும் நினைவில் வந்து கண்ணீர் சொரிய வைத்தன.
அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டு, தோளில் தாடை பதித்து நிற்கும் அவன், அருகில் அமர்ந்து அவளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு அவனே எடுத்த சுயமி, அவளைச் சுற்றி சுற்றி வந்து அவன் ஆடியபோது நண்பர்கள் எடுத்துத் தந்த புகைப்படங்கள் என்று ஓராயிரம் புகைப்படங்கள். அதற்கு மேல் அவளால் முடியவேயில்லை. குலுங்கி குலுங்கி அழுதாள்.
“நிரோ, கோல் மீ ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!” என்று அந்த நேரத்திலும் அனுப்பிவிட்டாள்
முதல் முறை போன்று அவனுடைய அலுவலகத்திற்கே சென்று அவனைச் சந்திக்கப் பயந்தாள். வழமையாக அவன் வரும் கேண்டீனில் போய் அமர்ந்துகொண்டு தவம் கிடந்தாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் நவீனுக்கு அழைத்தாள். “அண்ணா, நிரோ என்னோட கதைக்கிறாரே இல்ல. ஒருக்கா எனக்கு கோல் பண்ணச் சொல்லுங்க. ஒரேயோருக்கா ப்ளீஸ்!” என்று அவனிடமும் அழுதாள்.
யார் யாரிடமோ எல்லாம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே அவளுக்கு இல்லை. எப்படியாவது அவனோடு பேச முடிந்துவிட்டால் போதும் என்கிற நிலையில் இருந்தாள்.
நவீனுக்கு மிகவுமே கஸ்டமாகிப்போயிற்று. நடந்தவற்றைத் திலினி சொல்லி, நிரோஜனிடம் கேட்டு அறிந்துகொண்டிருந்தான். அவனுக்கும் இப்படி நிரோஜனைப் போட்டு நெருக்கும் யாமினி குறித்து என்ன முடிவுக்கு வருவது என்று தெரியவில்லை. ஆனாலும், நிரோஜனிடம் வந்து சொன்னான்.
அவனுக்கு அதிர்ச்சி. “உனக்கு என்னத்துக்கடா எடுத்தவள்?” என்றான் கோபத்துடன்.
“நீ எடுக்காட்டி அவா என்ன செய்வா?”
“அதுக்கு உனக்கு எடுப்பாளா?” என்று ஆத்திரப்பட்டான்.
நவீனுக்கும் அதில் ஒப்புதலே. என்னவென்றாலும் அவர்களுக்குள் வைத்துக்கொள்வதுதானே சரி. அதைச் சொல்லாமல், “இப்ப என்ன, எனக்குத்தானே எடுத்தவா. நீ கொஞ்சம் பொறுமையா கதைச்சுப் பிரச்சினையை முடி.” என்றுவிட்டுப் போனான்.
பேசி பேசி பிரச்சனைகளும் வெறுப்பும் மட்டுமே வளர்ந்துகொண்டிருக்கையில் இன்னொருமுறை எதைப் பேசித் தீர்ப்பது? அவள் அனுப்பிய எந்தக் குறுந்தகவலையும் அவன் கேட்கவில்லை. ஏனோ கேட்கப் பிடிக்கவில்லை. அவனை அவன் பாட்டிற்கு கொஞ்ச நாள்களுக்கு விடமாட்டாளா என்றிருந்தது.
நவீன் நிரோஜனின் உயிர் நண்பன். அது மட்டுமல்லாது அவன் சொன்னால் நிரோஜன் கேட்பான். அதில் அழைப்பான் என்கிற பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தாள் யாமினி.
ஆனால், அதன் பிறகும் அவன் அழைக்கவில்லை. உள்ளம் கலங்க சில முறைகள் நிரோஜனுக்கு அழைத்தாள். அவன் எடுக்காமல் இருக்கவும் திரும்பவும் நவீனுக்கு அழைத்தாள்.
இப்போது அவள் அழைப்பை ஏற்க நவீனும் தயங்கினான். இதற்குள், “ப்ளீஸ் அண்ணா, நீங்களும் இப்பிடிச் செய்யாதீங்க. ஒரேயொருக்க அவரை என்னோட கதைக்கச் சொல்லுங்க. ப்ளீஸ்” என்று குறுந்தகவல் அனுப்பிவிட்டாள்.
“சொல்லிட்டேன்மா. வேலையா இருக்கிறான். எடுக்கிறன் எண்டு சொன்னவன்.” என்று நவீனும் பதில் அனுப்பினான்.
“ஆயிரம், லட்சம் முறை நன்றி அண்ணா!” கும்பிடும் எமோஜிகளையும் சேர்த்து அனுப்பியிருந்தாள்.
அதைப் பார்த்தவனுக்குப் பாவமாயிற்று. “மச்சான், இதைப் பார். பாவமடா. ஒருக்கா எடுத்துக் கதை. என்ன எண்டு கேளு. நீயா ஒண்ட நினைச்சுக்கொண்டு தவிர்க்காத.” என்று அவள் அனுப்பியவற்றைக் காட்டிச் சொன்னான்.
நிரோஜனுக்கு இப்படி விடாமல் துரத்துகிறவளின் பால் சினம்தான் உண்டாயிற்று. உண்மையில் அவனை மூச்சு முட்ட வைத்துக்கொண்டிருந்தாள் யாமினி.
என்னவோ வரவர அவள் மீதிருந்த மதிப்பு மரியாதையுடன் சேர்ந்து பிரியமும் கரைந்துகொண்டு போவது போலொரு தோற்றம்.
அவர்களுக்குள் சண்டை வந்த ஒவ்வொரு முறையும் சில நாள்கள் போனால் எல்லாம் சரியாகிவிடும், அதுவரை அமைதியாக இருப்போம் என்றுதான் நினைப்பான். அதற்கு அவளும் ஒத்துழைக்க வேண்டுமே.
அவனைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு விட வேண்டும், இறுக்கிப் பற்றிக்கொள்ள வேண்டும் என்கிற பதட்டத்தில் அவள் தருகிற நெருக்கடிகள் அவனை அவளை விட்டு இன்னுமின்னும் விலகி ஓட வைத்தன.
முன்னரெல்லாம் அவளின் கண்கள் இலேசாகக் கலங்கினாலே அவன் உள்ளம் பதறிவிடும். இப்போது, அவள் கண்ணீர் விட்டு அழுதாலும் அது அவன் மனத்தைத் தொடவில்லை.
அவன் ஆசையாக முத்தமிட்டதை என்றைக்கு அவள் தரக்குறைவாகப் பேசினாலோ அன்றே அவனுக்கு மனம் விட்டுப் போயிற்று. அவளை நெருங்கியதை மிகுந்த அவமானமாக உணர்ந்தான். அப்படியிருக்க திலினியோடு சேர்த்து அவள் சந்தேகப்பட்ட கணத்தில் வெறுத்தே போயிற்று.
செய்தது எல்லாம் போதாது என்று இதோ இப்போது நவீன் மூலம் அவனைத் துரத்த ஆரம்பிக்கிறாள். மனத்தில் வெறுப்பு மண்டை, “நீ போ நான் கதைக்கிறன்.” என்றான்.
நவீன் நம்பாமல் அவனையே பார்த்து நிற்க, “நீயும் சேர்ந்து உயிரை வாங்காம போடா!” என்று ஆத்திரப்பட்டான்.
அவன் போன பிறகு அவளோடான பேச்சுக்குத் தயாராகிறவன் போன்று கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு அவளுக்கு அழைத்தான். அழைப்பை ஏற்றவள் அவனைப் பேச விடவேயில்லை.
“நிரோ ப்ளீஸ் நிரோ, இப்பிடி என்னோட கதைக்காம இருக்காதீங்க. அண்டைக்கு நான் கதைச்சது, நடந்துகொண்டது எல்லாம் பிழைதான். அதுக்கு சொறி நிரோ. இது சும்மா சொல்லுற சொறி இல்ல. உண்மையா உணாந்து சொல்லுறன். இனி உங்களுக்குப் பிடிக்காத எதுவும் செய்ய மாட்டன். ஆனா நீங்க என்னட்ட இருந்து விலகிப் போகாதீங்க ப்ளீஸ்.” என்று அத்தனை நாள்களும் நெஞ்சுக்குள் அடக்கி வைத்திருந்தவற்றை எல்லாம் மூச்சு விடாமல் கொட்டினாள்.

