நீ வந்து தங்கிய நெஞ்சில் 26.1

நெஞ்சைத் துழைத்துச் சென்ற குண்டு ஒன்று, கொஞ்சம் கொஞ்சமாய் உயிரைக் குடிக்கையில் வலிக்குமே ஒரு வலி, அந்த வலியை அனுபவித்துக்கொண்டிருந்தாள் யாமினி. அப்படித்தான் அவன் அவள் இதயத்தைச் சில்லுச் சில்லாக நொருக்கியிருந்தான்.

கோபப்படுவான், சண்டை பிடிப்பான், கதைக்காமலேயே இருப்பான் என்றெல்லாம் எண்ணினாளே ஒழிய, பிரிவைச் சொல்வான் என்று நினைக்கவில்லை.

முதலில் அவர்கள் எப்படி அப்படிப் பிரிய முடியும்? பிரிகிற பிணைப்பில்லையே இது? ஓருயிர் ஈருடலாக வாழவும், அவர்கள் இருவரும் ஒன்றுதான் என்று உலகத்திற்கு அறிவிக்கவும் அவள் கழுத்தில் ஒரு தாலி இல்லை. அதைத் தவிர்த்து அவர்கள் இருவரும் உணர்வுகளாலும் உள்ளத்தாலும் இரண்டறக் கலந்தவர்கள். அவர்கள் இருவருக்குமான கனவுகள், எதிர்காலத் திட்டங்கள் அத்தனையும் ஒன்றாக இருந்திருக்கின்றன.

பிறகு எப்படி அவன் பிரிவைச் சொல்வான்? பிறகு எப்படி அவள் அவன் இல்லாமல் வாழ்வாள்?

அவன் சொல்வதுபோல் தவறு முழுக்க அவள் பக்கமே இருக்கட்டுமே. அவன் அன்னை ஒரு தவறு செய்தால் இப்படித்தான் தூக்கி எறிந்துவிட்டுப் போவானா? அவன் தங்கை தவறு செய்தாலும் பிரிவைச் சொல்லிவிடுவானா? அவன் நண்பர்கள்? அவர்களை விடவுமா அவள் ஒன்றுமில்லாமல் போனாள்?

தாங்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கி அழுதாள் யாமினி.

அவன் உலகில் அவள் ஒரு பொருட்டே இல்லையா? போகிற போக்கில் குப்பையாகத் தூக்கி எறிந்துவிட்டுப் போகும் நிலையிலா அவளும் அவள் காதலும் அவனுக்கு? ஒரு நாள் பார்க்க முடியாவிட்டால் கூட ஓடி வருவானே. உன் குரலைக் கேட்காமல் இருக்க முடியாது என்பானே. அதெல்லாம் பொய்யா என்ன?

அவன் தந்த நம்பிக்கை, சொன்ன வார்த்தைகள், காட்டிய ஆசைகள் எல்லாம் இனி ஒன்றுமேயில்லையா?

கருந்துளைக்குள் அகப்பட்டுவிட்டவள் போன்று மூச்சற்றுத் துடிக்கிறாள். அவள் இல்லாமல் வாழ்ந்துவிடுவானா அவன்? வாழ்வான் என்பதால்தானே பிரிவைச் சொன்னான். அவள் இல்லாமல் அவனால் வாழ, சிரிக்க, சந்தோசமாக இருக்க முடியும் என்பதுதானே அவன் சொன்ன பிரிவின் பொருள்.

இரண்டு நாள்கள் கடந்திருந்தன. யாமினி என்கிறவள் உயிரோடுதான் இருந்தாள். உயிரோடு மட்டுமே இருந்தாள்.
உயிர் குடிக்கும் நோயொன்று உடல் முழுவதும் பரவி, மொத்தமாய் உருக்குலைப்பது போல், உள்ளத்தைத் தொற்றிய அந்த வலி, அவளின் உடலின் மூளை முடுக்கெல்லாம் நுழைந்து, அவளை உருக்குலைக்க ஆரம்பித்திருந்தது.

நான் என்ன தவறு செய்தேன், பேசிய எந்த வார்த்தை பிழை, எங்கே இந்தப் பந்தம் அறுந்து போக ஆரம்பித்தது என்று அவர்களுக்குள் நடந்த சம்பாஷணையை எல்லாம் பைத்தியக்காரியைப் போல் திரும்ப திரும்ப யோசித்துப் பார்த்தாள்.

யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. பொருள்கள் கை தவறின, முக்கியமானவற்றை மறந்தாள், கண்ணீர் கன்னத்தில் வழிவதை உணரக்கூட மாட்டாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

ஒரு கட்டத்துக்கு மேல் அவளைச் சூழும் இந்த வெறுமையைத் தாங்க முடியாமல் புறப்பட்டுக் கிளிநொச்சிக்குப் போனாள். அங்கே அவள் தமக்கை ஆனந்தன் இல்லாத நேரத்தில் பல முகங்கள் காட்டினாள். அன்னை ஓராயிரம் குறை படித்தார். நிம்மதியாக அழக்கூட முடியவில்லை. அங்கே இன்னும் இறுக்கமாய் உணர்ந்தாள். அவள் ஆழ்மனம் தேடும் ஆறுதலைத் தர யாருக்கும் தெரியவில்லை. எதையும் வாய்விட்டுச் சொல்லும் நிலையில் அவளும் இல்லை.

தந்தையின் இழப்பை இன்னும் பாரதூரமாக உணர்ந்தாள். அவர் இருந்திருக்க இதெல்லாம் நடந்திராதே என்று நினைத்து நினைத்து மருகினாள். புறப்படும் முன், “கொஞ்ச நாளைக்கு வந்து என்னோட இருக்கிறீங்களா அம்மா?” என்று கண்ணீரை அடக்கிக்கொண்டு கேட்டாள்.

அவரோ அவளைக் கடிந்துகொண்டார். “சின்ன பிள்ளை மாதிரி கதைக்கக் கூடாது பிள்ளை. அக்கா இந்த நிலைல இருக்கேக்க கவிக்குட்டியையும் விட்டுப்போட்டு எப்பிடி அங்க வருவன்?” என்றார் அவர்.

தாய்மையுற்றிருக்கும் மகளைப் பற்றி யோசித்தவர் உள்ளுக்குள் உருக்குலைந்துபோயிருக்கும் சின்ன மகளைக் கவனிக்காமல் போனார்.

பேசாமல் புறப்பட்டு அஜந்தா வீட்டிற்கு வந்தாள். மெலிந்து, வாடி வதங்கி, அழுத விழிகளோடு நின்றவளைக் கண்டு அஜந்தா பயந்துபோனாள்.

தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை அறிந்தவளுக்கு நிரோஜனை நிற்க வைத்துக் கேள்வி கேட்கும் ஆத்திரம்.

ஆனால் என்ன, நிதானமாக இருந்து பேசுகிற அளவுக்கு அவளுக்கு நேரமில்லை. திருமணம், அதன் பிறகு வேலை என்று கொழும்பு வந்துவிட்டாள். திவாருக்கு வேறு பெரிய குடும்பம். அவர்கள் எல்லோரும் சுற்றியிருக்கையில் எதையும் செய்ய முடியவில்லை.

கொஞ்ச நேரத்திலேயே அஜந்தா இவளை விட்டு அகலவும் முடியாமல், தன் வேலைகளைப் பார்க்கவும் முடியாமல் தடுமாறுவதைக் கண்டுவிட்டு அவளே புறப்பட்டுவிட்டாள்.

போக்கிடமற்ற அநாதையைப் போல் சுற்றித் திரியும் நிலை கூட அவளைக் கொன்றது. இந்தப் பரந்த உலகில் அவளுக்கென்று யாருமே இல்லையா என்ன? இல்லை, அவன் இல்லாமல் போனதில் எதுவும் அவள் சொந்தம் இல்லாமல் போயிற்றா?

அவள் அறை கூட அவளுக்கு ஆறுதல் தருவதாய் இல்லை. அங்கும் அவனே தெரிந்தான். அங்கு இருக்கவே பயந்தாள். அலுவலகமும் செல்வதில்லை. ‘வர்க் ஃப்ரம் ஹோம்’ மிலேயே இருந்துகொண்டாள்.

இடையறாது மனத்தால் அவனிடம் அழுதாள். தன்னிடம் திரும்பி வந்துவிடும்படி வேண்டினாள். எப்படி அவனால் அவளிடம் பிரிவைச் சொல்ல முடிந்தது என்று கேட்டாள்.

கோபத்தில் சொல்லிவிட்டுப் போய்விட்டோம் என்று உணர்ந்து திரும்பி வந்துவிட மாட்டானா என்று ஏங்கினாள். அப்படி அவனால் அவள் இல்லாமல் இருக்க முடியாது என்று இன்னும் இதயத்தின் ஒரு ஓரத்தில் நம்பினாள். அவளுக்கு வேறு வழியும் இல்லை. வாழ்வதற்கு அவன் தொடர்பான ஏதோ ஒரு காரணி தேவையாய் இருந்தது.

*****

நிரோஜன் என்கிறவன் தன் வாழ்க்கையில் பெரிதாய் எந்த மேடு பள்ளங்களையும் சந்தித்திராதவன். நல்ல குடும்பம், அளவான வருமானத்தில் நல்ல வாழ்க்கை. நன்றாகப் படித்தான். நல்ல உத்தியோகத்தில் நல்ல சம்பளம். அப்படியானவனின் வாழ்வில்தான் அழகிய மலராய் வந்தாள் யாமினி. ஆசைப்பட்டு நேசித்தான். அவள் என்றால் அவனுக்கு உயிர். அவர்களுக்குள் இருந்தது மிக மிக ஆழமான நேசம்.

அப்படியான அந்த நேசம் இத்தனை மோசமாய் முறிந்துபோகும் என்று அவன் கனவிலும் எண்ணியதில்லை. அதுவும் அவனே முறிப்பான் என்றோ, அவளை இந்தளவில் அழ வைப்பான் என்றோ நினைத்தே பார்த்ததில்லை.

பலதையும் அவள் தன் நல்லதற்குத்தான் சொல்கிறாள் என்று புரியாமல் இல்லை. அவள் சொல்வதுபோல் இருப்பதுதான் சரியும் கூட. அதற்கென்று தட்டியதும் எரியும் விளக்கைப் போன்று எப்படி மாறுவது? திடீரென்று போய் எல்லாவற்றிலும் எப்படிக் கணக்குப் பார்ப்பான்? நண்பர்களிடம் பணம் தரச் சொல்லுவான்? அவனுக்கே அதில் முழுமையான உடன்பாடில்லாதபோது எப்படி அப்படி அவனால் நடக்க முடியும்?

விளக்கு அவள் விரலில் சுட்டுவிட்டது என்பதற்காக அவனுக்கும் சுடும் என்று பொருள் இல்லையே. அவனவன் அவனவன் தேவைக்கு ஏற்பவே சிக்கனமாகவும் சேமிப்போடும் இருப்பான் என்பது அவன் எண்ணம்.

தனியர்களாக இருக்கிறவரைதான் எந்தக் கொண்டாட்டங்களும். திருமணம், குழந்தைகள் என்று ஆனபிறகு அவர்களே நினைத்தால் கூட இன்றுபோல் இருக்க முடியாது. பொறுப்பு, கடமை என்று வாழ்க்கையின் பின்னே ஓடப்போகிறார்கள். அப்படி இருக்க அனுபவிக்க வேண்டிய இந்தக் காலத்திலும் ஆசைகளை அடக்குவதில் என்ன நியாயம் இருக்கிறது?

இதையெல்லாம் எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும், அவன் செய்வது தவறு என்பதாலேயே அவள் அதைப் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்று நிற்கையில் விட்டுவிட்டான்.

பல நேரங்களில் நிதானமாக இருந்து யோசிக்கையில் அவன் பக்கமும் தவறுகள் உண்டு என்று அவனுக்குப் புரியாமல் இல்லை. அதற்கென்று அதிகமாய் அவள் வார்த்தைகளை விடுகிற பொழுதுகளிலும், நியாயமே இல்லாமல் குற்றம் சாட்டுகிற வேளைகளிலும் அவனால் பொறுத்துப் போக முடியவிலை.

ஒன்றைத் தொட்டு இன்னொன்று என்று சண்டைகள் வலுத்துக்கொண்டே போகையில் வாழ்க்கையே வெறுக்க ஆரம்பித்தது. மூச்சு முட்டியது. காரணமே இல்லாமல் வெறுப்பு மண்டியது. இப்போதே இப்படி என்றால் திருமணத்திற்குப் பிறகு என்று யோசிக்கவே மருட்டியது.

தந்தையை இழந்து, வீட்டு நிலையும் நன்றாக இல்லாத நிலையில் இப்படி இருக்கிறாள் என்று அவனும் எத்தனை தூரத்திற்குப் பொறுத்துப் போவது? ஒரு கட்டத்திற்கு மேல் அவனே நினைத்தாலும் பொறுமை காக்க முடியாமல் கோபம் வர ஆரம்பித்தது.

அதுவும் அவன் முத்தமிட்டதை எப்போது தரக்குறைவாகப் பேசினாளோ அப்போதே மனம் விட்டுவிட்ட நிலை. ஒரு ஆணாக அதை மிகுந்த அவமானமாக உணர்ந்தான். அவமானங்கள் என்பதே பொறுக்க முடியாதவை. இந்த விடயத்தில் கிடைக்கிற அவமானம் என்பது வெறுப்பை விதைக்கும். அதுதான் அவனுக்கும் நடந்தது. அந்தப் புள்ளியில்தான் அவனுக்கும் அவளுக்குமான அந்த உறவில் பெரும் விரிசல் விழுந்தது. இன்னொரு முறை அவனால் அவளை நெருங்க முடியும் என்கிற நம்பிக்கையே போயிற்று.

அவன் விலக அவள் நெருக்க, அவன் இன்னும் விலக அவள் சுற்றிவளைக்க முயல, ஒரு கட்டத்தில் அவனால் முடியவில்லை. அதுவும் அவனை அறிந்தவர்கள் மூலமும் அவள் துரத்த ஆரம்பிக்க, இதற்கு மேல் முடியவே முடியாது என்று புரிந்துபோயிற்று.

error: Alert: Content selection is disabled!!