அத்தியாயம் 27
நாகேஸ்வரிக்கு இரண்டு மகள்களும் ஒன்றுதான். இருவர் மீதான அவர் பாசமும் சமம்தான். ஆனாலும் கூட அந்த வீட்டோடான அவரின் பிணைப்பு என்பது மிக ஆழமானது.
அது அவர் வீடு. அவரும் கணவரும் வாழ்ந்த வீடு. அதைத்தான் மூத்தவளுக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தார்கள். கூடவே, நாளாந்தம் பேரனுக்கானதைக் கவனித்து, மகளுக்கும் மருமகனுக்குமானதைப் பார்த்து பார்த்துச் செய்து என்று, ஒரு ரிதத்தில் அங்கே இயங்கிப் பழகிவிட்டார். அதனாலோ என்னவோ அந்த வீட்டை விட்டுவிட்டு அவரால் இருக்க முடியாது.
கூடவே, யாமினி முதன் முதலில் கொழும்புக்குத் தனியாக வேலைக்குப் போகப் போகிறாள் என்றதும் கணவரிடம் பெரிதாகப் போர்க்கொடி தூக்கிய அவரே, காலவோட்டத்தில் சின்னவள் தைரியசாலி, கொழும்பிலேயே தனியாக இருக்கிறாள், அவள் கெட்டிக்காரி, சமாளிப்பாள் என்று தானாகவே எண்ணிக்கொண்டார்.
கணவர் இருந்த காலத்தில் அவள் இருக்கும் அறைக்கு அடிக்கடி சென்று வந்ததில் அது பாதுகாப்பான இடம் என்றும் அவருக்குத் தெரியும். பொருத்தமான ஒருவனாகப் பார்த்து அவளுக்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே அவருக்கு இருந்த அவள் பற்றிய யோசனை.
அதைத் தாண்டி பெரிய மகளின் வாய்க்குப் பயந்து அவளுக்குச் சாதகமாகவும் இவளுக்குப் பாதகமாகவும் நடக்கிறோம் என்பதை அவர் உணரவில்லை. அதனால் சின்ன மகள் பெரியளவில் தனக்குள் உடைந்துபோயிருக்கிறாள் என்பதை அவர் உணரவும் இல்லை, அவள் உணர்த்தவும் இல்லை.
ஆனால், முகத்தில் காயம், கையில் கட்டுப்போட்டு, நடக்கக் கூட முடியாமல் வந்த சின்ன மகளைக் கண்டதும் துடித்துப்போனார்.
அவள் பக்கத்திலேயே இருந்து, அவள் காலைத் தடவி, கையைத் தடவிவிட்டு அவளுக்கானதை அவர் பார்த்து பார்த்துச் செய்யவும் உடைந்துபோனாள் யாமினி.
அவர் மடியில் முகம் புதைத்துக் கண்ணீர் உகுத்தாள். உடல் காயங்களினால் அழுகிறாள் என்று நாகேஸ்வரி நினைக்க, அவளோ ஆறாமலேயே கிடக்கும் மனத்தின் காயத்திற்கு மருந்திடத் தெரியாமல் அழுதுகொண்டிருந்தாள்.
பேருந்துத் தரிப்பிடத்தில் விழுந்து, உயிர்போகும் வலியில் துடித்தவள் முதலில் தேடியது நிரோஜனைத்தான். நடந்தவற்றை எல்லாம் மறந்து, கைப்பேசியில் அவனை அழைக்கப்போகையில்தான் அவன் தன்னைத் தடை செய்திருப்பதும், தாம் பிரிந்துவிட்டோம் என்பதும் புத்தியில் பட்டென்று உறைத்தது.
உடலின் வலியைக் காட்டிலும் உள்ளம்தான் ஒரு நொடி துடித்துப்போயிற்று.
அப்படி இருந்தும் கூட, முதுகெலும்பே இல்லாதவள் போன்று நிமிடத்துக்கு ஒருமுறை கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். சும்மாவே கிடக்கும் அதன் திரையை ஒளிரச் செய்து பார்த்தாள். தன் நிலை அறிந்து அழைப்பானோ, அதன் மூலம் சமாதானமாக ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதோ என்று அர்த்தமற்ற எதிர்பார்ப்புகள்.
என்ன செய்ய? உண்மை என்னவென்று புத்தி நெற்றிப்பொட்டில் அறைந்து சொன்னாலும் அவளின் எதிர்பார்ப்பு மட்டும் மடியவே மாட்டேன் என்று நிற்கிறதே.
ஆனால், கடைசிவரையில் அவளின் கைப்பேசி அவன் பெயரைச் சொல்லி ஒலிக்கவேயில்லை. அவனிடமிருந்து குறுந்தகவல்கள் வரவேயில்லை.
நீ நினைப்பதுபோல் கோபத்திலோ, அவசரப்பட்டோ பிரிவைச் சொல்லவில்லை என்று, சத்தமே இல்லாமல் இருந்து அவன் அவளுக்கு வெகு தெளிவாகச் சொல்வதாகப் பட்டது.
கண்ணில் நீர் திரண்ட அதே நேரத்தில் அவள் உதட்டில் ஒரு வறண்ட புன்னகை. அவள் உள்ளம் இப்போதெல்லாம் இந்த வெறுமைக்கும் விரக்திக்கும் பழக ஆரம்பித்திருந்தது. ஒரு வகையான அமைதி அவளைச் சூழ்ந்தது.
ஒரு மாத முடிவில் கன்னத்துக் காயங்கள் ஆறியிருந்தன. கைக்கட்டும் தேவையாய் இல்லை. முழங்காலுக்கு மட்டும் இன்னுமே பாண்டேஜ் போட்டிருந்தாள். ஆனாலும் நடக்க, தன் வேலைகளைத் தானே செய்துகொள்ள அவளால் முடிந்தது.
அவள் கொழும்புக்குப் புறப்பட்டபோது, “பேசாம வேலையை மாத்திக்கொண்டு இஞ்சயே வரலாமே யாமினி. வவுனியா எண்டாக்கூடப் பரவாயில்லை.” என்று சொன்னான் ஆனந்தன்.
“பாக்கிறன் அத்தான்.”
இத்தனை காலமும் மறுத்தவள் இந்த முறை பார்க்கிறேன் என்று சொன்னதே அவர்களுக்குப் பெரும் ஆறுதல்.
கொழும்பில் வந்து இறங்கிய கணத்திலேயே துக்கம் தொண்டையை அடைத்தது. எங்காவது தென்பட்டுவிட மாட்டானா என்று அலைபாயும் விழிகளைத் தவிர்க்க முடியாமல் போயிற்று.
ஆனால், உண்மை அவளுக்குப் புலப்பட ஆரம்பித்திருந்ததில் சிறு வலியோடு அதைக் கடந்தாள்.
முதல் நாள் அந்த அலுவலக வளாகத்தினுள் கால் வைக்கையில் நடுங்கிப்போனாள். என்னென்னவோ நினைவுகள் எல்லாம் ஒன்றாக வந்து சுழற்றி அடித்தன. இதே இடத்தில்தான் சற்றுத் தூரத்தில் அவனும் இருக்கிறான் என்கிற எண்ணம் அலைக்கழித்துக்கொண்டேயிருந்தது.
மெல்ல மெல்ல இந்த வேதனைகளை எல்லாம் தாங்கிக்கொண்டு அலுவலகம் சென்று வர ஆரம்பித்திருந்தாள். அஜந்தாவுக்கு அவள் மாற்றம் கண்டு மிகுந்த மகிழ்ச்சி. இப்படி இருக்கையில்தான் தோழிகள் இருவரும் அன்று கேண்டீனுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார்கள். எதிரில் நிரோஜன்.
யாமினியின் இதயத்துடிப்பு சட்டென ஒரு கணம் நின்று மீண்டும் வேகமாகத் துடித்தது. தொண்டை அடைத்தது. கண்களில் நீர் திரண்டது. அடக்கிக்கொண்டு அவனையே பார்த்து நின்றாள்.
நிரோஜனும் அவளை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவனும் தடுமாறிப்போனான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாது நின்றான்.
எத்தனையோ முறை மனத்தில் அவனைச் சந்தித்துப் பேசியிருக்கிறாள். தன் வேதனைகளை, அவன் இல்லாமல் தான் அனுபவிக்கும் துன்பங்களை, அவனை மறக்க முடியாமல் படுகிற பாடுகளை எல்லாம் சொல்லி அழுதிருக்கிறாள்.
இன்று அத்தனைக்கும் சொந்தக்காரன் கண்முன்னே நிற்கிறான். அவளால் ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்க முடியவில்லை. எங்கே வாயைத் திறந்தால் கட்டுப்பாட்டை இழந்து அழுதுவிடுவோமோ பயந்தாள்.
ஆனாலும், “எப்பிடி இருக்கிறீங்க?” என்று அவள்தான் பேச்சை ஆரம்பித்தாள்.
பார்வை அவளிலேயே இருக்க அவன் தலையை மேலும் கீழுமாக ஆட்டினான். “நீ?” என்றான் பெரும் சிரமத்திற்கு மத்தியில்.
மெல்லப் புன்னகைக்க முயன்றவாறே அவளும் அவனைப் போலவே தலையை ஆட்டினாள்.
அடுத்து? இருவருக்கும் என்ன பேசுவது என்று தெரியவேயில்லை. எதுவானாலும் அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று அஜந்தா எப்போதோ விலகி வந்திருந்தாள்.
“கூகிள் மீட் இருக்கு.” என்றான் அவன்.
இந்த இரண்டு மாத இடைவெளி, அந்த இடைவெளிக்குப் பிறகான இந்தச் சந்திப்பு, அவள் என்று எதுவுமே அவன் முடிவை மாற்றவில்லையாம். உள்ளே உள்ளத்தில் ஒரு வலி ஊடுருவ சிறிதாய்த் தலையசைத்து அவனுக்கு விடைகொடுத்தாள்.
அவன் அவளிடமிருந்து நகர முற்பட்ட நொடியில், “உங்களோட கதைக்கோணுமே.” என்று தடுத்தது அவள் குரல்.
இதை அவள் கேட்டுவிடக் கூடாது என்றுதான் அங்கிருந்து போக முயன்றதே. அவன் ஒன்றும் இலகுவாகவோ ஆசையாகவோ பிரிவைச் சொன்னவன் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்துகொண்டு போவதைவிட ஒரே தடவையில் உடைந்து முடிந்துவிடட்டும் என்று நினைத்துத்தான் சொன்னான்.
அதற்கென்று பழகிய நாள்களையும், அவை தந்த அழகான நினைவுகளையும், அவளையும் மறக்க முடியுமா என்ன?
இப்போது அவள் அப்படிக் கேட்கவும் கடைசியாக அவள் அழுதது, கெஞ்சியது, மன்னிப்புக் கேட்டது எல்லாம் நினைவில் வந்தன.

