அதற்குமேல் அங்கே இருந்து அவள் சொல்வதைக் கேட்க முடியாமல் எழுந்து தோட்டத்துக்கு நடந்தவனின் விழிகள் மறுபடியும் நிறைந்திருந்தன.
அங்கே கேண்டீனில் வைத்தும் அவனுக்காகத்தானே பேசினாள். அவனைக் குறித்து ஒரு சிறு குறை சொல்லவில்லை. எனக்கு ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்கவில்லை. அதற்குப் பதிலாக அழகான நேரங்களை எல்லாம் அவன்தான் அவளுக்குத் தந்தானாம். அவன் மீது அவளுக்கு எந்தக் கோபமும் குறையும் இல்லையாம். அவனுக்கு நல்ல எதிர்காலம் அமையுமாம். அவன் ஆசைப்படுவது போன்ற பெண் கிடைப்பாளாம். அதற்குமேல் அதைப் பற்றி யோசிக்க முடியாமல் வாயைக் குவித்துக் காற்றை வெளியேற்றினான்.
அவள் தருகிற அழுத்தங்களைத் தாங்க முடியாமல் அந்த உறவிலிருந்து வெளியேற நினைத்தானே தவிர்த்து எதிர்காலம், அந்த எதிர்காலத்தில் இன்னொரு பெண் என்றெல்லாம் அவன் யோசிக்கவேயில்லையே. முதலில் எப்படி அப்படி யோசிப்பான்?
அதைவிட அன்று மண்டியிட்டு என்னை விட்டுவிடாதே என்று அழுதவள் நேற்று அப்படி எல்லாம் சொல்கிறாள் என்றால் இந்த இரண்டு மாதங்களுக்குள் அவள் போராடிய போராட்டம் எத்தகையதாக இருக்கும்?
அவனிடம் நகைகளைத் தந்துவிட்டு எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவள் புறப்பட்டபோது அவனால் அசையக்கூட முடியாமல் போயிற்று.
“என்னம்மா, ஒரு மாதிரி நடக்கிறீங்க? காலுக்கு என்ன?” என்ற நவீனின் குரலில்தான் வேகமாக நிமிர்ந்து அவளையும் அவள் காலையும் பார்த்தான்.
அவள் பார்வையும் அவனிடம் ஒரு முறை சென்று வர, “சின்னதா ஒரு ஆக்சிடென்ட் அண்ணா.” என்றாள் பெயரளவு முறுவலோடு.
அவன் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி.
“எப்ப நடந்தது? எனக்கு தெரியாதே.” என்றான் அவசரமாக
“ஒரு மாதம் முதல்.”
“ஆனா இப்ப வரை கால் உனக்குச் சரியாகேல்லையே?”
“ஆறு மாதம் ஆகும் எண்டு சொன்னவே.”
அதுவா அவளுக்குச் சின்ன விபத்து? அவள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்திருக்க அவன் எழுந்து அவளிடம் ஓடிவந்தான்.
“எனக்கு உண்மையா இது தெரியாது யாமினி.”
“தெரியும்.” என்றாள் அவள்.
அவனுக்கு மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால், அவள் தன்னை நம்பவில்லையோ என்று பரிதவித்தான்.
“நீங்க அந்தளவுக்கு மோசமான ஆள் இல்ல. தெரிஞ்சிருந்தா கட்டாயம் பாக்க வந்திருப்பீங்க. குறைஞ்சபட்சமா என்ன நடந்தது எண்டு ஃபோன்லயாவது கேட்டிருப்பீங்க.” என்றவளை மிகுந்த வலியோடு பார்த்து நின்றான்.
“இதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு. இந்த ஒரு மாதமும் என்னை நீங்க தேடேல்ல. தேடி இருந்தா அஜந்தாட்டா கேட்டிருப்பீங்க. கேட்டிருந்தா இது தெரிய வந்திருக்கும். நான் நினைச்ச மாதிரிக் கோபத்திலையோ அவசரப்பட்டோ அந்தப் பிரிவை நீங்க சொல்லேல்ல எண்டுறதும், எடுத்த முடிவில நீங்க உறுதியாத்தான் இருக்கிறீங்க எண்டுறதும் அப்பதான் எனக்கு கிளியரா விளங்கினது. அதுதான் நான் ஆசைப்பட்ட மாதிரி சேந்து வாழ எங்களுக்குக் கிடைக்கேல்ல. நீங்க ஆசைப்பட்ட பிரிவையாவது தந்து உங்களைச் சந்தோசப்படுத்திப் பாக்கோணும் எண்டு நினைச்சன்.” என்றதும் சட்டென்று கண்ணில் திரண்டுவிட்ட கண்ணீரை மறைக்க முகம் திருப்பிக்கொண்டான் அவன்.
அப்போது அரும்ப ஆரம்பித்த கண்ணீர் இதோ இப்போது வரை நின்றபாடாக இல்லை.
நேற்று அவள் பேச வேண்டும் என்று கேட்டபோது உண்மையில் அவளை எதிர்கொள்ள நிரோஜன் மிகவுமே பயந்தான். பிரிவைச் சொன்ன அன்றாவது அவனிடம் கோபமும் குமுறலும் இருந்தன. இன்று அவை எல்லாம் அடங்கிய நிலையில் அவள் கண்ணீரை, உன்னால் எப்படி இப்படி எனக்கு செய்ய முடிந்தது என்கிற அவள் கேள்வியை எதிர்கொள்ளும் தைரியம் அவனுக்கு இருக்கவில்லை.
அப்படி அவள் உடையும் நிலையையே உருவாக்காமல் விட்டால் போதும் என்று தோன்றவும்தான் நண்பர்களை வரச் சொன்னான்.
ஆனால், அது எத்தனை பெரிய தவறு என்று அவர்கள் வந்து அமர்ந்ததைக் கண்டு, அவள் பார்த்த ஒற்றைப் பார்வையிலேயே புரிந்துபோயிற்று.
அதன் பிறகு அவள் பேசியவைகள்….
யாமினியோடு பேசிவிட்டு மகனைத் தேடிக்கொண்டு வந்தார் மல்லிகா. அதற்குள் முகத்தை வேகமாகத் துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்தான் அவன். இப்போதும் அவன் கண் இமைகள் நனைந்திருக்கிறதோ என்று அவருக்கு ஒரு சந்தேகம்.
“அந்தப் பிள்ளையோட ஏதும் சண்டையா தம்பி?” நேராகவே கேட்டார்.
“அவளோட எனக்கு என்னம்மா சண்டை?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
“பிறகு ஏன் எழும்பி வந்திட்டாய்?”
“எனக்கு இருந்த வேற பிரச்சினைகளால அவளை விசாரிக்காம விட்டுட்டன். அதான் கொஞ்சம் மனம் சரியில்ல.” என்று சமாளித்தான்.
இருக்கலாமோ என்று உள்ளே ஓடினாலும், “வேற பிரச்சினை எண்டா என்ன பிரச்சினை உனக்கு?” என்று பழைய கேள்விக்கே வந்தார்.
அன்று மட்டுமில்லை அதன் பிறகு அங்கே அவன் நின்ற அடுத்த இரண்டு நாள்களும் கூட அதை பற்றி மட்டும் அவன் வாயைத் திறக்கவேயில்லை.
ஆனால், தள்ளிவிட்டாலும் தாயின் காலடியையே சுற்றிச் சுற்றி வரும் குழந்தையைப் போல, அவரையே ஒட்டிக்கொண்டு திரிந்தான். அவரைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போனான். கோயிலுக்கு அவனும் வந்தான். முடிந்தவரை அவருடனேயே இருந்தான். அவர் சமைக்கும்போது அருகில் நின்று சிறுசிறு வேலைகளைத் தானாகவே செய்து உதவினான்.
என்னவோ அவரின் அண்மையில் ஒரு தைரியத்தையும், ஆறுதலையும் உணர்கிறானோ என்றெண்ணி, மேலும் வற்புறுத்தாமல் அவனை அரவணைத்துக்கொண்டார்.
அவன் புறப்பட்ட அன்று காவியாவை வெளியே அனுப்பிவிட்டு, “பெரிய பிழை ஏதும் செய்திட்டியா தம்பி?” என்றார் அவன் அருகில் வந்து அமர்ந்துகொண்டு.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்துவிட்டு, “தெரியாம்மா.” என்றான் கரகரத்த குரலில்.
“தெரியா எண்டா எப்பிடி?”
“சரி எண்டு நினைச்சுத்தான் செய்தனான். அப்பிடி அது சரியாயிருந்தா எனக்கு ஃப்ரீயாத்தானே ஃபீல் ஆகோணும். இது என்னோ பெரிய பிழை செய்த மாதிரி, செய்யக் கூடாததைச் செய்த மாதிரி நெஞ்சுக்க என்னவோ எல்லாம் அடைக்குதம்மா. என்ன செய்ய எண்டு தெரியவே இல்லை. ஆனா வேணுமெண்டோ, நோகடிக்கோணும் எண்டு நினைச்சோ செய்யேல்ல.” என்ற மகன் பேச்சைக் கேட்டு அவருக்கு கண்ணீர் அரும்பிப் போயிற்று.
“அப்பிடி என்னப்பு செய்தனீங்க? அத சொன்னாத்தானே இனியாவது என்ன செய்யலாம் எண்டு யோசிக்கலாம்.” என்று இதமாயும் கெட்டப் பார்த்தார்.
அவன்தான் அதை பற்றிக் கேட்டால் மட்டும் வாயைத் திறக்க மாட்டானே.
“ஆனாலும் உனக்கு இருக்கிற பிடிவாதம் இருக்கே…” என்று கோபப்பட்டவருக்குத் தான் கோபப்படுவதைக் காட்டிலும் அவனை நிலைப்படுத்துவதே முக்கியமாகப் பட்டது.
அதில், “தம்பி, இப்போதைக்கு எதைப் பற்றியும் யோசிக்காத. கொஞ்ச நாள் போகட்டும் விடு. பிறகும் எதையும் எமோஷனலா யோசிக்காத. அறிவால யோசி. அப்பதான் நீ எடுத்த முடிவு சரியா பிழையா எண்டு உனக்கே விளங்கும். சரியா இருந்தா அப்பிடியே இரு. பிழையா இருந்தா அதை நேராக்க என்ன செய்யலாம் எண்டு யோசி.” என்று எடுத்துச் சொன்னார்.
இனியும் எதையும் நேராக்க முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. முதலில் நேராக்குவது என்றால் என்ன செய்ய வேண்டும்? எதையும் தெளிவாக யோசிக்கவோ முடிவெடுக்கவோ அவனால் முடியவில்லை. அறிவைக் காட்டிலும் உணர்வுகளின் எழுச்சிதான் அவனிடம் மேலோங்கி நின்றன.
ஏற்கனவே சரி என்று நினைத்து, ஒரு முடிவை எடுத்து, அதை அவளிடம் சொல்லி, அவளையும் முற்றும் முழுதாக நொறுக்கிவிட்டு வந்துவிட்டான். இனி, அந்த முடிவு சரியாக இருந்தாலென்ன, பிழையா இருந்தாலென்ன? நடப்பதின் வழி நடக்க வேண்டிய இடத்துக்கு அவன் தள்ளப்பட்டிருந்தான்.

