நீ வந்து தங்கிய நெஞ்சில் 28.2

“நீங்க அந்தளவுக்கு மோசமான ஆள் இல்ல. தெரிஞ்சிருந்தா கட்டாயம் பாக்க வந்திருப்பீங்க. குறைஞ்சபட்சமா என்ன நடந்தது எண்டு ஃபோன்லயாவது கேட்டிருப்பீங்க.” என்றவளை மிகுந்த வலியோடு பார்த்து நின்றான்.

“இதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு. இந்த ஒரு மாதமும் என்னை நீங்க தேடேல்ல. தேடி இருந்தா அஜந்தாட்ட கேட்டிருப்பீங்க. கேட்டிருந்தா இது தெரிய வந்திருக்கும். நான் நினைச்ச மாதிரிக் கோபத்திலையோ அவசரப்பட்டோ அந்தப் பிரிவை நீங்க சொல்லேல்ல எண்டுறதும், எடுத்த முடிவில நீங்க உறுதியாத்தான் இருக்கிறீங்க எண்டுறதும் அப்பதான் எனக்கு கிளியரா விளங்கினது. அதுதான் நான் ஆசைப்பட்ட மாதிரி சேந்து வாழ எங்களுக்குக் கிடைக்கேல்ல. நீங்க ஆசைப்பட்ட பிரிவையாவது தந்து உங்களைச் சந்தோசப்படுத்திப் பாக்கோணும் எண்டு நினைச்சன்.” என்றதும் சட்டென்று கண்ணில் திரண்டுவிட்ட கண்ணீரை மறைக்க முகம் திருப்பிக்கொண்டான் அவன்.

அப்படி, விட்டது தொல்லை என்று அவன் இருக்கவில்லை. இந்த உறவு அழகான உறவாக இருக்காது, இதற்குமேல் தொடர்ந்தால் இருவரையுமே இன்னுமின்னும் மோசமான நிலைக்குத் தள்ளும் என்று நினைத்தான்தான்.

இப்போதே அவரவர் அவரவர் இயல்பைத் தொலைத்துவிட்டு மற்றவருக்குப் பிடிக்காதவராக மாற ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியிருக்க இது தொடர்ந்து, வெறுப்பையும் கசப்பையும் மட்டுமே மனத்தில் சேர்த்து, அடி நெஞ்சிலிருந்து வெறுத்து, ‘சீ போ!’ என்கிற நிலைக்குப் போக முதலே இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து, சமூகமாகவே இதிலிருந்து வெளியேற விரும்பினான்தான்.

அதற்கென்று அவளில் அக்கறை இல்லை என்று அர்த்தமா? அவள் நலத்தில் கவனம் இல்லை என்று அர்த்தமா?

அவன் பிரிவைச் சொன்ன பிறகும் அவள் இரண்டு நாள்கள் கொழும்பிலேயே இருந்தது, பிறகு கிளிநொச்சி போனது, திரும்பி வந்தது எல்லாமே அவனுக்குத் தெரியும்.

ஏன், கடைசியாக இரண்டு வாரங்கள் அவள் மெடிக்கல் விடுமுறையில் இருந்தது கூடத் தெரியும். காரணம்தான் அவனால் அறிய முடியாமல் போயிற்று. அவர்களின் அலுவலகத்தில், வேறு ஒரு டீமில் இருந்த ஒருவன் மூலம் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான்.

அப்படி அவள் மெடிக்கல் விடுமுறையில் இருக்கிறாள் என்று அறிந்ததும் பயந்துபோய் அஜந்தாவிற்கு அழைத்திருந்தான்.

அவள் இவனைப் பேச விடவேயில்லை. அழைப்பை ஏற்ற கணமே, “நீங்க எல்லாம் இவ்வளவு கேவலமான ஆளா இருப்பீங்க எண்டு நினைச்சுப் பாக்கவே இல்லை நிரோஜன். அப்பா இல்லாமப் போய், அம்மா சகோதரி ரெண்டு பேருமே ஆதரிக்காம விட்டதில, தனக்கெண்டு இருக்கிற ஒரே ஒரு உறவா அவள் உங்களைப் பாத்தவள். அதுக்கு நீங்க குடுத்த பரிசு பிரேக் அப். ஆனா ஒண்டு, நிதானமா இருந்து யோசிச்சுப் பாக்கேக்க நீங்க ப்ரேக் அப் பண்ணினதுதான் சரி நிரோஜன். இண்டைக்கு வலிச்சாலும் நாளைக்கு அவள் நிமிர்ந்திருவாள். அவளுக்கும் நல்ல வாழ்க்கை ஒண்டு அமையும். இல்லாம உங்களைக் கட்டி, பிள்ளை குட்டி எண்டு வந்த பிறகு, இதே மாதிரி ஒரு பிரச்சினை வந்து, அப்ப நீங்க விட்டுட்டுப் போறதுக்கு இது எவ்வளவோ பெட்டர்.” என்று சீறியிருந்தாள்.

சுடாமல் இல்லை. முகம் கறுக்காமல் இல்லை. ஆனால், தோழிக்காகப் பேசுகிறவள் மீது அவன் திருப்பிக் கோபப்படவில்லை.

அதற்கு மாறாக, “இப்ப சொன்னீங்களே, நாளைக்குக் கலியாணம், குழந்தை, குட்டி எண்டு ஆனபிறகு இப்பிடி ஒரு நிலை வந்திருந்தா என்ன ஆகியிருக்கும் எண்டு. அத யோசிச்சுத்தான் நானும் பிரிவைச் சொன்னனான் அஜந்தா. ஆசைப்பட்டுச் சொல்லேல்ல. இன்னொருத்தியப் பாத்துப்போட்டும் சொல்லேல்ல. பரவாயில்ல, உங்கட பார்வைல அது பிழையா இருந்தா இருந்திட்டுப் போகட்டும். யாமினி மெடிக்கல் லீவுல நிக்கிறாளாம். என்ன நடந்தது எண்டு மட்டும் சொல்லுங்க. உண்மையாவே அவளுக்கு ஏத்துமா?” என்று விசாரித்தான்.

“திரும்ப சேருற பிளான் இருக்கா உங்களுக்கு?” என்று திருப்பி ஒரு கேள்வி கேட்டாள் அவள்.

இவன் அமைதியாக இருக்க, “இல்லை என்ன? பிறகு என்னத்துக்கு அவளைப் பற்றி விசாரிக்கிறீங்க நிரோஜன்? முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். அவள் உங்களை மறந்து வெளில வரட்டும். தயவு செய்து அவள் எப்பிடி இருக்கிறாள், என்ன செய்றாள் எண்டு கேட்டுக்கொண்டு வராதீங்க. இனி நீங்க எடுத்தா நான் எடுக்க மாட்டன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.

இத்தனை பேசிய அஜந்தா, யாமினிக்கு உண்மையில் ஒன்று என்றால் அவனைச் சும்மா விட்டிருக்க மாட்டாள். ஆக, அவள் வேறு எதற்கோதான் அந்த விடுமுறையை எடுத்திருக்கிறாள் என்று அவன் எண்ணியிருந்தான்.

இதையெல்லாம் அவனுக்குச் சொல்ல விருப்பம் இல்லை. அவள் கண்ணீரோடு கெஞ்சக் கெஞ்சப் பிரிவைச் சொன்னவன் அவன். அப்படியிருக்க அவள் நலமாக இருக்கிறாளா என்று அவளுக்குத் தெரியாமல்தான் கவனித்தான். இல்லாமல் பிரிவைச் சொன்ன பிறகும் உன்மீது நான் அக்கறையாக இருக்கிறேன் என்று காட்டி, அவள் மனத்தில் மறுபடியும் எதிர்பார்ப்பை எப்படி விதைப்பான்?

அவன் பேசாமல் நிற்க அவள் போய்விட்டாள்.

யாமினியோடு பேசிவிட்டு மகனைத் தேடிக்கொண்டு வந்தார் மல்லிகா. அதற்குள் முகத்தை வேகமாகத் துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்தான் அவன். இப்போதும் அவன் கண் இமைகள் நனைந்திருக்கிறதோ என்று அவருக்கு ஒரு சந்தேகம்.

“அந்தப் பிள்ளையோட ஏதும் சண்டையா தம்பி?” நேராகவே கேட்டார்.

“அவளோட எனக்கு என்னம்மா சண்டை?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“பிறகு ஏன் எழும்பி வந்திட்டாய்?”

“எனக்கு இருந்த வேற பிரச்சினைகளால அவளை விசாரிக்காம விட்டுட்டன். அதான் கொஞ்சம் மனம் சரியில்ல.” என்று சமாளித்தான்.

இருக்கலாமோ என்று உள்ளே ஓடினாலும், “வேற பிரச்சினை எண்டா என்ன பிரச்சினை உனக்கு?” என்று பழைய கேள்விக்கே வந்தார்.

அன்று மட்டுமில்லை அதன் பிறகு அங்கே அவன் நின்ற இரண்டு நாள்களும் கூட அதைப் பற்றி மட்டும் அவன் வாயைத் திறக்கவேயில்லை.

ஆனால், தள்ளிவிட்டாலும் தாயின் காலடியையே சுற்றி சுற்றி வரும் குழந்தையைப் போல, அவரையே ஒட்டிக்கொண்டு திரிந்தான். அவரைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போனான். கோயிலுக்கு அவனும் வந்தான். முடிந்தவரை அவருடனேயே இருந்தான். அவர் சமைக்கும்போது அருகில் நின்று சிறுசிறு வேலைகளைத் தானாகவே செய்து உதவினான்.

என்னவோ அவரின் அண்மையில் ஒரு தைரியத்தையும், ஆறுதலையும் உணர்கிறானோ என்றெண்ணி, மேலும் வற்புறுத்தாமல் அவனை அரவணைத்துக்கொண்டார் மல்லிகா.

அவன் புறப்பட்ட அன்று காவியாவை வெளியே அனுப்பிவிட்டு, “பெரிய பிழை ஏதும் செய்திட்டியா தம்பி?” என்றார் அவன் அருகில் வந்து அமர்ந்துகொண்டு.

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்துவிட்டு, “தெரியாம்மா.” என்றான் கரகரத்த குரலில்.

“தெரியா எண்டா எப்பிடி?”

“சரி எண்டு நினைச்சுத்தான் செய்தனான். அப்பிடி அது சரியாயிருந்தா எனக்கு ஃப்ரீயாத்தானே ஃபீல் ஆகோணும். இது என்னோ பெரிய பிழை செய்த மாதிரி, செய்யக் கூடாததைச் செய்த மாதிரி நெஞ்சுக்க என்னவோ எல்லாம் அடைக்குதம்மா. என்ன செய்ய எண்டு தெரியவே இல்லை. ஆனா வேணுமெண்டோ, நோகடிக்கோணும் எண்டு நினைச்சோ செய்யேல்ல.” என்ற மகன் பேச்சைக் கேட்டு அவருக்குக் கண்ணீர் அரும்பிப் போயிற்று.

“அப்பிடி என்னப்பு செய்தனீங்க? அதச் சொன்னாத்தானே இனியாவது என்ன செய்யலாம் எண்டு யோசிக்கலாம்.” என்று இதமாகவும் கேட்டுப் பார்த்தார்.

அவன்தான் அதைப் பற்றிக் கேட்டால் மட்டும் வாயைத் திறக்க மாட்டானே.

“ஆனாலும் உனக்கு இருக்கிற பிடிவாதம் இருக்கே…” என்று கோபப்பட்டவருக்குத் தான் கோபப்படுவதைக் காட்டிலும் அவனை நிலைப்படுத்துவதே முக்கியமாகப் பட்டது.

அதில், “தம்பி, இப்போதைக்கு எதைப் பற்றியும் யோசிக்காத. கொஞ்ச நாள் போகட்டும் விடு. பிறகும் எதையும் எமோஷனலா யோசிக்காத. அறிவால யோசி. அப்பதான் நீ எடுத்த முடிவு சரியா பிழையா எண்டு உனக்கே விளங்கும். சரியா இருந்தா அப்பிடியே இரு. பிழையா இருந்தா அதை நேராக்க என்ன செய்யலாம் எண்டு யோசி.” என்று எடுத்துச் சொன்னார்.

இனியும் எதையும் நேராக்க முடியுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. முதலில் நேராக்குவது என்றால் என்ன செய்ய வேண்டும்? எதையும் தெளிவாக யோசிக்கவோ முடிவெடுக்கவோ அவனால் முடியவில்லை. அறிவைக் காட்டிலும் உணர்வுகளின் எழுச்சிதான் அவனிடம் மேலோங்கி நின்றன.

ஏற்கனவே சரி என்று நினைத்து, ஒரு முடிவை எடுத்து, அதை அவளிடம் சொல்லி, அவளையும் முற்றும் முழுதாக நொறுக்கிவிட்டு வந்துவிட்டான். இனி, அந்த முடிவு சரியாக இருந்தாலென்ன, பிழையா இருந்தாலென்ன? நடப்பதின் வழி நடக்க வேண்டிய நிலைக்கு அவன் தள்ளப்பட்டிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!