நீ வந்து தங்கிய நெஞ்சில் 30.2

அவ்வளவு நேரமாக அவனை எப்படித் தனியாகப் பிடிக்கலாம் என்று காத்திருந்த திலினி நிரோஜனின் முன்னே சென்று அமர்ந்தாள்.

நிமிர்ந்து அவளை பார்த்து முறுவலித்துவிட்டு, “நீ சாப்பிடேல்லையா?” என்று கேட்டான் நிரோஜன்.

“சாப்பிடோணும். டைம் இருக்குதானே.”

அவன் தண்ணீருக்குப் பார்க்க எடுத்து அவன் முன்னே வைத்தாள்.

“தேங்க்ஸ்!” என்றபடி எடுத்துப் பருகினான் அவன்.

“நிரு.”

“ம்!” உணவை அள்ளி வாயிலிட்டபடி அவளை பார்த்தான்.

“உங்களிட்ட ஒண்டு சொல்லோணும்.”

“சொல்லு!”

“எனக்கு… எனக்கு…”

“என்ன உனக்கு? சொல்லு.” அவள் தடுமாறுவதைக் கண்டு முறுவலித்தான் அவன்.

“இல்ல. அது யாமினிய நீங்க மறந்திட்டீங்களா?” கேட்ட பிறகுதான் மடத்தனமான இந்த நேரம் அவளைப் பற்றிக் கேட்டு நினைவுபடுத்துகிறோம் என்று அவள் மண்டையில் உரைத்தது.

உணவை அள்ளி வாயிலிடப் போனவன் ஒருகணம் தன் அசைவை நிறுத்தினான். மறந்துவிட்டானா என்ன? அவள் அருகில் இருந்தபோது கூட இந்தளவில் அவள் நினைவாகவே
அவன் சுற்றியதில்லை. ஆனால் இப்போதெல்லாம்… கண்ணை எட்டாத சிறு முறுவலோடு, “ம் மறந்தாச்சு!” என்றான் அவன்.

திலினியின் முகம் மலர்ந்துபோயிற்று.

“சூப்பர் நிரு. இதுதான் உங்களிட்ட எனக்குப் பிடிச்சதே.”

“ம்ஹூம்!” என்றான் என்னவென்று பிரித்தறிய முடியா பாவத்தோடு.

“உங்களிட்ட ஒண்டு சொல்லோணும் நிரு.”

இவள் எதற்கு இத்தனை பீடிகை போடுகிறாள் என்று பார்த்தான் அவன்.

“அது… எனக்கு வீட்டில கலியாணத்துக்கு பாக்கினம்.”

“ஹேய் உண்மையாவா? அப்ப அடுத்த டும் டும் உனக்குத்தான்.” என்றான் அவன் உற்சாகமாய்.

“அது சிங்களம் தமிழ் எண்டு பாகுபாடெல்லாம் எங்கட வீட்டில பாக்காயினம்.”

“நல்ல விசயம்.”

“அதான் நிரு. நீங்க வந்து வீட்டுல கதைக்கிறீங்களா?”

“நான் ஏன்…” என்று கேட்க வந்தவன் சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். தான் புரிந்துகொண்டதைத்தான் அவள் சொன்னாளா என்று ஒரு சந்தேகம். அதே நேரத்தில் ஒரு கோபம் சுர்ர் என்று உச்சிக்கு ஏறிக்கொண்டு வரவும் வேகமாய் எழுந்து வெளியே வந்துவிட்டான்.

யாரிடம் வந்து என்ன சொல்கிறாள் என்று கண்மண் தெரியாத ஒரு கோபம் அவனைச் சுழற்றியடிக்க ஆரம்பித்தது. யார் இடத்தில் யார்? பக்கத்தில் அவள் இருந்திருக்க இவள் எல்லாம் வந்து இப்படிக் கேட்டிருப்பாளா என்ன? என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாள் அவனைப் பற்றி? அவனுக்கு அவனைச் சமாளித்துக்கொள்ளச் சிலபல நிமிடங்கள் தேவையாயிற்று.

திலினிக்கு உள்ளே நடுங்கியது. திரும்பி நவீனைக் கலக்கத்துடன் பார்த்தாள். இவர்களில் கவனமாக இருந்த அவனும், ‘போ!’ என்று தலையாட்டினான்.

மெல்ல நடந்து வெளியே வந்தாள். அங்கே அவன் இடையில் கைகளைக் கொடுத்து அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான்.

“நிரு.”

அவன் திரும்பவில்லை.

“எனக்கு உங்களைப் பிடிக்கும். நீங்க யாமினிய லவ் பண்ணின விதம் பிடிக்கும். உங்கட லவ் பிரேக் அப் ஆகிற வரைக்கும் எனக்கு இப்பிடி ஒரு எண்ணம் இருந்ததே இல்ல. ஆனா இப்ப அந்த லவ்வ எனக்கே எனக்கு எண்டு எடுக்க ஆசையா இருக்கு.” என்று சொல்லி முடிக்க முதலே, “வாயை மூடு!” என்றிருந்தான் அவன்.

அவள் நடுங்கிப்போனாள். இதுவரை அவன் கோபத்தை அவள் எதிர்கொண்டதில்லை.

“அசிங்கமா இல்லையா உனக்கு? ஒரு ஃபிரெண்டா பழகினவனிட்ட வந்து இப்பிடிச் சொல்லுறாய்?” என்றதும் அவளுக்கு விழிகள் கலங்கிப்போயிற்று.

“ஆனா உன்னில பிழை இல்ல. அவள் அப்பவே சொன்னவள். நான்தான் கேக்கேல்லை. ஆருக்கு எந்த இடம் குடுக்கோணும் எண்டு தெரியாம ஆடினதுக்கு இதையெல்லாம் கேக்கத்தான் வேணும் போல!” என்றவனுக்கு அவன் மீதுதான் அத்தனை கோபமும்.

சந்தேகப்படுகிறாள், தன்னை நம்பவில்லை என்று கோபப்பட்டானே. ஆனால் இன்று அவள் சொன்னதுதான் நிஜமாகியிருக்கிறது.

அங்கே நவீன் வரவும், “இவளை மரியாதையா போகச் சொல்லு மச்சான். இனி என்னோட இவள் கதைக்கவே கூடாது. நாளைக்கே டீமை மாத்துறன்.” என்று ஆத்திரப்பட்டான் அவன்.

என்னவோ யாமினிக்குத் துரோகம் செய்வதுபோல் உள்ளமெல்லாம் பதறிப்போயிற்று அவனுக்கு. அந்த நொடியில் அவளை அவளின் இல்லாமையை மிகப் பெரிதாய் உணர்ந்தான்.

அவளை அனுப்பிவிட்டு வந்து அவன் தோளைத் தொட்டான் நவீன். நிரோஜன் அவன் புறம் திரும்பவில்லை. அவன் உள்ளம் புழுங்கிக்கொண்டிருந்தது.

இப்போது யோசிக்கையில் இவள் எல்லாவற்றையும் திட்டமிட்டுத்தான் செய்தாளோ என்று தோன்றிற்று. அஜந்தாவின் திருமணத்தின்போதும் அவள் நேராக வவுனியா வந்துவிடுவதாகத்தான் முதலில் சொல்லியிருந்தாள்.

ஆனால், ஒருமுறை அலுவலக கேண்டீனில் அமர்ந்திருந்து அன்னையோடு இவன் வீடியோ கோலில் பேசிக்கொண்டிருந்தான். அப்படியான பொழுதுகளில் அவன் நண்பர்களோடும் மல்லிகா இரண்டு வார்த்தை பேசுவார். அவருக்கு அவர்கள் எல்லருமே பிள்ளைகள் போல்தான். அப்படித்தான் திலினியோடும் கதைத்தார்.

அப்போதுதான், “தமிழ் ஆக்கள் இருக்கிற ஊர் பக்கம் நான் வந்ததே இல்ல அன்ட்ரி. அதுதான் ஆவலா வெய்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறன். கோணேஸ்வரர் கோயில் பாக்கோணும் எண்டு எனக்கு ஆசை.” என்று திலினி சொன்னதைக் கேட்டுவிட்டு, “அப்ப ரெண்டு நாள் முதலே வெளிக்கிட்டு இஞ்ச வாங்கோம்மா. திருகோணமலையைச் சுத்திப் பாத்துக்கொண்டு கோணேஸ்வரர் கோயிலுக்கும் போயிற்று அப்பிடியே கலியாணத்துக்குப் போகலாம்.” என்று அழைத்தது அவர்தான்.

அதைப் பற்றிக்கொண்டு அவள் புறப்பட்டுவிட்டபோது நிரோஜனால் எதுவும் செய்ய முடியாமல் போயிற்று. திருமணத்திற்கு என்று அவள் கொண்டுவந்த சேலை சிங்களப் பெண்கள் அணியும் வகையிலான பெரிதாக நல்லதாக இல்லாமல் இருக்கவும் ஒரு பெண் பிள்ளையை வைத்திருக்கும் மல்லிகாவுக்கு மனம் கேட்கவில்லை. காவியாவின் புதுப் புடவை ஒன்றைக் கட்டிவிட்டதும் அவர்தான்.

இதையெல்லாம் அறிகிறபோது யாமினி தன்னைச் சரியாகப் புரிந்துகொள்வாளா என்கிற கலக்கம் அவனுள் இல்லாமல் இல்லை. எப்போதுமே பிரச்சனைகளை, சண்டை சச்சரவுகளை விரும்பாதவன், அதுவும் அப்போதுதான் ஒரு பெரும் சண்டை நடந்துமுடிந்த, சமாதானமாகிவிட்டார்களா இல்லையா என்கிற நிலையில் இருக்கையில் இதை உடனடியாகச் சொல்லி, இன்னொரு பிரச்சனை வேண்டாம் என்று தள்ளிப்போட்டிருந்தான்.

ஆனால், அவன் தள்ளிப்போட்டதே கடைசியில் ஒரு பிரச்சனையாகி, அவன் மறைத்தான் என்பதுபோலாகிற்று. அவள் அதைக் கேட்டுக்கொண்டு வரவும் கோபத்தில் கத்திவிட்டான்.

ஆனால் இன்று, இவள் அத்தனையையும் உள்நோக்கத்தோடுதான் செய்தாளா, அது புரிந்துதான் அவள் கோபப்பட்டாளா என்று யோசிக்க யோசிக்க அவனால் அவனையே மன்னிக்க முடியும் போல் இல்லை.

“ஓம் எண்டா ஓம் எண்டு சொல்லு. இல்லை எண்டா இல்லை எண்டு சொல்லு. அதைவிட்டுட்டு என்னத்துக்கு உனக்கு இவ்வளவு கோபம்?” என்று கேட்டான் நவீன்.

“அப்ப உனக்கு இது ஏற்கனவே தெரியும்.”

“ஓம், என்னட்டத்தான் வந்து சொன்னவள். நான்தான் உன்னோட கதைக்கச் சொன்னனான்.” என்றவனைக் கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்த்தான் நிரோஜன்.

“என்ன பார்வை? காலம் முழுக்க இப்பிடியே இருக்கப் போறியா? இப்ப நீ சிங்கிள்தானே?” என்றான் அவன்.

சிங்கிளா? அவன் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சி. அவன் உணர்வுகளும் உள்ளமும் எப்போதோ ஒருத்தியோடு பிணைக்கப்பட்டுவிட்டன. அவர்கள் பிரிந்திருக்கலாம். அவள் அவனை விட்டு மொத்தமாகவே போயிருக்கலாம். அதற்கென்று அவன் தனியனா என்ன?

நிலைகுலைந்துபோனவன் நவீனிடம் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்தான்.

error: Alert: Content selection is disabled!!