அத்தியாயம் 32
காவியாவின் திருமண நாள் மிக மிக அழகாய் விடிந்திருந்தது. அவர்கள் வீட்டின் தலைமகனாய், பட்டு வேட்டி சட்டையில் தயாராகி, பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தான் நிரோஜன்.
எங்கு என்ன வேலையைப் பார்த்தாலும், வருகிறவர்களோடு இன்முகமாகப் பேசினாலும், அவர்களுக்குத் தேவையானதை, தந்தை சொல்கிறவற்றை என்று எல்லாவற்றையும் ஓடி ஓடிச் செய்தாலும் அவன் விழிகள் இரண்டும் மண்டப வாசலிலேயே தவம் கிடந்தன.
அவன் அனுப்பிய குறுந்தகவலுக்கு அவள் பதில் போடவேயில்லை. தாய், தங்கையரின் அழைப்பைத் தட்டமாட்டாள் என்கிற நம்பிக்கை இருந்தாலும் அவளைப் பார்க்கும் வரையில் வருவாளா என்கிற அந்தப் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அவனை விட்டு அகலுவதாக இல்லை.
“என்ன தோழர், பார்வை பலமா இருக்கு?” இத்தனை காலமும் நிரோஜன் பழையபடி இல்லாமல், மகேஷ் தனியாகப் போய், சீண்டிவிட்டு விளையாட திலினி இல்லாமல், நிரோஜன் நவீன் முறுகல் நிலை என்று அவர்களின் குழு உற்சாகமிழந்திருந்தது. இன்று அதற்கு மாறாகக் காவியாவின் திருமணப் பரபரப்பும், நிரோஜனின் தேடலும் சேர, பழைய உற்சாகத்தோடு நண்பனைச் சீண்டினான் மித்ரன்.
“ஒரு காதலன் தன் காதலியை அப்படித்தான் தேடுவான். அது தெரியாதா தோழர் உங்களுக்கு?” பெரும் நாடக பாணியில் கேட்டான் நவீன்.
திலினியைப் பேச அனுப்பிய கோபத்தை இன்னுமே ஏதோ ஒரு வகையில் காட்டிக்கொண்டிருக்கும் நிரோஜன் மிகுந்த கடுப்பு அவனுக்கு. அதை இன்று காட்டினான் அவன்.
“கழட்டிவிட்ட காதலியையுமா?” கண், புருவங்களை எல்லாம் அளவுக்கதிகமாக அசைத்து மித்ரன் கேட்ட விதத்தில் அவன் முதுகிலே ஒன்றைப் போட்டுவிட்டுப் போனான் நிரோஜன்.
இத்தனை நாள்களினதும் தவிப்பைத் தாண்டியதாய் இருந்தது அன்றைய நாளின் தவிப்பு. அது எங்கே அவர்களுக்குப் புரியப்போகிறது?
கொஞ்ச நேரத்தில் திவாகர் அஜந்தாவோடு அவளும் வந்தாள். அப்படியே நின்றுவிட்டான் நிரோஜன். அவனால் அசையக்கூட முடியவில்லை. இமைக்கவும் மறந்து அவளையே பார்த்தான். இந்த ஒற்றை நொடிக்காக அவன் உறக்கம் தொலைத்த இரவுகள் எத்தனை?
நன்றாக மெலிந்திருந்தாள். மஜெந்தா வண்ணப் பட்டுச் சேலை அவள் மேனியை மிக அழகாய் அலங்கரித்திருக்க, ஷோக்கர் ஸ்டைல் நெக்லஸில் பெண்டன் அணிந்து, ஸ்ரீனிவாச கலியாண ஜூம்கா அணிந்திருந்தாள். கையிலும் அதே ஸ்ரீனிவாச கலியாணக் காப்புகள் இரண்டு சோடிகள்.
சுதந்திரமாய் விட்டிருந்த கூந்தல் கற்றைகளை பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருந்த அஜந்தாவுடன் பேசியபடியே அவள் காதோரம் ஒதுக்கிவிட்டபோது, அந்தப் பெரிய ஜும்க்கா ஆடிய ஆட்டத்தில் அவன் உள்ளம் ஆடிற்று.
இப்படி அவள் ஜும்க்கா அணிகிற பொழுதுகளில் எல்லாம் அந்தக் காதோரமாய் அவன் பதித்த காதல் முத்தங்கள் ஓராயிரம்.
ஆனால் இன்றைக்கு… ஓடிப்போய், “வா யமி… ம்க்கும் யாமினி!” என்று வரவேற்றான்.
இப்படி ஓடிவந்து, அதுவும் திவாகரும் அஜந்தாவும் பக்கத்தில் நிற்கையில் தன்னை மட்டும் வரவேற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கண நேரம் திகைத்து நின்றுவிட்டு, உதட்டளவில் மாத்திரம் புன்னகைத்து, வரவேற்பில் இருந்த திருநீறு சந்தனத்தை வைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.
போகிறவளையே திரும்பிப் பார்த்தான். அது அவனும் அவளுமாகச் சென்று எடுத்த சேலை இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஏற்கனவே அவள் அணிந்த ஒன்று. ஊமை வலியாக ஏதோ ஒன்று உள்ளே இறங்க அப்படியே நின்றான்.
அவனால் அவளைப் பின்தொடர்ந்து போக முடியவில்லை. திவாகரையும் அஜந்தாவையும் கவனிக்க வேண்டியிருந்தது.
நிரோஜனுக்கு அவர்களை எதிர்கொள்வதில் மெல்லிய சங்கடம். திவாகருக்கு இதெல்லாம் எந்தளவில் தெரியும் என்று தெரியாது. அதைவிட அன்று ‘அடுத்த கலியாணம் உங்களுக்குத்தான்’ என்று நட்புடன் அவன் சொன்னபோது, பேசாமல் நின்று அவன் முகத்தைச் சுருங்க வைத்த நிகழ்வு வேறு நினைவில் வந்துவிடவும் ஒருமாதிரியாகிப் போயிற்று. ஆனாலும் சமாளித்து இருவரையும் வரவேற்று அழைத்துப்போனான்.
கடைசியாகப் பேசும்போது கடினமுகம் காட்டியதில்
அஜந்தாவுக்கும் அவனைப் பார்த்த கணத்தில் மெல்லிய தடுமாற்றம்தான். இங்கே வரத்தான் வேண்டுமா என்றுதான் முதலில் யோசித்தாள்.
ஆனால், யாமினியும் போவதா இல்லையா என்று தடுமாறிக்கொண்டிருந்தாள். அப்படியிருக்கத் தானும் போகாமல் விட்டால் அவள் தான் மட்டும் போகவே மாட்டாள் என்று தெரியும்.
அதைவிட அவர்களின் திருமணத்திற்கு நிரோஜன் வந்ததால் தாமும் கட்டாயம் போக வேண்டும் என்று திவாகர் சொல்லியிருந்தான்.
இது எல்லாவற்றையும் விட பிரிந்தே நிற்கிற இருவரும் அதிலிருந்து வெளிவரவும் இல்லை, வேறு தேடவும் இல்லை என்கையில் மீண்டும் நடக்கிற இந்தச் சந்திப்பு எதையாவது மாற்றிவிடாதா என்கிற நப்பாசையும் அவளுள் வந்திருந்தது.
அதுதான் புறப்பட்டு வந்திருந்தாள்.
அவர்களுக்குப் பலகாரமும் தேநீரும் கொண்டுவந்து கொடுத்தான் நிரோஜன்.
யாமினியை அவன் அன்னையே தன் கைப்பிடியில் அழைத்துப்போயிருந்தார். இவனால் பக்கத்தில் போக முடியவில்லை. தைரியம் வரவில்லை. அவளை வரவேற்றதோடு வேலை இருப்பவன் போல் விலகி வந்துவிட்டாலும் தூரத்தில் இருந்து அவளையேதான் பார்த்திருந்தான்.
கண் முன்னே அவள் நின்றும் தன்னால் பேசமுடியவில்லையே என்கிற ஒரு சோகம் உள்ளே இழையோடினாலும் அவள் பேசுவதை, சிரிப்பதை, காதோரம் முடியை ஒதுக்குவதை, சேலையை அவ்வப்போது சரி செய்வதை என்று அவளின் சின்ன சின்ன அசைவுகள் ஒவ்வொன்றையும் கொஞ்சம் கூட மிச்சம் விடாமல் தன் மனத்துக்குள் பொத்திக்கொண்டான்.
அவள் நடையைக் கவனித்தான். பழையபடி இருந்தது. கால் சரியாகிவிட்டது என்று ஆறுதல் கொண்டான்.
தன் புறம் ஒரு முறையாவது பார்க்க மாட்டாளா, பார்வையால் கூட எப்படி இருக்கிறான் என்று கேட்க மாட்டாளா என்று ஓராயிரம் தவிப்பு.
எல்லாம் சரியாக நடந்திருக்க இன்று உரிமையாகப் பக்கத்தில் நிறுத்தியிருப்பான். காவியாவின் திருமணம் முடிந்த கையோடு தன் எதிர்காலம் என்று அவளைத் தன் குடும்பத்தினருக்கு காட்டியிருப்பானே.
மல்லிகாவோடு அவள் மணப்பெண்ணின் அறைக்குப் போவது தெரிந்தது. பின்னாலேயே அவளுக்கான பலகாரத் தட்டோடு அவனும் போனான்.
“இந்தா உனக்குத்தான்.” என்று அவளிடம் நீட்டினான். அவனைப் பாராமல் வாங்கிக்கொண்டாள் அவள். தங்கையைப் பார்த்தான். மிக அழகாய் இருந்தாள். அந்தளவில் மிகையில்லாமல் அவளுக்கு அலங்காரம் செய்துகொண்டிருந்தார்கள் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்ய வந்த பெண்கள். “உங்களை அரேஞ்ச் பண்ணித் தந்தது இவாதான்.” என்று யாமினியைக் காட்டி அந்தப் பெண்களிடம் சொன்னான்.
“ஓ! தேங்க்ஸ் சிஸ்!” என்றாள் அதில் ஒருத்தி.
அடுத்து… அவனுக்கு அங்கே நிறைய நேரம் நிற்க முடியாது. வேகமாக யோசித்து, “என்னோட ஒருக்கா வா!” என்றான் துணிந்து.
யாமினிக்கு மெய்யாகவே என்ன செய்வது என்று தெரியவில்லை. காவியா, அவளுக்கு அலங்காரம் செய்யும் பெண்கள் முன்னே ஒன்றும் சொல்ல முடியாமல் எழுந்து அவனோடு வந்தாள்.
வெளியே வந்ததும், “எப்பிடி இருக்கிறாய்?” என்றான் குரல் கமற.
ஒரு முறை அவன் பார்வையைச் சந்தித்துவிட்டு நன்றாக இருக்கிறேன் என்பதுபோல் தலையை அசைத்தாள் அவள்.
“பிறகு ஏன் இப்பிடி மெலிஞ்சிருக்கிறாய்?” என்றதும் இலேசாக அவள் முகம் மாறிற்று.

