அத்தியாயம் 34
அடுத்த மூன்று நாள்களும் மின்னலாக விரைந்து மறைந்திருந்தன. திருமணத்திற்கு வந்து தங்கிய உறவினர்களை, திருமணத்தன்று வராமல் இருந்து அடுத்தடுத்த நாள்கள் வந்தவர்களைக் கவனிக்க, கோயில்குளம், உறவினர் வீடுகளுக்குப் போய்வர என்று அந்த மூன்று நாள்களும் மணமக்களோடே நிரோஜனுக்குக் கழிந்துபோயிற்று.
அவர்கள் இருக்கும் அந்த வீட்டினைத்தான் காவியாவுக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தார்கள். தற்போதைக்கு அவர்களை மாடியில் தனியாகக் குடி வைப்பதாக ஏற்பாடு.
முதலில் சமைக்கும் வசதி அங்கு இருக்கவில்லை. இப்போது சமையற்கட்டு, அதற்குண்டான பொருள்கள், புதிதான வீட்டுத் தளபாடங்கள் என்று அனைத்தையும் ஒழுங்கு செய்து, புதுத் தம்பதியினரைக் குடி வைத்து என்று அனைத்தையும் பார்த்து முடிக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.
ஆனாலும் காவியாவின் திருமணம் நடந்த அன்று இரவே வீட்டுக்கு வந்ததும் அவளுக்கு அழைத்திருந்தான் நிரோஜன். அஜந்தா சொன்னவற்றைக் கேட்டதிலிருந்து அவனால் அமைதியாக இருக்கவே முடியவில்லை.
என்ன வேலை பார்த்தாலும் யாமினி நெஞ்சு முழுக்க நிறைந்து நின்று அவனை அழுத்திக்கொண்டிருந்தாள். அவளோடு பேசி, ஆறுதல் சொல்லி, உனக்கு நானிருக்கிறேன் என்று காட்டிவிடும் உத்வேகம்.
திருமண நாள் நெருங்க ஆரம்பித்ததிலிருந்தே அவளோடு எப்படியாவது பேசிவிட வேண்டும், தன்னை உணர்த்திவிட வேண்டும் என்கிற முடிவோடுதான் இருந்தான். ஆனாலும் கூட தன் முகம் பார்த்துப் பேசுவாளா, தான் சொல்வதைக் கேட்பாளா, சமாதானமாகுவாளா என்று தயக்கமும் தடுமாற்றமும் கூடவேயிருந்தன.
ஆனால் இப்போது அது எதுவும் இல்லை. அவள் எவ்வளவு கோபப்பட்டாலும் பரவாயில்லை, எந்தளவு தூரம் தன்னைத் தள்ளி வைத்தாலும் பரவாயில்லை, உனக்கு நான் இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்திவிடுவதில் மிகுந்த உறுதியோடு இருந்தான்.
அஜந்தா சொன்னவை அந்தளவில் அவனுக்குள் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பி, கூட இருந்திருக்க வேண்டிய நேரத்தில் தனியாக விட்டுவிட்டோமே என்று அழுத்தி, என்ன நடந்தாலும் பரவாயில்லை, இனி விடுவதில்லை என்கிற முடிவிற்கு அவனை இழுத்து வந்திருந்தது.
மூன்று முறை அவன் அழைத்தும் அவள் ஏற்கவில்லை. பொழுது வேறு நடுச்சாமம் என்பதில் புலனம் சென்று, “யமிம்மா, நடந்த எல்லாத்துக்கும் சொறியடி. நான் கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கலாம். நீ சொன்ன மாதிரி நிதானமா இருந்து, பிரச்சனைகளைப் பேசித் தீத்திருக்கலாம். விட்டுட்டன். அதுக்காக உன்னை மொத்தமா விட்டுடுவன் எண்டு நினைக்காத. நீ என்ர யமிதான்.” என்று, மண்டபத்துக்கு வெளியே வைத்து அவள் சொன்ன ‘நான் யாமினி’ என்பதற்கும் சேர்த்துப் பதில் சொல்லி அனுப்பிவிட்டுக் காத்திருந்தான்.
அவள் பதில் போடவில்லை.
அடுத்த நாள் காலையிலேயே எழுந்து மறுபடியும் அவளுக்கு அழைக்க முயன்றபோது அழைப்புப் போகவில்லை. அவனைத் தடை செய்திருந்தாள்.
அவன் செய்ததை அவனுக்கே திருப்பிச் செய்கிறாள். அந்த நிலையிலும் அவன் உதட்டில் வேதனையுடன் கூடிய சிறு புன்னகை. கூடவே இப்படிக் கோபத்தைக் காட்டியாவது தன் மன அழுத்தத்தை அவள் குறைத்துக்கொள்ளட்டும் என்று நினைத்தான்.
அவன் நினைத்திருந்தால் காவியா மூலமோ மல்லிகா மூலமோ அவளுக்கு அழைத்து, குறைந்தபட்சமாக அவள் முகத்தையாவது பார்த்திருக்கலாம். முதல்முறை அது நடக்கும். அதுவே அடுத்த தடவைகள் இவர்கள் அழைக்கையில் அவள் அழைப்பை ஏற்க யோசிப்பாள். இல்லை தவிர்க்கலாம். அது இவர்களுக்கு அவள் பற்றிய சிறு குறையை மனத்தில் விதைக்கும். தன் வீட்டுக்கு வரப்போகிற அவளை அந்த நிலையில் நிறுத்த அவனுக்கு விருப்பமில்லை.
மல்லிகா அம்மாவும் மகளையும் மருமகனையும் சிறு குறையில்லாமல் கவனித்தாலும் மகனையும் அவதானித்துக்கொண்டுதான் இருந்தார். யாமினி வந்து போனதிலிருந்து அவன் அவனாகவே இல்லை என்று அப்படியே தெரிந்தது.
நான்காம் நாள் கொழும்பு புறப்பட்டுக்கொண்டிருந்தவனின் அறைக்கு வந்தார் மல்லிகா.
“யாமினிய உனக்குப் பிடிக்குமா தம்பி?”
நேரடியாக வந்த அவர் கேள்வியில் அவன் கொஞ்சம் அதிர்ந்துதான் போனான்.
“அவாவை உனக்குக் கலியாணத்துக்குக் கேப்பமா?”
தொடர் குண்டுகளாக வீசும் அன்னையைக் கண்டு அவன் முறுவலித்தான்.
“என்ன திடீரெண்டு?”
அவன் மறுக்கவில்லை என்பதைக் குறித்துக்கொண்டு, “இனி உன்ர கலியாணம்தானே.” என்றார் அவர்.
“அதுக்கு ஏன் அவள்?”
“ஏன், அவாக்கு என்ன குறை?”
“குறை எண்டு எங்க சொன்னனான்?”
“அஜந்தாவும்தான் உனக்கு ஃபிரெண்ட். அவாவை நீ அவள் இவள் எண்டு கதைக்கிறேல்லையே.”
ஒருகணம் தடுமாறினாலும், “இந்தக் காலத்தில இதெல்லாம் ஒரு விசயமாம்மா.” என்று சமாளித்தான் அவன்.
“அப்ப இப்பவும் எதையும் மனம் விட்டுக் கதைக்க நீ ரெடியா இல்லை என்ன?” என்றார் கோபத்துடன்.
ஒன்றும் சொல்லாமல் ஒரு மாதத்துக்கும் மேலே இங்கே நின்றுவிட்டதில் தன் உடைகளை ட்ராவலிங் பாக்கினுள் அடைய ஆரம்பித்தான் அவன்.
“தம்பி, எல்லா நேரமும் இப்பிடிப் பேசாமயே இருக்கலாம் எண்டு நினைக்கிறேல்ல. பதில் வேணும். நீ என்ன எண்டு சொன்னாத்தான் அப்பாவோட கதைச்சு, அப்பா மூலம் அவான்ர வீட்டில கதைக்கலாம்.” என்று கொஞ்சம் அதட்டிச் சொன்னார் அவர்.
அவனுக்கு மனம் கனிந்துபோயிற்று. அன்று தான் முற்றிலுமாக உடைந்துபோயிருந்த நிலையில், ஒன்றையும் உருப்படியாகச் சொல்லாமல் அவரைக் கலங்கடித்ததில் இருந்து, அவ்வப்போது அவன் வாயைப் பிடுங்க முயன்றாலும் தன்னால் இயன்றவரையில் அவனுக்காக அனைத்தையும் செய்கிறவரின் ஏமாற்றம் அவனையும் தாக்க, “அம்மா!” என்றபடி அவரை அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்தான்.
அவர் காலடியில் தான் அமர்ந்து, “என்ன கோவம் இப்ப உங்களுக்கு?” என்றான் சின்ன புன்னகையோடு.
“என்னத்துக்கு எண்டு உனக்குத் தெரியாது? இத நான் நம்போணும். போடா!” என்றார், தான் இத்தனை தூரம் கேட்டும் மனம் திறக்கிறான் இல்லையே என்கிற ஆதங்கத்தில்.
“இப்பதானேம்மா கவின்ர கலியாணம் முடிஞ்சிருக்கு. கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருங்கோ. உங்கட மகள் குடும்பம் நடத்திற வடிவப் பாத்து ரசிங்கோ. அதுக்குப் பிறகு எனக்குப் பாக்கலாம். சரியா?” என்று அவர் கன்னம் தட்டிச் சொல்லிவிட்டு எழுந்துகொண்டான்.
அவள் மனத்தைத் தான் நோகடித்துவிட்டு அன்னை மூலம் கலியாணத்திற்குக் கேட்க அவனுக்கு விருப்பமில்லை. அது அவள் உணர்வுகளைத் தான் மதிக்காமல் நடப்பதுபோலாகிவிடும் என்று எண்ணினான்.
இரு வீட்டிலும் மறுப்பிருக்கப் போவதில்லை. அது நன்றாகவே தெரியும். அவர்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக்கொண்டது அவர்கள் இருவர் மட்டுமே. அதில் தாமே சீராக்கிக்கொண்டு வீட்டில் சொல்லவே பிரியப்பட்டான்.
அதில் கொழும்பு வந்த அடுத்த நாளே அஜந்தாவுக்கு அழைத்து, இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தவற்றை எல்லாம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ஆனந்தனுக்கு அழைத்தான்.
*****
கற்கண்டு ஐயாவின் இறப்பு நடந்த நேரம் ஆனந்தன் வீட்டுப் பெண்கள் மூவருமே இடிந்துபோயிருந்தார்கள். ஏன் அவனும் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அதில் அடுத்தடுத்த காரியங்களைச் செய்யவேண்டிய பொறுப்பிற்கு அவன் தள்ளப்பட்டிருக்க, எதையும் நிறுத்தி நிதானித்துக் கவனிக்கும் நிலையில் அவன் இருக்கவிலை.
அதனாலேயே யாமினியின் நண்பர்கள் என்று ஒரு கும்பல் வந்து நின்று அவனுக்கு உதவியாக நின்றுவிட்டுப் போனது கருத்தில் பதிந்திருந்தாலும், அதன் ஆழம் சென்று அவன் யோசிக்கவில்லை.
நல்ல நண்பர்கள், தக்க நேரத்தில் கை கொடுத்திருந்தார்கள் என்று நல்ல எண்ணம் மட்டுமே இருந்தது.
நரேனைத் திருமணத்திற்குப் பேசி, அது குழம்பியபோதுதான் யாமினியின் நண்பர்களைப் பற்றி முறையாக தெரிந்துகொள்ள நினைத்தான்.
அதன்போது அவர்கள் இயல்பாக இல்லை, அப்படிக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள் என்று அவனால் உணர முடிந்திருந்தது. அதுவும் கடைசியாக வந்த நிரோஜன், இறப்பு வீட்டில் மற்றவர்களைக் காட்டிலும் பொறுப்பாக நின்று எடுத்துச் செய்தவனாக இல்லை.

