ஒரு கணம் அப்படியே அமர்ந்திருந்தவள் ஓடிப்போய் அவன் முன்னே நின்றாள். “நான் அந்த அர்த்தத்தில் சொல்லேல்ல.” என்றாள் கண்ணீருடன்.
“வேற என்ன அர்த்தம் யமி? உனக்கு இன்னும் என்னில கோவம் இருக்கு எண்டு சொன்னா கூட அது வேற. ஆனா நம்பிக்கை இல்லாட்டி… கதைக்கிறதில அர்த்தமே இல்ல. நான்தான்… லூசு மாதிரி!” என்றுவிட்டு அவன் விலகி நடக்க, திரும்பவும் ஓடிப்போய் அவன் முன்னே நின்றாள்.
“நிரோ ப்ளீஸ். எனக்கு என்னிலதான் நம்பிக்கை இல்லை.” என்றவளை நம்பாமல் பார்த்தான் அவன்.
“அது… ஒரு காலம் எதிர்காலத்தப் பற்றி யோசிச்சாலே சந்தோசமான கற்பனைகள்தான் வரும். அப்ப எல்லாம் நான் இந்தளவுக்கு மனதளவில பலவீனமானவளா இருந்ததே இல்ல. அப்பிடி இருந்தும் அப்பா போனதும் என்னென்னவோ எல்லாம் நினைச்சு, பயந்து, அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு எண்டு நான் உங்களுக்குச் செய்ததும் நிறைய. அப்பிடி இருக்க இப்ப எல்லாம் எதைப் பற்றி யோசிச்சாலும் அப்பிடி நடந்திடுமோ, இப்பிடி நடந்திடுமோ எண்டு எல்லாமே எதிர்மறையாத்தான் வருது. பயமா இருக்கு. நித்திரையே வராது. எதையும் யோசிக்கக் கூடாது எண்டு நினைச்சாலும் என்னை மீறி நிறைய யோசிக்கிறன். இப்பிடி இருக்கிற நான் திரும்பவும் அதே பிழைய செய்திடுவனோ எண்டு பயமா இருக்கு நிரோ. அதுக்குப் பிரிஞ்சது பிரிஞ்சதாவே…” என்றவளை மேலே பேச விடவில்லை அவன்.
ஒரு கரத்தினால் அவளின் இடையை வளைத்துத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, அவளது நடுங்கும் உதடுகளின் மேலே தன் ஒற்றை விரலை வைத்துப் பேச்சை நிறுத்தினான்.
அவன் என்னவோ அவனை இன்னும் தள்ளி வைத்திருக்கிறாள் என்று கோபப்பட்டுக்கொண்டிருக்க, அந்தப் பைத்தியக்காரி அவளை அவளே அவனிடமிருந்து தள்ளிவைத்திருந்திருக்கிறாள்.
பொறுக்க முடியாமல், “அறிவு கெட்டவளே! உனக்குத் தேவை காசோ, சொத்தோ, வெளிநாடோ இல்ல. நான்! என்னை உனக்குப் பக்கத்தில விடு. தைரியம் உனக்குத் தானா வந்திடும்! இல்லையோ கடைசிவரைக்கும் இப்பிடியேதான் இருப்பாய்.” என்றான் ஆத்திரமாக.
அவள் கண்ணீருடன் பார்க்க கன்னம் தட்டியவனுக்கு இப்போது கோபப்படக்கூட முடியவில்லை. “இந்தளவு பயம் வேண்டாம் யமி. நாங்க ரெண்டு பேரும் செய்த பிழைகளுக்குப் பட்ட துன்பம் எல்லாம் போதும். எதிர்காலம் என்ன வச்சிருக்கு எண்டு எங்களுக்குத் தெரியாது. அதுக்காக ஏதேதோ நடந்துரும் எண்டு நினைச்சு இருக்கிற வாழ்க்கையை அழிச்சிடாத. விளங்குதா?” என்று அவன் கேட்டபோது கண்ணீருடன் ஆம் என்று தலையசைத்தாலும்,
“திரும்பவும் என்னை விட்டுட மாட்டீங்கதானே நிரோ. இன்னொருக்கா உங்களைப் பிரியிற தைரியம் எனக்கு இல்லை. அப்படி ஒன்று நடந்தா சத்தியமா நான் உயிரோ…” என்றவளை இந்த முறை விரல்களுக்குப் பதிலாகத் தன் உதடுகள் கொண்டு பேசவிடாமல் செய்தான் அவன்.
என்ன உளறுகிறாள் என்று அவ்வளவு கோபம். ஆனால் அவள் இதழ்கள் சேர்ந்த நொடியில் அந்தக் கோபத்தை அவன் மறந்துபோனான். அவன் உணர்வுகளும் தளம்பின. கண்ணீர் பெருகிற்று. இத்தனை நாள் பிரிவை, அந்தப் பிரிவில் தான் அனுபவித்த துயரை ஆழ்ந்த முத்தத்தில் சொன்னான்.
யாமினி இதை எதிர்பார்க்கவில்லை. முதலில் பொது இடத்தில் நின்று என்ன செய்கிறான் என்கிற இயல்பான பதற்றத்தோடு விலக முயன்றபோது அவன் விடவில்லை. அவள் இதழ்களை விட்டுவிட்டு அவன் முறைக்கவும் அவளுக்குக் கன்னங்கள் சூடேறின.
“இது ஜெர்மன்!” என்றுவிட்டு அவன் அவள் இதழ்களை மீண்டும் அணைக்க, ‘அதுக்கு?’ என்று எழுந்த கேள்வி எழுந்த வேகத்திலேயே மறைந்துபோயிற்று.
இன்னும் அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்து, அவன் தந்த ஆழ்ந்த ஆழமான அந்தத் தீண்டுதலில் இருந்த காதலிலும் கனிவிலும் கண்ணீரோடு அவனோடு ஒன்றிப்போனாள்.
அவள் நெற்றியிலும் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்துவிட்டு, “இனி உன்னை விட்டுப் போற ஐடியாவே எனக்கு இல்ல யமி. ரெண்டுபேரும் சேந்துதான் ஊருக்குப் போறம். போனதும் கலியாணம். சண்டை சச்சரவு போதுமான அளவு வரும்தான். அதையும் கடந்து சந்தோசமா வாழுவம் சரியா?” என்றவனின் குரலில் இருந்த கம்பீரமும் ஆழமும் அவள் இதயத்தில் இருந்த அத்தனை பாரங்களையும் ஒரு நொடியில் இறக்கிவைத்தன.
பயங்கள் கரைந்து, புதுத் தெம்பு உடலில் பாய, தன் கரங்களால் அவனது இடுப்பைச் சுற்றி இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் யாமினி. அந்தப் பச்சைப் புல்வெளியில், சுற்றியுள்ள எதைப் பற்றியும் கவலைப்படாமல், தங்களை மட்டுமே உலகமாக நினைத்து நின்ற அந்தத் தருணம், அவர்களின் நீண்ட நாள் வலிக்குப் பரிசாக அமைந்தது.
அவளுக்கு விலக மனமேயில்லை. எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவன் மார்பு கிடைத்திருக்கிறது. அவன் இதயம், அதன் துடிப்பை, அவன் அணைப்பு, அது தரும் பாதுகாப்பு, கதகதப்பு என்று இந்த ஒற்றை நிமிடத்திற்காய் அவள் அனுபவித்ததை எத்தனை துன்பங்கள். இத்தனை வருடங்களும் தலையணைக்குக் காணிக்கையாக்கிய கண்ணீரை இப்போது அவன் மார்ப்புக்குப் பரிசளித்தாள்.
அவளை இப்படித் தன் கைகளுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்றுதானே இத்தனை வருடங்கள் காத்திருந்து, அவ்வளவு தூரம் ஆவான் பயணித்து வந்ததும். ஆத்திரமாக அவளை அணைத்தபடி அவள் உச்சியில் உதட்டைப் பதித்துக் கண்களை மூடிக்கொண்டான்.
கடந்தவை நொடிகளா, நிமிடங்களா இருவருக்குமே தெரியாது. அவன் நிமிர்ந்தபோது அவளும் மார்பிலிருந்து முகம் நிமிர்த்தி அவனைப் பார்த்தாள்.
“என்ன?” என்றான் அவன் சின்ன புன்னகையுடன்.
“கிட்ட வாங்க!” என்றாள் தலையையும் அசைத்து. முறுவல் விரிய அவள் முகத்தருகே தன் முகத்தை அவன் கொண்டுபோக, இலேசாக எம்பி அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ்களைப் பதித்துவிட்டு, “தேங்க்ஸ்! இந்தளவு தூரம் என்னை தேடி வந்ததுக்கு.” என்று புன்னகையாகச் சொல்ல முயன்றாலும் கண்கள் கலங்கின அவளுக்கு.
“தேடி வராம? இஞ்சயே இரு எண்டு உன்னை விட்டுட்டு இருப்பன் எண்டு நினைச்சியோ!” என்று அவள் நெற்றி முட்டினாலும் அவன் குரலும் கரகரத்துப்போயிற்று.
“அசோகன் அண்ணாட்ட வேற அவரை விட நாலு பிள்ளை கூடுதலா பெத்துக் காட்டுறன் எண்டு சவால் எல்லாம் விட்டிருக்கிறன்.” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் அவள்.
அவள் இருக்கும்போதே அவருக்கு இரண்டு. இதில் நான்கு அதிகமாகப் பெறப்போகிறானாம்.
அவள் முகம் பார்த்துச் சத்தமாகச் சிரித்தான் அவன். தன்னால் முறுவல் அரும்ப அவனையே பார்த்தவள், “நான் காஞ்சு கருவாடாகிப்போய் இருக்கிறன். ஆனா நீங்க இன்னும் அதே வடிவோட கண்ணை பறிக்கிறீங்க நிரோ!” என்று விளையாட்டாய் சொல்ல வந்தாலும் அவள் கண்களில் கண்ணீர் கோத்துப்போயிற்று.
அவள் சொன்னது உண்மைதான். அந்தளவில் கோலம் கெட்டிருந்தாள் அவள். ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “நீ காஞ்சு கருவாடா இருக்கிறியா, இல்ல, கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கிறியா எண்டு நான் சொல்லோணும்!” என்றான் அவன் விஷம சிரிப்புடன்
அவளுக்குக் குப்பென்று முகம் சிவந்துபோயிற்று. அவனை விட்டு விலகப்போனவள் அவனிலேயே தன்னை மறைத்துக்கொண்டு, “நிரோ!” என்றாள் அதட்டலாக.
அவன் கண்ணைச் சிமிட்டிவிட்டுச் சத்தமாகச் சிரித்தான்.

