“யமி ப்ளீஸ்! கோவத்துல எதையாவது கதைக்கோணும் எண்டு கதைக்காத. நானும் எந்தப் பிழையும் செய்யேல்ல. அதோட நடந்த சண்டைல நான் காயப்படேல்ல எண்டு சொல்லுறியா? இல்லை உன்ன கத்திப்போட்டு நான் சந்தோசமா இருந்திருப்பன் எண்டு நினைக்கிறியா?”
அவள் ஒன்றும் சொல்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவன் சொல்வது எல்லாம் சரிதான். நியாயமே இல்லாமல் அவள் காயப்பட்டது காயப்பட்டதுதானே. அந்த ஆதங்கம் போகேன் என்றது.
அதைவிட அந்தத் திலினியிடம் இருந்து எதற்கும் விலகி இரு என்று சொல்ல நினைத்தாள். தயக்கம் தடுத்தது. திரும்பவும் ஒரு சண்டை வந்துவிடுமோ என்று பயம்.
“வெளில போவமா?”
“…”
“ஏதாவது சமச்சியா?”
“…”
“பசிக்குதடி!”
அவள் எழ முயல, “ஒண்டும் வேண்டாம். வா வெளில போவம்.” என்றான் அவன், அவள் கரம் பற்றி எழவிடாமல் செய்துகொண்டே.
“இல்ல எனக்கு மூட் இல்ல.”
“என்ன மூட் வேணும் உனக்கு? வெளிக்கிடு போவம்.” என்று பிடிவாதமாக அவளை அழைத்துக்கொண்டு போனான்.
கடற்கரைக்கு எதிரில் அமைந்திருந்த உணவகத்திற்கு அழைத்து வந்திருந்தான் அவன். அதன் மொட்டை மாடியில் மேசை நாற்காலிகள் அழகுற போடப்பட்டிருந்தன.
தடுப்புச் சுவரோரமாக இருந்த மேசை ஒன்றில் எதிரெதிரே சென்று அமர்ந்துகொண்டார்கள். யாமினி அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தாள். எங்கிருந்தோ மெல்லிசை ஒன்று இனிமையாய்க் கசிந்துவர, நேரெதிரில் தெரிந்த கடற்கரையும், தேகம் தழுவிப்போன கடற்காற்றும் மனத்தை மயக்கின.
ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த குழல் விளக்குகள் மெல்லிய வெளிச்சத்தைக் கக்கிக்கொண்டிருந்தாலும் இளம் சிவப்பில் மின்னிக்கொண்டிருந்த வெயிலற்ற வானம் தந்த அழகும் வெளிச்சமும் ஒருவகை மோனத்தில் ஆழ்த்தின.
அவளும் இதே கொழும்பில்தான் இருக்கிறாள். ஆனால், அவன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணவகத்திற்கு அழைத்துவருகையில் அவளால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை.
இப்போதும் உள்ளூர வியந்தபடி அவனைப் பார்த்தாள். அதற்காகவே காத்திருந்தாற்போல், “எப்பிடி இருக்கு?” என்றான் நிரோஜன்.
நன்றாக இருக்கிறது என்பதுபோல் தலையை அசைத்தாள் யாமினி. இன்னுமே அவள் வழமைக்குத் திரும்பவில்லை. சின்ன மனச்சினுக்கம் மிச்சமாய் இருந்தது.
அவளுக்கு என்ன பிடிக்கும் என்று தெரியுமாதலால் அவளுக்கும் சேர்த்து அவனே ஆர்டர் கொடுத்தான். உணவும் வந்தது. “சாப்பிடு!” என்று அவளுடையதை அவள் புறம் நகர்த்தி வைத்தான். இருவருமாகச் சாப்பிட்டனர்.
கொஞ்ச நேரம் அவள் பாட்டுக்கே விட்டுப்பார்த்தான் நிரோஜன். அவள் தன் மௌனம் கலைவதாக இல்லை என்றதும், மேசையில் இருந்த அவள் கரத்தைப் பற்றினான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் தன் கரத்தை மற்றவர்கள் கவனத்தைக் கவறா வண்ணம் விடுவித்துக்கொள்ள முயன்றாள். அதற்கு விடாமல் தடுத்தபடி, “யமி!” என்றான் அவன் சற்றே அழுத்தி.
அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
“என்ன?”
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டுப் பார்வையைத் தளைத்துக்கொண்டாள்.
“யமி! என்ர பக்கத்தில இருந்து இன்னும் என்ன எதிர்பாக்க்கிறாய்? சொறி சொல்லியாச்சு. நடந்துக்கான விளக்கம் சொல்லியாச்சு. இன்னும் என்ன வேணும் உனக்கு?” என்றான் அவன்.
அவளுக்கும் தெரியவில்லை. இப்போது யோசிக்கையில் அவன் பக்கமும் தவறில்லை என்று விளங்கிற்று. ஆனாலும் மனம் சுருண்டு கிடந்தது.
“விடிய கேட்டியே, இதே மாதிரி நீ இன்னொருத்தனோட திரிஞ்சா எனக்கு எப்பிடி இருக்கும் எண்டு. சத்தியமா என்னால அதை ஜீரணிக்கேலாதுதான். எரிச்சலா இருக்கும்தான். அதுக்காக உன்னட்டக் கோவப்பட்டிருக்க மாட்டான். என்ன நடந்தது, ஏன் இப்பிடி நீ போகவேண்டி வந்தது எண்டு கேட்டிருப்பன். உன்னை மாதிரிக் கோவப்பட்டிருக்க மாட்டன்.” என்றவனை நம்பாமல் பார்த்தாள்,
“உண்மையாத்தான் சொல்லுறன். நீ கோவப்படுறாய் எண்டா என்ன அர்த்தம்? தெரிஞ்சே அதை நான் செய்திருக்கிறன் எண்டுறதுதானே. அப்ப உன்ர நிரோ இப்பிடி இன்னொரு பெட்டையோட தெரிஞ்சே திரிவான் எண்டு நினைக்கிறியா நீ? எனக்கு அந்தக் கோபம். அதுதான் நீ சந்தேகப்படுறியோ எண்டு கேக்க வச்சது. விடிய விளக்கம் சொல்லியாச்சு, நீயும் அவசரப்பட்டு கோவப்பட்டுட்டாய் எண்டு என்னை நானே சமாதானம் செய்துகொண்டிருக்க, பிறகும் திலினிட்ட நான்தான் சொல்லியிருக்கிறன் எண்டு நீயே முடிவு கட்டி கோபப்படுறாய். அது காணாது எண்டு நானும் அவளும் ஒட்டிக்கொண்டு திரிஞ்சதுக்கு உனக்கு கெட்ட பெயர் எண்டு திரும்பவும் சொல்லுறாய். அப்ப எனக்கு எப்பிடி இருக்கும்?”
அவளுக்கு வாயடைத்த நிலை. அவன் பக்கமிருந்து இப்படி ஒரு நியாயம் இருக்கும் என்று யோசிக்கவில்லை. ஆனாலும், அவன் அவளைக் குற்றம் சாட்டுவதுபோலிருக்க, “இப்ப என்ன, நான் கேட்டது, கதைச்சதுதான் பிழை எண்டு சொல்லுறீங்களா?” என்று கேட்டாள்.
“இல்ல. அதை நீ கொஞ்சம் நிதானமா கேட்டிருக்கலாம். அப்பிடி நான் அவளோட போவனா, அவளிட்ட போய் எல்லாத்தையும் சொல்லுவனா எண்டு யோசிச்சிருக்கலாம்.”
“இப்ப நீங்க சொல்லுறதைக் கேக்க எனக்கும் அப்பிடித்தான் இருக்கு. ஆனா…” என்றவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இப்போது அறிவால் யோசிக்கிறார்கள். அந்த நேரத்தில் கொந்தளித்தது அவள் உணர்வுகள். என்னுடையவன் இன்னொருத்தியோடு இப்படி இருப்பானா என்கிற கோபம். இப்போது கூட அந்தப் புகைப்படத்தை இன்னொரு முறை அவளால் பார்க்க முடியும் என்கிற நம்பிக்கை இல்லை.
அதை எப்படி அவனிடம் சொல்லி விளங்க வைப்பது என்று தெரியாமல் அவன் புறம் திரும்பி, “நீங்க சொன்னீங்களே, இதே மாதிரி நான் நடந்து, அதைப் பாக்கிற நிலம வந்தா நீங்க எப்பிடி நடப்பீங்க எண்டு. கடைசி வந்தாலும் அந்தளவு நிதானமா நடந்தே இருக்க மாட்டீங்க. நீங்க சொன்ன அந்தப் பதில், அப்பிடி ஒண்டு நடந்தா எப்பிடி ரியாக்ட் பண்ணுவீங்க எண்டு மூளையால யோசிச்சுச் சொன்னது. ஆனா எனக்கு, தலைல இடி விழுந்த மாதிரி அந்த ஃபோட்டோவ பாத்த நேரம் இருந்தது. என்னால யோசிக்கக் கூட ஏலாம இருந்தது. இதை எப்பிடி உங்களுக்கு விளங்கப்படுத்திறது எண்டு கூட எனக்குத் தெரியேல்ல.” எனும்போதே அவள் கரம் பற்றி அழுத்தி, “எனக்கு விளங்குது. இனி இப்பிடி ஒரு நிலை உனக்கு வரவே வராது யமி. என்னை நம்பு ப்ளீஸ்.” என்றான் இரைஞ்சலாக.
“உங்களை நம்பாம வேற ஆரை நான் நம்ப நிரோ?” என்றவளுக்கு விழிகள் கலங்கிக்கொண்டு வரவும் கடற்கரை பக்கமாகப் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
அவளையே சில கணங்களுக்குப் பார்த்தவன் எழுந்து வந்து அவள் பக்கம் அமர்ந்தான்.
திரும்பிப் பார்த்தவளின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு, “ஸ்மைல் ப்ளீஸ்!” என்றான் ஆட்காட்டி விரலையும் கட்டை விரலையும் தன் தாடையருகே விரித்துக் காட்டி.
“என்ர லிமிட்ஸ் எனக்குத் தெரியும் எண்டு சொன்னீங்க.”
“ஆரம்பிச்சிட்டாள்.”
“என்ன ஆரம்பிச்சிட்டாள்?”
“அடியேய்!”
“லேசுப்பட்ட ஆள் இல்ல நிரோ நீங்க. கோபம் வந்தா எப்பிடியும் தூக்கி எரிஞ்சு கதைப்பீங்க என்ன?”
“விடும்மா ப்ளீஸ்!” என்று தன் தட்டில் இருந்த உணவை கரண்டியால் அள்ளி அவள் உதட்டருகில் நீட்டினான்.
அவள் மனநிலை அப்படியே மாறிற்று. ‘கள்ளன்! சமாளிக்கப்பாக்கிறான். ஏமாந்திடாத!’ என்று உள்ளே ஓடினாலும் உள்ளம் தடுமாறுவதை அவளால் தவிர்க்க முடியாமல் போயிற்று. அவள் உதடுகளைத் திறந்து அதை வாங்க முயல்கையில் தன் வாயில் போட்டுக்கொண்டு சிரித்தான் அவன்.
“உங்கள!” அவள் படு பயங்கரமாக முறைத்தாள். “ச்சும்மா!” தன் தலையால் அவள் தலையில் இலேசாக முட்டிவிட்டுச் சிரித்தான் அவன்.
அவள் உள்ளம் மயங்கிற்று. அவனையே பார்த்தாள். அந்தச் சுருண்ட குழல்களும் சிரிக்கும் கண்களும் அவளுள் மாயம் புரிந்தன. அவன் திரும்பவும் அவளுக்கு நீட்டினான். அவள் அவனை முறைத்தாள்.
எங்கட செல்லம் ஆ காட்டுங்கடி என்றான் அவன் கொஞ்சலாக.
சிரித்துவிட்டாள் யாமினி. “நீங்க இருக்கிறீங்கதானே. ஆனா இந்த முறையும் ஏமாத்தினீங்களோ, கொள்ளுவன் உங்களை!” என்று அவள் வாயைத் திறந்து வாங்க வர, கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு சிரித்தான் அவன். அவள் விடவில்லை. அவன் கரம் பற்றி வாங்கிக்கொண்டு அவனை மிதப்பாகப் பார்த்தாள்.
“பார்ர்ரா பார்வைய!” என்று சிரித்தான் அவன்.
அதன் பிறகுதான் அவள் உள்ளத்தில் இருந்த பாரமும் நீங்கிற்று. உணவை முடித்தபிறகும் அங்கிருந்து அவர்கள் எழுந்துகொள்ளவில்லை. இலேசாய் அவனின் ஒரு பக்கத் தோளில் சாய்ந்தபடி, கவிந்துவரும் இருளையும் கடலின் அந்தப் பக்கமாக ஒளிந்துகொள்ளும் சூரியனையும், அலையடிக்கும் அழகையும் பார்த்து ரசித்தாள் யாமினி.

