நீ வந்து தங்கிய நெஞ்சில் 7.2

“இப்ப என்னதான் செய்றது?” என்று அவளிடமே கேட்டான் அவன்.

அவளுக்கும் புரியவில்லை.

“கலியாணச் செலவுக்கு காசு ரெடியா இருக்கா?” அவள் அடுத்த பிரச்சனைக்குத் தாவினாள்.

“இல்லாம அப்பா கவின்ர கலியாணத்த ஆரம்பிச்சிருக்க மாட்டார் யமி.” என்றவனை அதிருப்தியாய்ப் பார்த்தாள் யாமினி

“என்ன?”

“இப்பிடிப் பொறுப்பில்லாம இருக்காதீங்க நிரோ.”

பொறுப்பில்லை என்று அவள் சொன்னது அவனைக் கோபப்படுத்தியது. “இப்ப என்ன நான் பொறுப்பில்லாம இருக்கிறன்?” என்றான்.

“வீட்டு விசயம் என்ன எண்டு தெரிஞ்சிருக்கோணும்தானே?”

“காசு பிரச்சினை இருந்திருந்தா அப்பா சொல்லியிருப்பார். அம்மாவாவது கட்டாயம் சொல்லியிருப்பா.”

“நீங்களா கேட்டா சொல்லுவம் எண்டும் நினைச்சிருக்கலாம்.”

“நான் என்ன ஆரோவா, நான் கேட்டா சொல்லுவம் எண்டு அவே நினைக்க?”

“சரி, அது நீங்க சொல்லுற மாதிரியே இருக்கட்டும். இப்ப உங்களிட்ட எவ்வளவு சேவிங்ஸ் இருக்கு?” என்று அடுத்த கேள்விக்குத் தாவினாள் அவள்.

ஒன்றும் இல்லை என்று சொல்லத் தலையிறக்கமாக உணர்ந்து, “என்ர வரவு செலவு உனக்கும் தெரியும். பிறகு என்னத்துக்குக் கேக்கிறாய்?” என்றான் சூடான குரலில்.

இதனால்தான் பணத்தைப் பற்றி அவனிடம் பேசவே தயங்குவாள். ஆனால், இந்த முறை அப்படி விட முடியவில்லை. இப்போதும் அவர்கள் விழித்துக்கொள்ளாவிட்டால் பெரும் தவறாகிப்போகும் என்று எண்ணினாள்.

“காசைப் பற்றிக் கதைச்சாலே சண்டைக்கு வரோணும் எண்டு நிக்காதீங்க நிரோ. கொஞ்சம் பொறுமையா கேளுங்கோ. என்னட்டயும் எந்த சேவிங்க்ஸும் இல்ல. உங்களிட்டயும் இல்ல. நாளைக்குத் திடீரெண்டு பெரிய செலவு ஒண்டு வந்தா என்ன செய்றது சொல்லுங்க?” என்றவள் கேள்வியின் பின்னிருக்கும் நியாயம் அவனுக்கு அப்போதும் புரிவதாக இல்லை.

அப்படி என்ன வர இருக்கிறது என்றே அலட்சியமாக எண்ணினான்.

“ஒரு வருசம் எண்டுறது கனகாலம் இல்ல. பாத்திருக்க போயிடும். அப்ப கவின்ர கலியாணச் செலவு வரும். அவளுக்கு அண்ணாவா, ரகு அண்ணாக்கு மச்சானா நீங்க ஏதாவது செய்யோணும். அதுக்கு என்ன பிளான் பண்ணி வச்சிருக்கிறீங்க?”

இதை அவன் யோசிக்கவில்லை. கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனாலும் சமாளிக்கலாம் என்றே நினைத்தான்.

“கலியாணத்த என்னதான் பிளான் பண்ணிச் செய்தாலும் அதுக்கு மேலதான் சிலவாகும் எண்டு அக்கான்ர கலியாண நேரம் அப்பா சொன்னவர். அப்பிடியிருக்க கவின்ர கலியாணத்திலேயே இறுகி நிப்பம். அடுத்ததா எங்கட கலியாணம் வந்து நிக்கும். இனி அதைத் தள்ளிப் போடவும் ஏலாது. அந்தச் செலவு இருக்கு. பிறகு கொழும்பிலதான் தொடந்து இருக்கப்போறம். அதுக்கு இஞ்ச வீடு, அதுக்கு வாடகை, வீட்டுக்குத் தேவையான தளபாடம் எண்டு ஓராயிரம் செலவு அடுத்தடுத்து வரும்.” என்று அவள் அடுக்கிக்கொண்டு போக அவனுக்குத் தலை வலிக்கும் போலாயிற்று.

வாழ்க்கையை மிக மிக இலகுவாகப் பார்க்கிறவன் அவன். வருவதை வருகிறபோது எதிர்கொள்ளலாம் என்று நினைப்பவன். அவனிடம் போய் இப்படி அடுக்கினால்?

“என்னவோ நீயும் நானும் வேலை வெட்டி இல்லாம இருக்கிற மாதிரியே அடுக்கிக்கொண்டு போகாத யமி. கை நிறையச் சம்பளம் வாங்கிறம். எல்லாத்தையும் சமாளிக்கலாம்.” என்றான் அவன் எரிச்சலை அடக்கிய குரலில்.

அவனுக்கு இன்னும் என்ன சொல்லி விளங்கப்படுத்துவது என்று அவளுக்குப் புரியவில்லை.

“முன் கூட்டியே ஏதாவது பிளான் பண்ணிச் செய்தாத்தான் சமாளிக்கக் கூடிய மாதிரி இருக்கும் நிரோ. இல்லாட்டி கடன் பட்டுத்தான் செய்ற மாதிரி இருக்கும். எனக்கு அப்பிடி எங்கட வாழ்க்கை கடன்ல ஆரம்பிக்க வேண்டாம்.” என்றதும் அவனுக்குச் சுள்ளென்று ஏறியது.

“இப்பிடி மட்டும்தான் நடக்கும் எண்டு நீயா ஒண்டாய் நினைச்சுக்கொண்டு கதைச்சு எரிச்சலக் கிளப்பாத யமி. அதையெல்லாம் அந்த நேரம் பாக்கலாம். இப்ப இந்தக் கதையை விடு.” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு.

“இனியும் அப்பிடி எல்லாம் விடேலாது. இந்த மாதத்தில இருந்து சேவிங்ஸ் ஒண்டு உங்களுக்குப் போடுறம்.” என்றவள் பேச்சில் தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிரோஜன்.

“என்ன?”

“பிறகு என்ர சிலாவுக்கு என்ன செய்யச் சொல்லுறாய்?”

“இந்த பார்ட்டி, டூர் போறதைக் கொஞ்சம் குறைங்க. உங்கட பிரெண்ட்ஸ்க்கு கண்ணை மூடிக்கொண்டு சிலவளிக்கிறதையும் நிப்பாட்டுங்க. எல்லாம் தாராளமா காண வரும்.”

எரிச்சல்தான் வந்தது அவனுக்கு. “அதான் நீயே முடிவு செய்திட்டியே. இன்னும் என்ன?” என்று எழுந்துகொண்டான்.

“நானும் ஏதாவது ஓன்சைட் ஜொப் (Onsite Job) கிடைக்குமா எண்டு கேட்டுப் பாக்கப்போறன்.” என்றவள் பேச்சில் திகைத்துப்போனான் அவன்.

“உனக்கு என்ன விசரா?” என்றான் உடனேயே.

“ஒரு ஆறு மாதம் போய் வந்தா கூடக் காணும். சமாளிச்சிடுவன். எப்பிடியும் எங்கட கலியாணம் இப்ப நடக்கப் போறேல்ல. கலியாணத்துக்குப் பிறகு எங்கயும் போக எனக்கு விருப்பம் இல்ல. சோ இப்ப ஓகேதானே?”

ஓகேயா? அவள் இல்லாமல் அவன் எப்படி?

“அந்தளவுக்கு இப்ப என்ன காசுப் பிரச்சினை உனக்கு?”

கொஞ்சம் தயங்கினாலும் வீட்டில் நடந்தவற்றைச் சொன்னாள். அவளுக்கும் அவனை விட்டால் ஆறுதலுக்கு வேறு யார் உண்டு?

“எனக்கு என்னவோ இதை நீ உன்ர அத்தானையும் வச்சுக்கொண்டு உடைச்சுக் கதைக்கிறதுதான் சரியோ எண்டு இருக்கு.” என்றான் அவன்.

“என்ன இருந்தாலும் அவா என்ர அக்கா நிரோ. அடுத்த பிள்ளையும் வரப்போகுது. அவான்ர குடும்பத்துக்க ஒரு பிரச்சினை வாற மாதிரி எப்பிடிக் கதைக்கிறது சொல்லுங்க?”

“அத அவா யோசிக்கோணும். என்ன செய்தாலும் நீயும் உன்ர அம்மாவும் வாயை மூடிக்கொண்டு சமாளிச்சுப் போவீங்க எண்டுற தைரியம்தான் அவாவை இப்பிடி நடக்க வைக்கிறதே. அதுக்கு வழி இல்லை எண்டு தெரிய வச்சா காணும். அடங்கி இருப்பா.”

இதைத்தானே அஜந்தாவும் சொன்னாள். அதைக் கருத்திற்கொண்டு அன்று வைத்தியசாலையில் வைத்து அவள் பேசியதற்கு இவளையும் அன்னையையும் என்ன பாடுபடுத்தினாள்?

அதைவிட அப்படி எப்படி அவளால் செய்ய இயலும்? ஆதவனின் பார்வையில் மாதங்கி மதிப்பிழந்து, சீ நீ இந்தளவு மோசமான ஒருத்தியா என்று நினைத்துவிட்டால் என்னாகும்? தப்பித்தவறி சண்டை வந்து, பிரிவு அது இதுஎன்று பெரிதாக ஏதாவது நடந்துவிட்டால்? இல்லை கை நீட்டும் அளவுக்கேனும் போய்விட்டால்? காலத்திற்கும் அவளால் அவளையே மன்னிக்க முடியாமல் போய்விடும்.

அவன் சொன்னதில் அவளுக்கு ஒப்புதல் இல்லை என்று அவள் அமைதியே சொல்லிற்று.

“இப்பிடி இருந்தா காலம் முழுக்க நீ வெளிநாட்டிலேயே இருந்து உழைச்சாலும் காணாமத்தான் இருக்கும்.” என்றான் அவன் எரிச்சலுடன்.

அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

“இப்ப என்ன, உனக்குக் காசுதானே வேணும். நான் அரேஞ்ச் பண்ணுறன்.”

“எப்பிடி?”

“அது என்னத்துக்கு உனக்கு?”

“இது என்ன கேள்வி நிரோ?”

“என்ர சம்பளத்தில் இருந்து எடுத்துத் தாறன்.”

“அப்ப கவின்ர கலியாணத்துக்கு?”

“எரிச்சலக் கிளப்பாத யமி. அதுக்கு அப்பா பாப்பார். நீ என்ன செய்யப்போறாய் எண்டு ஆரம்பிக்காத. இத்தின வருசமா நான் குடுத்த காசை சேத்துத்தான் அவளின்ர சீதன வீட்டைக் காட்டியிருக்கிறார் அப்பா.”

உண்மைதான். ஆனால், அது மட்டும்தான் செலவா? திருமணச் செலவு உண்டே. அதைக் கேட்டால் திரும்பவும் அப்பா பார்ப்பார் என்று சொல்லப்போகிறான்.

அதில் அதை விட்டுவிட்டு, “நாளைக்கே போய் சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓபன் பண்ணுறம். இன்னும் வாங்கின காசை திருப்பித் தராம இருக்கிற உங்கட பிரெண்ட்ஸ்ட்ட இருந்து காசை எல்லாம் கேட்டு வாங்குங்க. நானும் ஒரு ஆறு மாதத்துக்கு ஒன்சைட் ஜொப் கேட்டுப் பாக்கிறன். இல்லை, வேண்டாம் எண்டு சொல்லாதீங்க நிரோ. நான் கேட்டதும் சரி போயிற்று வா எண்டு அனுப்பியா வைக்கப்போயினம்? கிடைக்குமோ கிடைக்காதா எண்டே தெரியாம இப்ப அதைப் பற்றிக் கதைக்க வேண்டாமே.” என்று அவளே தடுத்தாள்.

அதற்குமேல் அங்கே இருந்தால் அன்றும் ஒரு சண்டையாகிப்போகும் என்று புறப்பட்டான் நிரோஜன்.

error: Alert: Content selection is disabled!!