அத்தியாயம் 8
தன் அலுவலக மேசையில் அமர்ந்திருந்து மடிக்கணினியில் முகத்தைப் புதைத்திருந்தான் நிரோஜன். அவன் முன்னே நவீன். அவர்கள் செய்துகொண்டிருந்த ப்ராஜெக்ட்டின் கடைசி நாள் இன்று. ஓய்வெடுக்காமல் வேலையைப் பார்த்தால்தான் இன்று இரவுக்குள் முடிக்கலாம்.
அப்படி விடுவேனா என்பதுபோல் அவன் அருகில் கிடந்த கைப்பேசி க்ர்ர்… க்ர்ர்… என்று மெல்லிய சத்தத்துடன் அதிர்ந்துகொண்டிருந்தது. அது நவீனையும் தொந்தரவு செய்ய, நிமிர்ந்து நிரோஜனைப் பார்த்தான்.
நிரோஜன் அந்தப் பார்வையை உணராமல் இல்லை. ஆனாலும் ஒருவிதப் பிடிவாதம் முகத்தில் துலங்க, வேலையில் கவனம் செலுத்தினான். அதற்கு விடுவேனா என்றபடி அவன் கைப்பேசி விடாமல் அதிர்ந்துகொண்டிருந்தது.
இப்போது முகத்தில் மெல்லிய சினக்கோடுகள் படர ஆரம்பித்தன. அப்படி, விடாமல் அழைத்துக்கொண்டிருப்பது யாமினி. தெரிந்தும் அவன் அழைப்பை ஏற்கவில்லை. காரணம், தொடர்ந்து அவள் கொடுத்துக்கொண்டிருந்த நெருக்கடி.
அன்று சேமிப்புக் கணக்குத் தொடங்கி, அதில் பணம் போடுவோம் என்று சொன்னதிலிருந்து இப்படித்தான் செய்துகொண்டிருக்கிறாள். அன்று அவளைச் சமாளிப்பதற்காகச் சரி என்றுவிட்டு வந்துவிட்டான்.
பிறகு இருந்து யோசிக்கையில் அதைச் செய்ய அவனுக்குப் பிடிக்கவில்லை. அதை ஆரம்பித்துவிட்டால் பிறகு யாமினி விடமாட்டாள். மாதா மாதம் இப்போது போலவே அவனை ஒரு வழியாக்கிப் பணத்தைப் போட வைப்பாள்.
கையில் பணம் வைத்திருந்து செலவழித்தே பழகியவன். திடீரென்று கணக்குப் பார்த்துச் செலவு செய் என்றால் மனம் முரண்டியது. அப்படி என்ன நெருக்கடி வந்துவிட்டது என்று இப்போதிருந்தே அவன் அப்படியிருக்க வேண்டும்? தேவை என்று வருகையில் செய்வது வேறு.
அதைச் சொல்லி, கொஞ்ச நாள் போகட்டும் என்று அவன் எத்தனையோ முறை சொல்லியும் அவள் கேட்பதாக இல்லை. தன் பிடியிலேயே நின்றாள். அது அவனை மிகவும் சினமூட்டியது.
அவனுக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று அவனுக்குத் தெரியும். அதைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியது அவன். ஆனால் இங்கே, அவள் அவனுக்குப் பதிலாக முடிவுகளை எடுத்து, என்னவோ நல்லது கெட்டது எதுவும் அவனுக்குத் தெரியாது போல் காட்டுவது எரிச்சலூட்டியது.
அவனின் இந்தச் செய்கை யாமினிக்கு மிகுந்த மனத்தாங்கலையும் கோபத்தையும் உண்டாக்கிற்று. அவள் ஏதும் அவனைத் தவறான வழியில் நடத்த முயல்கிறாளா என்ன? அவனுக்காகத்தானே யோசிக்கிறாள். அவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும், தங்களுடைய எதிர்காலத்திற்காகவும்தானே இதையெல்லாம் கூறுகிறாள்.
அதைப் புரிந்துகொள்ளாமல், தான் அவனை ஏதோ கெட்ட வழியில் செலுத்த முயற்சிப்பது போலவும், அவன் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்வது போலவும் இருந்த அவன் செயல், அவளுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்கியது.
உடனே வாட்ஸ்அப்பைத் திறந்து, “ஏன் நிரோ இப்பிடி ஓடி ஒளியிறீங்க? உங்களிட்ட இத நான் எதிர்பாக்கவே இல்ல. அப்பிடி என்ன பிழையா சொல்லிட்டன்? எங்க எல்லாரின்ர நல்லதுக்கும்தானே சொல்லுறன்.” என்று பேசி அனுப்பிவிட்டாள்.
முதலில் அவனுக்கு அதைக் கேட்க விருப்பமில்லை. சற்று நேரம் கழித்து எடுத்துக் கேட்டான். ‘ஏன் இப்படி ஓடி ஒளிகிறாய்’ என்கிற கேள்வியில் அவனுக்கு சுர்ர் என்று ஏறிற்று.
“ஒரு நிமிசம் மச்சான்!” என்றுவிட்டு வெளியே வந்து அவளுக்கு அழைத்தான்.
அவள் எடுத்ததும், “ஒளிச்சு ஓட நான் ஏதும் களவு செய்தேனா, இல்ல பொய் சொன்னேனா? வேலை பிஸில எண்டு எடுக்காம இருந்தா கண்டதையும் கதைப்பியா நீ? நீ நினைக்கிறதைச் செய்ய வைக்கிறதுக்காக என்னவும் சொல்லுவியா நீ?” என்று சீறினான்.
உண்மையில் யாமினி அதன் பொருள் உணர்ந்து பேசவில்லை. அழைப்பை ஏற்காமல் நழுவிக்கொண்டே இருக்கிறானே என்கிற ஆதங்கத்தில் சொன்னது. ஆனாலும் தன் தவறு புரிய, “அந்த வார்த்தை பிழைதான். அதுக்கு சொறி. ஆனா, நீங்க ஏன் ஓம் எண்டு சொல்லிப்போட்டு வராம இருக்கிறீங்க? எங்கட நல்லதுக்குத்தான சொல்லுறன்.” என்றாள் பொறுமையாகவே.
“இப்ப என்ன கெட்டது நடந்துபோச்சு எண்டு நல்லது செய்ய நிக்கிறாய் நீ?”
“என்ன கதைக்கிறீங்க? ஒண்டு நடந்த பிறகுதான் எதையும் செய்வீங்களா? என்னைப் பாருங்க, அப்பா இருக்கிற வரைக்கும் எதைப் பற்றியும் யோசிக்காம இருந்தன். இப்ப, அதுக்கும் சேத்து யோசிக்கிறன். ஆனா, காலம் கடந்து போச்சு. என்ன செய்றது, ஏது செய்றது எண்டு ஒண்டுமே விளங்குது இல்ல. எனக்கு மாதிரி உங்களுக்கும் ஒரு நிலை வரவேண்டாம் எண்டு நினைக்கிறது பிழையா?” பெரும் ஆதங்கத்துடன் வினவினாள் அவள்.
“இப்ப என்ன சொல்ல வாறாய்? உன்ர அப்பாக்கு மாதிரி என்ர அப்பாக்கும் ஏதாவது…” எரிச்சலோடு அவன் வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்த, “லூசா நீங்க?” என்றாள் பதறிப்போய்.
“பக்கத்தில நிண்டிருந்தா உங்கட வாயிலயே ஒண்டு போட்டிருப்பன். அப்பா இல்லாம போனா எப்பிடி இருக்கும் எண்டு எனக்குத்தான் தெரியும். எந்தக் காலமும் அப்பிடி ஒரு நிலை உங்களுக்கு வரவே வேணாம். அதுக்காக இப்பிடியே இருக்காதீங்க எண்டு சொல்லுறது விளங்குதா இல்லையா?”
“நான் என்ன செய்யோணும் எண்டு எனக்கு தெரியும்!” பட்டென்று சொன்னான் அவன்.
அவனுக்குத் தெரியும் என்றால் நீ தலையிடாதே என்கிறானா?
உள்ளூர உண்டான வருத்தத்தோடு, “என்ன தெரியும் உங்களுக்கு? ஊர் சுத்தவும், பார்ட்டி கொண்டாடவும், பாத்துப் பாராம செலவழிக்கவும் மட்டும்தானே தெரியும்?” என்றாள் அவள்.
“நீ மட்டும் என்னவோ பெருசா சேத்துக் குவிச்ச மாதிரிக் கதைக்காத யமி.”
கோபத்தில் அவன் விடுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் அவளைக் காயப்படுத்தின. ஆனாலும் விடாமல், “அதாலதானே உங்களோட மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறன். அது ஏன் விளங்குது இல்ல உங்களுக்கு?” என்று கேட்டாள்.
“அந்தளவுக்கு என்ர குடும்பம் காசுக்காக என்னைப் பிச்சுத் தின்னாது!”
சட்டென்று அமைதியாகிப்போனாள் யாமினி. அவன் வார்த்தைகள் அவள் நெஞ்சைச் சுருக்கென்று தைத்தன. “இப்ப என்ன சொல்லுறீங்க நிரோ?” என்றாள் அடைத்த குரலில்.
“என்ன சொல்லுறன்? உன்ர குடும்பத்தைக் குத்திக் காட்ட நினைக்கேல்ல. பிறகு அதுக்கும் ஒரு சண்டை பிடிச்சுக்கொண்டு வராத. ஆனாலும் உண்மை அதுதான். உன்ர அக்காவை மாதிரியோ உன்ர அம்மாவை மாதிரியோ என்ர குடும்பம் என்னை வச்சு வாழ நினைக்காது. அதால உனக்கு மாதிரி ஒரு நிலை எனக்கு வராது. இப்ப வை ஃபோனை!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன்.

