நீ வந்து தங்கிய நெஞ்சில் 8.2

அப்படியே அமர்ந்துவிட்டாள் யாமினி. உள்ளத்தின் அடியாழம் வரை வலித்தது. இது நாள்வரை அவனையும் அவளையும் அவள் வேறு வேறாகப் பார்த்ததில்லை. அதனால்தான் தன் குடும்பம் பற்றி, அவர்களின் நடத்தைகள் பற்றி எதையும் மறைக்காது சொன்னாள். சொல்லி ஆறுதல் தேடினாள்.

அதை வைத்தே அவளைக் குத்திக் காட்டிவிட்டான் அவன். கண்களில் நீர் திரண்டது. இமைகளை விரித்து, கண்களைச் சிமிட்டித் தன்னை அடக்கிக்கொண்டாள்.

அதன் பிறகு அதைப் பற்றி யோசிக்க நிரோஜனுக்கு நேரம் இருக்கவில்லை. வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்படுவதற்கே இரவு பத்துத் தாண்டியிருந்தது. அப்போதுதான் அவள் நினைவு வந்தது.

வாயைக் குவித்துக் காற்றை ஊதிவிட்டுக் கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அவர்கள் பேசிக்கொண்டதற்குப் பிறகு அவளிடமிருந்து அழைப்போ, குறுந்தகவலோ எதுவும் வரவில்லை.

வழமையான குட்நைட் கூட இல்லை.

அவளுக்கு அழைக்க நினைத்தான். உடல், மனம், மூளை என்று மொத்தமாகக் களைத்திருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு வாக்குவாதம் வேண்டாம் என்றெண்ணி விட்டுவிட்டான்.

ஆனால், அவனிடமிருந்து அழைப்பு அல்லது குறுந்தகவல் ஏதாவது வரும் என்று நிச்சயமாக எதிர்பார்த்தாள் யாமினி. ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டிருந்தாலும் நிதானம் திரும்பிய பிறகு அது குறித்து ஒரு விளக்கம் சொல்வான் என்று நினைத்தாள்.

அப்படி எதுவுமே வரவில்லை. அப்படியானால் தான் பேசியது சரி என்று அவன் நினைக்கிறான் என்பதுதானே பொருள்.

அடுத்த நாள் அலுவலகத்திற்குச் சோர்வாக வந்தவளிடம் விடயத்தைப் பிடுங்கிய அஜந்தா, “லூசா நீ? பெரும்பாலும் பொம்பிளைகள் கட்டின மனுசனிட்டயே தங்கட வீட்டாக்களைப் பற்றிச் சொல்ல யோசிப்பினம். நீ போய் அவரிட்ட எல்லாத்தையும் சொல்லி வச்சிருக்கிறாய்.” என்று அதட்டினாள்.

“அப்பிடி எப்பிடியடி மறச்சுப் பழகிறது?”

“இது மறச்சுப் பழகிறது இல்ல. கவனமா இருக்கிறது. நீ ஆறுதலுக்குத்தான் சொல்லியிருப்பாய். ஆனாலும், ஒரு பிரச்சினை எண்டு வந்ததும் நீ சொன்னதை வச்சே உன்ர வாய எப்பிடி அடைச்சார் பாத்தியா? இதுக்குத்தான் கட்டின மனுசனா இருந்தாலும் கவனமா இருக்கோணும் எண்டு சொல்லுறது.”

என்னவோ யாமினியால் அதில் உடன்பட முடியவில்லை. உயிராக நேசிக்கிறார்கள். எதிர்காலம் முழுவதையும் அவனோடுதான் பகிரப்போகிறாள் என்கையில் அப்படி எப்படி மறைப்பது?

என்னவோ அவளுக்கு எதுவும் புரிபடுவதாக இல்லை. பேசாமல் கையில் இருந்த தேநீரைப் பருகினாள். ஆனால், அடுத்து வந்த நாள்களில் அவன் அழைத்தபோதும் சரி, குறுந்தகவல் அனுப்பியபோதும் சரி அவள் ஏற்கவில்லை. அந்தளவில் உள்ளம் காயப்பட்டுப்போயிற்று.

இனியும் அவள் வீட்டுப் பக்கம் நடக்கும் பிரச்சனைகளை அவனிடம் அவளால் இயல்பாகச் சொல்ல முடியுமா? சொல்லி ஆறுதல்தான் தேட முடியுமா?

அன்று அஜந்தாவும் யாமினியும் கேண்டீனில் அமர்ந்திருக்கையில் அவள் முன்னே வந்து நின்றான் நிரோஜன்.

“எழும்பி வா!” என்றான் முகத்தில் இறுக்கத்தோடு.

எங்கே என்பதுபோல் புருவங்களைச் சுருக்கினாள் அவள்.

“வா யமி!” என்று பிடிவாதமாக அவள் கரம் பற்றி இழுத்துக்கொண்டு போனான் அவன்.

“எங்க?”

நின்று திரும்பி, “சொன்னாத்தான் வருவியோ?” என்று கேட்டான்.

“எனக்கு வேலை இருக்கு.” பார்வை எங்கோ இருக்கச் சொன்னாள் அவள்.

“எனக்கும்தான் இருக்கு. அதுக்கிடைல வந்திடலாம்.” என்று அவளையும் அழைத்துக்கொண்டு சென்று நிறுத்திய இடம் அவன் கணக்கு வைத்திருக்கும் வங்கி.

அவளால் மகிழ முடியவில்லை. ஒரு இறுக்கம்தான் படர்ந்தது. தொண்டை அடைத்துக் கண்ணீர் வந்துவிடும் போலிருக்க பைக்கில் இருந்து இறங்கியவள் அப்படியே நின்றிருந்தாள்.

“என்ன?” என்றான் அவன்.

“இஞ்ச என்னத்துக்கு வந்திருக்கிறீங்க?” ஒட்டாத குரலில் வினவினாள்.

“ஏன் எண்டு தெரியாதா உனக்கு? இதைச் செய்ய வைக்கத்தானே இந்த ஒரு கிழமையா ஃபோன் பண்ணினாலும் எடுக்காம, போட்ட மெசேஜுகளுக்கும் பதில் சொல்லாம இருந்தனி.”

“ஓ அதுக்குத்தானா?” என்றாள் அவள் அவனால் என்னவென்று புரிந்துகொள்ள முடியா பாவத்துடன்.

“வேற என்னத்துக்கு?” என்றான் அவன் புருவங்கள் சுருங்க.

அவளுக்குக் காரணம் சொல்ல மனமில்லை. சொன்னால் மட்டும் என்ன சொல்வான்? குத்திக்காட்டச் சொல்லவில்லை, உண்மையைச் சொன்னேன் என்பான். தேவையா அவளுக்கு?

அதில், “எப்பவும் இத நீங்கதான் சொல்லுவீங்க. இந்த முறை நான் சொல்லுறன். எந்தச் சண்டையும் வேண்டாம். நீங்க என்ன செய்யோணும், செய்யக் கூடாது எண்டு உங்களுக்கு நல்லா தெரியும். வாங்க போவம்.” என்று அவள் திரும்பி நடக்க முயல, கரம் பற்றி அவளை நிறுத்தினான் அவன்.

“பொது இடத்தில நிண்டு சீன் கிரியேட் பண்ணாம வா யமி. அதைவிட எனக்கு நேரமில்லை. அடுத்த அசைமென்ட் வந்திட்டுது. அதப் பாக்கோணும் நான்.”

அவள் சீன் கிரியேட் பண்ணுகிறாளா? வேதனையோடு அவனை நோக்கியவளுக்கு இன்னுமின்னும் முரண்டு பிடிக்கப் பிடிக்கவில்லை. அதற்கும் ஏதாவது சொல்வான். அதைவிட, அவனை இதைச் செய்ய வைக்கத்தான் அவ்வளவு போராடினாள். இப்போது அவனாகவே வருகையில் அதை விட மனமில்லை.

ஒன்றும் சொல்லாமல் சென்று, சேமிப்புக் கணக்கு ஒன்றினைத் திறந்து, மாதம் மாதம் ஒரு தொகை போடுவதுபோல செய்துவிட்டு வந்தார்கள்.

“இப்ப சந்தோசமா உனக்கு?” வெளியே வந்ததும் கேட்டான் நிரோஜன்.

அவனுக்குத் தான் செய்துவிட்டு வந்திருக்கும் காரியத்தின் பலன் புரியவில்லை. பிடிவாதமாக நின்று தான் நினைத்ததைச் சாதித்துக்கொண்டாளே என்கிற கோபம்தான் முன்னுக்கு நின்றது.

இவன் தன்னைப் புரிந்துகொள்ளவே மாட்டானா என்றிருந்தது அவளுக்கு. அதில், “இதுக்காக எண்டைக்காவது ஒரு நாள் நீங்கதான் நிரோ சந்தோசப்படுவீங்க. அண்டைக்கு நான் பிடிவாதமா நிண்டதுக்கான பொருள் முழுமையா உங்களுக்கு விளங்கும்.” என்று சொல்லிவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்துகொண்டாள் அவள்.

error: Alert: Content selection is disabled!!