நீ வந்து தங்கிய நெஞ்சில் 9.2

“டேட் மறந்துபோச்சு. அதுக்காக வராம இருப்பனா?”

அஜந்தா வவுனியாவைச் சேர்ந்தவள். அங்குதான் திருமணமும் நடக்கவிருந்தது. யாமினி சொன்ன திகதியைக் கைப்பேசியின் காலண்டரில் எடுத்துப் பார்த்துவிட்டு, “அப்பிடியே ரெண்டு நாள் லீவு எடுத்துக்கொண்டு வீட்டுக்கும் போயிற்று வரோணும். கவிக்கும் டேட் பிக்ஸ் பண்ணியாச்சு.” என்று தங்கையின் திருமண நாள் குறித்தும் பகிர்ந்துகொண்டான்.

அவன் சொன்னது போன்று சரியாக ஒரு வருடம் கழித்துத்தான் குறித்திருந்தார்கள். அப்படியானால் அவர்களின் திருமணம் நடக்கக் குறைந்தது இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும். உள்ளே இதெல்லாம் ஓடினாலும் அவனிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை அவள்.

“சாப்பாடு, மண்டபம், மேக்கப் எல்லாம் பாக்கோணும் யமி. ரகு வீட்டில அவர் மட்டும்தானே. அவே எங்களையே பாக்கச் சொல்லியிருக்கினமாம் எண்டு அம்மா சொன்னா. கவி பயந்துகொண்டிருக்கிறாள். தான் அரேஞ்ச் பண்ண, ஏதாவது பிழையா நடந்திடுமோ எண்டு. நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணுறியா?”

“அதுக்கு என்ன? யாழ்ப்பாணத்திலயே நல்ல ஆக்கள் இருக்கினம். பட்ஜெட் என்ன எண்டு சொல்லுங்க. அதுக்கு ஏற்ற மாதிரிப் பாக்கலாம்.”

“அப்பா காசு பாக்க வேணாம் எண்டு சொன்னவர்.”

ஒற்றை மகள் என்பதில் பணம் பார்க்க வேண்டாம் என்று எண்ணினார் நிரோஜனின் தந்தை ஏகாம்பரம்.

“அதுக்காகக் கண்ணை மூடிக்கொண்டு குடுக்கேலுமா? தரமா இருக்கோணும். அதே நேரம் குடுக்கிற காசுக்கு ஏற்ற மாதிரியும் இருக்கோணும். கவியோட நான் கதைக்கிறன்.”

“யமி, காச மிச்சம் பிடிக்கிறன் எண்டு எதையாவது செய்து வைக்காத. பிறகு காலத்துக்கும் அது உன்னை சொல்லிக்காட்டுற ஒண்டா மாறிடும். காசு பாக்காம தரத்தை மட்டும் பார்.”

இதற்கு முதல் அப்படி எப்போது தரத்தைப் பார்க்காமல் அவள் பணத்தைப் பிடித்து வைத்தாளாம்? மனத்தில் எழுந்த கேள்வியைக் கேட்காமல் சரி என்று தலையை அசைத்தாள்.

அவள் மனத்தில் ஓடுகிறவற்றைப் படிக்கிறவன் போன்று அவள் முகத்தைச் சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு, “சாறி எடுத்திட்டியா?” என்று கேட்டான்.

இல்லை என்று மறுத்து தலையசைத்தாள்.

ஏன் என்கிற கேள்வியைத் தாங்கி அவளைப் பார்த்தான்.

இந்த மாதம் கவிரன் சைக்கிள் கேட்டிருந்தான். அன்னையின் வைத்தியத்துக்கு, வீட்டுச் செலவுக்கு என்று அனுப்பியதோடு சேர்த்து அதற்கும் அனுப்பியிருந்தாள்.

தமக்கை ஏவிவிட்டாளோ என்கிற கேள்வி எழுந்தாலும், “வாங்கித் தாங்க சித்தி!” என்று ஆசையாகக் கேட்ட சின்னவனிடம் மறுக்க முடியாமல் போயிற்று. இதுவரையில் அவன் ஒன்று கேட்டு அவள் மறுத்ததும் இல்லை.

அவளின் அலுவலகத்தில் எல்லோருமாகச் சேர்ந்து அஜந்தாவின் திருமணப் பரிசாக வோஷிங் மெஷின் வாங்கிக் கொடுக்கத் திட்டம் போட்டிருந்தார்கள். அதற்கு ஒரு தொகை. அதோடு மட்டும் இவள் நிறுத்த முடியாது. உயிர்த்தோழி. இவள் தன் பங்கிற்குத் தனியாக எதையாவது செய்ய வேண்டும். அதற்கும் பணம் வேண்டும்.

அப்பாக்கு அனுப்பிச் சேமித்தது போன்று அவளும் ஒரு தொகை சேமிக்க நினைத்தாள். அது இந்த மாதமும் நடப்பதாக இல்லை. சேமிப்பை ஆரம்பிக்க முதல் நிரோஜனின் கடனைக் கொடுக்க வேண்டும்.

அவளிடம் பாதிப் பணம் உண்டுதான். அப்படிப் பாதி பாதியாகக் கொடுக்க ஒரு மாதிரியாக இருந்தது. அதில் இந்த மாதம் பாதி, அடுத்த மாதம் பாதி என்று சேர்த்துவிட்டு அடுத்த மாதம் மொத்தமாகக் கொடுக்கலாம் என்று தனக்குள் ஒரு திட்டம் போட்டிருந்தாள்.

திருமணத்திற்கு நல்ல பட்டுச் சேலை அணிந்து போக வேண்டும். அவர்களின் அலுவலகத்திலிருந்து வேறு எல்லோரும் வருவார்கள்.

முன்னராக இருந்திருக்க நல்ல விலையில் சேலை, அதற்குப் பொருத்தமாக அணிகலன்கள், பேஷியல், நகம் ஒட்டுவது என்று பார்த்துப் பாராமல் செலவு செய்திருப்பாள். கைப்பை தொடங்கி கண் மை வரை அத்தனையும் புதிதாக வாங்கியிருப்பாள். இன்றோ கையை விட்டு ஒரு ரூபாயைச் செலவழிக்கவும் பயந்தாள்.

திடீர்ச் செலவு என்று ஒன்று வந்துவிட்டால் என்ன செய்வேன் என்கிற கேள்வி அவளை மருட்டிக்கொண்டேயிருந்தது.

முன்னராக இருந்திருக்க எந்த யோசனையும் இல்லாது நிரோஜனிடம் இதையெல்லாம் சொல்லியிருப்பாள். கிடைத்த அனுபவமும் அஜந்தாவின் போதனையும் சேர சொல்ல முடியாமல் அமைதி காத்தாள்.

என்னவென்று முழுமையாகத் தெரியாதபோதும் பணம்தான் பிரச்சனை என்று நிரோஜனுக்குப் புரிந்தது. அதைத் தன்னிடம் சொல்ல அவள் விரும்பவில்லை. அதற்கான காரணமும் புரிய,
உடைத்துப் பேசாமல் அதை அதோடு விட்டுவிட்டான்.

அன்றைய மீட்டிங் தொடங்கப்போவதாக அவனுக்கு மெசேஜ் வந்தது. அதைப் பார்த்துவிட்டு, “டீம் மீட் இருக்கு யமி.” என்றுகொண்டு எழுந்தான் அவன்.

மாலை வருவானா? கண்ணுக்குத் தெரியாத ஒரு இடைவெளி இருவருக்கு மத்தியிலும் விழுந்திருந்ததில் அவளால் கேட்க முடியவில்லை. போகிறவனையே பார்த்திருந்தாள்.

இரண்டடி நடந்தவன் திரும்பி, “பின்னேரம் வருவன். சமைச்சு வை!” என்றுவிட்டுப் போனான். அவள் முகம் வெளிச்சம் போட்டது போன்று மலர்ந்துபோயிற்று.

அவன் விட்ட வார்த்தைகள், அதனால் உண்டான காயங்கள் அனைத்தும் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. இன்னொரு தேநீரை வாங்கிப் பருகிவிட்டு அவள் புறப்படுகையில் அங்கே வந்தான் அசோகன்.

“ஹாய் அண்ணா!”

“ஹாய் மா, எப்பிடி இருக்கிறாய்?” நலன் விசாரித்து நன்றாகவே பேசினான். ஆனாலும் அவன் பார்வையில் என்னவோ இருப்பதாக யாமினிக்குப் பட்டது.

“என்ன அண்ணா, ஏதாவது சொல்லோணுமா?” என்று அவளே கேட்டாள்.

“ஓம்மா. அது…” என்று இழுத்தவனுக்கு ஒரு தடுமாற்றம். “இதச் சொல்லுறது எப்பிடி எண்டு எனக்கு தெரியேல்ல. ஆனா… அது… அங்க எங்கட ஒபீஸ்லயும் நிரோக்கு ஒரு காதல் இருக்கு.” என்றதும் பகீர் என்றது அவளுக்கு.

இவன் என்ன உளறுகிறானா என்று பார்த்தாள். எங்காவது பார்ட்டி, கொண்டாட்டம் என்று போனால் கூத்தும் கும்மாளமுமாக இருப்பானே தவிர்த்து, எதையும் அர்த்தமற்றுப் பேசமாட்டான். பின்னே?

“அது… அது நவீனும் அவனும் லவ்… லவ் பண்ணினமாம்.” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு

யாமினி அதிர்ந்தது ஒரு கணம்தான். இருந்த பதற்றம் எல்லாம் வடிய குபீர் என்று வெடித்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க படாதபாடு பட்டாள்.

“என்ன அண்ணா சொல்லுறீங்க?” என்று அதிர்வதுபோல் கேட்டாள்.

“அவனை நம்பிக்கொண்டு இருக்காத. அவே ரெண்டு பேருக்கையும் வேற மாதிரிப் பழக்கம் இருக்கு. அவனை விட்டு விலகிடு.”

‘என்னவோ விளையாடியிருக்கிறான். இவனை!’ என்று பல்லைக் கடித்தாலும், “என்ன எண்டு நான் கேக்கிறன் அண்ணா?” என்றாள் கோபம் போன்று.

“இல்லையில்ல. அவசரப்பட்டு கேட்டுப்போடாத. நான் பாத்ததுக்கே வந்து கத்திப்போட்டு போய்ட்டான்.” என்று பதறினான் அவன்.

“அப்பிடி என்ன பாத்தனீங்க?”

அதை எப்படிச் சொல்வது என்பதுபோல் திணறிவிட்டு, “அது ரெண்டு பேரும் கிஸ் பண்ணினதப் பாத்தனான். அதுவும் லிப் டு லிப்.” என்றான் அவளைப் பார்க்கச் சங்கடப்பட்டுக்கொண்டு.

யாமினியால் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. வேறு புறம் முகம் திருப்பி அவள் அதை அடக்க முயல, “இது எந்தளவுக்கு உன்னை காயப்படுத்தும் எண்டு எனக்குத் தெரியும்மா. எண்டாலும் இதில இருந்து வெளில வாறதுதான் உனக்கு நல்லது. யோசித்து நட!” என்றுவிட்டுப் போனான் அவன்.
உடனேயே அவனுக்கு அழைக்கப்போனவள் அவன் மீட்டிங்கில் இருப்பான் என்று தெரிந்து, “இப்பிடி ஒரு பச்சை துரோகம் செய்வீங்க எண்டு நினைக்கவே இல்ல நிரோ. என்னை விட எந்தப் பக்கத்தால் நவீன் அண்ணா உங்களைக் கவர்ந்தவர் எண்டு அவருக்குப் பின்னால சுத்துறீங்க. கிஸ் பண்ணுற அளவுக்கெல்லாம் போயிருக்கிறீங்க என்ன?” என்று வாயால் பேசி அனுப்பிவிட்டாள்.

இரண்டு மணி நேரங்கள் கழித்துத்தான் அவள் அனுப்பியதைக் கேட்டான் நிரோஜன். கேட்டவன் முகத்தில் சிரிப்பு. “பின்னேரம் வீட்டை வந்து உனக்கு என்ன குறை, அவனுக்கு என்ன சிறப்பு எண்டு சொல்லுறன்.” என்று எழுதி அனுப்பிவிட்டான் அவன்.

error: Alert: Content selection is disabled!!