மாதொரு பாகம் கொண்டான் – 29

MPK 29

“இதுவரை அம்மா என்று கூப்பிட்டு அறியாத மயூ, மகி” என்ற அவன் சொற்கள் அவளை என்னவோ செய்ய, உடனே தன் மான்குட்டிகளிடம் ஓடி விடத் துடித்தாள்.

ஆனால் அலைபேசியின் அந்தப் பக்கம் பரிதவிக்கும் ஆன்மாவுக்கும் அமைதியைக் குடுக்க வேண்டுமே!

“என்ன சொல்ல எண்டே தெரியேல டொக்டர். பிறந்த இடத்தில இல்லாத அவப்பேரெல்லாம் கேட்டு வாழ்ந்த என்னை, ஆரெண்டே தெரியாத நீங்கள் இவ்வளவு தூரம் நம்புறீங்கள்! இந்த நம்பிக்கையை என்ர கடைசி மூச்சு மட்டும் காப்பாத்தோணும் நான்.”

“அதெல்லாம் சேர்ந்தே காப்பாத்தலாம், சாதனா! பிறகு, நிலன் என்ன சொன்னவர் எண்டு கேட்க மாட்டீங்களோ?”

“அதான் சொன்னனே, நீங்கள் சொல்லி முடிக்க முதலே சரி அப்பா.” எண்டிருப்பார்.

“இல்லை சாதனா. அப்பா எண்டா கூடாதாம் எண்டு என்னை அப்பிடிக் கூப்பிடமாட்டேன் எண்டிட்டார்.” என்ற சாதனா உள்ளம் மகனுக்காக வேதனையில் கொண்டது.

“உண்மையாவோ?”

“ம்ம்… தன்னை எல்லாரும் தேப்பன் மாதிரிக் கூடாதா வரும் எண்டு சொல்லித்தானாம் பேசுறவை எண்டு அப்பா எண்டு கூப்பிட்டா நானும் கூடாம போயிடுவனாம் எண்டு மாட்டேன் எண்டுட்டார்.”

“சொறி டொக்டர். அவன் தன்ர அனுபவத்தில உங்களை நோக்காட்டிட்டார். நீங்க ஒண்டும் நினைக்காதேங்கோ.” இவனுக்காகவும் வேதனை கொண்டாள்.

“ஏன் சாதனா, என்னைப் பார்த்தா எப்பிடிக் கிடக்கு? சின்னப் பிள்ளையின்ர கதையெல்லாம் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு கோவிக்கிற ஆள் மாதிரியோ?”

“கோவிக்கமாட்டீங்கள் எண்டு எனக்கும் தெரியும். வருத்தப்பட்டிருப்பீங்களோ எண்டு நினைச்சு சொன்னான்.”

“அவர் சொன்னதைக் கேட்டு அப்பிடியே விட்டுட்டுப் போற ஆளா இருந்தா வருத்தப்படலாம். நான் அப்பிடியோ? அவரை அவற்ற எண்ணத்தில விட்டிருப்பன் எண்டு நினைக்கிறீங்களோ?” என்ற, சாதனாவின் இதழ்களில் புன்னகை.

“பிள்ளையள் ஒரே நாளில வந்து அம்மா எண்டு கூப்பிடட்டோ எண்டு கேட்கேக்க அதிர்ச்சி, படபடப்பு எல்லாத்தையும் தாண்டி, இந்தளவில அவைய ஒத்துக்கொள்ள வைக்க எத்தினை மணித்தியாலம் அவேன்ர காதுக்குள்ள இறங்கி நிண்டு இரைஞ்சீங்களோ எண்டு நினைச்சுக் கவலைப்பட்டன்…” என்று இடைவெளி விட்டவள், “பிள்ளையளுக்காக!” என்று கேலியாய் முடிக்க ஆதித்யனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“உயிரைக் குடுத்து உங்களுக்கும் சேர்த்துக் களத்தில தனியா நிண்டு போராடி வெண்டிருக்கிறேன். அவான்ர நக்கல பாரேன். வந்தனண்டா ஓங்கி மண்டையில குத்திப் போடுவன்.” என்று பொய்யாய் மிரட்டினான்.

“ஒண்டுக்குப் பத்தா எண்டாலும் கூட கொட்டு வாங்கிறன், அது பிரச்சனையில்லை. ஆனா உங்களோட ஒருக்கா கதைக்கோணும் சாதனா எண்டு மட்டும் வந்திராதீங்கோ. என்னால தாங்கேலாது.” என்று மீண்டும் அவனை வார, அவனும் தன்னை மீறித் தன்னுடன் இயல்பாய் பேசுபவளின் இயல்பில் ரசனை கூடிப் போனவனாக அவளுக்கு சரியாக நின்று வாதாடினான்.

“இவ்வளவுநாளும் அமைதியா, ஐயோ பாவம் எண்டு இருப்பீங்கள்! ஆனா சரியான வாய் என்ன நீங்கள்?” என்றவும் அவளிடம் இருந்த இயல்பு தொலைந்து போனது.

“நீங்க என்ன நினைக்கிறீங்கள், என்ர உண்மையான குணங்கள் ஒவ்வொண்டும் இப்பதான் வெளில வருதெண்டு நினைக்கிறீங்களோ?”

“அதான்… எங்கயடா நல்லாப் போகுதே எண்டு இருந்தன், உந்த விதண்டாவாதக் கதையள் இல்லாட்டி சாதனாவை எங்க தேடிப் பிடிக்கிறது என்ன?”

“என்ன கொழுப்போ உங்களுக்கு? என்னையே விசர் எண்டுறீங்களோ?”

“பின்ன என்னண்டு சொல்ல உங்களை?
நல்லாக் கதைக்கிறீங்கள் எண்டு பாராட்டாத்தான் சொன்னனான். அதுக்கு ஒரு அர்த்தம் பிடிப்பீங்களோ?”

“இல்லை, எங்களை உங்கட வாழ்க்கைக்குள்ள கொண்டு போற ஒரு பெரிய முடிவை எடுக்கிறீங்கள். நாலையும் யோசிப்பீங்கள் எண்டு…”

“நான் பொய் சொல்ல விரும்பேல சாதனா, நாலில்ல, இந்த முடிவை எடுக்க நாலாயிரம் விஷயத்தை யோசிச்சன். வாழ்க்கையின்ர நடுப்பாதில நிண்டு கொண்டு… அதுவும் தனியா இல்லாம ரெண்டு பிள்ளையளோட நிண்டு கொண்டு மிச்சம் இருக்கிற பாதையைக் கடக்க என்னோட இணையப் போற உறவை அவ்வளவு ஈஸியா செலக்ட் பண்ணுவனோ?

அன்பு, பண்பு எண்டு எல்லாத்தையும் யோசிச்சு அது எல்லாத்துக்கும் நீங்க பொருந்தி வரவும் தான் முழுசா இதில இறங்கி இப்ப முக்கால் கட்டம் தாண்டியும் இருக்கிறன்.

என்னைப் பொறுத்தமட்டில அடுத்தவேன்ர காசுக்கு ஆசைப்படாம, மற்றவை தங்களில வைக்கிற அன்பையும் நம்பிக்கையையும் தவறா யூஸ் பண்ணாம, அடுத்தவேற்ற இருக்கிறதையும் தங்களிட்ட இல்லாததையும் ஒப்பிட்டு பொறாமைப்படாத, சுயகட்டுப்பாட்டோட இருக்கிற குணங்கள் மட்டும் இருந்தாவே காணும், ஒராளை நல்லவை எண்டு ஏற்றுக்கொள்ள!

மற்ற எல்லா கெட்ட குணத்துக்கும் அதுகள் இல்லாம போறதுதான் அடிப்படைக் காரணம். உங்களுக்கே தெரியும்தானே நீங்க இந்த மாதிரி டைப்பெல்லாம் இல்லையெண்டு பிறகென்ன கேள்வி? இதுதான் கடைசியா இருக்கோணும் சாதனா, நீங்கள் இப்பிடிக் கதைக்கிறது! நல்லா யோசிச்சு முடிவெடுத்தாச்சு, பிள்ளையளின்ர மனசிலயும் நாங்க ரெண்டு பேரும்தான் அவேன்ர பேரன்ட்ஸ் எண்டு ரெஜிஸ்டர் பண்ணியாச்சு. இனி என்ன வந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து அதை சரிக்கட்டிப் போகோணுமே தவிர, என்னாலயோ, உன்னாலயோ, இதாலயோ, அதாலயோ எண்டு தனித்தனியா கிடந்து அடிச்சுக் கொள்ளுறேல, விளங்குதோ?”

“ம்ம்… விளங்குது.”

“என்ன விளங்குது?”

“நேற்றுப் பிள்ளையள்… இண்டைக்கு நானெண்டு!” அவள் சிரிக்காமல் சொல்லவும் அவன் சிரித்து விட்டான்.

“இது காணும். உங்களுக்கு விளங்கீட்டுது எண்டு நான் எடுத்துக் கொள்ளுறன்.” என்றான் அவள் பழையபடி கேலி பேசியதைச் சுட்டி.

“நிலனை என்ன சொல்லிச் சரிக்கட்டினீங்கள் எண்டு கேட்க வந்து கடைசில நான் பாடம் கேட்டிட்டன்.”

“இவ்வளவு கதைக்கிறனீங்கள் அதையும் நீங்களே கெஸ் பண்ணுங்கோ பார்ப்பம்.”

“பெருசா என்ன சொல்லியிருப்பீங்கள்? ஏதாவது உதாரணத்தை எடுத்து விட்டிருப்பீங்கள்! எனக்குத் தெரிஞ்சு மயூவுக்கும் மகிக்கும் கிடைச்சிருக்கிற வேர்ல்ட் பெஸ்ட் அப்பாவை உதாரணம் சொல்லியிருப்பீங்கள்!” என்று அவள் சரியாக ஊகித்து சொல்லவும்,

“பரவாயில்லை… இந்தப் பதவிக்கும் சரியான தகுதியை வளர்த்துக் கொண்டுட்டீங்கள் போல!” என்றான் அவன்.

“என்ன சொல்லுறீங்கள், விளங்கேல!”

“இல்லை… பிள்ளையள் அம்மா எண்டு கூப்பிடவும் அவையப் பற்றி சரியா சொன்ன மாதிரி இப்ப என்னைப் பற்றியும் சரியா சொல்லுறீங்கள்! அப்பிடியெண்டா???” என்று அவன் கேள்வியாக இழுக்கவும், கால் நகங்களை மடக்கித் தரையில் ஊன்றிக் கொண்டவள்,

“நான் வைக்கிறன். ஏதேன் தேவையெண்டா கூப்பிடுங்கோ.” என்று வைத்து விட்டிருந்தாள்.

அவளைப் புரிந்து கொண்டவனும் அவளைப் பற்றித் தவறாக எண்ணாமல் அதன் பின் அவளை அழைத்து சங்கடப்படுத்தவில்லை.

மகள்கள் செல்லும் நேரத்தைக் கணித்து மதிய உணவு இடைவேளையில் அவளை அழைத்திருந்தவன், அவளிடம் கதைத்து விட்டு உண்ணலாம் என்றுதான் நினைத்திருந்தான்.

ஆனால் அவளிடம் கதைத்துக் கொண்டிருந்த சுவாரசியத்தில் உணவுவேளை கடந்ததைக் கூடக் கவனிக்கவில்லை அவன்.

அவன் மனம் ஒருமாதிரி ஆர்ப்பாட்டத்துக்கும் அமைதிக்கும் இடையில் ஒரு நிலையில் இருந்து கொண்டு இரண்டாலும் கிடைக்கும் இன்பத்தை நுகர்ந்து கொண்டிருந்தது…

அந்தப் பரவசத்தில் ஃபோனை எடுத்து அவளுக்கு டைப் செய்தான்.

“இனி உங்களோட ஃபோன் கதைக்க எடுத்தா, இடையில ஒருக்கா சாப்பிட்டீங்களா எண்டு கேளுங்க, சாதனா! உங்களோட கதைச்சதில சாப்பிட வேணும் எண்டதே மறந்து போயிற்று! இனிக் கவனமா இருங்கோ. என்ர ஆரோக்கியத்தைப் பார்க்கிறதும் உங்கட கடமைதானே?” என்று அனுப்பப் போனவன், எங்கே தன் விளையாட்டை சீரியஸாக எடுத்துக் கொண்டு விடுவாளோ என்று குறும்பான ஒரு முகவடியையும் சேர்த்தே அனுப்பி விட்டு நிமிர்ந்தவனுக்குத் தன்னை நினைக்க சிரிப்பாக வந்தது.

‘கொஞ்சம் சிறுபிள்ளைத்தனம் கூடி விட்டதோ?’ தனக்குள்ளாகக் கேட்டுக் கொண்டவன், தானே பதிலும் சொல்லிக் கொண்டான்.

‘யாரையும் காயப்படுத்தாமல் நான் செய்யும் ஒரு செயல் என்னை சந்தோஷப்படுத்தினால் அது சிறுபிள்ளைத்தனமாக இருந்தால் என்ன, பெரிய பிள்ளைத்தனமாக இருந்தால் என்ன?’ என்று மானசீகமாகத் தோளைக் குலுக்கியவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் உணவை முடித்துக் கொண்டு, கடமையைப் பார்க்கக் கிளம்பி விட்டிருந்தான்.

அதன் பின் சாதனாவுக்கும் பிள்ளைகளோடுதான் பொழுதுகள் பெருவாரியாகக் கழிந்தன.

வரம் வேண்டுமா எனக் கேட்டு நின்ற தெய்வங்கள் போல், அம்மா என்று அழைக்கவா என்று கேட்டு நின்ற இறைவிகள் இருவருக்கும் சம்மதம் சொல்லி வரத்தைப் பெற்றுக் கொண்டவள், அவர்களின் முதல் அழைப்பில் கண்ணோரம் நீர் சுமந்தாள் என்றால் அடுத்தடுத்த அழைப்புகள் கேட்டுக் கேட்டு நெஞ்சில் நிறைவை சுமந்தாள்.

அவர்களை அடுத்து வீடு வந்த நித்திலனும் அரக்கப் பறக்க ஓடி வந்து யூனிஃபோர்ம் கூட மாற்றாமல் அவளருகில் அமர்ந்தவன்,

“அம்மா! டொக்டர் தன்னை இனி நான் அப்பா எண்டுதான் கூப்பிடோணுமாம். இனி எப்பவும் அவர்தான் என்ர அப்பாவாம்… நான் அப்பிடிக் கூப்பிடமாட்டன், அப்பா எண்டா கூடாது எண்டு சொல்ல, அது அப்பிடியில்லை. எல்லா அப்பாவும் கூடாத ஆக்கள் இல்லை. மயூவுக்கும் மகிக்கும் நான் நல்ல அப்பாதான், அவையைக் கேட்டுப் பாருங்கோ எண்டவர். அவையும் ஓமாம் எண்டவை. அப்ப இனி நான் அவரை அப்பா எண்டுதான் கூப்பிடப் போறன். நேற்றே கூப்பிட்டிருப்பன், அவர்தான் உங்களிட்டையும் கேட்டுட்டு கூப்பிடட்டாம் எண்டவர். நான் கூப்பிடட்டோ அம்மா? எனக்கு ஆசையாக் கிடக்கு!” என்று ஆசையும் ஏக்கமும் போட்டி போடக் கேட்ட மகனை இழுத்து அணைத்துக் கொண்ட சாதனாவுக்கு அழுகையை அடக்கப் பெரும்பாடாகிப் போனது.

மான்குட்டிகளுக்காவது தாய் இல்லாமல் போனதில் அவர்கள் “அம்மா!” என்று அழைக்காமல் போயிருந்தார்கள்.

ஆனால் இவனுக்கு மலை மாதிரி அந்தக் கேடுகெட்டவன் இருந்தும் அப்பா என்ற அழைப்பு இவன் நாவுக்குப் புறக்கணிக்கப்பட்டிருந்ததே என்று கலங்கியவள்,

பின் அதுவும் நல்லதுதான். தகுதியான ஒருவனுக்காக நித்திலனின் தந்தை ஸ்தானம் இது வரை காத்துக் கொண்டிருந்திருக்கிறது போலும். இனி அந்தக் காத்திருப்புத் தேவையே இல்லை என்று தன்னை சமன் செய்து கொண்டவள்,

“கூப்பிடுங்கோ நிலன். உங்கட ஆசை மட்டுமில்லை, என்ர ஆசை, அவர்ர ஆசை எங்கட மான்குட்டியள் எல்லாரின்ர ஆசையும் அதுதான். நீங்க ஆசை தீர அவரை அப்பா எண்டு கூப்பிடுங்கோ.” என்று அவன் தலை கோதி விட்டாள்.

“யே… அப்ப நான் டொக்டருக்கு… இல்லையில்லை… அப்பாக்கு இப்பவே கோல் எடுத்து சொல்லட்டோ, அம்மா ஓமெண்டிட்டா எண்டு?” என்று துள்ளியவனை, அவர் வேலையில் இருப்பார் என்று சொல்லி அடக்குவதற்கு அவள் பட்ட பாட்டை நினைத்து சிரித்துக் கொண்டே பஸ் கம்பியில் தலையை மோதிக் கொண்டாள்.

“சாவகச்சேரி இறங்கிற ஆக்கள் முன்னுக்கு வாங்கோ கெதியா!” கத்திய நடத்துநரின் குரல் சவ ஊர்வல மேளமாக காதில் ஒலித்து அவள் கனவைக் கலைத்தது.

“சாவகச்சேரி” ‘எனக்கு சாபங்களை மட்டுமே அள்ளி வழங்கிய ஊர்!’ என்று எழுந்த நினைப்பைத் தலையில் தட்டி அடக்கினாள்.

‘ஊர் உனக்கு என்ன செய்தது? குடியிருக்கும் மக்கள் கோணலாக இருந்தால் விதியே என்று அவர்களை சுமக்கும் ஊர் எப்படிப் பொறுப்பாகும்?

உனக்காக நிற்கமாட்டார்கள் என்று தெரிந்தும் உன் தாய் சகோதரங்களை உறவென சுமந்து, உனக்கு ஒரு நல்லது நடக்க இருப்பதை அவர்களுக்கு சொல்ல வந்த உன்னைப் போலத்தானே அதுவும். தன்னோடு பிணைக்கப்பட்டவர்களைத் தாங்கி நிற்கிறது!

யோசனைகளோடே இறங்கி நடந்து தன் வீட்டுக் கேட்டருகே வந்தவள் காதில் விழுந்தது, தலையில் அடித்துக் கொண்டு கதறிய தாயின் ஒப்பாரி சத்தம்தான்.

தான் வந்தபின் விஷயம் அறிந்த பின்தான் கலவரம் வெடிக்கும் என்று அவள் நினைத்து வந்தால், அதற்கு முன்னேயே வெடித்திருக்கிறதே என்று படபடத்துக் கொண்டே உள்ளே போனவள் மீது சம்மந்தமே இல்லாமல் பாய்ந்திருந்தார் அவள் தாய்.

error: Alert: Content selection is disabled!!