என் சோலைப் பூவே 26 – 2

ஏற்கனவே மாமியாரின் பேச்சினால் துடித்துப்போயிருந்த சித்ராவுக்கு நித்தியின் பேச்சைக் கேட்டதும் வெறுத்தே போனது. ஒரு நைட்டிக்கு இந்தப் பாடா?

 

அதை அணிந்திருக்கும் உடல் முழுவதுமே கூசிப் போனது.

 

அதை உடனேயே கழட்டிவிட்டு சேலையை அணிந்துகொள்வோம் என்று எண்ணியவள் ரஞ்சனின் அறைக்குச் செல்லத் திரும்ப, “அங்கே எங்கே போகிறாய். வாசல் இந்தப் பக்கம்! இனி ஒரு நிமிடம் கூட நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாது!” என்று ஆங்காரமாகக் கத்தியவர், அவளின் கையைப் பிடித்து இழுத்தார்.

 

அப்போது வீட்டுக்குள் நுழைந்த ரஞ்சனின் காதுகளில் தாயினதும் தங்கையினதும் பேச்சு மிக நன்றாகவே விழுந்தது.

 

அதோடு தாயின் செயலும் கண்ணில் பட, “அம்மா! என்ன வேலை பார்க்கிறீர்கள்?!” என்று ஆத்திரத்தோடு உறுமியவன், வேகமாக வந்து சித்ராவை தாயிடம் இருந்து விடுவித்துத் தன்னருகில் நிறுத்திக் கொண்டான்.

 

மனைவிக்காகப் பரிந்துவந்த மகனின் செயலில் ஆவேசம் கொண்டவர், “என்னடா? இன்றைக்கு வந்தவளுக்காக அம்மாவையே அதட்டுவாயா? அவளோடு கதைக்கும் தகுதி எனக்கில்லை என்கிறாள் அவள். இந்த வீட்டில் இருக்கும் தகுதி அவளுக்குத்தான் இல்லை. நீ கூட்டிக்கொண்டு வரும் கண்டவளும் இங்கே தங்க முடியாது. அவளை முதலில் வெளியே தள்ளு!” என்றார் ஆக்ரோசமாக.

 

“அவள் ஒன்றும் கண்டவள் இல்லை. என் பெண்டாட்டி! அதை முதலில் மிக நன்றாக நினைவில் வைத்திருங்கள். என் மனைவி என் வீட்டில்தான் இருப்பாள்!” என்று அழுத்தமான குரலில் சொன்னவனை, அவன் தாயும் தாரமும் அதிர்ந்துபோய்ப் பார்த்தனர்.

 

அவளைப் பிடிக்காமல் அவளின் வற்புறுத்தலினால் திருமணம் செய்திருக்கிறான் என்று எண்ணியிருந்த இராசமணிக்கு, திருமணம் ஆகி ஒருநாள் முடிய முதலே அவளுக்காகத் தன்னையே எதிர்க்கிறானே மகன் என்கிற அதிர்ச்சி என்றால், ‘மனைவியாக என் வீட்டுக்கு வா. என்னை ஏன்டா கட்டினோம் என்று நினைக்க வைப்பேன்’ என்று சூளுரைத்த கணவன் அவளுக்காகப் பேசியதில் அதிர்ந்து நின்றாள் சித்ரா.

 

ஆனாலும், அவனது தாயும் தங்கையும் இப்படி அவளை அலட்சியமாகக் பேசும் அளவுக்கு வைத்தவனும் அவன்தானே என்று எண்ணியதும் அந்த மகிழ்ச்சி முற்றாக மறைய ஆத்திரமே மேலோங்கி நின்றது.

 

ரஞ்சனுக்கோ கண்கள் கலங்கி, கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரின் கறை காயாமல் நின்றவளைப் பார்க்க மனதுக்குள் எதுவோ பிசைந்தது.

 

சட்டெனக் கண்ணீர் வடிப்பது அவள் இயல்பு இல்லையே!

 

ஏன்,அன்று அவன் கடைக்கு வந்து ‘உன்னைக் கட்டிக் காட்டுகிறேன்’என்று சண்டையிட்ட போதும் அவள் அழவில்லையே! ஆத்திரமும் ஆவேசமும் தானே பட்டாள்.

 

அப்படியானவளையே அழ வைத்த தாய் தங்கையின் மீதுதான் அவன் கோபம் வலுத்தது.

 

தங்கையின் புறம் திரும்பி அவளை உறுத்து விழித்தவன், “அம்மாக்குத்தான் அறிவில்லை என்றால் உனக்கும் இல்லையா? அண்ணியை இனி நீ மரியாதை இல்லாமல் கதைத்தாய் என்றால் தொலைத்துக் கட்டிவிடுவேன்!” என்றான் உறுமலாக.

 

அவன் காட்டிய அந்தக் கோபத்தில் அன்று கன்னத்தில் விழுந்த அறை நினைவில் வர, பயத்துடன் தாயின் பின்னால் ஒண்டினாள் நித்யா.

 

“அவளுக்கு என்னடா மரியாதை வேண்டிக் கிடக்கிறது? ஒழுங்கான முறையில் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்திருக்க கிடைக்கவேண்டிய மரியாதை தானாகக் கிடைத்திருக்கும். இப்படி மரியாதையைக் கொடு என்று வாய்விட்டுக் கேட்கவேண்டிய நிலை வந்திருக்காது. இவளானால் குறுக்கு வழியில் வந்தவள் தானே. நீயும் பெற்ற தாயின் பேச்சை மதிக்காது, தாயின் ஆசிர்வாதமும் தங்கையின் வாழ்த்தும் இல்லாமல் அவளைக் கட்டியவன் தானே. பிறகு எப்படி மரியாதை கிடைக்கும்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை இங்கே கூட்டிக்கொண்டு வந்தாய்?” என்றார் அவன் தாயார்.

 

அதைக் கேட்டதும் சட்டென ரஞ்சனினதும் சித்ராவினதும் விழிகள் நான்கும் சந்தித்துக் கொண்டன.

 

கலங்கிவிட்ட சித்ராவின் விழிகளோ இதற்கெல்லாம் நீதான் காரணம் என்று அவனைக் குற்றம் சாட்டின.

 

தாயின் புறமாகத் திரும்பித் தீர்க்கமாகப் பார்த்தான் ரஞ்சன். “முறைப்படி இல்லாமல் வேறு எப்படி வந்தாள் என்கிறீர்கள்? கோணேஸ்வரர் கோவிலில் வைத்து முறையாகத்தான் எங்கள் திருமணம் நடந்தது. அதனால் மரியாதை இல்லாமல் போக ஒன்றும் இல்லை. அதோடு உங்களை வரும்படி அழைத்தும் வராமல் நின்றது நீங்கள் தான். அதற்கு அவள் பொறுப்பில்லை. என் பெண்டாட்டி இங்கேதான் இருப்பாள். தேவை இல்லாமல் கதைத்து உங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். அவளை யாரும் ஒருவார்த்தை சொல்லக் கூடாது சொல்லிவிட்டேன்!” என்றான் அழுத்தம் திருத்தமான குரலில்.

 

அந்தக் குரலே அவன் தாயின் வாயை அடைத்தது. அவர் அப்படியே நிற்க சித்ராவிடம் திரும்பி, “நீ நம்முடைய அறைக்குப் போ. நான் இதோ வருகிறேன்.” என்றான் ரஞ்சன்.

 

அவள் தயங்கி நிற்க, தாயையும் தங்கையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீ போ. இனி யாரும் உன்னை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்!” என்று அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு வெளியே நடந்தான்.

 

அதற்கு மேலும் அங்கே நிற்காமல் படியேறிச் சென்றவளுக்கு கணவன் தனக்கு ஆதரவாக நின்றதை எண்ணி மகிழவே முடியவில்லை. ஒரு நாளிலேயே இவ்வளவு போராட்டமா என்றிருந்தது.

 

அவனை மிரட்டித் திருமணம் செய்துகொண்டதையே ஆளாளுக்குச் சொல்லிச்சொல்லிக் காட்டுகிறார்களே.. அந்தப் பெயர் அவளது வாழ் நாள் முழுக்க அவளைத் துரத்துமோ என்று பயமாக இருந்தது

 

 

வாழ்க்கையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் என்று அப்பாவிடம் ஓடிவிட வேண்டும் போலிருந்தது. கடைசிவரை கண்ணுக்குள் அவளைப் பொத்திப் பாதுகாக்கும் தாய் தந்தையர் இருந்தும் தனக்கேன் இந்த நிலை?

 

காதல் என்கிற பெயரில் கெட்டுச் சீரழிந்ததால் வந்தது அல்லவா இதெல்லாம். உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடித்துத்தான் ஆகவேண்டும்! தப்பைச் செய்தவள் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்!

 

ஆனால் எத்தனை நாளைக்கு?

 

விடை தெரியாக் கேள்வியைச் சுமந்தபடி, ரஞ்சனின் அறையின் ஜன்னல் வழியாகத் தெரிந்த வான்வெளியை வெறித்தபடி நின்றிருந்தாள் சித்ரா.

 

சிறிது நேரத்தில் திரும்பி வந்த ரஞ்சனின் கையில் சில பைகள் இருந்தது.

 

ஜன்னலோரம் சாய்ந்தபடி நின்றவள் மறுபடியும் சேலையை அணிந்திருப்பதைக் கண்டவன், ஒருமுறை விழிகளை மூடித் திறந்துவிட்டு, “இந்தா..” என்றபடி, பைகளைக் கட்டிலின் மீது போட்டான்.

error: Alert: Content selection is disabled!!