என் சோலைப் பூவே 33 – 1

அத்தியாயம்-33

 

அவர்களின் புது வீட்டுக்கு ரஞ்சன் வாங்கியது தவிர்த்து, பாத்திர பண்டங்கள் முதல் திரைச்சீலை வரை தேவையான மீதிப் பொருட்களை இருவருமாகச் சென்று வாங்கி வந்தனர்.

 

வாங்கிவந்த தொலைக்காட்சிப் பெட்டியை சரியான இடம் பார்த்து வைத்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.

 

“மாரியாத்தா மற்றும் திருவாளர் மாரியாத்தா, புது வீட்டுக்குக் குடி வந்து இருக்கிறீர்கள். கூடப் பிறவாத அண்ணன்கள், உற்ற நண்பர்கள் என்றிருக்கும் எங்களிடம் ஒரு வார்த்தை சொன்னீர்களா?” என்று கலகலத்தபடி ஜீவன் வர, புன்னகையுடன் வந்தான் சுகந்தன்.

 

ரஞ்சனுக்கு முதலே அவன் தாய் தங்கையரைப் பற்றி அறிந்திருந்த அவர்களுக்கு, ரஞ்சன் சித்ராவுடன் தனியாக வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

 

“ஜீவன் அண்ணா, சுகந்தன் அண்ணா வாருங்கள் வாருங்கள்..” என்று உற்சாகமாக வரவேற்றாள் சித்ரா.

 

“என்ன வாருங்கள் மோருங்கள்.. புது வீட்டுக்குக் குடிவந்திருக்கிறாய். ஒரு அழைப்பு வைத்தாயா? ஆசையாகத்தான் கூப்பிட்டாயா? அல்லது வீடு தேடி வந்தவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர்தான் தந்தாயா? எந்த முகத்தை வைத்துக்கொண்டு கூப்பிடுகிறாய் நீ?” என்று சிவாஜியின் பாணியில் ஜீவன் கோபமாகக் கேட்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு கலகலத்துச் சிரித்தாள் சித்ரா.

 

தொலைக்காட்சிப் பெட்டிக்கு வயர்களை இணைத்துக் கொண்டிருந்த ரஞ்சன், மலர்ந்து சிரிக்கும் மனைவியைச் சட்டென திரும்பிப் பார்த்தான். அவன் விழிகள் அவளை ஆசையோடு விழுங்கின.

 

“பார்ரா பார்ரா பார்ரா பார்வையைப் பார்ரா!” என்றான் ஜீவன்.

 

ரஞ்சன் அவனை முறைக்க, “சும்மா இருடா..” என்று ஜீவனை அதட்டிய சுகந்தன், “இன்னும் என்ன வேலைகள் இருக்கிறது ரஞ்சன். சொல்லு ஆளுக்கொன்றாகப் பார்க்கலாம்..” என்று நண்பனுக்கு உதவ முன்வந்தான்.

 

“ஒன்றும் செய்யத் தேவையில்லை.”

 

பட்டெனச் சொன்ன நண்பனை வேதனையோடு பார்த்தனர் சுகந்தனும் ஜீவனும்.

 

அவர்களைப் பார்க்கச் சித்ராவுக்குக் கவலையாக இருந்தது. “குடிக்க என்ன தரட்டும் சுகந்தன் அண்ணா? டீயா குளிர்பானமா? உண்பதற்கு மட்டும் எதுவும் கேட்டு விடாதீர்கள். ஒன்றுமில்லை.” என்று சிரித்தாள்.

 

கணவன் காட்டிய கோபமுகத்தைச் சரிசெய்ய முயன்றவளைப் பாசத்தோடு பார்த்தனர் நண்பர்கள்.

 

அவளுக்காக நண்பனின் கோபத்தைத் தாங்கலாம் என்று நினைத்த ஜீவன், “அப்படியே உண்பதற்கு எதுவும் இருந்தாலும் நீ சமைத்ததாக இருந்தால் எங்களுக்கு வேண்டாம். பச்சை தண்ணியையே குடு. அது போதும்!” என்றான், தன் பாணிக்குத் திரும்பி.

 

சித்ரா அவனை முறைக்கவும் தன் சட்டைக் கையில் இல்லாத தூசியைத் தட்டிவிட்டான் ஜீவன்.

 

இப்படியே கலகலப்பாக நேரம் செல்ல, கீழே கடையில் ஆட்கள் நிறைய வந்திருக்கிறார்கள் என்று ரஞ்சனை அழைத்தான் நகுலன்.

 

அவன் கீழே செல்லத் தொடங்கவும், “நீ இருடா. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” என்றுவிட்டு, அவனின் பதிலை எதிர்பாராது நண்பர்கள் இருவரும் கீழே விரைந்தனர்.

 

செல்லும் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்ற ரஞ்சனிடம், “அவர்கள் மேல் உங்களுக்கு இன்னும் என்ன கோபம்?” என்று கேட்டாள் சித்ரா.

 

“கோபம் என்றில்லை. அவர்கள் கூட என்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்கிற வருத்தம் தான்.”

 

அவன் குரலில் இருந்த வலியை உணர்ந்தவளுக்கும் உள்ளே வலித்தது.

 

அவர்கள் கூட என்றால் வேறு யார் அவனைப் புரிந்துகொள்ளவில்லை? அவளா?

 

கேள்விகள் பல எழுந்தபோதும், அதையெல்லாம் அப்போதைக்கு ஒதுக்கிவிட்டு, “அவர்கள் எனக்காகத்தானே கடையை விட்டு வெளியேறுகிறோம் என்றார்கள். நான் உங்களைக் காதலித்தது அவர்களுக்கும் தெரியும் தானே. அதனால்தான் அப்படி நடந்து கொண்டிருப்பார்கள்.” என்று, உடன்பிறவாச் சகோதரர்களுக்காகப் பேசினாள் அவள்.

 

பொருள் விளங்காப் பார்வை ஒன்றை அவள் புறம் வீசியவன், “நான் உன்னைக் காதலித்ததும் அவர்களுக்குத் தெரியும்.” என்றான் வறண்ட குரலில்.

 

என்னது? அவனும் அவளைக் காதலித்தானா? இதென்ன புதுக்கதை என்பதாக நம்ப முடியாமல் பார்த்தாள்.

 

ரஞ்சனின் உதடுகளில் வருத்தப் புன்னகை ஒன்று மெல்ல ஜனித்து பின் மரணித்தது.

 

“அதேபோல நான் எடுத்த முடிவுகளும் எதற்காக என்பதும் அவர்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும் அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், அங்கே நட்பு எங்கே இருக்கிறது?”

 

“உண்மையான நட்பு இருக்கப் போய்த்தானே உங்களைக் கண்டித்து இருக்கிறார்கள். நண்பர்கள் என்றால் யார் ரஞ்சன். நீங்கள் எதைச் செய்தாலும் அதற்குத் தலையாட்டுபவர்களா? பிழை என்று பட்டால் சுட்டிக் காட்டுவது தானே நட்பு. அதைத்தானே அவர்கள் செய்தார்கள். கடையை விட்டு வெளியேறுவதாகச் சொன்னார்களே தவிர, செய்தார்களா? அதேபோல, அவர்கள் சொன்னது பிழை என்றால் அதை அவர்களுக்குப் புரிய வைப்பதை விட்டுவிட்டு இப்படிச் சிறு பிள்ளை போல் முகத்தைத் திருப்புகிறீர்களே.” என்று அவள் கேட்டபோது, அமைதியாகவே நின்றான் ரஞ்சன்.

 

“அன்று நான் உங்களை அடித்தேன் என்பதற்காக என்னை அடிக்கத் தயாரானவர்கள் தானே அவர்கள். அப்போது மட்டும் நல்ல நண்பர்களாகத் தெரிந்தவர்கள் உங்கள் பிழையைச் சுட்டிக் காட்டினால் மட்டும் தப்பானவர்களா?” என்றவளை வியப்போடு பார்த்தான் ரஞ்சன்.

 

“உனக்கு எப்படி அது தெரியும்?”

 

“எல்லாம் உங்கள் அருமை நண்பர் ஜீவன் அண்ணாவின் உபயம்தான்..”

 

“அதற்காக அவர்களைக் கோபிக்காதே. என்மேல் இருந்த அன்பில் தான் அப்படி ஆத்திரப்பட்டார்கள். மற்றும்படி நல்லவர்கள். விட்டால் இப்போது உனக்காக என்னைத்தான் தூக்கிப்போட்டு மிதிப்பார்கள்.” என்றவனைப் புன்னகையுடன் பார்த்தாள் சித்ரா.

 

“அவர்கள் மேல் இவ்வளவு அன்பு இருக்கிறது. பிறகும் எதற்கு வீம்புக்கு கதைக்காமல் இருக்கிறீர்கள்?”

 

“அன்பு.. அது அவர்கள் மேல் நிறையவே இருக்கிறது. ஆனால் நீ சொன்னதுபோல, நான் செய்வது பிழையாக இருந்தால் அதை எனக்குப் புரிய வைப்பதை விட்டுவிட்டு என்னை விட்டு விலக நினைத்தார்களே என்கிற வருத்தம் தான். வேறொன்றுமில்லை.” என்றவனைப் பாய்ந்துவந்து கட்டிக் கொண்டனர் நண்பர்கள் இருவரும்.

 

“சாரி மச்சான்..”

 

“சாரிடா..”

 

கீழே வேலைகளை முடித்துக்கொண்டு மேலே வந்தவர்களுக்கு ரஞ்சனும் சித்ராவும் பேசிக்கொண்டது காதில் விழுந்ததில், தங்களின் பிழையும் அவனின் கோபத்துக்கான காரணமும் புரிந்தது.

 

“டேய் முதலில் விடுங்கடா என்னை. மூச்சு முட்டுகிறது..” என்று அவர்களிடம் விடுபடப் போராடினான் ரஞ்சன்.

 

ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு நின்ற நண்பர்கள் மூவரையும் பார்க்கச் சித்ராவின் மனம் நிறைந்துபோனது.

 

“இவ்வளவு நாட்களும் பெரிய கோபக்காரன் போல் நடித்தாயேடா..” என்றபடி, சுகந்தனும் ஜீவனும் ரஞ்சனின் வயிற்றில் விளையாட்டுக்குக் குத்தினர்.

 

“டேய் விடுங்கடா.. வலிக்குது..” முகம் முழுவதும் நிறைந்த சிரிப்புடன் அவர்களிடம் இருந்து பொய்யாக விடுபடப் போராடிய கணவனைப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை சித்ராவுக்கு.

 

ரஞ்சனை அவளுக்குக் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கும் மேலாகத் தெரியும். அவ்வளவு நாட்களில் இன்றுதான் அவனை அவள் இப்படிப் பார்க்கிறாள்.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பன் பேசிவிட்ட குதூகலத்தில் அவனைப் போட்டுப் பிரட்டி எடுத்தவர்களைப் பொய்யாக முறைத்து, “போதும் போதும் நிறுத்துங்கள்! விட்டால் என் புருஷனை ஒரு வழி பண்ணிவிடுவீர்கள் போலவே! தள்ளுங்கள்!” என்ற சித்ராவின் அதட்டலில் சட்டென விலகினர் சுகந்தனும் ஜீவனும்.

 

“அது! அந்தப் பயம் எப்போதும் இருக்கவேண்டும். இல்லையானால் உங்கள் இருவரையும் மாடியிலிருந்து தள்ளிவிடுவேன்!”

 

ரஞ்சன் அவளின் பேச்சை ரசித்துச் சிரிக்க, நண்பர்களோ அவனை முறைத்தனர்.

 

“எங்கேருந்துடா இப்படி ஒரு தீவிரவாதியைப் பிடித்தாய். அன்றானால் கத்தியால் குத்திக் குடலை உருவிவிடுவேன் என்கிறாள் இன்றானால் மாடியிலிருந்து தள்ளிவிடுவேன் என்கிறாள். எங்கள் உயிருக்கு இங்கே பாதுகாப்பு இல்லை. டேய் சுகந்தா, முதல் வேலையாக யானைப்படை பூனைப்படை எல்லாவற்றையும் எங்களுக்குப் பாதுகாப்பாகப் போடவேண்டும்.” என்று கொஞ்ச நேரம் சலசலத்துவிட்டு விடைபெற்றனர் நண்பர்கள்.

 

மதியமாகிவிட்டதில் சந்தானம் தன் கடைக்குச் சாப்பிட வரும்படி அழைத்தார்.

 

“இன்று வருவது சிரமம் மாமா. கொஞ்சம் வேலைகள் இருக்கிறது. நான் நகுலனை அனுப்புகிறேன். உணவைக் கொடுத்துவிடுங்கள்.” என்ற ரஞ்சன், நகுலனை அழைத்து, “அங்கே மாமாவின் கடைக்குப்போய் உணவை எடுத்துவந்து கீழே என் அறையில் வைத்துவிடு. நாங்கள் வருகிறோம்.” என்றான்.

 

error: Alert: Content selection is disabled!!