• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Episode 19

வரம் 19
‘’நீங்க பெரியவங்க, அவங்க மூணு பேருக்கும் கொஞ்சம் புத்தி சொல்லுங்க. கலாச்சார சீர்கேடு என்பதைத் தாண்டி இது இயற்கைக்கே கலங்கம். மனுஷங்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கிற வித்தியாசமே ஒழுக்கம் மட்டும் தான். அதில் கூட ஒழுங்கு இல்லாத இவங்களை என்ன பண்றது?“ தடுமாற்றத்தோடு சொன்னாள் துவாரகா.

“இதெல்லாம் எங்களுக்கு முன்னாடியே தெரியும் மா.” அவளை விட தயங்கிக்கொண்டு பதில் சொன்னார்கள் சுரேகாவின் பாவப்பட்ட பெற்றோர்கள்.

“தெரியுமா? தெரிஞ்சும் அவங்களைக் கண்டிக்கலையா?” கோபமாகக் கேட்க, “என்ன தான் பெத்தவங்களா இருந்தாலும் ஒரு காலகட்டத்துக்கு அப்புறம் அவங்க நம்ம கட்டுப்பாட்டுக்குள் வரமாட்டாங்க. நம்மளோட அறிவுரைகளும், அதட்டலும் கூட அவங்ககிட்ட எடுபடாது.

எங்க பொண்ணு எப்பவோ எங்க கையை விட்டுப் போயிட்டா. நாளும் பொழுதும் இப்படியொரு பொண்ணைப் பெத்து வைச்சிருக்கோமேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். ஊர் ஜனத்துக்கு பயந்து அவளைக் கைவிடாம இருக்கோம். ஆனா ஒருவகையில் இதுதான் அவளை மாதிரியான ஆட்களுக்கு தைரியத்தை கொடுக்குதுன்னு நினைக்கும் போது வெட்கமா இருக்கு.

நீ ரொம்ப நல்ல பொண்ணு. இதுக்கு மேலும் அந்த வீட்டில் இருக்காத. இப்படி ஒரு பிழைப்பு பிழைக்கிறதுக்கு உன் அம்மா வீட்டில் வாழாவெட்டிங்கிற பேரோட இருந்திடலாம். அசிங்கம் னு தெரியாத வரை அது பக்கத்தில் இருக்கிறது தப்பு கிடையாது. ஆனா தெரிஞ்ச பிறகு விலகிக்கிறது தான் நல்லது.” என்றுவிட்டு கிளம்பினர் அவர்கள் இருவரும்.

அன்றைய இரவில் அவள் உறங்கிவிட்டாள் என நினைத்துக்கொண்டு நந்தினிக்கு அழைத்து மிரட்டிக்கொண்டிருந்தான் மாயவன். இவன் இந்த வேலை வேறு செய்கிறானா? இவள் ஒருவள் தானா இல்லை இன்னும் பலர் இருப்பார்களா? போயும் போயும் இவனிடமா நம் வாழ்க்கை சிக்கிக்கொள்ள வேண்டும் என யோசித்தபடியே அங்கிருந்த தினங்கள் அனைத்தையும் கடத்தினாள் துவாரகா. அவளுக்குள் சிறிது சிறிதாக தெளிவு பிறந்து கொண்டிருந்தது. சரியான முடிவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தாள்.

வேலைகளை இதற்கு மேலும் கைவிட முடியாது என நால்வரும் ஊர் திரும்பிய நேரம், துவாரகாவின் மூளைக்குள் இருந்த ஒரே விஷயம் எப்படியாவது இந்த வீட்டை விட்டு வெளியேறி தாத்தா வீட்டிற்குச் சென்றுவிட வேண்டும். நடந்தது எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லிவிட்டால் அடுத்து நடக்க வேண்டியதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்பது மட்டும் தான்.

பயண அலுப்பில் சுரேகா, பத்மன் இருவரும் அறைக்குள் சென்றுவிட, மாயவன் மட்டும் வேகமாக எங்கோ கிளம்பிச் செல்வதைப் பார்த்தாள் துவாரகா. அவளுக்கு சந்தேகமாக இருக்க, அவன் அறியாமல் அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். நடந்து சென்ற அவன் தங்கள் வீடு இருக்கும் தெருமுனையில் நந்தினியைச் சந்தித்து அவளிடம் இருந்து ஒரு பை நிறைய பணத்தைப்பெற்றுக்கொள்வதைப் பார்த்தாள்.

துவாரகாவிற்கு அவள் யார் என்று யூகிக்க நெடுநேரம் பிடிக்கவில்லை. நந்தினியைப் பார்க்கும் போது பாவமாக இருந்தது. இருந்தாலும் இந்த நேரம் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தவள் சென்றது போல திரும்ப வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அன்றைய இரவில் பத்மனுடைய கட்டளையின் பெயரில் துவாரகாவை அவன் அறைக்குப் போகச் சொல்லி மாயவன் கட்டாயப்படுத்த, முடியவே முடியாது என்று ஸ்டோர் ரூமிற்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள் அவள். அந்த வீட்டில் வெளியே இருந்து திறக்க முடியாதபடி தாழ்ப்பாள் கொண்ட ஒரே அறை அதுதான் என்பதை சமீபத்தில் கவனித்து வைத்து, பிரச்சனை வந்தால் இங்கே பதுங்கிக்கொள்ள வேண்டும் என நினைத்திருந்தவள் சமயத்தில் அதை செயல்படுத்தியும் கொண்டாள்.

“இன்னும் எத்தனை நாள் ஓடி ஒளிவ. எப்படி இருந்தாலும் நாங்க உன்னை இந்த வாழ்க்கைக்கு பழக்காம விடப்போறது இல்லை.” என்று வெளியே நின்று அண்ணன் தம்பி இருவரும் அதட்ட நொந்து போனாள் துவாரகா.

இன்றைய இந்தச் செயலுக்கு நாளை காலையில் மாயவன் கொடுக்கப்படும் பெல்ட் அடியை நினைத்து உடம்பு நடுங்கத்தான் செய்தது. ஆனால் இந்தக் கேவலத்திற்கு அந்த அடி எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் பயத்தோடு மிக மெதுவாக கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தவளைக் காக்க வந்த கடவுள் போல நடுஹாலில் ராஜாவின் தோரணையில் அமர்ந்திருந்தான் நவநீதன்.

“மச்சான்.” கடவுளையே பார்த்தது போல் ஆனந்தக் கூச்சல் இட்டபடி வந்த துவாரகா அவன் அருகே பாதுகாப்பாக நின்றுகொண்டாள். ஒரு ஆண்மகனைக் கண்டு அவள் கொண்ட உவகை மாயவனை கடுமையாக கோபமேற்றியது. இருந்தாலும் அமைதியாக நின்றான்.

நவநீதன் என்ன தான் அமைதியாக இருக்க முயன்றாலும் மாயவனைப் பார்க்க பார்க்க அவன் தலையை சுவற்றில் அடித்துக் கொல்லும் வெறி உள்ளுக்குள் அதிகமாக இருந்தது. இருந்தாலும் முதலில் துவாரகாவை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என தன்னைத் தானே தேற்றிக்கொண்டவன், “துவாரகா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அன்னைக்கு உன்னைப் பார்த்துட்டு திரும்ப போகும் வழியில் அத்தைக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. அப்பவே உன் புருஷனுக்கு தகவல் சொன்னோம். இதோ வரேன்னு சொன்னவன் இன்னும் வரல.” என்று வேகவேகமாக சொன்னவன் இந்த இடத்தில்சற்றே தடுமாறி, “இப்ப அத்தை நம்ம கூட இல்ல.” என்று முடிக்க, நின்ற இடத்திலேயே அம்மா எனக் கத்தி அழுதாள் துவாரகா.

இந்நாள் வரை உடலாலும், மனதாலும் அந்த வீட்டில் அவள் அனுபவித்த கொடுமைகளைத் தாண்டியும் அவள் அந்த வாசல்படியைத் தாண்டாமல் இருந்தது அந்த ஒற்றை ஜீவனுக்காக அல்லவா? ஒழுங்கான குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருந்தால் மகளையும் ஒழுங்காக வளர்த்திருப்பாள் என ஊர்மக்கள் தன் தாயை பழிசொல்லிவிடக்கூடாது என்பதற்காக அவள் சகித்தவை ஏராளம். தாயின் நிம்மதிக்காக அவள் துக்கங்களை அனுபவித்தால், மகளின் சந்தோஷத்திற்காக அவர் தன் உயிரையே கொடுத்திருக்கிறாரா என அவள் உள்ளம் கிடந்து அரற்றியது.

“ஒரு மாசத்துக்கு தேவையான ட்ரஸ் எடுத்துக்கிட்டு என்னோட வா. மிஸ்டர் மாயவனும் அவர் அண்ணனும் இத்தனை நாளா பார்த்த அதே முக்கியமான வேலையைப் பார்க்கட்டும்.” ஒவ்வொரு வார்த்தையாக கடித்து துப்புவது போல் பேசினான் நவநீதன்.

“நீங்க அவளுக்கு மாமா பையனா இருக்கலாம். அதுக்காக என் முன்னாடியே என் பொண்டாட்டிகிட்ட இத்தனை உரிமை எடுத்துப் பேசுறது எனக்குப் பிடிக்கல.” என்று மாயவன் கோபம் கொள்ள, “உனக்கு அவளைத் தெரியும் முன்னாடியே எனக்கு அவளைத் தெரியும். உன்னை விட எனக்கு அவ மேல அக்கறையும், அன்பும் அதிகம்.” என்றவன், அவ மேலான உரிமையையும் சீக்கிரம் உன்கிட்ட இருந்து மொத்தமா பறிக்கிறேன் என தன்னோடு நினைத்துக்கொண்டான்.

சரியில்லாத மனநிலையோடு தான் துவாரகா அறைக்குள் வந்தது. அவள் கண் எதிரில் மாயவன் நந்தினியிடம் இருந்து வாங்கி வந்திருந்த பணம் நிறைந்த பை இருக்க, என்ன நினைத்தாளோ உடைகளுக்குப் பதில் பணம் இருக்கும் பையை எடுத்துக்கொண்டாள்.

சென்ற வேகத்தில் பையோடு அவள் வெளியே வந்தது மாயவனுக்கு கோபத்தை கிளப்ப அவள் புஜத்தை இறுக்கிப் பிடித்தவன், “என்ன உன் வீட்டு ஆளைப் பார்த்ததும் தைரியம் வந்திடுச்சா. ஒழுங்கா அவனை தனியா போகச் சொல்லிட்டு என்னோட வர. இல்ல என்ன செய்வேன்னு உனக்கே தெரியும்.” அவர்களை விட்டு சற்று தொலைவில் இருந்த செல்போனை கண்ஜாடை காட்டியபடி சொல்ல, துளி கூட பயம்கொள்ளவில்லை துவாரகா.

அன்பு ஒருநாள் கூட அவன் மேல் உருவாகியது இல்லை. அப்படிச் சொல்வதை விட உருவாகும் அளவு அவன் நடந்துகொண்டது இல்லை. மரியாதை என்றோ பறந்து போய் இருந்தது. பயம் கொஞ்சம் இருந்தது. ஆனால் தன் தாயின் உடல்நிலையைக் கூட தன்னிடம் இருந்து மறைத்தானே என்னும் கோபத்தின் முன்னால் அந்த பயம் வெகுநேரம் நீடிக்கவில்லை.

கண்களில் துளிகூட பயம் இல்லாமல் மாயவனையே அவள் பார்த்தபடி நிற்க, மாயவனுக்குள் சின்னதாய் தடுமாற்றம். துவாரகாவின் மனபலம் அதிகரித்திருப்பதை உணர்ந்தவனுக்கு அது தனக்கு ஆபத்து என்றே தோன்றியது. கோபமாக அவன் ஏதோ சொல்ல வந்த வேளையில் தான் அவனை நெருங்கிய நவநீதன் ஒரு வித அழுத்தமான பிடியுடன் மாயவனின் கரத்தை துவாரகாவின் தோளில் இருந்து எடுத்துவிட்டவன், அவன் கண் முன்பே தன் அத்தை மகளின் கரத்தை கெட்டியாகப்பிடித்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

செல்லும் வழி எங்கும் சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்த துவாரகா தனக்கு அருகே கேட்பாரற்றுக் கிடந்த நவநீதன் செல்போனில் நந்தினிக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள். மாயவனின் செல்போனில் இருந்து நந்தினியின் எண்ணை மனப்பாடம் செய்து வைத்திருந்தது சரியான நேரத்தில் உதவி செய்தது. வீட்டிற்கு செல்லும் வழியில் கண்ணுக்குத் தென்பட்ட டீக்கடை ஒன்றில் காரை நிறுத்தச் சொல்ல சந்தேகத்துடன் தான் நிறுத்தினான் நவநீதன்.

அவனை ஏதோ வாங்கி வரும் சாக்கில் உள்ளே அனுப்பிவிட்டு முகத்தை மூடியபடி சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த நந்தினிக்கு பணம் இருந்த பையைக் கொடுத்திருந்தாள் துவாரகா.

“உங்க அம்மாவோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பார்த்தேன். அன்னைக்கு உண்மை தெரிஞ்சு என் கண்ணு முன்னாடி தான் அழுதுகிட்டே போனாங்க. அவங்களுக்கு இப்படி ஆகும் னு நான் எதிர்பார்க்கல. கடவுள் கைவிட்ட உன்னை கார்டியன் ஏஞ்சலா இருந்து அவங்க இனி பார்த்துப்பாங்க. இன்னைக்கு அந்த வீட்டை விட்டு வெளியே வந்த நீ, எந்தக் காரணத்துக்காகவும் பழையபடி அங்க போயிடாத. எனக்கு நல்லது நினைச்ச உன்னோட நல்லதுக்கு சொல்றேன்.” என்றுவிட்டு அகன்று சென்றாள் நந்தினி. நவநீதனும் வந்து சேர அவர்கள் இல்லம் வந்து சேர்ந்தனர்.

துவாரகாவின் உயிரை உருக்கும் அழுகைக்கு மத்தியில் மாதங்கியின் இறுதி ஊர்வலம் நடந்தது. திருமணம் ஆன பெண்ணுக்குச் செய்யப்படும் அனைத்து நடைமுறைகளையும் செய்து கௌரவமாக வழியனுப்பினான் நவநீதன். அத்தையைக் கைவிட்ட அவரின் தொடைநடுங்கி கணவன் பைரவன் என்பவரையும் நேரில் பார்த்து காய்ச்சி எடுத்திருந்தான்.

“என்னோட இரண்டாவது மனைவிக்கு நடந்த எல்லாம் தெரியும். உன்னோட தாத்தா அவளுக்கு கல்யாணம் ஆகி புருஷன் கைவிட்டுட்டான்னு சொல்லி இருந்தா கண்டிப்பா துவாரகா பிறந்த நேரம் அவ என்னோட குழந்தைன்னு சொல்லி இருப்பேன். ஆனா மாதங்கி பலவந்தப்படுத்தப்பட்டான்னு சொன்ன பிறகு, நான் எப்படி அவளோட அப்பான்னு சொல்ல முடியும். அது எனக்கு அசிங்கம் இல்லையா?” என்க, தாத்தாவின் மீது இருந்த கோபம் இன்னமும் தான் அதிகமாகியது நவநீதனுக்கு.

இழவு முடிந்த அடுத்த நாள் வந்து நின்றான் மாயவன். “அவளைப் பார்த்தீங்க தானேம்மா. பிரம்மை பிடிச்சவ மாதிரி இருக்கா. இந்த நேரம் அவளை அங்க அனுப்பி அவங்க என்னன்னு பார்த்துப்பாங்களோ. இங்கேயே இருக்கட்டும்.” என்று நவநீதன் அஞ்சனையிடம் சொல்ல, அவரும் மாயவனிடம் திட்டமாக மறுத்திருந்தார். இப்படி ஒவ்வொரு முறை மாயவன் வரும் போது ஏதாவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி மூன்று மாதங்களாக அவளைத் தன் வீட்டில் தன்னுடனே வைத்துக்கொண்டான் நவநீதன். அப்படியான நிலையில் தான் அவள் கருவுற்று இருந்தது தெரிந்தது.

உரிமையோடு பலவந்தப்படுத்திய ஒருவன், உரிமையில்லாமல் உயிரோடு கொன்ற ஒருவன் என இருவரில் யார் குழந்தை என்று தெரியாமல் அவள் அழ, என்ன வேலையாக இருந்தாலும் அவள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருந்த நவநீதன் இதைக் கவனித்து என்னவென்று கேட்க, காத்திருந்த வேளை வந்ததாய் ஆதி முதல் அந்தமாய் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்திருந்தாள் துவாரகா.

எல்லாம் ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அவளாகச் சொல்லும் போது அவள் மனபாரம் கொஞ்சம் குறையும் என்பதால் அமைதியாகக் கேட்டுக்கொண்டான் நவநீதன்.

அவளுடைய எதிர்காலம் தான் தான் என்று எப்படி ஒரு நொடியில் தீர்மானித்தானோ அதைப் போல் ஒரு நொடியிலே இந்தக் குழந்தை அவளுக்கு வேண்டாம் என்பதையும் தீர்மானித்தான்.

மாயவனிடம் இருந்து அவளை மொத்தமாக பிரிப்பதற்கும், தன்னோடு அவளை இணைத்துக்கொள்வதற்கும் என்ன வழி என்று யோசித்தவனுக்கு கண்ணுக்கு எட்டிய ஒரே வழியாக ஊர் பஞ்சாயத்து மட்டுமே தெரிய, திட்டம் போட்டு காய் நகர்த்தி சாதித்தும் காட்டி இருந்தான்.
 

Gowri Karthikeyan

Well-known member
அவளை அந்த அரக்கன் கிட்ட இருந்து பிரிக்கிறது சரி தான்.....ஆன இப்படி அவ பேரில் அவ சொல் வெச்சி இப்படி பண்ணி இருக்க வேணாம் இல்ல....
 

ஷமீம்

Well-known member
அவளை அந்த அரக்கன் கிட்ட இருந்து பிரிக்கிறது சரி தான்.....ஆன இப்படி அவ பேரில் அவ சொல் வெச்சி இப்படி பண்ணி இருக்க வேணாம் இல்ல....
வேறு வழியும் இல்லையே..ஒரே வழி உண்மையை சொல்வது..அது முடியாது என்பதால் இருவருக்கும் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டான்
 

Gowri Karthikeyan

Well-known member
வேறு வழியும் இல்லையே..ஒரே வழி உண்மையை சொல்வது..அது முடியாது என்பதால் இருவருக்கும் கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டான்
சரி தான் sis....but பாவம் இல்ல அவளும்....எவளோ தான் தாங்குவா
 
Top Bottom