என் மன்னவன் நீதானோ - 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,569
6,512
113
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 18

இவ்வாறு மாதம் ஒன்று கடந்துவிட்டது. பத்மாவும் நன்கு தேறி விட்டார். என்னதான் அவர் உடலளவில் தேறினாலும் மனதளவில் அவருக்கு பெரும் குறை இருக்கத்தான் செய்தது. எல்லாம் தன் ஒரே மகனை பற்றியது தான். அகிலனுக்கு நல்ல வரன் அமையவில்லை என்ற கவலை போய், சௌமிகாவை அவன் மறுக்கிறான் என்பதில் அவருடைய மனதில் பெரும் வருத்தம் இருந்தது. சௌமியும் அடிக்கடி அவரின் நலன் விசாரிப்பதற்காக போன் செய்யும் போது அவரால் அவள் தன்னிடம் விடுத்த கோரிக்கைக்கு அவளுக்கு சாதகமான பதிலை வழங்க முடியவில்லை என்பதில் அவர் மிகவும் வருத்தமடைந்தார்.

பத்மா இந்தளவு மனக் குறையுடன் இருப்பது தெரியாததாலோ அல்லது தன்னுடைய கையில் எதுவும் இல்லை என்பதாலோ சகலதையும் பார்த்துப் பார்த்துச் செய்த அகிலனும் அவரது மனக் கவலையை போக்குவதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

அன்றிரவு அகிலனும் பத்மாவும் சாப்பிட்ட பின்னர், இருவரும் கதைத்துக் கொண்டிருந்த போது, “தம்பி, நான் ஒருக்கா சகுந்தலாவோட உன்ர கல்யாணத்தைப் பற்றி கதைக்கட்டுமா…?” எனத் தயங்கித் தயங்கி கேட்டவரிடம், அவன் என்ன கூறப்போறானோ என்ற கலக்கம் இருந்தது.

அவரைப் பார்த்தவனுக்கு அவரின் முகத்திலும் குரலிலும் இருந்த தயக்கத்தையும், கவலையையும் கவனித்தவன், அவரின் மனதை நோகடிக்க விரும்பாமல் “உங்கள் விருப்பப்படி செய்யுங்கம்மா…” என்றான்.

அவன் கூறியதைக் கேட்டவருக்கு, பெரும் ஆறுதலாக இருந்தது. “சரி தம்பி…, நான் நாளைக்கு கதைக்கிறன், நீ ஒண்டும் யோசிக்காதே....” என்றவர், கதிரையில் இருந்து எழுந்தவாறு “நான் தூங்கப் போறன்” என்று விட்டு தனது அறைக்கு மன நிறைவுடன் சென்றார்.

இவ்வளவு நாளும் ஒரு சில நேரங்களில், ஏதோ சிந்தனையுடனும் சோர்வுடனும் இருந்தவர், இப்போது உற்சாகத்துடன் செல்வதைப் பார்த்தவனுக்கும் சற்று ஆறுதலாகத் தான் இருந்தது.

பத்மா, அடுத்த நாள் அகிலன் பல்கலைக்கு புறப்பட்டுச் சென்ற பின்னர், தனது வேலைகளையும் முடித்து சாப்பிட்ட பின்பு சகுந்தலாவுக்கு அழைப்பை ஏற்படுத்தினார்.

நலம் விசாரிப்புகள் முடிவடைந்த பின்னர், “சகுந்தலா…, நான் உன்னட்டை ஒரு விஷயம் கேக்கணும்…” என இழுத்தார் பத்மா,

“என்னட்ட கேக்குறதுக்கு ஏன் யோசிக்கிறாய் பத்மா…” எனக் கேட்டார் சகுந்தலா

“நான் இதைக் கேட்கிறதுக்கு நீ என்னைத் தப்பா நினைக்கக் கூடாது”

“நான் ஏன் உன்னை தப்பா நினைக்கப் போறன்...., அப்படி என்ன விஷயம்…?” என வினாவினார்.

“நீ என்ன பதில் சொன்னாலும் பிரச்சனை இல்லை…, நான் ஒண்டும் நினைக்க மாட்டேன்”

“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு…, தயங்காமல் கேள் பத்மா”

“அகிலனுக்கு… நம்ம சௌமியை செய்ய எனக்கு விருப்பமா இருக்கு…” என்றார் சற்றுத் தயங்கியவாறு.

“இதுக்கு ஏன் இவ்வளவு தயங்குறாய்…?” என செல்லமாக கண்டித்துக் கொண்டு “அகிலனுக்கு சௌமியை பிடிச்சிருக்கா....?” என ஓர் வித எதிர்பார்ப்புடன் கேட்டார்.

“அவனுக்கு பிடிச்சிருக்கோ… இல்லையோ… எனக்குப் பிடிச்சிருக்கு…”

“இதில அவையள் இரண்டு பேரோட விருப்பமும் அவசியம் பத்மா…” என்றார் சகுந்தலா.

“சௌமிக்கும் அகிலனைப் பிடிக்கும் எண்டு நினைக்கிறன்…”

“ஏன் அப்படிச் சொல்லுறாய் …?” எனக் கேட்டார் ஆர்வத்துடன்.

“சௌமின்ர நடவடிக்கைகளை வைச்சுத்தான் சொல்லுறன்” என்றார் அவளை காட்டிக் கொடுக்காமல்.

“சரி …, நான் சௌமியை கேக்கிறன்…, ஆனால் கமலா வீட்டுக்காரர் டாக்டர் மாப்பிளையை தான் பார்க்கிறார்…, அதுவும் நாலைந்து வயது வித்தியாசத்தில்…, அதால தான் கொஞ்சம் யோசிக்கிறன்…”

“ஓ…” என இழுத்த பத்மாவின் குரலில் கொஞ்சமும் உற்சாகம் இல்லை.

“நீ எதுவும் யோசிக்காதே பத்மா...., நான் கமலாவோட கதைச்சிட்டு சொல்லுறன். சௌமி, அகில கட்டினால் சந்தோசப்படும் முதல் ஆள் நான் தான்…” என தன் விருப்பத்தையும் கூறியவர் தொடர்ந்து, “நான் இதைப்பற்றி எந்த நாளும் யோசிக்கிறனான். ஆனால் கமலா வீட்டுக்காரரின்ர விருப்பம் தெரிஞ்சதால தான் என்னால எதுவும் மேற்கொண்டு செய்ய முடியேல்ல…, ஆனால் அகிலுக்கும் சௌமிக்கும் விருப்பம் எண்டால், நான் முன் நின்று எல்லாத்தையும் நடத்துவன்” என்றார்.

“ம்…” என்றவரின் குரலில் ஏமாற்றம் வெளிப்படையாகத் தெரிந்தது.

“நீ அகிலோட கதைச்சனீயா…?” எனக் கேட்டார் சகுந்தலா.

“அவனோட கதைக்க என்ன இருக்கு…?” என ஒரு விதமான சோர்வுடன் கூறியவர் தொடர்ந்து, “உங்கட பக்கத்தில இருந்து சாதகமான பதில் கிடைக்குமாக இருந்தால், நான் அவனோட கதைக்கலாம்” என்றார் பத்மா.

“அகிலுக்கு சௌமியை கட்ட இஷ்டம் என்றால் நான் எப்பாடுபட்டாவது இந்தக் கல்யாணத்தை நடத்துவன்” என்றார் உறுதியாக.

“அவனுக்கு சௌமியை பிடிக்கும் எண்டு தான் நினைக்கிறன்…” என இழுத்தவர், “அவன் வயசு வித்தியாசம் கொஞ்சம் இருக்கு, மற்றது நீங்கள் என்ன சொல்றீங்களோ எண்டு தான் யோசிக்கிறான் போல…” என்று கூற,

“சரி…, நீ ஒண்டும் யோசிக்காதே…, நான் எல்லாத்தையும் பார்க்கிறன்” என ஆறுதலளித்தார் சகுந்தலா.

“ம்....”

“நான் கமலாவோட கதைச்சிட்டு கூப்பிடுறன்” என்றவாறு கைப்பேசியைத் துண்டித்த சகுந்தலா கணவரிடமும் இதைக் கூறி விட்டு, நேராக கமலா வீட்டுக்கு சென்றார்.

அங்கே மதியச் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கமலாவிடம் நேரடியாகவே “கமலா…, பத்மாவின்ர மகன் அகிலனை பற்றி என்ன நினைக்கிறாய்…” எனக் கேட்டார்.

அவர் ஏன் திடீரென வந்ததும் வராததுமாக எப்படி கேட்கிறார் என நினைத்தாலும் “அந்தத் தம்பி நல்ல பொறுப்பான பிள்ளை, கெட்டிக்காரன்…” என்றவாறு தமக்கையை பார்த்தார்.

“அகில் என்ர கண் முன்னால வளர்ந்தவன்… என்ர பிள்ளை மாதிரி…” என்றார் சகுந்தலா.

தமக்கை என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் “ம்…” என்றார்.

“பத்மாவுக்கு சௌமியை பிடிக்கும், ‘அகிலுக்கு சௌமி நல்ல பொருத்தமானவள்’ என்று நினைக்கிறாள்” என்றவாறு கமலாவை பார்த்தார் சகுந்தலா.

சிறு வியப்புடன் தமக்கையை பார்த்த கமலா “அந்த தம்பிக்கு முப்பத்தி ஐந்து வயதுக்கு கிட்ட இருக்கும்…, சௌமிக்கு இப்பத்தான் இருபத்தி மூன்று வயது நடக்குது… இது எப்படி சரி வரும் அக்கா…?” எனக் கேட்டார்.

“அவனுக்கு இப்பத்தான் முப்பத்தி மூண்டு வயசு முடிஞ்சது, ஆனால் அவனைப் பார்த்தால் அப்பிடியா தெரியுது…? இப்பத்தான் கம்பஸில படிக்கிறவன் மாதிரி தான் இருக்குது…” என்றார் சகுந்தலா.

“அது சரியக்கா… ஆனால் ஏன் அவ்வளவு வயது வித்தியாசத்தில செய்யோணும்” என்றவர் தொடர்ந்து, “நாங்கள் ஒரு டாக்டர் மாப்பிள்ளையைத்தான் பார்க்கிறோம்.. அந்த தம்பியை செய்தால் அவள் கொழும்பில அல்லோ இருக்கோணும்… இனியும் அவளை விட்டு பிரிஞ்சு எங்களால இருக்க ஏலாது… அதோட இப்ப உடனடியாக சௌமிக்கு கலியாணம் செய்யோணும் எண்டு ஒரு அவசரமும் இல்லையே… ” என தனது மறுப்பை நாசூக்காக தமக்கையிடம் தெரிவித்தார்.

“வயசை பற்றி நீ பெரிசா யோசிக்காதே கமலா…, அகில் சரியான கெட்டிக்காரன்… நிறைய சம்பாதிக்கிறான்… நல்ல குணமான பிள்ளை… சௌமியை நல்லா பாத்துக் கொள்ளுவான்…எங்களுக்கு நல்லா தெரிஞ்ச பிள்ளைக்கு சௌமியை கட்டிக் கொடுத்தால் நாங்களும் நிம்மதியாக இருக்கலாம்… பத்மாவும் சௌமியை தன்ர சொந்த மகள் போல பார்ப்பாள். டாக்டர் தான் வேணும் எண்டு நிக்காமல் லோயரையும் பாக்கலாம்… கொழும்பு என்ன பெரிய தூரமா…? இரவு வெளிக்கிட்டால் காலைல போகலாம்…” எனத் தனது விருப்பத்தை சகுந்தலா கூறினார்.

“ஏன் அக்கா..., சௌமியா அந்த தம்பிக்கு கட்டி கொடுப்பதில் உனக்கு விருப்பமா…?” எனக் கேட்டார் கமலா.

“ஓம் எனக்கு சௌமியை அகிலுக்கு கட்டி வைக்கிறதுல நல்ல விருப்பம்” என்றார் சந்தோசத்துடன்.

“சரி… இவர் வந்தப்பிறகு இவரோட கதையுங்க… இதுல சௌமியின்ர விருப்பம் எனக்கு முக்கியம்” என்றார் கமலா.

“சரி நான் எல்லோருடனும் கதைக்கிறன்…, சௌமி எங்க…?” எனக் கேட்டார்.

“அவள் பின்னால கிணத்தடியில நிக்கிறாள், உடுப்பு கழுவுகிறாள் எண்டு நினைக்கிறேன்” என்றார் அவர்.


“சரி நான் அவளோடும் ஒருக்கா கதைச்சு போட்டு போறன்…, பத்மா இதைப்பற்றி கேட்டவுடன் அங்க வேலைகள் எல்லாத்தையும் அப்படியே போட்டுவிட்டு வந்திட்டன்… பின்னேரம் வாறன்…” என்றார் அவர்.

“அக்கா… சௌமியிட்ட இப்ப இதைப்பற்றி ஒண்டும் கேட்க வேண்டாமே… முதல் இவரோட கதைச்சிட்டு இவர் என்ன சொல்லுறார் எண்டு பார்த்து போட்டு கதைப்பம்” என்றார் கமலா.

“ம்ம்…” என சற்று நேரம் சிந்தித்தவர் “இந்த சம்ந்தத்துல சௌமிக்கு விருப்பம் இல்லை எண்டால் நாங்கள் இதைப்பற்றி மேற்கொண்டு கதைக்க தேவையில்லை அல்லோ… அதால அவளின்ர மனசுல என்ன இருக்கு எண்டு முதல்ல பார்ப்பம்” என்றார் சகுந்தலா.

“எல்லாத்தையும் ஒண்டுக்கு இரண்டு தடவையா சோசிச்சு செய்யுங்கோ அக்கா…” என்றார்.

“ம்.. வாறன்” என்றவாறு கிணற்றடிக்கு வந்த அவர் “சௌமி, அகிலனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்…?” எனக்கேட்டார்.

பெரிய தாயார் வந்ததும் வராததுமா இவ்வாறு கேட்டவுடன் மனதில் சிறு பதட்டம் ஏற்பட மௌனமாக நின்றாள். “சௌமி…” என அழைத்தார் சகுந்தலா.

“பெரியம்மா… ”என்றாள் மெதுவாக.

“இண்டைக்கு காலையில பத்மா போன் பண்ணி, அகிலுக்கு உன்னை கேட்டவள்…, அதுதான் நான் உன்னட்டை கேக்குறன்” என்றார் அவர்.

“...”

“என்ன சௌமி ஒண்டும் சொல்லாமல் நிக்குறாய்..?”

“பெரியம்மா…” என்றாள் அவள்.

“நாங்கள் பத்மாவை கன நாளைக்கு காக்க வைக்க முடியாது…, நீ ஏதாவது சொன்னால் தான் நான் அப்பாவோட கதைச்சு போட்டு பத்மாவுக்கு பதில் சொல்லணும்…”

“ம்…”

“எங்களுக்கு உன்ர விருப்பம் தான் முக்கியம்… நீ நல்லா சோசிச்சுட்டு சொல்லு..”

“ம்…” எனவும், சகுந்தலா வேறு ஏதோ கேட்க, அவளின் சிந்தனை எங்கோ இருந்தது. அதைப் பார்த்தவர் “சௌமி என்ன யோசனை…?” வினாவினார்.

தான் ஏன் நேரம் எடுத்து எல்லோரையும் காக்க வைக்க வேண்டும் என எண்ணியவள், பெரிய தாயார் என்ன நினைப்பாரோ என்ற தயக்கம் இருந்தாலும் துணிவை வரவழைத்து கொண்டு “எனக்கு அகிலனைப் பிடிக்கும் பெரியம்மா…” என்றாள் சிறு குரலில்.

அவளின் குரலில் தெரிந்த உறுதியையும் முகத்தில் இருந்த தெளிவையும் கண்டவர் “என்ன சொல்லுறாய் சௌமி…?” என நம்பாமல் கேட்டார்.

‘ஓம்’ என்பது போல அவள் தலையை அசைத்தாள்.

பத்மா கூறியதிலிருந்து சிந்தனை வயப்பட்டிருந்த சகுந்தலா எதிர்பார்த்திருந்த பதில் தான் இது என்பதில் அவருக்கு வியப்பு ஏற்படவில்லை, ஆனந்தம் ஏற்பட்டது.

“அகிலனை நீ கட்டினால் பத்மாவுக்கு அடுத்து நானும் சந்தோசப்படுவேன்…” என்றவர் ஏன் நீ முதலே என்னட்டை சொல்லேல…?” வினாவினார்.

“படித்துக் கொண்டிருக்கும் போதே நான் ஒருத்தர காதலிக்கிறன் எண்டு சொல்லுறது எனக்கு சரியாப்படேல்ல…, நீங்களும் இதை எப்படி எடுப்பீங்க எண்டும் எனக்குத் தெரியாது தானே…, நீங்கள், அம்மா அப்பாவுக்கு சொன்னால் அவை கண்டிப்பாக இதை விரும்ப மாட்டினம் எண்டும் எனக்குத் தெரியும். நான் இதை சொல்லி, நீங்கள் அகிலோட நான் பழகுவதை விரும்பாட்டி எனக்கும் அவரைப்பற்றி அறிய ஏலாமல் போயிருக்கும்… இப்படி எல்லாத்தையும் யோசிச்சு தான் சொல்லல பெரியம்மா… உண்மையா சொறி பெரியம்மா” என்றாள் சௌமி.
“ம்…, அகிலுக்கும் உன்னை பிடிக்குமா…?” எனக் கேட்டார்.

“அது எனக்குத் தெரியாது பெரியம்மா…”

“நீ, அவனோட கதைக்கேல்லையா..?”

“கதைத்தனான்…” என்று, தான் அவனிடம் கதைத்ததையும் அவனின் மறுப்பையும் அதற்கு அவன் கூறிய காரணங்களையும் சுருக்கமாக சௌமி கூறினாள்.

“ஓ… அப்பிடியா சொல்லுறான்… சரி நான் அவனோட கதைக்கிறன்…” என்றவர் “பின்னேரம் வந்து உன்ர அப்பாவோட கதைக்கணும், சமையல பாதியில விட்டுட்டு வந்தனான், வாறன்” என்று விட்டு தனது வீட்டுக்கு சென்றார்.
 

Author: Vishakini
Article Title: என் மன்னவன் நீதானோ - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
இப்ப அகி தான் விட்டு கொடுத்து போகும் படி இருக்கு அவன் அம்மாக்காக.....
இப்படி தான் சம்மதிச்சென்னு சொன்ன இவ என்ன செய்வா????
 
  • Like
Reactions: STN - 78

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online