தகிக்காதே குளிர் நிலவே - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,564
6,484
113
அத்தியாயம் -5

அவளோ கோபத்துடன் அவனை முறைத்து விட்டு, “ கொஞ்சம் கூட அறிவில்லையா உங்களுக்கு..? எல் கே.ஜி குழந்தை மாதிரி பிஹேவ்‌ பண்ணிட்டு இருக்கீங்க..? எவ்வளவு நேரம் ஆனாலும் சரி சி.எஸ் ஃபார்மாவோட ப்ராஜெக்ட் கோடை எழுதி முடிச்சிட்டு தான் போறீங்க…காட் இட். இப்ப நீங்க போகலாம். இங்க நின்னு நேரத்தை வீணடிக்காம போய் வேலையை பாருங்க…” என்றாள் கடுப்புடன்.

அமுதனும் அருண்மொழியும் ஒருவரை ஒருவர் பார்த்து சலித்துக் கொண்டே வெளியே வந்தனர்.

பாரதி தனது கேபினை சரி செய்து விட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

“ அடிப்பாவி மணி ஆறு கூட ஆகலை. அதுக்குள்ள நீ கிளம்பிட்டியா..?” என்றபடி அவளது தலையில் அடித்தான் அருண்மொழி.

“ ஏய்..! தலையில அடிக்காதன்னு எத்தனை தடவை சொல்றது. ம்ம்ச்…கையை எடு டா. “ என்றவள் , “என்ன மேடம் கிட்ட நல்ல டோஸ் வாங்கினீங்களா..?டேய்..! அமுதா…உனக்கு உன்‌ ஆளை கரெக்ட் பண்ணனும்னா நீ போறேன் டா…அதுக்கு ஏன் அருணையும் இழுத்துட்டு போற..?” என்றாள்.

“ ஏய்..சீ..பே…!” என்று பாரதிக்கு பழிப்பு காட்டிவிட்டு சென்றான் அமுதன்.

தனது இருக்கைக்கு வந்தமர்ந்த அருண்மொழி கணினியை இயக்கினான்.

பாரதி அவனை தலை முதல் கால் வரை பார்வையால் அலசினாள்‌

கணினியை பார்த்துக் கொண்டே இருந்தவன்,” என்ன‌ பாரதி…? எனக்கு எவ்வளவு மார்க் போடுவ?” என்றவனின் குரல் கேட்டு சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டாள் ,

“ஒண்ணு…ஒண்ணுமில்ல அருண்.. இப்ப கோட் எழுத ஆரம்பிச்சா லேட் ஆயிடுமே‌‌..! “ என்றாள் கைப்பையை எடுத்தபடியே.

“ தட்ஸ் ஓகே பாரதி. நோ ப்ராப்ளம் நா சீக்கிரம் முடிச்சிடுவேன். நீ கிளம்பு.” என்றான் பார்வையை கணினியிலிருந்து அகற்றாமலே.
ஒரு பெருமூச்சுடன் அவனைப் பார்த்து விட்டு வெளியேறினாள்.

அமுதன் , அருண்மொழி மற்றும் நந்தினி மட்டுமே இருந்தனர் அலுவலகத்தில் .

மணி ஒன்பதைத் தாண்டியும் வேலை முடியவில்லை. நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான் அருண்மொழி.
“ டேய்.. அருண்..! நீ கொஞ்சம் என்னோட வேலையையும் சேர்த்து முடிச்சிடு‌ டா. அப்பாவுக்கு உடம்புக்கு முடியல டா.‌ கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு போகணும் …ப்ளீஸ் ..டா..! நாளைக்கு காலையில சீக்கிரமா வந்து வேலையை முடிச்சிடுறேன்..டா.” என்றான்.
“ டேய்…டேய்..! ஏன்‌டா..? நானே கோட் சரியா வராம தடுமாறிட்டு இருக்கேன். இதுல உன்‌வேலையையும் சேர்த்து என் தலையில் கட்டிட்டு போற...” என்றான் எரிச்சலுடன் ‌

“ ப்ளீஸ் டா…மச்சி…! இந்த ஒரு தடவை மட்டும். இனி திரும்பவும் உன் கிட்ட வந்தேன்னா என்னைய செருப்பாலேயே அடி…” என்றவன் முன்பு செருப்பை நிஜமாகவே நீட்டினான் அருண்மொழி.

அதிர்ந்து போய் நண்பனை பார்த்தான் அமுதன் .
“ இந்தா அடிச்சிக்க டா….இந்த மாதிரி எத்தனை தடவை சொல்லுவ. மனுஷனா டா‌ நீ…போய் தொலை…வழக்கம் போல நானே முடிச்சி கொடுக்குறேன்…” என்று எரிந்து விழுந்தான்.

நண்பனது வார்த்தையில் அமுதனின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பை போல எரிந்தது.

“ ஹி…ஹி…ஹி…தேங்க்ஸ் டா மச்சான்…எனக்குத் தெரியும் டா நீ எனக்கு ஹெல்ப் பண்ணுவன்னு. அடுத்த தடவை உன்னோட எல்லா வெர்க்கையும் ‌நானே முடிச்சு குடுத்துடுறேன் டா…பை…டா.. தேங்க்ஸ் டா..” என்றபடி அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு கிளம்பி விட்டான்.

“ கிழிச்ச…போய் தொலை…” என முணுமுணுத்தவன் தீவிரமாக கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தான்.
தனது அறையிலிருந்து வெளியே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி.

அலையலையான கேசம், கூரிய நாசி, அழுத்தமான உதடு, க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட முகம் அனைத்தையும் தூக்கி சாப்பிடுவது போல தனி தேஜஸ் மிளிர்ந்தது அவனது வதனத்தில்.

விழியகற்றாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களில் அவளையும் மீறி ரசனை தென்பட்டது.
இரண்டரை ஆண்டுகளாக அவனது பார்வையும் ரசனையும் தன் ‌மீது படிவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றாள்‌. சென்ற வருடம் அவளது பிறந்தநாளில் போது தான் அவன் தன் காதலை அவளிடம் வெளிப்படையாக கூறினான்.

அவளிடம் காதலை கூறிய நாளை நினைவு கூர்ந்தாள்.
“என்ன மிஸ்டர் அருண்மொழி..? எதுக்கு என்னை இங்க தனியா வரச்சொன்னீங்க? என்ன விஷயம்..? ஆஃபிஸ்லயே எதுவாயிருந்தாலும் பேசியிருந்திருக்கலாமே…?” என அலட்சியமாக கூறினாள்.
“ இது ஆஃபிஸ்ல பேசுற‌ விஷயமில்லை. பெர்சனல். அதான் தனியா பேசணும்ன்னு ….” என்று கூறி விட்டு அவளது முகத்தை பார்த்தான்.

“ என்ன சொல்லணுமோ.. சொல்லிட்டு கிளம்புங்க… எனக்கு உங்க கூட நின்று பேச டைம் இல்ல..ஐ ஹவ் சம் அதர் இம்பார்டண்ட் வெர்க்..” என்று கூறி விட்டு கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். அவளது கண்கள் மட்டும் வேறு திசையில் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
“ஷ்ஷ்ப்பா..!சாமி‌.. இப்பவே இப்படி கண்ணைக். கட்டுதே…!” என நினைத்தவன் அவளது முகத்தை தைரியமாக தன் புறமாக திருப்பி, “ ஐ லவ் யூ நந்தினி. உன்னை மனப்பூர்வமா காதலிக்குறேன். உன்னை கல்யாணம் பண்ணி நிறைய குழந்தைகளை பெத்துகணும். இன்னும் எவ்வளவோ ஆசை மனசுல இருக்கு. ஆனா அதையெல்லாம் சொன்னா அடிக்க வந்துடுவ. அப்பறம் ‘ஏ’ பள்ஸ் ஆகிடும்…ஹி…!ஹி…! தப்பா நினைக்காத..! பட்..‌என்னோட லவ் உண்மை தான். அதுக்காக நீயில்லையேல் நானில்லைன்னு டயலாக்கெல்லாம் சொல்லி உன்னை டார்ச்சர் செய்ய மாட்டேன். ‌நீ என் லைஃப்ல வந்தா நல்ல இருக்கும்னு தோணுது. நல்லா யோசிச்சு டைம் எடுத்துக் கூட சொல்லு. அவசரமில்லை…” என்று தெளிவாகக் கூறினான்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனது முகத்தில் அசட்டுத்தனம் இல்லை .தேவையற்ற வழிசலோ பயமோ இன்றி தனது மனதில் இருந்ததை கூறிவிட்டு அவளது பதிலுக்காக காத்திருந்தான்.

நந்தினியோ அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு இதழை ஏளனமாக வளைத்து தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், “ என்னோட பொன்னான பத்து நிமிஷத்தை உங்க பேசி வேஸ்ட் பண்ணிட்டேன். ஆக்சுவலா உங்களுக்கு என்ன தகுதியிருக்குன்னு என்னை லவ் பண்ணுறேன்னு சொல்றீங்க. லவ்வை சொல்றதுல கூட கொஞ்சமும் சீரியஸ்னஸ் இல்லை. யாரோ தெருவுல போறவங்களை பாத்து டைம் பாஸூக்காக சொல்ற மாதிரி சொல்றீங்க. உங்களை எப்படி நம்புறது? அதை விடுங்க. லவ்வை யார் கிட்ட சொல்றோம்னு ஒரு தகுதி தாராதரம் வேண்டாமா..? ஆஃப்ட்ரால் நீங்க ஒரு எம்ப்ளாயி. நான் தி கிரேட் பிசினஸ்மேன் விஜேயந்திரனோட பொண்ணு நந்தினி தேவி. தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் சிறந்த பெண் தொழிலதிபர்ன்னு விருது வாங்கியிருக்கேன்‌. இன்னும் ஏகப்பட்ட விருதுகள் எனக்காக காத்துட்டு இருக்கு. என்னோட பிசினஸை அடுத்தடுத்த கட்டத்துக்கு இன்னும் விரிவுபடுத்த போறேன்‌. அதுக்கு கநீத காதல் கத்திரிக்காய் கல்யாணமெல்லாம் தடையாக இருக்கும். அப்படியே உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் என்னோட ஹய் சொசைட்டி சர்க்கில்ல உங்களை போல சாதாரண எம்ஃப்ளாயிய எப்படி என்னோட ஹஸ்பண்ட்ன்னு எப்படி அறிமுகப்படுத்திக்க முடியும்..? சொல்லுங்க மிஸ்டர் . என் கிட்ட லவ்வை சொல்றதுக்கு முன்னாடி இதையெல்லாம் யோசிக்க மாட்டீங்களா…? ஹான்.. போங்க போய் வேற வேலையிருந்தா அதைப் பாருங்க. உங்களை மாதிரி எல்லாத்தையும் லைஃப்ல ஈசியா எடுத்துக்குற ஆட்களுக்கு லவ்வெல்லாம் செட்டாகாது. அதுவும் நான் செட்டாக மாட்டேன் .எனக்கு எல்லாமே லைஃப்ல பெர்ஃபெக்டா இருக்கணும் . சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. இந்த காதல் கத்திரிக்காய் கல்யாணமெல்லாம் எனக்கு சுத்தமா ஒத்தே வராது. கண்ட சினிமாவை பாத்துட்டு லவ் பண்ணுறேன்னு வந்துட வேண்டியது. போய் மனசை மாத்திகிட்டு வேற வேலையைப் பாருங்க. நான் கிளம்புறேன்..” என்றவளை இடைநிறுத்தி ,“ ஒரு நிமிஷம் நந்தினி. நான் ஜாலியான ஆள் தான். நான் சொன்ன விதம் வேணா உனக்கு‌ பிடிக்காம இருக்கலாம். ஆனா காதல்ல உண்மையா இருப்பேன்‌. பாக்குற பொண்ணுங்க கிட்ட எல்லாம் லவ் பண்றேன்னு சொல்ற ஆள் கிடையாது. என் மனசுல நுழைஞ்ச முதல் பொண்ணும் கடைசி பொண்ணும் நீதான். எப்ப எந்த நிமிஷத்துல உன் மேல காதல் வந்ததுன்னு சொல்லத் தெரியல. ஆனா…பணம், காசு, அந்தஸ்த்தை இதையெல்லாம் தாண்டி ஏதோ ‌ஒண்ணு உன்கிட்ட ஸ்பெஷலா இருக்கு. அது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நீ என்னை லவ் பண்ணலன்னா என்ன.. நான் உன்னை காதலிக்கிறேன் டே இருக்கேன்…உ‌ன் ‌மனசு என்னைக்காவது மாறும். என்னைப் பாக்குணும்னு தோணும். என் தோள்ல சாஞ்சிக்கணும்னு தோணும். அப்பவும் நான் உன் கூட தான் இருப்பேன்.” என்று கூறி விட்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவனது பார்வை அவளை உள்ளிழுத்துக் கொள்ள முயன்றது.
இருப்பினும் தனது தடுமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ பெட்டர் லக் மிஸ்டர் அருண்மொழி. ரொம்பவே கனவு காணுறீங்க. உங்க கனவை நான் பாழாக்க விரும்பல. நான் வர்றேன்..குட் பை.”என்றவள் தனது காரில் ஏறி அமர்ந்தாள்.
அவளது கார் கண்ணாடியின் முன்பு குனிந்தவன், “ கனவு நனவாகும்ன்னு நம்பிக்கை இருக்கு நந்தினி.” என்றவனின் கண்களில் கரை காணா காதலை கண்டாள்.
அவனது தீட்சண்யமான விழிகள் அவளை உள்ளிழுத்துக் கொண்டது. சில கணங்கள் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு சுற்றுப்புறம் மறந்து தான் போனது.
பின்னருந்த வாகனம் ஒலியெழுப்பவே சுதாரித்துக் கொண்டவள் அவனை அலட்சியமாக பார்த்து விட்டு காரை விருட்டென்று கிளப்பிக் கொண்டு சென்றாள்.
கடந்த கால நினைவுகளில் இருந்து வெளிவந்தவளுக்கு அவனை இப்பொழுதெல்லாம் அவனை சிறிது சிறிதாக ரகசியமாக ரசித்துக் கொண்டிருக்கின்றோம் எனப் புரிந்தது. ஆனால் அதை ஒத்துக் கொள்ள மனமில்லாமல் வெளியே மட்டும் அவனிடம் கடுமையாக இருக்கின்றாள்
இரவு பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் இருவர் மட்டுமே அலுவலகத்தில் இருந்தனர்.

அருண்மொழி ஏதோ ஒரு கோப்பினை எடுத்துக் கொண்டு அவளது அறைக்குள் நுழைந்தான். கதவினருகே குனிந்து ஏதோ எடுத்துக் கொண்டிருந்தாள் நந்தினி. அவன்‌ உள்ளே நுழையவும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பதறி எழுந்தவள் மீது மோதினான் அருண்மொழி. புடவை இடறி அவன் மீது விழுந்தாள் நந்தினி.
கும்மிருட்டாக இருந்ததில் இருவரின் வரிவடிவம் கூட கண்களுக்கு புலப்படவில்லை.

எக்குத்தப்பாக விழுந்திருந்தவளின் இடையினில் அவனது கரங்கள் அழுந்தப் பதிந்திருந்தது.

வெம்மையான கரங்கள் அவளது மெல்லிடையில் வெப்பத்தை கடத்த அதில் சிலிர்த்து அடங்கியது அவளுடல்

அதனை உணர்ந்து கொண்டது அவனது முரட்டுக் கரங்கள். இடையோடு இன்னும் அவளை தன்னுடன் சேர்த்தணைத்துக் கொண்டான் அருண்மொழி.
அவன் வழக்கமாக உபயோகப்படுத்தும் வாசனை திரவியத்தின் நறுமணம் அவளது நாசியில் நுழைந்து புது விதமான அவஸ்த்தையை கொடுத்தது. அவன் மீதிருந்து எழ முயற்சித்தாள்.
மீண்டும் அவன் மீதே விழுந்தாள்.

வாகாக அவளை தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டான் அருண்மொழி.
அவனுக்கோ அவளை விட மனமில்லை. அவளும் ஒரு கணம் அவனது அணைப்பில் மெய்மறந்து அவன் மீதே சாய்ந்திருந்தாள்.‌
மனம் அவன் மீதிருந்து எழுந்து கொள்ள உத்தரவிடுகிறது , புத்தியோ அவனுடன் இன்னும் ஒன்றச் சொல்லி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.
மனதிற்கும் புத்திக்குமிடையே போராடியவள் அவனது முகத்தை சற்று நிமிர்ந்து பார்த்தாள்.
இந்த நிமிடம் இன்னும் நீளாதோ என்ற ஏக்கம் தான் அருண்மொழிக்கு. ஆனால் இன்னும் சில கணங்களில் இந்நிலை நீடித்தால் ஆபத்தாகி விடும் என்று நினைத்தவன் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, “ மேடம் கொஞ்சம் எந்திரிக்குறீங்களா..? மூச்சு முட்டுது.. ஷ்ஷ்ப்பா..” என அவளது நெருக்கம் தந்த மயக்கத்தில் கூற அவளோ அவனது மார்பினில் ஒரு கையை ஊன்றிக் கொண்டு எழுந்தாள்.

“ சோதிக்குறாளே…! “ என முணங்கிக்கொண்டே எழுந்து கொள்ள மின்சாரம் வந்துவிட்டது.

நிதானமாக எழுந்தவன் அவளது முகத்தை பார்த்தான்.
‘ஏதேனும் மாற்றம அவளிடம் தென்படுகின்றதா..?’ என்ற அல்ப ஆசையில் அவளது முகத்தை பார்த்தான் அருண்மொழி.

அதற்கு நேர்மாறாக , “ கதவை திறக்கும் போது பாத்து திறக்க மாட்டீங்களா..? கண்ணை பின்னாடி தான் வச்சிட்டு வருவீங்களா? கீழ விழுந்து வேறெங்கையும் அடிபட்டிருந்தா என்ன பண்ணுவீங்க?” என எரிந்து விழுந்தாள்
தன்னுடைய தடுமாற்றத்தை மறைக்கவே இத்தகைய சிடுசிடுப்பு.
‘ அதான் மெத்து மெத்துன்னு சோஃபா கம்பெட்ல விழுந்த மாதிரி என்‌மேல தான விழுந்த..அப்பறம் ஏன் இவ்வளவு கடுப்பு?’ என முணுமுணுத்தான்‌
“ வாட்..? என்ன சொன்னீங்க? என்ன முணுமுணுக்குறீங்க? எதுவா இருந்தாலும் வாயைத் தொறந்து பேசுங்க..”
“ ஒண்ணுமில்லை மேடம் கோட் எழுதி முடிச்சுட்டேன். ரன் பண்ணி மட்டும் பாக்கணும். நாளைக்கு வந்து அந்த வெர்க்கை முடிச்சிடுறேன். உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன். செக் பண்ணுங்க. இதுல ப்ரிண்ட் அவுட்டும் இருக்கு. இந்தாங்க” என கோப்பினை அவளிடம் நீட்டினான்.
இது தான் அருண்மொழி. செய்யும் வேலையை திருந்த செய்து புருவத்தை உயர வைப்பான். அடுத்து எந்த ஒரு திருத்தமும் அவனது வேலையில் செய்ய தேவையே இருக்காது.

அவன் நீட்டிய கோப்பினை வாங்கியவள் ஒருமுறை சரிபாத்து விட்டு, “ பெர்பெக்ட்” என்றாள்

அதனை கேட்டவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்சார பாய்ந்தது போல பளிச்சென்று பிரகாசித்தது

“ தேங்க்ஸ் மேடம்..அப்பறம்‌ ஒரு விஷயம் சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே…?”

அவனை கேள்வியாக ஒரு பார்வை பார்த்தவள் , “ சொல்லுங்க…” என்றாள்.

“ கொஞ்சம் ப்ரைட் கலர்ல ர்‌ட்ரெஸ் போட்டா இன்னும் அழகா இருப்பீங்க. அப்பறம்…இப்படி எப்ப பார்த்தாலும் கடுகடுன்னு இருக்குறப்ப ரொம்பவே சுமாரா தான் இருக்கீங்க.. கொஞ்சம் சிரிச்சீங்கன்னா தேவதை‌‌ மாதிரி இருப்பீங்க. மனசும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்…” என்றான்

“ கிளம்புற வழியைப்‌ பாருங்க மிஸ்டர். நான் எப்படி இருக்கணும்ன்னு நீங்க சொல்லாதீங்க…” என்றாள் .

“ ஒகே…ஒகே…கூல். கிளம்புறேன் மேடம்…” என்றவன்‌ தனது இருக்கைக்குச் சென்று தோள் பையை எடுத்துக் கொண்டு பார்க்கிங் ஏரியாவிற்குச் சென்று தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தவன் ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தான்

சற்று நேரம் கழித்து வெளியே வந்த நந்தினி தனது காரினை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.அவளது காரினை பின் தொடர்ந்து வந்தான் அருண்மொழி.
 
Last edited:

Author: Vishakini
Article Title: தகிக்காதே குளிர் நிலவே - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
321
288
63
India
ஓ பாடி காட் வேலை பார்க்கணும் தானே எம் டிக்கு.