மையல் மீளுதே மேகவியே - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,726
1,146
113
மேகவியிடம் விடை பெற்றனர் அவளின் குடும்பத்தார்.

திருமண அரங்கில் இருந்து, அனைவரும் நேராய் பிரார்த்தனாவின் இல்லத்திற்குத் தான் வந்திருந்தனர்.

மேகவிக்கு, சத்தியின் குடும்பத்தைச் சார்ந்த எவரும் பெரிதாய் அறிமுகம் இல்லாததால், அவள் புகுந்த வீட்டில் ஒன்றுவதற்கான வாய்ப்பாய் அத்தருணத்தை ஏற்படுத்தி இருந்தனர்.

தனது வீட்டின் வழக்கங்களை, பிரார்த்தனாவே தமையனின் மனைவிக்கு அறிமுகம் செய்வித்தாள். இருவரின் குடும்பத்தாருக்கும் பெரிதாய் எவ்வித வேறுபாடும் இல்லை.

மேகாவின் இல்லத்தில் அன்னையும் அப்பத்தாவும் என்றால், இங்கு சத்தியின் தாய் தந்தையர்.

அங்கு வீட்டுப் பணிகள் அனைத்தையும் ஷீலாவே பார்த்துக் கொள்வார். ஊரிற்கு வரும் தருணங்களில் இவள் அன்னைக்குச் சிறு சிறு உதவிகள் செய்வாள். கீழே அமர்ந்து செய்யக் கூடியவைகளை, மூத்தவரான கனகவள்ளி கவனிப்பார்.

இவ்விடத்திலோ.. புஷ்பவதியின் ஆரோக்கிய குறைபாட்டால் பிரார்த்தனாவும் அவளின் தந்தை கதிரவனும் வேலைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

மூன்று படுக்கை அறைகள் கொண்ட தங்களின் வீட்டை ஒருமுறை சுற்றிக் காட்டி, வங்கியில் கடன் பெற்றிருக்கும் பத்திரங்கள் முதல் அன்னையின் மருத்துவ கோப்புகள் வரை அனைத்து முக்கிய காகிதங்களையும் வைத்திருக்கும் இடங்களின் விபரங்களைத் தெரிவித்தாள்.

"என்னடா இவ? வந்த நாளன்னைக்கே, மொத்த பொறுப்பையும் நம்ம தலையில கட்டுறாளேனு நினைக்காதீங்க அண்ணி. இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சு இருக்கணும்னு தான் சொல்லுறேனே தவிர, நீங்க கவனிக்கணும்கிறதுக்காக இல்ல."

மேகவி புன்னகைத்து, "உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு இதெல்லாம் தெரியாது. நீ இப்ப சொன்ன விஷயங்களைக் கூட, சும்மா ஓரலா மைண்ட்ல ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன், அவ்வளவு தான். ஆஃபிஸ் ஒர்க்கைப் பார்க்கத் தெரிஞ்ச அளவுக்கு, வீட்டு வேலை எல்லாம்.. ம்ப்ச்ச்.. தப்பா நினைக்காத. பட், டிரைப் பண்ணுறேன்."

"எனக்குத் தெரியும், அம்மாச்சி எப்படி இந்த கல்யாணத்துக்கு உங்களைச் சம்மதிக்க வச்சாங்கனு. சென்னையில வேலை பார்க்கிறதும், அங்க இருக்கிற உங்க லைஃப் ஸ்டைலும் தெரியும்.

அண்ணனும் அங்கதான இருக்கான்? நீங்க எதையும் மாத்திக்க வேணாம் அண்ணி. இதுவரை எப்படி இருந்தீங்களோ, இனிமேலும் அப்படியே இருங்க. ஊருக்கு வந்து போற நேரத்துல மட்டும், கொஞ்சம் வீட்டைக் கவனிச்சுக்கோங்க. அதான் டிரை பண்ணுறேன்னு சொல்லி இருக்கீங்களே? அது போதும்!

நானும் உங்க அண்ணனும் ஊருல தான இருக்கப் போறோம்? இதுவரை தனித்தனியா அவங்கவங்க ஃபேமிலியைப் பார்த்தோம். இனி, சேர்ந்து ரெண்டு வீட்டையும் பார்த்துக்கிறோம்!" எனப் பிரார்த்தனா உரைத்திட, உண்மையில் மனம் நெகிழ்ந்து தான் போனது மற்றவளிற்கு.

திருமணம் நடைபெறும் வரையிலுமே 'தனது வீட்டினர் உடனடியாய் எப்படி சாகரனின் காதலை ஏற்று, திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்தனர்!' என்ற கேள்வி இருந்தது மங்கைக்கு.

தற்போது, 'அதற்கான விடை கிடைத்து விட்டது.’ என்றுதான் சொல்ல வேண்டும். அத்தோடு சத்யகீர்த்தியை, தங்களது பெண்ணிற்கு மாப்பிள்ளை ஆக்கியதன் காரணம் புரிந்தது.

பெரிதாய் எவ்வித பிரச்சனைகளும் இல்லாது, புரிதலுடன் விட்டுக் கொடுக்கும் குணம் கொண்ட மனிதர்களை உடைய குடும்பம் பிரார்த்தனாவுடையது. தங்களின் மகளை மணமுடித்துக் கொடுக்கும் பெண் வீட்டாருக்கு, இதைவிட வேறு என்ன பெரிதாய் எதிர்பார்ப்பு இருந்துவிடப் போகிறது.? அது கிட்டிவிட்டது, சாகரனின் குடும்பத்தாருக்கு.

“நம்ம வீட்டுல வாதாடுற மாதிரி, விதண்டா வாதம் பேசுற மாதிரி இங்கேயும் இருக்காத. புஷ்பா கொஞ்சம் முடியாதவ. அதுனால பார்த்து நடந்துக்க!" என வள்ளி பெயர்த்திக்கு அறிவுரை சொல்ல, மகளின் தலையை வருடி கண்கலங்க புன்னகைத்தார் ஷீலா.

அன்னையின் கலங்கிய விழிகளைக் கண்டதும்.. அவளின் இமைகளுக்கு உள்ளும் நீர் பெருகியது.

“கல்யாணம் ஆனதும் உடனே வேலைக்குக் கிளம்பினா நல்லா இருக்காது. எக்ஸ்ட்ரா லீவ் எதுவும் போட முடியுமானு பாரு. மாப்பிள்ளையும் நீயும் பேசி முடிவெடுங்க. என்ன சரியா?” என்றிட, எதுவும் பேசும் மனநிலையில் இல்லாததால் தலையை மட்டும் அசைத்தாள் மங்கை.

“நான், சத்திக்கிட்ட உன்னைப் பத்தி எல்லாம் சொல்லி இருக்கேன் பாப்பா. எதுனாலும் சரி, அவன்கிட்ட ஓபனா பேசு. புரிஞ்சுப்பான். ஓகேவா? அத்தை மாமாவும் நல்லவங்க தான். உனக்கு இங்க எந்த ரெஸ்ட்ரிக்ஷனும் இருக்காது. நீயும் கொஞ்சம் அவங்களுக்காக சின்ன சின்ன விசயங்களை அட்ஜெஸ்ட் செஞ்சிக்க டிரை பண்ணுடா.” என சாகரன் தந்தையின் இடத்தில் இருந்து தங்கையிடம் உரைத்திட, “ம்ம்..” என்று மட்டும் பதில் வந்தது.

என்னதான் தமையனின் மீது வருத்தமும் சினமும் இருந்தாலும், அந்நொடியில் அவனை விட்டுப் பிரியப் போவதை எண்ணி மனம் கனத்தது.

கலங்கிய கண்களும் நிசப்தமுமாய் நிமிடங்கள் நகர்ந்திட, தலை அசைப்பில் விடைபெற்றுக் கொண்டனர்.

கதிரவனும் புஷ்பவதியும் தங்களது பெண்ணை அவளின் கணவனது இல்லத்தில் விட்டு வருவதற்காக, அவர்களுடனே கிளம்பினர்.

மற்ற அனைவரும் நகர்ந்ததும், "வெளிய கொஞ்சம் வேலை இருக்கு. நான் போயிட்டு வந்திடுறேன்!" என சத்தியும் சிறிது நேரத்தில் புறப்பட்டு விட்டான்.

எவரும் அற்ற தனிமை மேகவியை வாட்டினாலும், பழக்கம் இல்லாத இல்லத்தில் தனியாய் இருப்பது சற்று ஆசுவாசத்தையும் சேர்த்து தந்தது.

பிரார்த்தனாவின் அறைக்குச் சென்றவள் அயர்வின் காரணமாக சற்றே கண் அயர, அப்படியே உறங்கிப் போனாள். விழிக்கும் பொழுது இரவு நெருங்கி இருந்தது.

வெளியே வர.. கூடத்தில் குடும்பத்தினர் உரையாடிய படி தொலைக்காட்சியைப் பார்த்திருந்தனர்.

அரவம் உணர்ந்து புஷ்பவதி திரும்பிப் பார்க்க, தயக்கத்துடன் நின்று இருந்தாள் மங்கை.

"என்னம்மா, எழுந்திரிச்சிட்டியா? கூப்பிட்டு இருக்கலாம்ல? எதுக்கு இப்படி அமைதியா நிக்கிற.?" என்றவாறே எழுந்து அவர் அருகே செல்ல, "ஸாரி ஆன்ட்டி. எப்படித் தூங்கினேனு தெரியல!" என குரல் நலிய உரைத்தாள்.

"இதுல என்ன இருக்கு? காலையில மூனு மணிக்கு எல்லாம் எழுந்திரிச்சது. அசதி இருக்கத்தான செய்யும்.?" என்று சமாதானம் சொன்னவர், தன்னுடன் அழைத்துச் சென்றார்.

"உன்னோட பொருள் எல்லாம், தனா ரூம்லதான் இருக்கு. அப்படியே இருக்கட்டும். மெதுவா நேரம் பார்த்து ஒதுங்க வச்சிக்கலாம். நான் ஹீட்டர் போட்டு விட்டிருக்கேன். போய், குளிச்சிட்டு காலையில தாலி கட்டுறப்ப உடுத்தி இருந்த கூரைப் புடவையைக் கட்டிட்டு வாம்மா. சாப்பிடுவோம்!" என உரைத்து வெளியே செல்ல, மெலிதான பெருமூச்சோடு குளியல் அறைக்குள் சென்றாள்.

'அடுத்து நடக்கப் போவது என்ன?' என்ற புரிதல் இல்லாத அளவிற்கு அறியா பெண்ணல்ல அவள்.

இதுவரை ஒருமுறைக் கூட பேசிடாத ஆடவனுடன் மங்கைக்குத் தலை இரவு.

சட்டென்று மறுத்துக் கூற இயலாத நிலை. சத்தியிடம் என்றால், பட்டென முகத்தில் அடித்தது போல் பேசி விடுவாள். ஆனால் பெரியவர்களிடம் அப்படி பேசுவதற்கு நா எழ மறுத்தது. அத்தோடு குடும்பத்தினர் சொல்லிச் சென்றிருந்த அறிவுரை வேறு, பெண்ணின் வேகத்திற்கு கடிவாளம் இட்டு தடுத்தது.

எரிச்சல் மேலிட்டது. பெயரிற்கு என்று நீராடிவிட்டுத் தயாராகி வந்தாள். மறந்து கூட இதழ்கள் புன்னகைக்க வில்லை.

மங்கையின் இறுகிய முகத்தைக் கண்ட பெரியவர்கள், இரவு சடங்கினால் உண்டாகி இருக்கும் பதற்றம் என எண்ணிக் கொண்டனர். சத்தியின் பார்வையில் அவளின் நடவடிக்கை அனைத்தும் பட்டாலும், கண்டும் காணாதது போல் இருந்து கொண்டான்.

ஆண்கள் தான் உணவைப் பரிமாறினர். அமர்ந்த இடத்தில் இருந்தே செய்ய வேண்டியவைகளை உரைத்தார் புஷ்பா. அவரின் உடல்நிலையைப் பற்றி அறிந்தாலும், தமையனின் மனைவியும் வீட்டின் வழக்கத்தைச் சொல்லிச் சென்றிருந்தாள்.

"சாப்பிடும்மா. உனக்கு தோசையும் காரச்சட்னியும் ரொம்பப் பிடிக்கும்னு மாப்பிள்ள சொன்னாரு. அதான் அதையே செய்யச் சொல்லிட்டேன். ஒவ்வொருத்தருக்கா தோசை ஊத்துறது சிரமமா இருக்கும்னு, நம்ம வீட்டுல மொத்தமா ஊத்தி ஹாட்பாக்ஸ்ல வச்சிடுவோம். அதையே சாப்பிட்டுக்கிறியா? இல்லேனா, மாமாவ சூடா ஊத்தச் சொல்லவா?" என மாமியார் வினவிட, "நான் ஆறுனாலும் சாப்பிட்டுக்குவேன் ஆன்ட்டி. பிரச்சனை இல்ல!" என்று அவ்வில்லத்தின் சூழலிற்குள் தன்னைப் பொருத்திக் கொள்வதற்கான, முதல் அடியை எடுத்து வைத்தாள்.

"எதுனாலும் கேளுமா. சங்கடப்படாத!" எனக் கதிரவனும் தன் பங்கிற்கு உரைக்க, லேசாய் புன்னகைத்து தலையை அசைத்து வைத்தாள்.

பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்காக சத்தி எடுத்து வைக்க, "இல்ல, நானே கிளீன் பண்ணிக்கிறேன்!" என்று தான் உண்டதைத் தர மறுத்தாள்.

"கொடும்மா. வந்த முதல் நாளே எச்சித் தட்டை கழுவுவியா? எப்பவும் அவன் செய்யிற வேலைதான் இது! புதுசு எல்லாம் இல்ல!" என புஷ்பா சொல்ல, "ஆனா, நான் புதுசு தான ஆன்ட்டி? நான் சாப்பிட்டதை மத்தவங்களைக் கிளீன் பண்ண வைக்கிறது நாகரீகம் இல்ல."

"பிள்ளைக்கும் புருஷனுக்கும் செய்யிறதுக்கு எந்தப் பொண்ணும் நாகரீகம் பார்க்கிறது இல்ல. அதை கடமைனு நினைச்சு தான் செய்யிறாங்க. அது போலத்தான் இதுவும்!" என்று கதிரவன் உரைத்திட, அவளின் கரத்தில் இருந்து வாங்கிச் சென்றான் சத்தி.

அதன் பின்னர் இல்லம் அமைதி போர்வை போர்த்திக் கொண்டது. தொலைக்காட்சி மட்டும் ஒலியினைச் சிதறவிட, பத்து மணியைக் கடந்த நிலையில் மேகவியின் கரத்தில் பால் செம்பைக் கொடுத்து, மகனின் அறைக்குள் அனுப்பி வைத்தார் புஷ்பா.

முன்னரே உள்ளே இருந்த சத்தி, கைப்பேசியில் எவருடனோ பேச்சினில் மூழ்கிப் போயிருந்தான். மனைவி வந்தது கூட கவனத்தில் பதியவில்லை.

ஒன்று, இரண்டு, மூன்று என்று நொடிகள் நகர்ந்து முழுதாய் நான்கு நிமிடம் கடந்து இருந்தது.

பொறுமை இழந்தவள், "ஹலோ மிஸ்டர்.." என்றிட, ஜன்னலின் பக்கம் திரும்பி அதன் கம்பிகளின் வழியே வெளிப் பக்கத்தைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தவன், சட்டென்று குரல் வந்த திசையில் திரும்பினான்.

"என்னையா.?"

"உங்களைத்தான். இந்த ரூமுல வேற யாரு இருக்கா.?"

"நாளைக்குப் பேசலாம்!" என்றுரைத்து கைப்பேசியை அணைத்து சட்டைப் பையில் போட்டுக் கொண்டான்.

"ம்ம்.. புருஷனுக்கு நல்ல மரியாதை!" என இடது கரத்தின் ஆள்காட்டி விரலால் அறைக் கதவை சுட்டிக் காட்டியவன், "இந்த டோருக்கு அந்தப் பக்கம் வேற ஒரு ஆளா இருந்த. உள்ள வந்ததும், என்ன ஒரு சேஞ்ச்.?"

"அதுக்காக உங்க பேரண்ட்ஸ்கிட்ட முதல் நாளே ஆர்கியூ பண்ணிக்கிட்டு இருக்க முடியுமா? அதுவும் இல்லாம, அவங்க என்கிட்ட நல்லபடியா தான் நடந்துக்குறாங்க. அப்ப, அதுக்கான மரியாதையை நான் கொடுக்கணும்ல.?"

"ஓஹோ.. குட் பாலிசி. அப்ப, நான் உன்கிட்ட நல்லபடியா நடந்துக்கலனு சொல்லுறியா.?"

"எனக்கு அப்படித்தான் தோணுது. நான் நேத்து இருந்து உங்கக்கிட்டப் பேச டிரை பண்ணுறேன். நீங்க வேணும்னே என்னை அவாய்ட் செஞ்சிட்டு இருந்தீங்க. ஈவ்னிங் கூட எல்லாரும் எங்க வீட்டுக்குப் போன டைம்ல, நீங்களும் வெளிய போயிட்டீங்க தான?"

மெலிதாய்ப் புன்னகைத்தவன், "பொண்டாட்டிக்குக் கோபமா என் மேல.?"

அவனது சொற்களில் திகைத்தவள், "எது பொண்டாட்டியா.?"

"அப்புறம் இல்லையா?" என்றபடி எட்டு வைத்து அருகில் வந்தவன் கழுத்தினில் இருந்த மஞ்சள் கயிறை ஒற்றை விரலால் அவளின் முகத்திற்கு நேராய் தூக்கிக் காட்டி, "இதைக் கட்டுனா புருஷன் பொண்டாட்டினு தான அர்த்தம்? அப்ப, நீ என் பொண்டாட்டி தான? பொண்டாட்டியை, பொண்டாட்டினு தான சொல்ல முடியும்?"

'அடேய்.. எத்தனை பொண்டாட்டி!' என அவளின் உள்மனம் வினா எழுப்பிட, ஆடவனின் கரத்தில் இருந்த தாலிக் கயிறை விலக்கிக் கொண்டு, முறைத்தபடி இரண்டடி பின் நகர்ந்தாள் மங்கை.

"என்ன, ரொம்ப கோபத்துல இருக்கியா.?"

"ஆமானு சொன்னா, என்ன செய்வீங்க?"

"உன்னை சமாதானம் செய்ய டிரைப் பண்ணுவேன்!'

"ஹான்.." என மேகவி விழிக்க, சிரித்தபடி மனைவியை நெருங்கிச் சென்றான் சத்யகீர்த்தி.
 

Author: ரோசி கஜன்
Article Title: மையல் மீளுதே மேகவியே - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.