காதல் ராஜ வீதியில் - 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,463
113
Germany
18

“அப்புறம்?” கேட்டுக் கொண்டே தான் அமர்ந்து இருந்த நாற்காலியை படுத்திருந்த ஜம்புவின் முன் நெருக்கிப் போட்டுக் கொண்டு அமர்ந்தான் செல்வா.

“எனக்குத் தெரியாம என்ன பண்ணிட்டு இருந்தீங்க இவ்ளோ நாள்? இப்பவாச்சும் சொல்லலாமே? ஏன்னா இனி உங்களுக்காக பொண்ணை தூக்க ஒருத்தனும் இல்லை. என்னைத் தவிர“

நிறுத்தி நிதானமாக அவன் சொன்னதில் இருந்தே அவனுக்கு ஏதோ விஷயம் தெரிந்து இருக்கிறது என்று தெரிந்ததே தவிர இன்னும் அவருக்கு மகன் மேல் நம்பிக்கை இருந்தது.

என்ன செய்வது? முன்பு போல் சுறுசுறுப்பு இல்லை இந்த மூளைக்கு. பேச்சும் அவசரமாக பேசினால் குழறளாக வருகிறது.

“என்னடா சொல்ற?”

“நான் என்ன சொல்றது? நீங்க தான் சொல்லணும். யார் அந்தப் பொண்ணு? எதுக்கு அவ பின்னாடி ஆள் அனுப்புனீங்க? உள்ளதை சொல்லிட்டா நான் அதை பார்த்துக்கறேன்“

“அது ஒண்ணுமில்ல மணி. ஒரு சின்ன பூசை. அத செஞ்சிட்டா அப்பா உசிர் கெட்டி. அதுக்கு அவ வேணும். அதான் தேடிட்டு இருக்கேன்”

“சரி. இதை ரகசியமா செய்ய வேண்டிய அவசியம்?”

“அதுலாம் உனக்கு எதுக்கு? இந்த விஷயம் யாருக்கும் தெரியாதே? உனக்கும் சொல்லாம தான் வச்சிருந்தேன். அந்த நாலு விளங்காதவங்களுக்கும் இதைப் பத்தி சொல்லலியே? முதல்ல உனக்கு எப்படி தெரிஞ்சுது?”

“எது?”

“ஒரு புள்ளையை தேடுற விஷயம்”

“அதான் தெரிஞ்சிருச்சே. அதை விடுங்க. அதை ஏன் என்கிட்ட சொல்லல? அது என்ன பூசை?”

ஜம்பு எழ முயன்றார். முடியாமல் போக உதவிக்கு கைகளால் காற்றில் துழாவினார்.

இதய நோயுடன் கடந்த இரண்டு வருடங்களில் பாரிச வாயுவும் தாக்கியதில் கிடையில் கிடந்தாலும் அவ்வப்போது செல்வா தூக்கி வைப்பான். கூட சுற்றிய நான்கில் ஒன்றோ இரண்டோ அவ்வப்போது வந்து பேசிக் கொண்டு இருக்கும்.

இந்த சூழ்நிலையில் எப்படி தனியே சாங்கியம் செய்ய முடியும் அவரால்? அதற்குத்தான் அடியாட்களை தொடர்ந்து வைத்து இருக்கிறார். அடிமாடுகள்! சொன்னதை சொன்ன மாதிரியே செய்து விடும்கள்!

அது சரி தான். ஆனால் பெற்ற மகனிடம் இந்த சூழ்நிலையிலும் மறைக்க காரணம் என்ன?

“அது..உனக்கு ஒரு பூசை போட்டு மந்திரிச்சு விடணும்டா. அப்போ தான் நாலுபேர்கிட்ட உன் மதிப்பு உயரும். அதுக்கு நீ பெண் வாடை இல்லாம இருக்கணும். அதான் இந்த பொண்ணு விசயத்துல உன்னை உள்ளே விடல“

“ஓஹோ! அப்பேர்பட்ட அந்த மந்திரத்தை ஏன் இன்னமும் எனக்கு போடலை”

ஆரம்பத்தில் இருந்த அதே நிதானத்துடன் செல்வா கேட்க, இது நல்லதற்கு இல்லையே என்று பொறி தட்டியது ஜம்பபுவுக்கு.

“என்னப்பா சொல்ற? அப்பாவுக்கு அந்த பூஜை செஞ்சதுக்கு அப்புறம் உனக்கு அப்பா அந்த மந்திரத்தை சொன்னாதான் அதுக்கு பலன் முழுமையாக கிடைக்கும். அதுதான் அந்த பொண்ண வேகமாக தேடிட்டு இருந்தேன். மத்தபடி உன் கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை. உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்காங்க? நீதானே என்னை பார்த்துக்கிறே?”

நா தழுதழுக்க பேசினார் ஜம்பு. அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்த செல்வா “அப்படிப்பட்ட எனக்கு எப்படி நீங்க துரோகம் நினைச்சீங்க?”
என்றான் அழுத்தமாக.

“என்னது? துரோகமா?” கண்களை வியப்பை காட்டினார் ஜம்பு.

“எனக்கு தெரியாதுன்னு நெனச்சுக்காதிங்க. ரெண்டு வருஷம் முன்னவே உங்களை கண்காணிச்சிட்டு தான் இருக்கேன். அட்டாக்ல போனானே பாறை அவன் கிட்டயே விஷயத்தையும் வாங்கிட்டேன். அவன் சும்மா ஏதோ ஒரு பிள்ளையை சுத்தி வருவது பற்றி மட்டும் தான் சொல்லி இருந்தான். அது எதுக்கு? அப்போ நீ என்கிட்ட ஏதோ மறைக்கிற? அது எனக்காகவா? அப்படின்னு யோசிச்சா அப்படி இல்லை.

ஊருக்குள்ள உனக்கான மதிப்பை காப்பாத்திக்க நீ என்னை அடிக்கடி மட்டம் தட்டதான் செய்வ. அப்படிப்பட்ட நீ எனக்கு நல்லது ஏதாவது ஒன்னு கண்டிப்பா செய்ய மாட்டே. அப்படி செய்யணும்னாலும் அது உனக்குப் பிறகு எனக்கு வர்ற மாதிரி தான் செய்வ. அதனாலதான் பாறை கிட்ட எந்த தகவலும் கிடைக்கலன்னாலும் நீ ஏற்கனவே காட்டிக் கொடுத்த ரத்த வாந்தி குளிகையை சாராயத்துல கலந்து கொடுத்தேன். அது என்ன வேலை செஞ்சதோ இல்லை செய்யலியோ, அவன் அட்டாக்குல போய் சேர்ந்திட்டான். சரி விடு கழுதையை அப்படின்னு தான் நானும் இருந்தேன். நீ ஏதாவது சொல்லுவன்னு பார்த்தா மூச்சும் விட மாட்டேங்குற.

ஆனா என்கிட்ட நாலாவது ஆளை தேட சொன்ன. நானும் தேடுனேன். ஆனா நீ இப்பவே இவ்ளோ திடகாத்திரமா இருந்தா அது நல்லா இருக்கா சொல்லு? சும்மாவே உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலியான்னு உன்னை பத்தி என்கிட்டவே கேட்டு வயித்தெரிச்சல் கிளப்பி இருக்கானுங்க சில பைத்தியகாரனுங்க. இதுல நீ வேற எனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ண கூடாதுன்னு முடிவுல இருந்து இருக்க போல? அது தெரியாம ஒரு புள்ளய வேற பெத்துட்டேன். பதறாதே. ஆக்சிடென்ட்ல போனானே ஒருத்தன் உங்க சேவகன்? அவன் தங்கச்சிதான் அவ. அவ அண்ணன் செத்ததுக்கு இழவு கேக்க போன இடத்துல தொடர்பாயிருச்சு. அவளும் அவ முத புருஷனை பிரிஞ்சு வந்து இருந்தா, அப்புறம் அப்படியே இதாயிருச்சு.

உன்கிட்ட சொல்ல பயம்லாம் இல்ல, எரிச்சலா இருந்துச்சு. காலா காலத்துல பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க துப்பில்ல, சும்மா ஜாதி அது இதுன்னு உளறுவ. நானும் சும்மா வச்சுக்கலாம்னுதான் அவளை தொட்டேன். கொஞ்ச நாள் அவளும் ஒழுக்கமா தான் இருந்தா. அப்புறம் பார்த்தா வயித்தை சரிச்சிக்கிட்டு நின்னா. அதுக்கும் உன் குளிகை ஒன்னை குடுத்தேன். குளிக்க போன இடத்துல வழுக்கி விழுந்து அதுல போச்சா இதுல போச்சான்னு தெரியாம அந்த கரு போச்சு”

செல்வா பேச பேச ஜம்பு உறை நிலைக்குப் போய் கொண்டு இருந்தார்.

முதலில் இதெல்லாம் இவன் செய்வானா? என்று அதிர்ந்தார். அடுத்து, இதெல்லாம் தெரிந்து கொண்ட தன்னை என்ன செய்வானோ என்று அஞ்ச பயமின்றி நிச்சயமாக அவன் என்ன செய்வான் என்று நன்றாகவே தெரிந்தது அவருக்கு.

அவன் ஒரு பிள்ளை பூச்சி. அவனை வைத்து ஒன்றும் சாதிக்க முடியாது, அவனாலும் ஒன்றும் சாதிக்க முடியாது என்று நினைத்தாலும் ஏதோ ஒரு பெரிய விவகாரம் அவனால் நடக்கும் என்று கணித்து இருந்தார்.

இப்போது பார்த்தால் எல்லாமே விவகாரமாக அல்லவா இருக்கிறது?

பேசிக் கொண்டே செல்வா ஜம்புவை கட்டிலோடு வைத்துக் கட்டினான். தன் பலவீனத்தையும் மீறி அவர் என்ன முயன்றாலும் வர முடியாதபடி இறுக கட்டியவன், தன் வேட்டி முடிச்சில் இருந்து அதே குளிகையை எடுத்தான்.

“நீ எனக்கு சொல்லிக் குடுத்ததுல உருப்படி இது ஒண்ணுதான். மத்தது ஊருக்கு மாவிடிக்கிற வேலை. அது எதுக்கு எனக்கு? அப்புறம் என்ன சொல்லிட்டு இருந்தேன்? கரு! ஆங்..அது கலைஞ்சு போச்சு. அப்புறம் இப்போ பொறந்து இருக்குதே இந்த புள்ளை வந்துருச்சு. இதுவும் வேண்டாம்னு பார்த்தா அது ஏதோ ராசியான புள்ளைன்னு சோசியன் சொல்லிட்டான்னு அவ ஒரே ஒப்பாரி. சரிதான் தொலையுதுன்னு விட்டுட்டேன். இப்போ.. இந்த உருண்டை குளிகையை என்ன செய்றதுன்னு பார்ப்பமா?” என்றவன் ஜம்புவை நெருங்கினான்.

அவன் செய்ய வருவது புரிந்தாலும் இன்னமும் அவன் அதை செய்ய மாட்டான் என்று அவரின் ஏதோ ஒரு மட உணர்வு சொல்ல அவரும் தன் அனுபவத்தை மறந்து அதையே நம்ப விரும்பினார்.

அவர் செய்த, செய்ய இருந்த செயல்கள் சாதரண மனங்களுக்கு அப்பாற்பட்டவை தான். மணிமொழிக்கு செய்து வைத்த குழந்தை திருமணம் எல்லாம் அவரை பொறுத்தவரை தூசான காரியங்கள்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்த அவருக்கு ஆரம்பத்தில் பணம் தேவைப்பட்டது. உழைக்காமல் கிடைக்கும் பணம்! அதற்காக அலைந்தபோது இந்த தொழில் பழக்கம் ஏற்பட்டது.

அங்கேதான் அவர் மனைவியும் கிடைத்தாள். தன்னை போலவே ஒரு பிள்ளையை பெற்றுவிட்டு நல்லவேளையாக போய் சேர்ந்தாள்.

அவள் இருந்து பார்ப்பாள் என்று அலட்சியமாக இருந்த ஜம்பு அதிர்ந்தார். அறிந்தவர் தெரிந்தவரிடம் கொடுத்து பிள்ளையை வளர்த்தார். கயலின் அப்பா இவர் உடன் பிறந்தவராக இருந்த போதும் அவரின் இளம் மனைவிக்கு பிடிக்காததால் இவரை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏதோ அதிசயமாக அவன்தான் அதிசயமாக பொண்டாட்டி கட்டியவன் போல என்று சினந்தார் ஜம்பு.

ஒருமுறை வீட்டு நகை களவு போனதில் ஜம்புவை அவர் தம்பி நேரிடையாக சந்தேகப்பட்டதில் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, அவர் தம்பி - குழந்தை கயலின் அப்பா - நடக்கும் வழியில் அறுந்து கிடந்த மின்சார கம்பி பற்றி முன்கூட்டியே தனக்கு தெரிந்ததை அவருக்கு சொல்லாமல் விட்டார், அவ்வளவு தான். பழியை கவர்மெண்ட் ஏற்றுக் கொண்டது.

அதன் பிறகு தம்பி குடும்பத்துடன் இருந்த தொடர்பு முழுதும் முறிய ஜம்பு தன் மகனை கூட்டிக்கொண்டு ஆலமரத்தூருக்கு போய் விட்டார்.

அங்கேயும், அங்கேயும் இங்கேயுமாக விட்டு மகனை வளர்த்தார். ஆனால் அங்கே அவர் புகழ் ஓங்கி வளர்ந்தது. அவருக்கு வேறு எதையும் விட அது போதையாக இருந்தது.

ஒருசில விஷயங்களை மனிதர்களின் முகத்தை வைத்து குத்துமதிப்பாக சொல்வார். அவை சில நேரம் சரியாக இருக்கும். சில நேரம் கிட்டத்தட்ட சரியாக இருக்கும். ஒருசில நேரம் தவறாக இருக்கும். அந்த சமயங்களில், ‘இப்போது நடக்கவில்லை என்றால் இனி நடக்கும்‘ என ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார். கேட்டவர்களும் அதை சுற்றி வளைத்து நடந்ததாகவே நினைக்க விரும்பினர். அப்படித்தான் தமிழிடமும். முதலில் தான் அறிந்து கொண்ட விஷயத்தை பேசினார். அப்புறம் பேசியதில் வந்தவன் விழுந்து விட்டான்.

ஆனால் தமிழ் தான் வருவார் என்று எப்படி தெரியும்? ஏற்கனவே பூங்கோதை, சுசீலா என்று இவரின் அடிபொடிகள் சொல்லி இருந்தனர். அப்படி வந்தது தமிழ் இல்லை என்றால் அப்போதும் வந்தவனிடம் , ‘இப்போது நடக்கவில்லை என்றால் இனி நடக்கும்’ என்று சொல்லி இருப்பார்.

எப்படியோ சக்தியுள்ளவர் என்ற பெயரை, புகழை வாங்கி இருந்தார்.

இப்படியே போய் கொண்டு இருந்த சமயம் இதய நோய் வந்தது. அதிலிருந்து தப்பிக்க யோசித்த போது இந்த வனி கிடைத்தாள். அவளை அவரிடம் ஏதோ ஒரு சக்தி கொண்டு சேர்க்க விடாமல் தடுப்பது தெரிந்ததால் நாலு தடிபயல்களை வேலைக்கு வைத்து அதுவும் நாசமாகப் போயிற்று.

நடுவே இந்த பாரிச வாயு வேறு. அப்போது இந்த மணி பயலேதான் பார்த்துக் கொண்டான். இவனுக்கு ஒரு ஏற்பாட்டை செய்வோம் என்றால் இவருக்கு தெரிந்து அதுவரை அவன் பிரம்மசாரியாக இருக்க வேண்டும். அவனுக்கு கல்யாணம் ஒரு கேடு! ஏதோ தெரிந்த வித்தைகளில் சில சொல்லிக் கொடுத்தாகிவிட்டது. யாராக இருந்தாலும் அவருக்கு அடுத்துதான்.
முதலில் அவருக்கு பிரச்சனை தீரட்டும். அப்புறம் பார்க்கலாம்!

ஜம்புவின் இந்த ஆட்டம் இப்போது செல்வா நிற்கும் நிலையில் ஆட்டம் கண்டது.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் ராஜ வீதியில் - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
அப்பா கேடி ..... பையன் கேப்மாரி😡😡😡😡😡
இந்த லூசு தமிழ் இப்ப வந்து இவன் கிட்ட மாட்டி இருக்கே......
அது மாட்டினதும் இல்லாம.....பிள்ளையை வேற மாட்டி விட்டு இருக்கு