இது காதல் காவியம் - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,463
113
Germany
சில மணி நேரத்தில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது.மீரா முதன் முதலாக இந்த சத்தம் கேட்டிருக்கிறாள்.பயத்தில் கை கால்கள் நடுங்கியது.அதைத் தொடர்ந்து இன்னுமொரு சத்தம்.தூங்கிய எல்லோரும் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தனர். கொஞ்ச நேரம் அமைதியின் பின்னர் அடுத்தடுத்த சத்தங்கள். இடையிடையே துப்பாக்கிச் சத்தங்கள் என கேட்டுக்கொண்டே இருந்தது.

மீராவோ உச்சக்கட்ட பயத்தில் இரு கைகளையும் காதில் வைத்தவளாய் இருந்தாள்.அங்கிருந்த அனைவருமே அதே பயத்தோடு எல்லாக் கடவுள்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டிருந்தனர்.

“அப்பா...எனக்கு பயம்மா இருக்கு” அப்பா ,அப்பா… என மந்திரம் போல தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தாள் மீரா.கிட்டத்தட்ட காலை ஆறு மணிவரை இந்த சத்தங்கள் விட்டுவிட்டு கேட்டுகொண்டே இருந்தது.

ஒரு ராணுவப் பெண் வந்து காலை டீ யும் கூடவே பன்னும் பகிர்ந்தாள்.அப்போது ஒரு முதியவர் சிங்களத்தில் தாக்குதல் பற்றிக் கேட்க, அந்தப் பெண்ணும் ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
எல்லோரும் அவரைச் சூழ்ந்து விசாரித்தனர்.

“பயமில்லையாம்.. தொன்னூறு வீதம் க்ளியராம்.ஆனா,இந்த கேம்ப்ல இருந்து போன சிலர் இறந்துட்டாங்களாம்” எனும் போதே மீராவுக்கு அவன் முகம் வந்துபோனது.அவனுக்கு ஏதும் ஆகியிருக்குமோ? ? என எண்ணமும் தோன்றியது.

நேற்றிலிருந்து கிட்டத்தட்ட அரைப்பட்டினியாகக் கிடக்கிறாள். வயிறு காந்திக் கொண்டிருந்தது.
பகலைக்காவது சோறு தருவாங்களா? வாழ்க்கையில முதன்முறையாக சோற்றுக்கு ஆசைப்படுறேன்.சோற்றின் அருமை தெரியாமல் எத்தனையோ முறை

“இந்த உலகத்துலயே போரிங்கான சாப்பாடுன்டா அது சோறுதான் பாட்டி. அவசரமில்ல லேட்டா சாப்புடுவோம்” என அலட்சியப்படுத்திய நினைவுகள் வந்து போனது.அத்தனைக்கும் சேர்த்து கடவுள் நன்றாக உணர்த்துகிறார் போல.

கடினமான ராணுவ உடையில் ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அங்குமிங்கும் உலவும் அந்தப் பெண்களுக்கும் இதே உணவு தான் போல.பார்க்க பாவமாக இருந்தது.என்னதான் இருந்தாலும் அவங்களும் பெண் தானே.அந்த துப்பாக்கி பாரமா இருக்கும்.வெயில் வேற.என நினைக்கையில் ரொஷான் முகம் கண்முன்னால் வந்துபோனது.

அவ்வப்போது துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டு இருந்தாலும் போகப்போக பழகியது போலானது.இரவு இருந்த பயம் அங்கிருப்பவர்களுக்கு இப்போது இருக்கவில்லை.இரவு எட்டு மணி தாண்டியிருந்தது.அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.மீராவுக்கும் கண்ணை சொருகியது.வெறும் பருப்புக்கறியும் அரை வேகலில் உருளைக்கிழங்கும் போடப்பட்ட சோற்று தட்டை கண்ணிமைக்கும் நொடிகளில் தின்று முடித்தாள்.இரவு வெறும் பாண் தான்.அதுவும் ஆளுக்கு ஒரு வீதம். பசி ஓரளவு தீர்ந்திருக்க நேற்றும் தூக்கமில்லாத விழிகள் தன்னையறியாமல் மீராவுக்கு மூடியது.

சரசர என்று சிலர் நடக்கும் ஓசை தூக்கத்தையும் தாண்டி மீராவுக்குக் கேட்டது.ஆனால் கண்களைத் தான் பிரிக்க முடியவில்லை.சில நேரம் கழித்து மிக அருகில் இல்லாவிட்டாலும் காதுக்கு அருகில் சுட்டது போல் துப்பாக்கி ஒலிகள் கேட்டது.அனைவரும் ஒரே சமயத்தில் அலறிக்கொண்டு எழுந்தனர்.முதலில் மீராவுக்கு ஒன்றுமே புரியவில்லை.பிறகு தான் உணர்வுக்கு வந்தாள்.

அவர்கள் தங்கியிருந்த மண்டபத்தின் ஒரு பக்கத்தில் சிலரும் மறுபக்கத்தில் ராணுவமும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.படத்தில் கண்ட சண்டைக் காட்சி போலிருந்தது. ஆனால் பயங்கரமாக. அனைவரையும் கீழே படுத்துக்கொள்ளுமாறு ராணுவத்தினர் அறிவுறுத்திக் கொண்டே இருந்தனர்.

அப்போது இரண்டு வயதுப் பிள்ளை படுக்க முடியாமல் முரண்டு பிடித்து எழுந்து போக எத்தனிக்க தன்னையறியாமல் பிள்ளையை பிடிக்க எழுந்த தாயின் நெற்றியில் புல்லெட் பட்டு இரத்தம் தெறித்தது.இன்னொருவர் பிள்ளையை காலால் தட்டி விழவைத்து எழ முடியாதவாறு அமுக்கி வைத்திருந்தார்.அழுகைச் சத்தங்களும் உயிர்ப் பயத்தினால் அலரல்களும் என அந்த இடமே கொடூரமாக இருந்தது.

மனிதனை மனிதன் கொல்வதற்கு மனிதன் அனுமதிக்கிறான் என்றால் இங்கு கடவுள் யார்?? ஒரு உயிர் உலகத்துக்கு வரும் போது பெண் படும் வேதனைகள் அத்தனையும் ஒரு நொடிகளுக்குள் ஒன்றுமே இல்லாமல் ஆகிறதே. யாரோ சிலரின் அதிகார போதைகளுக்கு உரிமைகள் என்றும் நாட்டுப்பற்று என்றும் மேல்ச்சாயம் பூசி உணர்வுகளைத் தூண்டிவிட்டு கள்ளறைகள் மேல் மாளிகை கட்ட நினைக்கும் பேராசைப் பேய்களால் தான் எல்லாம். மீராவுக்கு பயத்தையும் மீறி ஆவேசம் வந்தது.கண்முன்னே தாய் இறந்ததை அறியாத குழந்தையையும், தன் பிள்ளைக்காய் உயிர் விட்ட தாயையும் பார்க்கப் பார்க்க வலித்தது.இந்த சூழ்நிலையினை உருவாக்கியவர்களை கண்டுபிடித்து கொல்லத் துணிந்தது.

ஒரு கட்டத்தில் சண்டையிட்டவர்கள் காணாமல் போக,ராணுவ வீரர்கள் இரு பக்கமும் சுற்றிக் கொண்டு முன்பக்கம் துப்பாக்கிகளை நீட்டியபடி அங்கிருந்தவர்களுக்கு அரண்களாக சூழ்ந்தனர்.திடீரென்று மனங்களை நடுங்கவைக்கும் ஒரு பேரமைதி நிலவியது.

“எல்லாரும் எங்க கூட நகர்ந்துட்டே வந்து பஸ்ஸில் ஏறுங்க” என ஒருத்தன் கத்தினான்.சொன்னது போல் நகர்ந்தவாறு ஒவ்வொருத்தராய் பஸ்ஸில் ஏறினர்.ஏறிய எல்லோரையும் சீட்டில் குனிந்து படுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.மீராவுக்கு தன் பேக்கில் இருக்கும் அவளது அத்தனை சான்றிதல்களும் நினைவுக்கு வந்தது.
மண்டபத்தில்லஇருக்கும் அந்தப் பையை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு அரனை விட்டு ஓடிச்சென்றாள் மீரா.

ஏய்… போகாத வாங்கோ. ஏய் ஸ்டோப். என்ற குரல்கள் எதுவும் அவளுக்கு கேட்கவில்லை.
மண்டபத்துக்கும் அவளுக்கும் இடையே சில எட்டுக்கள் இருக்கும் போது இருகைகள் அவளைத் தூக்கிக் கொண்டு ஓடிச்சென்ற ஓரிரு நொடிகளில் மண்டம் வெடித்துச் சிதறியது.என்ன நடந்தது என ஊகிக்கமுடியாத அந்நொடியில் மீரா, தன் கால்களில் தாங்கொன்னா வலியை உணர்ந்தாள்.யாரோ தன்னை தள்ளிவிட்டது போலிருந்ததால் மரத்தில் நச்சென்று தலை இடித்துக்கொள்ள பாதி மூடிய விழிகளுக்குள் பஸ் வேகமாய்ச் செல்வது தெரிந்தது.நா..னும் என்று முணுமுணுத்தவாறே மயங்கினாள்.

வெகு சிரமப்பட்டு கண்களைத் திறந்தாள்.கால்கள் அசைக்க முடியாதளவு சுமையாக இருந்தது.நெற்றியில் ஏதோ உறுத்த தொட்டுப் பார்த்தாள். அது, துணியொன்றினால் சுற்றப்பட்டிருந்தது.மெல்ல மெல்ல நிதானத்திற்கு வந்து, எழ முயற்சித்து கீழே விழப்போனவளை அவன் தூக்கிக் கொண்டான்.

அவனது யூனிஃபோம் காலரை இறுகப்பிடித்தபடி அண்ணாந்து பார்த்தாள். இவனா?? இந்தக் கை தானே மண்டபத்துக்குள் போகமுன் தன்னைத் தூக்கியது. நான் மட்டும் அங்க போயிருந்தா? இன்னும் இறுகப்பிடித்தாள்.

வாய் தானாக “தண்ணி” என்றது. அவளை மெதுவாய் இறக்கிவிட்டு ஒரு போத்தலில் தண்ணி எடுத்து வந்து வாயில் வைக்கப் போனவன் பிறகு அவள் கைகளில் கொடுத்தான்.தாகம் தீரக்குடித்ததும் தான் அவளுக்கு சுற்றுப்புறம் உறுத்தியது. நிலவின் வெளிச்சம் தவிர எந்த வெளிச்சமும் இல்லாத காடு.காதுகளில் சில்லூறுகளின் ஒலி மட்டுமே தெளிவாகக் கேட்டது.அவனும் அவளுமன்றி யாருமே இல்லாத இடம். இல்லாட்டி அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம் என்பதைத்தவிர எதுவும் அவளுக்குத் தோன்றவில்லை.

“நீங்க ஓடிப்போனதால் தான் நம்ம இங்க.இல்லாட்டி பஸ் போயிருக்கலாம்.டைம் பொம் இருந்த.அதான் வெடிப்பு.என் ஃபோன் எல்லாம் உடைந்து.
காலைதான் கன்டெக்ட் பண்ணலாம்.கேம்ப்ல என் பேக் மட்டும் எடுத்து உங்க தூக்கிட்டு இந்த இடத்துக்கு வந்து சில மினிட்ஸ்ல கேம்ப்பும் வெடிப்பு.”

அவன் உடைத்து உடைத்து சிரமப்பட்டு பேசிய தமிழ் கேட்க நன்றாக இருந்தாலும் அதைச் சொல்லவும்,ரசிக்கவும் நேரம் இதுவல்ல என்பதால் மனதோடு நிறுத்திக்கொண்டாள் மீரா.

“இவனுக்கு என் மேல கோபம் வரல்ல போல.என்னால தானே அவன் இங்க இருக்கான்.ஆனா,என்னோட பைல் எல்லாம் போயிட்டா?. ஐய்யோ...என்னோட கனவு அவ்வளவு தான்..இதெல்லாம் அப்பாகிட்ட சொல்லனும்.அதுக்கு இங்கிருந்து போகனும்.அதுக்கு முதல் நான் நடக்கனுமே.என்னால முடியுமா? எழுந்து பார்த்தாள் வலித்தது.

இவனப் பார்த்தா பயம்மா வேற இருக்கு.சுண்டு விரலால் அடிச்சாலே நம்ம டெத்து தான்.அவனது அசாத்திய உயரத்தை கீழிருந்தவாறே கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்தாள்.எவ்வளவு நேரமா அவன் காலையே பார்க்கிறது?

என்ன..?

இடம் வலமாய் தலையாட்டினாள்.

தூரத்தில் வாகனமொன்றின் ஒலி கேட்டது.அவர்கள் இருந்தது இருட்டானதும் மரங்கள் செறிந்த இடமும் என்பதால் அவர்கள் இருப்பது தெரிய வாய்ப்பில்லை.மரங்கள் ஏற்றிக் கொண்டுவரும் பெரிய லொறி போல் தெரிந்தது.வீதியை நோக்கி வேகமாகச் சென்று அவன் லொறியை நிறுத்தினான்.

நம்மள தனியா விட்டுப் போயிடுவானோ என்ற பயம் மீராவுக்கு இல்லாமலில்லை.
படாதபாடு பட்டு மரத்தின் விழுதுகளைப் பிடித்து எழுந்து நின்றாள்.வேகமாக வீசிய காற்றினால் கலைந்த முடிகள் கண்களை மறைக்க,துப்பட்டா ஒருபுறம் பறக்க எதை சரிசெய்வது எதை விடுவது என்று புரியாதவளாய் தடுமாறிக்கொண்டு நின்றவளை விலகாத பார்வையுடன் அவன் நெருங்கிவருவது தெரிந்தது.

“அதுல போவம்” என்றவன் அவளைத் திரும்பிப் பார்த்தவாறு முன்னே நடக்க அவளும் பிடிமானமில்லாமல் ஒரு எட்டு வைக்க முயன்று முடியாமல் தவித்தாள்.அவன் ஒன்றும் பேசாது குனிந்து மெதுவாய் அவளைத் தூக்கிக் கொண்டான்.அதை என்னவென்றுதான் அவள் மறுப்பது.

லொறியில் மரங்கள் நிறைய ஏற்றபட்டிருந்ததால் பின்னால் இடம் குறைவாகவே இருந்தது.அதனால் ட்ரைவர் சீட்டில் அவளை உட்காரவைத்து விட்டு கதவை அடைத்ததும் மீரா, அவசரமாக தலையை வெளியே விட்டு எட்டிப்பார்த்தாள்.அதே சமயம் அவனும் குனிய அவன் வாயில் நெற்றி இடித்துக் கொண்டது.

ஸ்ஸ்ஸ்…. என்றாள்

சாரி… என அவன் கைகுட்டையால் சுற்றப்பட்டிருந்த அவள் நெற்றிக் காயத்தின் மேல் மிருதுவாக வருடிவிட்டான்.பின்னர், புரிந்தவனாக பின்னால் இருப்பேன் என கைகாட்டினான். ஏதோ சொல்ல முடியாத நிம்மதி மனதில் பரவுவதை உணர்ந்தாள் மீரா.ஆள் பார்க்க பொல்லாதவனா இருந்தாலும் நடத்தைகள் மென்மையாகத் தான் இருக்கிறது.நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தாள்.இவன் சம்பவம் நடக்குறதுக்கு முதல் வந்து இருக்கனும்.சில பேர் இறந்ததா சொன்னாங்க.நல்ல வேளை இவனுக்கு ஒன்னும் ஆகல்ல.லொறி நிறுத்தப்படுவதை உணர்ந்தாள்.

அவன் கதவைத் திறந்து அவளை இறக்கி பஸ் ஸ்டாப் மாதிரி இருந்த இடத்தில் அவளை உட்கார வைத்தான். லொறி ட்ரைவர் இறங்கி வந்து மிக மரியாதையாக அவனிடம் சிங்களத்தில் பேசினான்.

“ட்ரைவர் கெதர(வீடு) பக்கம். ஸ்டே ஆகி நாளை ஹாஸ்பிடல் போங்க.” என்றான்.

கருத்து சொல்ல என்ன இருக்கு.
இப்போதைக்குஅவளால் ஒன்றுமே பண்ண முடியாதே. “சரி”என்று தலையை ஆட்டி வைத்தாள்.ஆனால் ஒன்று, இப்படியெல்லாம் நடக்குமென்று கனவிலும் அவள் நினைக்கவில்லை.அதுவும் அந்நிய இனத்து ஆணுடன் இரவு முழுக்க இருக்கன்.அதுவும் அவன் தன்னை தூக்கும் நிலை வேறு.தனக்குள் நொந்து கொண்டாள் மீரா.

வீடு என்று சொல்ல முடியாதளவு கூடாரம் போல் தான் இருந்தது.இதுக்குள்ள எப்படி வாழ்றாங்களோ எனத் தோன்றியது.தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறந்தான் அந்த ட்ரைவர்.முதலில் உள்ளே சென்ற ட்ரைவர் பிறகு,மனைவியுடன் திரும்பி வந்தான்.அவள் முகத்தில் தூக்கத்தை தாண்டி அவ்வளவு மரியாதை தெரிந்தது.

சிரித்த முகமாய் உள்ளே வரவேற்றாள்.மிகவும் வசதி குறைந்தவர்கள்.உள்ளே ஒரே அறை மட்டும் தான்.நீளமான ஹால் தவிர்ந்து ஒரு சமையலறை போல் ஒன்று தெரிந்தது.அதுவும் களிமண் பூசப்பட்ட சுவர்களுடன்.
அதற்கேற்றவாறு மங்கிய வெளிசத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.ஆனால் எல்லாமே மிகச் சுத்தமாய் இருந்தது. சிங்கள நாடகங்களில் மட்டுமே இந்தக் காட்சிகளைப் பார்த்தவளுக்கு நேரில் புதினமாகவே இருந்தது.

கண்களை உருட்டி உருட்டிப் பார்த்தவளை ரொஷான் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஏதோ உணர்ந்தவளாய் அவன் பக்கம் திரும்ப அவன் பார்வை வேறுபக்கம் மாறியது. சுடசுட அவித்த கிழங்கும் வெள்ளைச் சம்பலும் பறிமாறினார்கள்.மறுக்க வயிறு சிறிதும் சம்மதிக்கவில்லை.மாவு போல வாயில் இட்டதும் கரைந்து போன மரவள்ளிக்கிழங்கு அவ்வளவு சுவையாக இருந்தது.சாப்பிட்டு முடித்ததும் தேனீரும் கருப்பட்டியும் தந்தார்கள்.சம்பல் காரம் நாவில் நின்றதால் கருப்பட்டியைக் கண்டதும் தின்றுவிட்டாள் மீரா. இவன் ஏன் சிரிப்பது போல் பார்க்குறான் என நினைத்தவாறே தேனீரை வாயில் வைத்தவளுக்கு பிறகு தான் கருப்பட்டி ஏன் தந்தார்கள் எனப் புரிய கடைக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.எழுந்து வெற்று க்ளாஸை வைத்துவிட்டு தன் கையிலிருந்த கருப்பட்டியை அவள் கையில் திணித்துவிட்டு வெளியேறினான் ரொஷான்.

நங்கி பேரு?? எனக் கேட்டபடி வந்தாள் ட்ரைவரின் மனைவி

“மீரா” எனக் கேள்வியாய்ப் பார்த்தாள்.தமிழ் தெரியுமா?

எங்க பக்கத்துல தமிழ் பேசும் முஸ்லிம் குடும்பங்கள் நிறைய.அவங்கள்ட்ட தமிழ் பழகினது.

ஓஹ்...உங்க பேர்?

சோமாவதி.

சாப்பாடு நல்லா இருந்தது.ரொம்ப தேங்ஸ்.

கிழங்கு பின்னேரம் தான் வீட்டுல புடுங்கின.இவர் வர இரவு பன்னென்டு தாண்டிடும்.பசில வருவாரே அதான்.கடைசில நீங்களுமே சாப்பிட்டீங்க. சந்தோசம்.நங்கி காலைல தான் ஹாஸ்பிடல் போகனும்.நல்ல காயம் போல.நோவா??

ம்ம்...கால் தான் அசைப்பது கஷ்டம். தலை லேசா வலிக்கிது என்றாள் மீரா.

தூங்குறீங்களா??? எனக் கேட்டாள்

கண்ணிமைகள் கனப்பதை மீரா அப்போதுதான் உணர்ந்தாள்.நேரம் பன்னிரன்டைத் தாண்டியிருந்தது.
ஆனால் அவள் எப்படி முடிவெடுப்பது?? தூங்கினா நல்லாருக்கும் போலத்தான் இருந்தது.உடல் அசதியும் காயங்களின் வலியும் சேர்ந்து உடம்பில் பலவீனம் வேறு.

“வாங்கோ…. என எழுந்து கொண்ட சோமாவதியின் பார்வையில் ரொஷானின் வருகையை உணர்ந்து கொண்டாள்.

சோமாவதி ,மீராவிடம் கேட்ட கேள்வியை ரொஷானிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.அவன் இவளைக்காட்டி ஏதோ சொன்னான்.

“நங்கி தூங்கலாம்.இருங்கோ வாரன்” என அறையை நோக்கிச் சென்றார் சோமாவதி.அப்போ இங்க தான் நைட் தங்கப் போறோம் போல.

ட்ரைவர் வந்து ரொஷானின் பையினை கொடுத்தான்.பின் உள்ளே சென்று திரும்பி வந்து, அந்த அறையைக் காட்டி தூங்க சொன்னான்.மீராவுக்கு கைகால் முகம் கழுவினால் நன்றாக இருக்கும் போல் தோன்ற சோமாவதியினை கண்களால் அழைத்து விஷயத்தைச் சொன்னாள்.மீராவை கைப்பிடியாக கூட்டிச் சென்று கதிரை ஒன்றில் உட்கார வைத்து அவளுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்தாள்.மீராவுக்குச் சங்கடமாக இருந்தாலும் அவரது அணுகுமுறைகள் பிடித்திருந்தது.

கைகளால் கும்பிட்டு நன்றி சொன்னாள் மீரா. “அய்யோ நங்கி.” என கையினை இறக்கி கைப்பிடியாக ரூமிற்கு கூட்டிச் சென்று கட்டிலில் அமரவைத்தாள்.

“நாங்க பக்கத்துல அக்கா வீட்டில் தூங்குற.பயமில்லை நீங்க தூங்கலாம்” என்றவர் முன்னால் விளக்கை அணைத்து விட்டு கதவை மூடிச்சென்றாள்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: இது காதல் காவியம் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

sathiyags

Well-known member
Apr 18, 2026
319
285
63
India
தாய் இறந்தது தெரியாமல் பிள்ளை. எவ்வளவு கொடுமை.