காதல் ராஜ வீதியில் - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,463
113
Germany
23

மணிமொழி முன்னே அமர்ந்து இருந்தான் மதிவாணன். கூடவே இளம் பெண்கள் இருவரும்.

நகத்தை கடித்தபடி எதிரில் அமர்ந்திருந்த தங்கையை “ வனி நகத்தை கடிக்காதே” என எச்சரித்துக் கொண்டு இருந்தான் அண்ணன்.

“விடுடா. இப்போ இதுவா முக்கியம்? நாம பேச வந்த விஷயத்தை பேசி முடி. உன் தங்கச்சியை அப்புறம் கொஞ்சலாம்” மணிமொழி வனியை காப்பாற்றி விடப் பார்த்தான்.

“எது? இது உங்களுக்கு அவன் கொஞ்சுற மாதிரி இருக்கா? அண்ணி கேட்டுக்கோங்க. இதுதான் என் அண்ணன் கொஞ்சல்”

வனி அண்ணனை கயலிடம் மாட்டி வைத்தாள்.

வனியை விட சற்று வயதில் பெரியவளான கயல் சிரித்துக் கொண்டாள். பள்ளியில் படிக்கும் போது வேதியியல் பிடித்த பாடம் அவளுக்கு. அதில் வேதி வினைகளில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் ஒரு பொருள் இன்னொன்றாக மாறும் மாயம் அவளுக்கு அதிசயமாக இருக்கும். அப்படித்தான் இப்போது அவள் உலகம் மாறிப் போனது அழகாக.

இப்படி ஒரு இனிய சந்திப்பு தனக்கு வாழ்வில் அமையும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அவ்வளவு ஏன்? மதிவாணன் தன்னை காதலித்திருப்பான் என்றே அவள் நினைக்கவில்லையே? அவன் காதல் சொன்னதும் தன் அன்னைக்கு சொல்லி அவரின் கடினமான மாப்பிள்ளை பார்க்கும் வேலையை விட சொல்லிவிட்டாள்.

அவரும் நிம்மதியாக “மாப்பிள்ளை டாக்டரா? ரொம்ப சந்தோஷம். நீ அவர் கிட்ட இப்பவே தைராய்ட் இருக்குன்னு சொல்லிட்டு இருக்காதே. கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லிக்கலாம்” என்றிருந்தார்.

“ஏற்கனவே சொல்லிட்டேன்மா” என்று சொல்லி அவர் வாயை மூட இவள் நினைக்க அவரோ, “இதுலாம் எப்படித்தான் புருஷன் வீட்ல பொழைக்க போகுதோ?” என புலம்பித் தள்ளினார்.,

“எப்டியோ பொழக்கிறேன் மா. உங்களுக்கு தொந்தரவு தர மாட்டேன்” என்று ஆறுதல் கொடுத்து முடித்திருந்தாள்.

இப்போது மாமா (தமிழ்!) பிரச்சனைக்கு தன்னையும் கூப்பிட்டிருப்பது பெருமையாக இருந்தது. தன் குடும்ப பிரச்சனை தனதிணைக்கும் தெரிய வேண்டுமென நினைத்த மதிவாணன் மேல் அவ்வளவு அன்பு பொங்கி வழிந்தது கயலுக்கு.

அவன் என்னவெனில் “நீ பக்கத்துல இருந்தா ஒரு ஆறுதலா இருக்கும். டோன்ட் ஹெசிடேட் மீனம்மா” என்றிருந்தான்.

கயல் என்றால் மீன் தானே. அதனால் உன்னை அப்படித்தான் கூப்பிடுவேன் என கொஞ்சியவனை வெட்க கோபத்துடன் பார்த்த கயல் “எதுக்கு என் அப்பா வச்ச பேரை மாத்துறீங்க?” எனவும், “உன்னை அம்மாவா மாத்தப் போற புருசனுக்கு உன் பேரை மாத்த உரிமையில்லையா?” என்று காதல் வழக்கு வாதிட்டன்.

“ஹாஸ்பிடல்லயாவது என் ஒரிஜினல் பேரை குடுப்பீங்களா என்ன?” அவசர அவசரமாக கேட்டாள் கயல்.

“எந்த ஹாஸ்பிடல்?”

“அதான் மெட்டர்னிட்டி ஹாஸ்பிடல்”

அவளின் பதிலில் அகமலர்ந்து முகமலர்ந்து சிரித்தான் மதிவாணன். அவன் சிரிப்பில் தன் புத்தி போன போக்கை அவன் கண்டு கொண்டது புரியவும் ஒரே வெட்கமாகிவிட்டது கயலுக்கு. அத்தோடு நில்லாமல்,

“அங்கே பேர் குடுக்கறது இருக்கட்டும். அதுக்கு முன்னே கல்யாண பத்திரிக்கையில பேர் அடிக்க வேண்டாமா?” என்றும் அவன் கேட்கவும் இரு உள்ளங்கைகளாலும் முகத்தை பொத்திக் கொண்டாள் அவள்.

“அய்யோ! அவ்ளோ அழகுடி நீ!” அவளை இதுவரை தொட்டு பேசாதவன்
அப்போது தான் அவள் கரம் பற்றி பிரித்து குனிந்திருந்த அவள் முகம் பார்த்து முன் நெற்றியில் முத்தமிட்டான்.

அதன் பின் அவர்களுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச தயக்கமும் போய்விட இப்போதெல்லாம் அவளை இடித்துக் கொண்டே அலைவதே அவனுக்கு வேலையாகிவிட்டது.

இதில் அவன் கொஞ்சல் பற்றி பாடம் வேறு எடுக்கிறாள் அவன் தங்கை. கயலுக்கு முகம் சிவந்து போக மதிவாணன் தொண்டையை செருமிக் கொண்டான்.

“பேச வேண்டியதை பேசுவோமா?”

மதிவாணனின் குரலில் அதுவரை வனியின் கை விரல் நகங்களையும் அவை அவள் உதடுகளில் கடிபடுவதையும் பார்த்து எச்சில் ஊறிக் கொண்டிருந்த மொழி சுய நினைவுக்கு வந்தான். அவன் ஜொள்ளு விடுவதை பார்த்து அண்ணனாக சுதாரித்தே தங்கையை மறைமுகமாக எச்சரித்தான். அது அவன் தலைக்கே ஆபத்தாக முடிந்து விட்டது.

தந்தை ஒன்றும் திக்கு தெரியாத காட்டில் தொலைந்து போகவில்லை என்பதில் மதிவாணன் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் அவன் அன்னை அவன் தந்தையை நினைத்து பதறுகிறாரே?அவரை தேற்ற வேண்டுமெனில் அப்பாவை கண்டுபிடிக்க வேண்டும்.

கண்டுபிடிப்பது என்ன பெரிய விஷயம்? கண்டிப்பாக அந்த ஜம்புவை தேடி தான் போயிருப்பார். அந்த பாம்பு எங்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து போய் நின்றால் போதும். லபக் என்று இவன் அப்பாவை பிடித்து விடலாம். அங்கும் இல்லையென்றால் தான் அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை அப்படி தமிழ் ஜம்பு வசம் இல்லை என்றால் காவல்துறையை தான் அணுக வேண்டும். இதற்கு எல்லாம் முன்னே தமிழ் வேலை பார்த்த அலுவலகத்தில் அவரைப் பற்றி விசாரித்து விட்டான்.

தமிழ் முதலில் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்ததும் தொலைபேசி மூலம் கூடுதலாக பத்து நாட்கள் விடுமுறை சொன்னதும் தெரிய வந்தது. அந்த கூடுதல் நாட்களுக்கு ஊருக்கு வந்து விடுமுறை விண்ணப்பம் தருவதாக சொல்லியிருந்தாராம். தமிழின் அனுபவம் காரணமாக உடனடியாக வேலையை விட்டு தூக்க எல்லாம் செய்ய மாட்டார்கள் அவர் அலுவலகத்தில்.

“இப்போ மாமா பத்தி பேசலாமா?” மணிமொழி வனி மீதான பார்வையை விலக்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான். மதிவாணன் மலரிடம் பேசிவிட்டு விஷயத்தை உடனே சொன்னது மணிமொழியிடம் தான். அவனுக்கு பால்ய விவாகம் பற்றி மட்டும் தெரியும். இப்போது தமிழ் செய்து வைத்திருந்த அத்தனை குளறுபடிகளும் தெரிந்து மணிமொழி ஆச்சரியம் தான் பட்டான்.

தமிழை பற்றி அவன் எண்ணங்கள் படி, அவர் படித்தவர். நல்ல வேலையில் இருப்பவர். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர். சிறந்த குடிமகன். அப்படிப்பட்டவர் குடும்பத்திற்காக பிள்ளைகளுக்காக என்பது மட்டும் இல்லாமல் கட்டிய மனைவிக்காக இத்தனை தூரம் போய் இருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை தான் தந்தது.

உண்மை காதல் தமிழுக்கு மலர் மீதுதான் என்பதை தான் அவன் உணர்ந்தான். மனைவியின் ஒரு வார்த்தைக்காக, பார்வைக்காக, கண்ணீருக்காக இத்தனை செய்த தன் மாமனார் இதே காதலுடன் அவர் இணையுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என ஆசை கொண்டான்.

“ஓகே இப்போ தமிழ் சார் வர்ற வரை வெயிட் பண்ணுவோமா? இல்லை அவரை தேடி போவோமா?” அவன் பேசி முடிப்பதற்குள் வனி குறுக்கிட்டாள்.

“அது என்ன தமிழ் சார்? மாமான்னு சொல்லுங்க”

“இப்போ அதுவா முக்கியம்?” மொழி ஆட்சேபித்தான்.

அதில் கோபம் கொண்ட வனி, “ஆமா. அதுதான் முக்கியம்” என்று கண்களை உருட்டினாள்.

“அட அட சண்டை போடாதீங்கப்பா”

இருவரையும் விலக்கி விட்டான் மதி. வந்ததில் இருந்து எல்லாவற்றையும் அழகாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கயல்.

“இங்க என்ன ஷூட்டிங்கா நடக்குது?”

அவளை வலது தோளால் இடித்துக் கேட்டான் மதிவாணன்.

அவள் அவன் சொன்னதை புரிந்து கொண்டாளோ இல்லையோ அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

சும்மாவே அவளை இடித்துக் கொண்டு இருப்பவன் இந்தப் புன்னகையில் அவளை இடுப்பில் கை போட்டு மெல்ல அணைத்து தன்னருகே இழுத்துக் கொண்டான். இது எதிரே இருந்து பார்த்த ஜோடி அறியவில்லை என்று சொல்ல முடியாது, ஆனால் கண்டு கொள்ளவில்லை.

“உங்களைப் பார்த்தா அப்பாவை தேட வந்தவர் மாதிரி இல்லீங்களே சாமி” மொழி பேச, வனி அவனை கண்களால் முறைத்தாள். அண்ணனை கிண்டல் செய்து விட்டானாம்! அவளுக்கு கோபமாம்!

“அட ஒரு முடிவுக்கு வாங்கப்பா. இப்போ மாமா எங்கே?” மொழி தீவிரமாக கேட்கவும் விவாதம் ஆரம்பித்தது.

“அம்மா சொன்னபடி பார்த்தா அப்பா இப்போ பூதக்கிணறு ஊருக்கு போய் இருக்கனும்”

“பேர் நல்லா இருக்குல்ல?”

கேட்ட தங்கையை பார்த்து பல்லைக் கடித்தான் மதிவாணன்.

“கொஞ்சம் சும்மா இருக்கியா…ம்மா” - கடைசி ‘ம்மா’ மொழிக்காக. அவன் கட்டிக் கொள்ளப் போகும் பெண்ணை இவன் தங்கை என்பதற்காக தாறுமாறாக பேசலாமா?

இருவரின் பேச்சை கவனித்தாலும் கவனிக்காத மாதிரியே இருந்தான் மொழி. அண்ணன் தங்கைக்குள் தலையிட அவன் யார்? அதே நேரம் மாப்பிள்ளை, மச்சான் என்ற மதிப்பும் உண்டே?

“அப்போ லஞ்சுக்கு சொல்லிடலாமா?”

மொழிதான் கேட்டான்.

“ஏன்?” - கோரசாக மற்ற மூவரும் கேட்டதும், “அதான் நீங்க ஒரு முடிவுக்கு வர்ற மாதிரி தெரியலியே?” என்றான்.

“ரொம்பத்தான்” - சொன்னது மதி.

“கோவப்படாதே மச்சான். ரொம்ப நேரமா ஒன்னும் சாப்பிடாதது பசிக்கிற இருக்கு. அதான். சொல்லுங்க கயல்” என அவளையும் இழுத்தான் மொழி.

கயல் அவனிடம் ஒதுங்கி போகவில்லை என்றாலும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை. அவள் ஆச்சர்யம் எல்லாம் வனி மீதுதான். ‘இவளா புகைப்படத்தில் இருந்த அந்த சிறுமி? பக்கத்திலேயே வைத்துக் கொண்டு இதுவரை அறியாமல் இருந்து இருக்கிறாளே?’

மொழி, வனி சந்திப்புகளை கயல் பார்த்து இருந்தாலும் அதில் மொழியின் அடக்கப்பட்ட உணர்வுகளை அறிந்திருந்தாலும் அது இவ்வளவு தூரம் இருக்கும் என நினைக்கவில்லை. அறியா பருவம் வனிக்குதான் அப்போது. மொழி நல்ல நினைவுடன் இருந்தான் அதே நேரத்தில். அப்படி என்றால் இவள்தான் அவள் என்று தெரிந்து அதை சொல்லாமல் இருந்து இருக்கிறான். மதியிடம் இதுபற்றி வண்டியில் வரும் போது ஒருமுறை கேட்டதற்கு “அதை அப்புறம் பார்க்கலாம். நீ வண்டியில் ஏறு” என்றுவிட்டான். ஆம். அவன்தான் நிலாகாலத்தில் இருந்து கயலை இங்கே அழைத்து வந்திருந்தான்.

வனி தன் ஸ்கூட்டியில் வந்திருந்தாள், மொழியும் தனியாக வந்திருந்தான்.

இவர்கள் ஜோடியாக வந்து இறங்குவதை பார்த்துவிட்டு மொழியை வனி சட்டையை பிடித்து கேள்வி கேட்டாள், ஏன் தன்னை அவன் வண்டியில் கூட்டி வரவில்லை என்று. அவனும் “அப்புறம் சொல்றேன்” என்பதோடு நிறுத்திக் கொண்டான், வனி என்ன முறுமுறுத்தும் கண்டுகொள்ளவில்லை. அப்புறம் அவளும் விட்டுவிட்டாள். அவனுடன் இருக்கும் போது மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் எப்படி கொடுப்பாள்?

இங்கே வந்ததில் இருந்து கொஞ்சம் பழைய கதையை ஓட்டிவிட்டு இப்போதுதான் தமிழ் பேச்சை ஆரம்பித்தார்கள். முதலில் பேசிய பேச்சிலேயே ஆச்சர்யம், அதிர்ச்சி, கொஞ்சம் மகிழ்ச்சி என்று கலவையான மனநிலையில் இருந்தவள் மாமனார் இது விஷயமாக காணோம் என்றதும் ‘இன்னும் எத்தனை அதிர்ச்சிடா குடுப்பீங்க?’ என்பதாக பார்த்திருந்தாள். கூடவே அண்ணன் தங்கை, மாமன் மச்சான் சண்டைகள் வேறு.

அதையெல்லாம் அதிசயமாக பார்த்துக் கொண்டிருப்பவளைதான் பேச்சில் இழுக்கிறான் மொழி.


கயல் அவனை நிமிர்ந்து பார்த்து மெல்ல புன்னகைத்துவிட்டு பார்வையை அகற்றிக் கொண்டாள்.

இவள் இவ்வளவும் நினைத்துக் கொண்டிருக்க,

“மாப்ள, நிஜமா பசிக்குதா. சொல்ல வேண்டியது தானே?” என பதறி இருந்தான் மதி.

ஒன்றும் சொல்லாமல் தலை அசைத்தவன், “ மொதல்ல மாமாவை பூதகிணறு போய் பாப்போம். எப்போ கிளம்புறது? நான் நெட்ல பார்த்துட்டேன். பஸ்லயே போயிரலாம். பைக்லயும் போகலாம். ஆனா அது வனப்பகுதிங்கிறதால ஆறு மணிக்குள்ள அங்கே இருந்து கிளம்பிறனும். சோ இப்ப சாப்பிட்டு கிளம்பினா சரியா இருக்கும். மோரோவர் அங்கே சாப்பாட்டு கடைகளும் ஜாஸ்தி கிடையாதாம். நீ சொன்னதும் பார்த்திட்டேன். நீயும் பார்த்திருப்பேன்னு நினைக்கிறேன். அப்புறம் இதே மாதிரி மீட்டிங் அடுத்து எப்போ நடக்கும்னு தெரியாது. அதாலதான் எல்லாரையும் வரவச்சிருக்கே இல்லியா? இப்போ ஓகேவா? சொல்லு. எப்படி போகலாம்?” என மதியை பார்த்து கேட்டான்.

மொழிக்கு மதியின் எண்ணம் புரிந்திருந்தது. ஒருவேளை போன இடத்தில் எதுவும் பிரச்சனை ஆகிவிட்டால், போலீஸ் கேஸ் என்று போய்விட்டால், மீண்டும் இதேமாதிரி சந்திப்பது கடினம் என நினைக்கிறான். ஆனால் இவன் இருக்கும்போது அவனுக்கு எதற்கு கவலை?

தனி தனியாக பைக்கில் பூதகிணறு போவதாகவும் தமிழை அதே பைக்கில் அழைத்து வந்து விடவேண்டும் என்றும் பேசி முடித்துவிட்டு சாப்பிட்டு கிளம்பினார்கள்.

“வனி, நீ உன் அண்ணியை இப்போதைக்கு நிலா காலத்துல விட்ரு. நாங்க வந்ததும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்க்கோ” என்றான் மொழி.

எல்லாம் யோசித்துதான் வனியை ஸ்கூட்டியில் வர சொல்லி இருந்தான் அவன்.

“அப்புறம், நான் சொல்லுவேன். அப்போ இங்கே போலீஸ் ஸ்டேஷன்ல கம்பளைண்ட் குடு. அத்தை குடுக்கற மாதிரி குடு” எனவும் அறிவுறுத்தினான். அவளும் “ஓகே பாஸ்” என்றிருந்தாள்.

சட்டென நிலையை உணர்ந்த மதி தனக்காக, தங்கள் குடும்பத்துக்காக சிந்திக்கும் மாப்பிள்ளை மீது பக்தி பரவசமாகி கட்டிக் கொண்டான்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் ராஜ வீதியில் - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
ஆமா டா அவர் ரொம்ப நல்லாவே காணல.....
செல்வா கிட்ட மாட்டி இருக்கிறாரோ என்னவோ