காதல் ராஜ வீதியில் - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,463
113
Germany
24

எல்லாவற்றையும் ஆரம்பித்து வைத்த தமிழ் இப்போது ஒரு இருண்ட அறைக்குள் மயக்கத்தில் இருந்தார்.

செல்வா அவரிடம் ‘உன் மகளை மொழியிடம் இருந்து பிரிக்க சில சடங்குகள் செய்ய வேண்டும்’ என்றான். அதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் சொல்லி இருந்தான். அதற்குள் மொழி தன் மகளின் மனதை மாற்றிவிட்டால்? “அதெல்லாம் பிரச்சனை இல்லை. நான் பார்த்துக்கறேன்” எனச் சொல்லி இருந்தான் செல்வா.

அதை நம்பி பத்து நாட்கள் விடுமுறை அலுவலகத்தில் சொல்லிவிட்டு வீட்டில் ஏழு நாட்களில் வருவதாக சொல்லி இருந்தார். வீட்டுக்கு போய் ஓய்வெடுத்துவிட்டு பின்னே சில பல சலசலப்புகள் இருக்கும், அவற்றை சரி செய்துவிட்டு நிதானமாக அலுவலகம் செல்லலாம் என்று நினைத்து இருந்தார்.

இங்கே இந்த செல்வா ஆரம்பத்தில் நன்றாகதான் இருந்தான். அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்று அவர் கணித்திருக்க அவர்கள் பேசிக் கொண்டு இருந்த நேரம் ஒரு இளம் பெண் கைக்குழந்தையுடன் திடீரென இவர்கள் முன் வந்தாள்.

“நல்லா இருக்கீங்களா மச்சான். மாமாவுக்காக பயந்திட்டு தானே என்னை தள்ளி வச்சி இருந்தீங்க மச்சான். இப்போ தான் மாமா இல்லியே? என்னையும் நம்ம பிள்ளையையும் இந்த வீட்ல இப்பவாச்சும் சேர்த்துக்கங்க” என அவன் காலைப் பிடித்தாள்.

அவனுக்கு திருமணம் ஆனதே அதிசயம் போன்று பார்த்துக் கொண்டு இருந்த தமிழ், அது ரகசிய திருமணம் என்றறிந்து அதிர்ச்சி அடைந்தார். கூடவே கைக் குழந்தையையும் பார்த்தவர் ‘அடப்பாவி’ என்றுதான் செல்வாவை பார்த்தார்.

இவனுக்கு அந்த மொழி பயல் எவ்வளவோ தேவலாம் போலவே? பழைய விஷயங்களை சொல்லி அவன் அவர் மகளை மூளை சலவை செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து இருக்கலாம். அல்லது புதியதாக காதலை சொல்லி மடக்கி இருக்கலாம். அவன் அப்படி செய்யாமல் நேரே இவரிடம் பெண்தான் கேட்டான்.

இவர் முரண்டு பிடிக்கவும் ‘இனி பொறுக்க மாட்டேன்’ என்றான்.நேரே மகளிடம் பேச பயந்து மனைவியிடம் சொல்லி இருந்தார் தான்.

“இந்த காதல் அது இதுல எல்லாம் சிக்கிக்காதன்னு பாப்பாகிட்ட சொல்லிடு” என்றவருக்கு முறைப்பை வழங்கிய அவர் மனைவி, “ சும்மா இருக்கிறவளை சொறிஞ்சு விட சொல்றீங்களா? அவ ஏற்கனவே கல்யாணத்துல இப்போதைக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா. சும்மா சும்மா இதே கதை பேசினா தொரத்தி தொரத்தி அடிப்பா” என்றுவிட்டார்.

பெண்ணுக்கு எப்படியும் இவருக்கு பிடித்த இடத்தில் திருமணம் செய்து வைத்து விடுவார். இருந்தாலும் அதையும் மீறி அவருக்கு முன்னால் மொழி ஜெயித்து விட கூடாது என முடிவு கட்டியவர் ஜம்புவை பார்க்க வந்திருக்க எல்லாம் தலைகீழ்.

இப்போது மொழி மீது கொஞ்சம் நல்லெண்ணம் வந்தது.

“நல்லவன் தான். அவன் வைத்திருக்கும் கம்பெனி தான் பிடிக்கல. இல்லத்துல வளர்ந்து தொலைச்சிட்டான். இல்லைன்னா வதனிக்கு இவனை எடுத்திருக்கலாம்.

மத்தபடி இவன் யாருக்கு பிறந்தானோ? என்ன வியாதி பரம்பரையோ? இன்னும் குணக்கேடு எதுவும் ரத்தத்தில் இருக்குமோ என்னவோ? இப்படி எல்லாம் இவர் முதலில் நினைக்கவில்லை. இந்தக் கேள்விகளின் ஆதாரம் இவர் தூரத்து சொந்தக்காரர்கள். அவர்கள் அப்படி எல்லாம் கேட்கிறவர்கள் .

அவர்களுடன் தமிழ் ஒட்டி வாழவில்லை என்றாலும் நாளை பின்னே எவனும் எந்த கேள்வியும் கேட்டுக் கொண்டு வந்து விடக் கூடாதே என்கிற கவனத்தில் இருந்தவர் இப்படி அவரே சிக்கலை ஏற்படுத்திக் கொண்டார். அதுவும் அதே தூரத்து சொந்த பூங்கோதை அக்கா சொல்லித்தான். அந்த அக்கா மேல் அத்தனை நல்ல அபிப்பிராயம் இல்லை அவருக்கு. யார் வீட்டில் என்ன நல்லது நடந்தாலும் பொறுக்காது. கெடுதலுக்கு உடனே ஆஜராகி விசாரணயில் இறங்கி உண்மையை அறிந்து கொள்வதில் அத்தனை ஆர்வம் காட்டுவார். அதில் அத்தனை ஈடுபாடு அந்த அக்காவுக்கு.

இருந்தாலும் அவர் சொன்னதை, அவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி செய்தார் என்றால் என்ன சொல்ல? அப்போது அவரால் எதுவும் யோசிக்க முடியவில்லை.

எதற்கு இதெல்லாம்? பேசாமல் மகளுக்கு விருப்பமா என்று கேட்டு அந்த மணிமொழியையே கட்டி வைத்து விட்டால் என்ன? மகனுக்கு வேண்டுமானால் கொஞ்சம் இவருக்கு பிடித்த அந்தஸ்துள்ள இடத்தில் முடிக்கலாம்.

தமிழின் மனம் அல்லாடிக் கொண்டு இருந்த போது செல்வா அந்த காரியம் செய்தான்.

அந்தப் பெண்ணை அவளின் கையில் இருந்த கைக்குழந்தையோடு கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினான்.

“யாருக்கு பொறந்ததோ? இதை தூக்கிகிட்டு எவ்விட்டு வாசல்ல நிக்கிற? உனக்கே நான் எத்தனையாவதோ? எனக்கு தெரிஞ்சு ரெண்டாவது. தெரியாம எத்தனையோ?” என அமிலத்தை கக்கினான்.

தமிழ் தன் காதுகளை பொத்திக் கொள்ள அந்த பெண் பேரதிர்ச்சியில் தன் வாயை ஒரு கையால் பொத்திக் கொண்டாள். அது ஒரு கணம் தான்.

“உன்னை நம்பி கல்யாணம் கட்டாம புள்ளய பெத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். நீ நல்லாயிருக்கணும்னு கோயில் கோயிலா கும்பிட்ட என்னை தப்பானவன்னு சொல்லுவியா நீ? சொல்லுவ. ஏன்னா நான் உனக்கு குடுத்த இடம் அப்படி. இனி இல்லை. பச்ச பிள்ளையை தூக்கிட்டு பச்ச உடம்போட வந்து நிக்கிறேன், என்னை இவ்வளவு தூரம் பேசிட்டியே? நல்லா இருப்பியா நீ?” என ஆவேசத்துடன் கூவியவள் அதே வேகத்துடன் குழந்தையை தரையில் கிடத்திவிட்டு கையில் கிடைத்த பொருட்களை செல்வாவை நோக்கி வீசினாள்.

குழந்தை அன்னையின் அரவணைப்பு நீங்கியதில் அழத் தொடங்கியது. அதில் கூடுதல் எரிச்சலான செல்வா “ இந்த கருமத்தை தூக்கிட்டு வெளில போய்த் தொலை” என முகம் சுழித்தான்.

“கருமமா? என் பிள்ளை உனக்கு கருமமா? இந்த பிஞ்சு குருத்தை பார்த்து இப்படி வாய் கூசாம சொல்லிட்டியே?” என்றவள் தமிழ் அறியாத பல்வேறு கெட்ட வார்த்தைகள் போட்டு அவனைத் திட்டினாள்.

அப்படியும் ஆத்திரம் தணியாதவள் அருகே இருந்த விளக்குமாற்றை எடுத்து அவனை நோக்கி அடிக்க ஓடினாள்.

அவ்வளவு நேரம் அவள் பேசுவதை தமிழும் கேட்கிறார் என்பதில் கொஞ்சம் பொறுத்து போன செல்வா விளக்குமாற்றை பார்த்ததும் வெறி கொண்டான்.

“என்னையா சீமாறு (விளக்குமாறு) வச்சு அடிக்க வர்ற! கொழுப்பு பிடிச்சவளே!” என ஆரம்பித்து அவனும் பல பல கெட்டவார்த்தைகளை போட்டு அந்தப் பெண்ணயும் அவள் குழந்தையையும் ஏசியவன் காலால் உதைத்தே அவளை வெளியே தள்ளினான்.

“பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. இவன் கூட கூட்டு சேராதீங்க. உங்க குடியை கெடுத்துருவன்” தமிழை பார்த்து சொல்லிக் கொண்டே தடுமாறி நடந்தாள் அவள்.

அக்கம் பக்கம் யாருமில்லாத அந்த வீட்டில் நடந்த இந்த கூத்துக்கு தமிழ் மட்டுமே சாட்சியாகி போனார்.

இத்தனை நடந்த பின்னும் செல்வாவை நம்பி கொண்டு இருக்க தமிழுக்கு தயக்கம் வரத்தானே செய்யும். நடந்ததில் யார் பக்கம் உண்மை இருந்தால் என்ன? என்ன இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தவர், இந்த மாய மந்திரம், சடங்கு சம்பிரதாயம் இதெல்லாம் மனித மனத்தையும், நம்பிக்கையையும் சார்ந்தது என கொஞ்சம் தெளிவாக இருந்தாலும் இன்னும் முழுமையாக இதில் இருந்து அவர் சிந்தனைகள் வெளியேறவில்லை.

இருந்தாலும் இப்போதைக்கு இங்கு இருக்க வேண்டாமென்று முடிவு செய்தார். ஆகவே இந்த பிரச்சனை முடிந்(த்)து அந்தப் பெண் வெளியேறியதும் செல்வாவிடம், “எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு. அதனால அடுத்த வாரம் வரேன். இப்ப போகலைன்னா என் வேலை போயிடும்”என வாயில் வந்த பொய்யை சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்ப பார்த்தார். செல்வா விடுவானா என்ன?

“ஓ. முக்கியமான வேலை இருக்குன்னு இப்பதான் நினைவு வந்ததா? இருக்கும். இருக்கும். ஆனா எனக்கு முக்கியமான வேலை உங்களை வைத்து தானே இருக்கு” சிரித்துக் கொண்டே சொன்ன செல்வாவை திட்டுக்கிட்டு பார்த்தார் தமிழ். அவன் சிரிப்பு பயத்தை தருவதாக தான் இருந்தது. இருந்தாலும் தமிழ் சுதாரித்துக் கொண்டார். இவனிடம் இருந்து எப்படியாவது தப்பித்து விட்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்தவர் மகளுக்கு மணி மொழியை மனம் முடிப்பதில் தவறில்லை என்பதை ஒத்துக் கொண்டார் உள்ளுக்குள்.

இப்போது இங்கிருந்து கிளம்ப வேண்டும். அவர் அவசர அவசரமாக பேசினார்.

“தம்பி நான் சீக்கிரம் வந்துருவேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. வேணும்னா என் பெட்டி, என் போன் எல்லாம் இங்கேயே வச்சுட்டு போறேன். கை செலவுக்கு மட்டும் காசு எடுத்துட்டு போறேன். மத்தபடி நான் கண்டிப்பா வந்துருவேன்” என மனதை திடப்படுத்திக் கொண்டு முடிந்த அளவு திடமான குரலில் சொன்னார்.

அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த செல்வா கடகடவென சிரித்தான்.

“ அய்யா. அய்யா. நீங்க வந்த விஷயம் பத்தி பேசுங்க. இப்ப நடந்ததுக்கும் அந்த சடங்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவ ஊரெல்லாம் இப்படித்தான் சொல்லிட்டு அலையிறா. அதான் தொரத்தி விட்டேன். நீங்க பயப்படாதீங்க. நான் கோடு போட்ட மாதிரி உங்க பொண்ண அந்த மணிமொழிகிட்ட இருந்து பிரிப்பேன்” என்றான்.

“பிரிப்பீங்களா?” தமிழ் அடுத்த அதிரிச்சியில் வாயை பிளந்தார்.

அதுதான் மாந்தரீகம் ஏவல் பில்லி சூன்யம் என்று லோக்கல் சேனாலிலேயே விளம்பரம் செய்கிறார்களே? அப்படி செய்பவனா இவன்? இவர் செய்தது சின்ன பரிகாரம் என்று நினைத்திருக்க அதை செய்ய சொன்ன ஜம்புவின் மகன் செய்வது இதுவா?

கடைசியில் பிளாக் மேஜிக் செய்பவனிடமா வந்து மாட்டி இருக்கிறார்?

தமிழ் மெல்ல பின் வாங்கினார்.

“தம்பி. அதுலாம் வேண்டாம். நான் கிளம்பறேன். உங்க பேச்சு சரி இல்லை”

பேசிக் கொண்டே பின்னே சென்ற தமிழ் பதட்டத்தில் தடுமாறி விழுந்தார்.

மெல்ல வந்து அவரை தூக்கிவிட்ட செல்வா தன் இடுப்பில் இருந்த சுருட்டை எடுத்து லைட்டர் மூலம் பற்ற வைத்து தமிழின் வாயில் திணித்தான்.

முதலில் எதிர்த்து தடுமாறிய தமிழ் அப்புறம் அந்த விஷ மூலிகை சுருட்டால் மயக்கத்துக்கு ஆளானார்.

அடுத்து அவர் கண் விழித்ததும் அவரது மூளை மந்தமாக இருக்கும். அப்போது அவரை முதலில் பார்த்து யார் என்ன சொன்னாலும் அப்படியே கேட்பார். இந்த நிலை இரண்டு நாட்கள் இருக்கும். மற்ற நல்லது கெட்டதுக்கள் அவர் மூளையை எட்டாது.

அந்த சமயம் அவர் மகளை அவரையே அழைத்து வர செய்து இவன் செய்ய நினைப்பதை செய்து கொள்ளலாம் என்பது செல்வாவின் திட்டம்.

ஒருவேளை அந்த விஷ மூலிகை மரணத்தையும் ஏற்படுத்தலாம். அது அவர் கண் விழிப்பதையும் விழிக்காததையும் பொறுத்தது.

செல்வா எல்லா ரிஸ்க்கும் எடுத்துதான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருந்தான். முன்பு தமிழை மூளை சலவை செய்து அவர் மகளை அவர் மூலம் அலைபேசியில் பேசி இங்கே வர வைக்க நினைத்து இருந்தான். அதுதான் எல்லாம் மண்ணாகி விட்டதே அந்த அவளால்!

தமிழ் இதை பெரிதுப்படுத்த மாட்டார் என்று நினைத்துதான் அவளிடம் தைரியமாக பேசி இருந்தான்.

இனி தமிழ் விழிக்க பொறுக்க வேண்டும்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: காதல் ராஜ வீதியில் - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
நல்ல மாட்டி இருக்கார்.....இது எல்லாம் தேவையா தமிழ் உங்களுக்கு