அசோகவனத்தில் ராமன் - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,454
113
Germany
அத்தியாயம் 17


அன்றிரவு தவித்தான் சித்தார்த்தன். ஏன் இவள் என் குழந்தையை சுமந்தாள்? எதற்காக இங்கே வந்திருக்கிறாள்? எங்களுக்குள் இருந்தது வெறும் கொடுக்கல் வாங்கல் உறவு தானே? அதற்கேன் இவள் முட்டாள்தனமாய் இப்படி ஒரு முடிவெடுத்தாள்? இல்லை நான் தான் முட்டாளா? இவள் சாமர்த்தியம் உலகின் சாமர்த்தியத்தை மிஞ்சும்.


அப்படியிக்க நான் இவளை முட்டாள் என்கிறேன். ஒருவேளை கருவை கலைக்க முடியாத சூழலில் தான் கண்டறிந்திருப்பாளோ? தனது உயிருக்கு ஆபத்தேற்படும் என்று பயந்து பெற்றிருப்பாளோ? ஆமாம்! அப்படித்தான் இருக்க வேண்டும். இல்லையெனில் இவளாவது, குழந்தையை பெற்றெடுப்பதாவது?


அப்படியென்றால் அவளுக்கும் அது வேண்டாத குழந்தை தானே? அதை நான் வெறுப்பதை அறிந்ததும் அத்தனை கோபம் கொண்டாளே! என் சட்டைக் காலரையே பிடிக்கும் அளவுக்கு.


உண்மை என்ன என்று தலைமுடியை பிய்த்தான். ஒரு கட்டத்தில் அவனுக்கு பைத்தியம் பிடிப்பது போலானது.


பதிலை அவளிடமே அறிய வேண்டி பதினொரு மணி போல் அவளின் வீட்டு சுற்று சுவரேறி குதித்தான்.


பால்நிலவை ரசிக்க பால்கனி வந்த லீலாவதி, அவன் எகிறி குதிக்கும் காட்சியினை கண்டாள்.


அவளுக்கு பக்கென்று இருந்தது. அவனிடம் காலையில் இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டாள்.


பதுங்கி பதுங்கி ஆத்மீகாவின் அறையை கண்டறிந்தவன், அந்த கண்ணாடி ஜன்னலின் வழியே உள்ளே உற்று பார்த்தான்.


ஹோம் தியேட்டரின் அதிர வைக்கும் இசையும், கிறக்கமான குரலும் -ஹப்பா! என்றிருந்தது அவனுக்கு.


“சாகும் நேரத்தில்

பொலம்பி அழுவாத

பூஜை ஆட்டத்தில்

இன்னோசன்ட் தான்டா தொல்ல

வறுமை கோலத்தில்

நேர்மை பார்க்காத

இளமை காலத்தில்

டீசென்ஸி நல்லா இல்ல”


சித்தார்த்தனுக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை.


மரப்பாச்சியின் உடல் பாவனையில் திரிபவள், நெகிழ்ந்து கிறங்கடிக்கும் முகபாவனைகளோடு ஆடுவதை மோகினியாட்டம் பார்ப்பவன் போல் பார்த்தான்.


அதுவும் அந்த குழிவான இடையை வெளிச்சமிடும் பர்கன்டி நிற சாட்டின் சட்டையும், கால்களை ராபின் ஹூடுகளாய் மாற்றிய குட்டி ட்ரவுசரும், அவளை அசல் மோனிகா பெல்லுச்சியாகவே மாற்றின.


மேலும், அப்பாடலின் வரிகள் கூட அவனை சீண்டுவது போல் தோன்றின.


ஆனால், அவளின் முன் உள்ள அந்த பெரிய நாற்காலியில் அமர்ந்திருப்பது யார்? யாருக்காக அவள் கூச்சம் விட்டு இப்படி கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிறாள் என்றவன் எட்டிப் பார்க்க முயன்றபோது, எதுவுமே புலப்படவில்லை.


பாடலில் மேலும் ஐந்து வரிகள் கடந்த பிறகு, அவனை சோதிக்காமல் அந்த குட்டி மோகினியே அவளுடன் இணைந்து ஆடியது.


“மோனிகா!

மை டியர் மோனிகா

லவ் யூ மோனிகா

பேபிமா மோனிகா

கிச்சு கிச்சுமா

பத்திக்கிச்சுமா”


அவனுக்கு அப்போது தான் ஜீவமூச்சே வந்தது. ஆனால், அந்த நிம்மதியை அறவே வெறுத்தான்.


அவள் யாரோ? அவள் யாருடன் இருந்தால் எனக்கென்ன? எனக்கேன் பொறாமை காதை அடைக்கிறது என்று தன்னையே கடிந்தவன், ஹோம் தியேட்டர் அணைக்கப்பட்டதை உணர்ந்தான்.


“போதும் சித்தாரா. நீ கேட்ட மாதிரியே மம்மி மோனிகா பாட்டுக்கு ஆடிட்டேன். நீ இப்ப சொன்ன மாதிரியே தூங்கனும் சரியா?” என்று அவளை மெத்தையில் படுக்க வைத்து கதகதப்பானை போர்த்தி விட்டாள்.


மகளோ, “லவ் யூ மம்மி. குட் நைட்” என்றாள்.


குனிந்து அவள் கன்னத்தில் முத்தமிட்டவள், “லவ்‌ யூ‌ டூ சித்தாரா. குட் நைட்” என்று சொல்லிவிட்டு, அலமாரியுடனான குளியலறைக்கு சென்று உடையை மாற்றிக்கொண்டு வந்து படுத்தாள்.


அப்படியானால் எல்லாம் மகளுக்காகத் தானா? அனைத்தும் புரிந்தது அவனுக்கு.


வேண்டாவெறுப்பாய் பெற்ற மகளென்றாலும், காலப்போக்கில் தாய்ப்பாசம் வந்துவிட்டது போலும். அதனால் தான் அதன் பிறப்பை யாரும் கேலி செய்யக்கூடாதென்று தந்தை என்னை தேடி‌ வந்திருக்கிறாள் என்று தானே காரணம் கற்பித்தான்.


தான் கொண்டு வந்த கேள்விக்கான விடை அவளின் செயல்களில் இருந்து கிடைக்கவும், அங்கிருந்து நகர்ந்தான். பின், பக்கத்து அறையில் வெளிச்சம் தெரியவும், சந்தேகமாக எட்டிப் பார்த்தான்.


விஹான் தனதறையில் இருந்த ஹோம்தியேட்டரில் மெல்லிசை ஒன்றை ஒலிக்கவிட்டு, மேல்நாட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தான். அதுவும் இல்லாத பெண்துணையை இருப்பதாய் கற்பனை செய்துகொண்டு.


அவனை பைத்தியக்காரன் போல் பாவித்தவன், தலையை உதறிக்கொண்டு அங்கிருந்து சென்றான்.


அவன் வந்து சென்றதை அறியாத ஆத்மீகா கண்ணபிரான், உறங்கும் மகளையே வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.


இந்த தும்பை மலரை எப்படி அவனால் வெறுக்க முடிகிறது? யாழையும் குழலையும் விட இனிமையான இவள் குரலை கேட்ட பின்புமா கோபமாக பேச முடியும் ஒருவனால்? அந்த அளவிற்கு என் சம்பந்தப்பட்டவற்றை வெறுக்கிறாயா நீ? பிறகு நான் ஏன் மானம்கெட்டு உன்னை காதல் புரிகிறேன் என்று லட்சத்து ரெண்டாவது முறையாக தன்னையே கேட்டுக்கொண்டாள்.


எப்போதும் போல் விடை கிடைக்கவில்லை.


அவள் மனதுள் இன்னொரு கவலை வேறு வட்டியாய் ஒட்டிக்கொண்டது. அது லீலாவதி பற்றியது. ஒருவேளை அவளும் அவனும் விரும்பிக் கொண்டிருந்தால்?


இவ்வெண்ணம் எழுந்ததுமே வேப்பமர பிசின் போல் முத்து முத்தாக வியர்த்து வழிந்தது அவளுக்கு.


அது பேரிடியாக அமைந்தாலும், நிச்சயம் அவளால் சித்தார்த்தனுக்கு ஊறு விளைவிக்க முடியாது.


அது உண்மை என்று தெரிந்த அடுத்த கணம் அங்கிருந்து பெட்டி கட்டுவதே அவளின் தலையாய கடமையாக இருக்கும்.


ஆனால், அது உண்மையல்ல எனும்போது அவனை தனது ராஜாவாக்கினால்‌ தான் அவளால் நிம்மதி பெருமூச்சு விடமுடியும். பின்னே! இன்று அவன் ஓடியாடி வேலை பார்த்தது அவள் மனதை எப்படி உறுத்தியது?



அவளுக்கு அவனை ராணிக்கு இணையான ராஜாவாக்க வேண்டும். அவனை உட்கார வைத்து சாமரம் வீச வேண்டும். ஆனால், அதற்கு அவன் சம்மதிக்க வேண்டுமே? அவன் அவளை விரோதியாக அல்லவா பார்க்கிறான்?


விரக்தியாக -அவனுடன் அன்றைய கூடல்நாளில் எடுத்துக்கொண்ட செல்ஃபியை எடுத்து பார்த்தாள்.


இது மட்டும் இல்லையென்றால் இந்நேரம் அவள் அடையாளம் தெரியாமல் போயிருப்பாள்.


காதலாக அவனது முகத்தில் முத்தமிட்டாள். மனம் அமைதி கொண்டது.


*


மறுநாள் காலை சித்தார்த்தனை சந்திக்க அவனது வீட்டிற்கே வந்துவிட்டிருந்தாள் லீலாவதி.


பானுமதி அச்சமயம் குளிக்கப் போயிருந்தது அவளுக்கு வசதியாகப் போயிற்று.


ஆனால், சித்தார்த்தன் சட்டை அணியாமல் இப்படி திறந்து மார்பனாய் நிற்பான் என்றும் அவள் எதிர்பாராததால் நாணமாய் திரும்பி நின்றாள்.


அவன் பதறி தனது பழைய சட்டை ஒன்றை எடுத்து அணிந்தான்.


“மேடம்” என்றதும் திரும்பியவள்,


“ரொம்ப திறமையா சுவர் ஏறி குதிக்கிறீங்களே சித்? ரொம்ப பழக்கமோ?” என்றதும், அதிர்ந்தான் அவன்.


“மேடம் அது வந்து?”


“எனக்கு எல்லாம் தெரியும் சித். என்கிட்ட எதையும் மறைக்க வேண்டாம். பானுமதி வாழ்க்கை மேல எனக்கும் அக்கறை இருக்கு. நானும் அவ நலன்விரும்பி தான். ஒத்துக்கறீங்களா?”


“கண்டிப்பா மேடம்”


“அப்ப அந்த விஹான் யாருனு மறைக்காம சொல்லுங்க”


“மேடம் அது வந்து..”


“அவர் தான் பானுவோட எக்ஸ் லவ்வர் இல்லையா?”


அவன் மௌனமாய் ஆமோதித்தான்.


“நான் நெனச்சது சரியாப் போச்சு. ஒருவேளை அவரோட எண்ணம் பானுவை டிஸ்டர்ப் பண்றது தான்னா, கண்டிப்பா அது நடக்காது சித். நீங்க எதைப் பத்தியும் கவலை படாதீங்க. நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்” என்றதும், அவளின் கையைப் பற்றிக்கொண்டு நன்றி நவிழ்ந்தான் சித்தார்த்தன்.


அவளுக்குள் மின்சாரம் பாய்ந்தது.


அக்கணம் தான், “அண்ணா” என்று வந்தாள் பானுமதி.


உடனே அவனது கையை விட்ட லீலாவதி, “பானு, நாங்க கேட்கற கேள்விகளுக்கெல்லாம் நீ தயங்காம உண்மையை மட்டும் சொல்லனும். நீ சொல்லப்போற பதில்ல தான் உன் வாழ்க்கையே அடங்கியிருக்கு. புரியுதா?” என்றதும், தானியங்கி பொம்மை போல் தலையாட்டினாள் பானுமதி.


“அந்த விஹான் எதுக்காக இங்க வந்திருக்காருனு உன்கிட்ட சொன்னாரா?” என்றதும், உடல் விறைத்தவள், ஆமாம் என்று தலையசைத்தாள்.


“எதுக்காம்?”


“என்னை இங்கயிருந்து அவரோட மனைவியா அழைச்சிட்டு போறதுக்காம்.”


“அதுக்கு நீ என்ன சொன்ன?”


“நடக்காதுனு”


“முழு மனசா தான் சொன்னியா?”


“அண்ணா!”


“கேள்வி கேட்டது நான் பானு. உன் அண்ணன் இல்ல. நீ இன்னும் அவரை மறக்கலை தான? உன்னை வேண்டாம்னு தூக்கியெறிஞ்சவரை நீ ஏன் பானு உன்னை நெருங்க அலோவ் பண்ற?”


“மேடம்..”


“கேட்ட கேள்விக்கு பதில்”


“அதான் மேடம் எனக்கும் தெரியல. என்னால அவரை முழு மனசா வெறுக்க முடியல.” என்று இயலாமையாக சொன்னாள் பானுமதி.


ஒரு வகையில் சித்தார்த்தனுக்கு இருக்கும் அதே பிரச்சனை.


“ஊட்டி மாதிரி ஒரு இடத்துல, ஃப்ரெண்டுனு சொல்லிக்கிட்டு ஒரு பொண்ணோட தனியா வீடு எடுத்து தங்கறவனை எப்படி பானு உன்னால இன்னும் நேசிக்க முடியுது?”


“ஏன்னா நான் அந்தளவு அவரை நம்பறேன் மேடம். அவர் கண்ணுல முழுக்க முழுக்க என் மேல காதல் மட்டும் தான் தெரிஞ்சது”


“அடிபட்டவ சொல்றேன் பானு. எல்லாம் வேஷம். நம்பாத. அந்த ஆத்மீகாவுக்கும் அதே காதல் தெரிஞ்சதோ என்னவோ, அவன்கூட வெட்கமே இல்லாம ஒரே வீட்டுல தங்கியிருக்கா. இதுல குழந்தையை வேற வச்சிக்கிட்டு.. ச்சீ! ச்சீ!”


“மேடம்! வார்த்தைகள்ல கவனம்.. கவனம் வைங்க.” என்று ருத்ரமூர்த்தியானான் சித்தார்த்தன்.


அதில் நா உலர்ந்தது லீலாவதிக்கு.


பானுமதிக்கு பதில் அவன் ஆவேசப்பட்டது அவளுக்கு உறுத்தியது.


“நான்.. நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன் சித்? நிதர்சனத்தை தான சொன்னேன்?”


“நேத்து அவங்க ரூம் வரை போய் கண்காணிச்சிட்டு வந்த நான் சொல்றேன் மேடம். அவங்க ரெண்டுபேரும் வெறும் ஃப்ரெண்ட்ஸ் தான். தப்பு பண்ண நெனைக்கறவங்க எதுக்கு கூட குழந்தையை கூட்டிட்டு வரனும்? அது இடைஞ்சல் தான் இல்லையா? அபாண்டமா ஒருத்தர் மேல பழிபோடக்கூடாது மேடம்.” என்றதும், ‘உஃப் இதனால் தானா?’ என்று சமாதானமடைந்தாள் லீலாவதி.


தன் கோபம் தனக்கே அநியாயமாகப் பட்டது சித்தார்த்தனுக்கு. ஆத்மீகா கண்ணபிரான் எப்படிப்பட்டவள் என்பது தெரிந்தும், நேற்று ஒரு நாளை வைத்துக்கொண்டு, அவளுக்கு வக்காலத்து வாங்குவதை நினைத்து, தன்னையே நிந்தித்து கொண்டான்.


“அப்ப அவருக்கே பானுவை கல்யாணம் பண்ணி வச்சிடலாமே சித்?” என்றதும்,


“இல்லங்க மேடம், எனக்கு அவர்கிட்ட பேசி ஒரு விசயத்தை தெளிவு படுத்த வேண்டியிருக்கு. அதுக்கப்பறம் தான் இது நடக்குமா -நடக்காதானே முடிவு பண்ண முடியும்” என்றதும், சம்மதமாய் தலையாட்டினாள் லீலாவதி.


பானுமதியின் கன்னத்தையும் வாஞ்சையுடன் வருடிவிட்டு போனாள்.


பானுமதியோ அண்ணனின் கையை எடுத்துக்கொண்டு, “அண்ணா நீ வாட்ச் விசயத்தை பத்தி தான் அவர்கிட்ட பேசப்போறேனு தெரியும். ஆனா அவரே அதை மறக்க முன் வந்த பின்னாடி நாம அதைப் பத்தி பேசறதும் அவசியம் தானாண்ணா?” என்றதும்,


“அவசியம் தான் பானு!” என்று உறுதியாக சொன்னவன், கைகளை உருவினான்.


பானுமதி சோகத்தை தத்தெடுத்தாள்.


*


சித்தார்த்தன் விஹானை சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னதும் -தானே அதற்கு வழி வகை செய்தாள் லீலாவதி.


அவள் முதலில் ஆத்மீகா கண்ணபிரானை பற்றி தவறாக நினைத்ததால் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்தாள். நேற்றைய தேநீர் விருந்திலும் அவளிடம் சரியாக முகம் கொடுத்து பேசாத மனக்குறை அவளிடம் இருந்தது.


அதற்கும் ஈடுசெய்யும் விதமாய் தானே சந்திப்பொன்றை உருவாக்கத் திட்டமிட்டாள். அதன்படி அவர்களுடன் பிக்னிக் ஒன்றை ஏற்பாடு செய்தாள்.


ஆத்மீகா கண்ணபிரானும் அதிகமாக அலட்டாமல் -விஹானுடன் வருவதாக அலைபேசியில் ஒப்புக்கொண்டாள்.


வேலை சுலபமாக முடிந்தது என்று கைகளை தட்டினாள் லீலாவதி.


*


அன்றைய மாலை அனைவரும் அவலாஞ்சே ஏரிக்கு சென்றனர்.


தூரத்தில் அவர்களுக்கு புலப்பட்ட ஏரி, சிறகு விரித்த கழுகின் வடிவில்‌ இருந்தது.


இயற்கை விரித்திருக்கும் பச்சை கம்பளத்தில், தங்களது வாட்டர் ப்ரூப் ப்ளாங்கெட்டை விரித்தான் சித்தார்த்தன்.


அதற்கு மேல் பெரிய மூங்கில் கூடை ஒன்றை வைத்த பானுமதி, அதற்குள்ளிருந்த பனிக்கூழ் -ஐஸ்கட்டிகளுடனான சிறிய கூலர், டீ ஃபிளாஸ்க், பிஸ்கட்ஸ், வெட்டி வைத்த பழத் துண்டங்கள், க்ராக்கர்ஸ், ஜூஸ் பாட்டீல்கள், முந்திரி வறுத்தது, ப்ரெட் துண்டங்கள், ஜாம் பாட்டீல், வெண்ணெய், சிறிய கண்ணாடி கிண்ணங்கள், குட்டி கரண்டிகள், தண்ணீர் ஜாடி, அக்ரலிக் டம்ளர்கள், சிறிய துண்டுகள் என்று ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தாள்.


விஹான் அவள் வேலையில் வெளிப்படுத்தும் நறுவிசுவை மனதுள் மெச்சியபடி ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


குழந்தைகள் தனித்து விளையாட ஓடிவிட, லீலாவதியும் ஆத்மீகாவும் தொழில் ரீதியாக நிறைய பேசிக்கொண்டார்கள்.


அப்போது லீலாவதி பேச்சுவாக்கில், “நாளைக்கு காலைல ஒரு பத்து மணி போல வாங்களேன். எங்க டீ எஸ்டேட்டை உங்களுக்கு ‌சுத்தி காமிக்கறேன். இட்‌ வில் பி அமேசிங்.” என்றதும், சம்மதமாய் முறுவலித்தாள் ஆத்மீகா.


சித்தார்த்தன் இருவருக்குள்ளும் உள்ள மாறுபட்ட ரசனைகளை வியந்தான்.


அதற்கு தகுந்தாற்போல் தான் ஆத்மீகா வெள்ளை நிறத்தில் வைடு லெக் பேண்ட் அணிந்திருந்தாள். அவள் ஹீல்ஸ் ஊசியின் முனைகள்.


கழுத்தை நெறித்த வெளீர் சாம்பல் நிற டீசர்ட்டும்‌, பீஜ் நிறத்தில் டபுள் ப்ரெஸ்டட் ஃப்ரெஞ்ச் கோட்டும் -முன்னாள் இளவரசி டயானாவின்‌ மருமகளாய் அவளை மாற்றியது.


அருகிலிருந்த‌ லீலாவதியோ அவளுக்கு சற்றும் சளைக்காதவளாய் வெள்ளை முழுக்கை சட்டையும், கறுப்பு நிற ஸ்டாக்கிங்கும், அவைகளுக்கு மேல் கறுப்பில் வெள்ளை பூக்களிட்ட பினபோ-உம் அணிந்திருந்தாள். அவளின் ஃப்லப்பி தொப்பி அவற்றிற்கு முத்தாய்ப்பாய்.


லீலாவதி மடை திறந்த வெள்ளமென்றால், ஆத்மீகா அமைதியான கடல்.


லீலாவதியின் கூந்தல் கரியவிட்ட மிக்சர் சுருள் என்றால், ஆத்மீகாவினது முனை சுருங்கிய வாழைப்பூவின் இதழ்கள்.


லீலாவதியின் கண்கள் காயத்திற்கு மருந்திடுவன என்றால், ஆத்மீகாவினது உயிரை வேரோடு பிடிங்கித் தின்பன.


அவள் ஆர்ப்பாட்டமில்லாத அம்மன் சிலை என்றால், இவள் அசரடிக்கும்- ஊனமற்ற- தீதார்கஞ்ச் யட்சிணி சிலை.


ச்சே! என் மனம் ஏன் இப்படி தேவையில்லாத விசயங்களில் தலையிடுகிறது எ‌ன்று தன்‌னையே கடிந்து கொண்டவன் விஹானை பார்த்தான்.


அவன் மரியாதைக்காய் புன்னகைத்தான்.


தானும் பதில் புன்னகை புரிந்தவன் மெதுவாக அவனை நெருங்கி, “உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்று சொல்ல, இதயம் எகிறி குதித்தது பானுமதிக்கு.


சரியென்ற விஹான் யோசனையாக அவனின் பின்னே சென்றான்.



தொடரும்…


சித்தார்த்தனின் மனம் சாய்வது லீலாவதியிடமா? ஆத்மீகா கண்ணபிரானிடமா? நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் நண்பர்களே?

கதையை வாசிப்பவர்கள் லைக், கமெண்ட் இடலாமே!
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: அசோகவனத்தில் ராமன் - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online

No members online now.