• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 10

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 10


அந்தக் குளுமையும், பசுமையும், ஏன் புதிய காற்றும் - அண்ணன் தங்கை இருவரையும் பாசமாக அரவணைத்துக் கொண்டன.


குறிப்பாக அங்கிருந்த மக்கள் அத்தனை அனுசரணை கொண்டவர்களாக இருந்தனர்.


சித்தார்த்தன் தனது கையிருப்பில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்தான். அவனுக்கு கௌரவமானதொரு வேலை கிடைக்கும் வரை அவர்கள் மூன்றுவேளையும் வெளியே வாங்கி உண்ணும் நிலைமை தான் இருந்தது.


வேலை கிடைத்தப் பின்னோ, வீட்டிற்கும் உணவிற்கும் பங்கம் வராமல் முதலாளியே அனைத்தையும் கொடுத்தார். அவனுக்கு வேலைக் கிடைத்த இடம் ஒரு அரண்மனை.


முன்பு தஞ்சையை ஆண்ட மன்னர்களின் வாரிசுகள் சிலர்- மிச்ச சொச்சமாய் ஆங்காங்கே காத்து வந்த சொத்துகளில் ஒன்று தான்- ஊட்டியில் இருந்த அந்த அரண்மனையும். அதை நிர்வகிக்கும் பொறுப்பு தான் தற்போது சித்தார்த்தனின் வசமானது.


மேலும் பழங்கால உட்கட்டமைப்புடனும், அலங்காரத்துடனும் இருந்த அவ்வரண்மனையை -அவன் தான் பழமை மாறாமலும்- அதே சமயம் நவநாகரீகத்திற்கேற்பவும்- அலங்கரிக்கும் ஆலோசனைகளை வழங்கினான். அதில் மிகவும் கவரப்பட்டார் ராணி அஞ்சலிதேவி.


காலஞ்சென்ற தனது மகளின்- வாரிசுடன் அங்கிருந்த தேயிலை தோட்டங்களை பார்த்துக்கொண்டு- அங்கேயே இருந்து விட்டவருக்கு, தனது பேத்தி லீலாவதியின் வாழ்வு அஸ்தமனமானது மட்டும்- சொல்லவொண்ணா துயரமாக இருந்தது.


லீலாவதிக்கு திருமணமான மறுமாதமே அவளின் கணவன், டென்னீஸ் வீராங்கணை ஒருவளுடன் சொகுதி விடுதியில் உல்லாசமாய் இருந்த காணொளி வெளியாகி சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.


அது அஞ்சலி தேவியின் குடும்பத்திற்கும் பெரும் தலைகுனிவை உண்டு பண்ணியது. உடனே பேத்தியின் விருப்பத்திற்கிணங்க அவளுக்கு விவாகரத்து பெற்று தந்துவிட்டார்.


ஆனால், விவாகரத்து கையில் கிடைத்த சமயம் வயிற்றில் குழந்தையுடன் நின்றாள் லீலாவதி. தற்போது அவளின் பேறுகால நாளைத் தான் வெறுப்புடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார் அஞ்சலி தேவி.


பின்னே, அதனை கலைக்கும்படி எவ்வளவோ வற்புறுத்தியும் லீலாவதி கேட்கவில்லையே! அவளின் ஜீவகாருண்யம் இறுதியில் வென்றது. அதே காருண்யம் தான் சித்தார்த்தன் அந்த அரண்மனைக்குள் நுழையவும் காரணமானது.


ஆம், அன்று காலை பனி படர்ந்த நேரத்தில் தனது தங்கையுடன் ஊர் நிலவரங்களை பேசிக்கொண்டே, நடைபயிற்சி மேற்கொண்டிருந்தான் சித்தார்த்தன். சாலையோரம் பூத்துக்குலுங்கிய டெய்ஸிக்கள்- விலையுயர்ந்த தரைவிரிப்புகளை நினைவூட்டின.


அப்போது பானுமதி தனது மனதை அரித்த அந்தக் கேள்வியினை கேட்டாள்: “அண்ணா உனக்கும் நந்தினிக்கும் ஏதாவது பிரச்சனையா? இல்..ல நீ கிளம்பி வரும்போது அவங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையேனு கேட்டேன். ரெண்டு பேருக்கும் பிரேக்கப் ஆகிடுச்சா? அதான் நீ அன்னைக்கு லைட் கூட போடாம- சோஃபால படுத்து- ஃபீல் பண்ணிட்டு இருந்தியா?” என்று கேட்க, அவன் என்ன சொல்லி சமாளிப்பதென தவித்தான்.


பானுமதி சாலையின் இருமருங்கிலும் சரிவாக மேலறிய காட்டினை ரசித்துக்கொண்டே வந்ததால், தூரத்தில் ஒரு கார் வேகமாக வருவதையும், காட்டிலிருந்து ஒரு மான்குட்டி பாய்ந்து சாலைக்கு ஓடி வருவதையும் கண்டு, உடனடியாக ஓடிச்சென்று அந்த உயர்ரக கார் மானின் மீது இடித்துவிடாமல் காப்பாற்றினாள்.


தங்கைக்கு ஒரு நொடி பின்னரே மானை கவனித்த சித்தார்த்தன், காரிற்கும் தங்கைக்கும் இடையே இயேசுநாதர் போல் கரங்களை விரித்தபடி நின்றிருந்தான்.


க்ரீச்சென்று பிரேக்கடித்த காரிலிருந்து இறங்கியது- மேடிட்ட வயிற்றுடன் லீலாவதி.


பொறாமையில் பானுமதியின் கையிலிருந்த மான் துள்ளி ஓடியது.


ஆனால், அதன் விழிகளை லீலாவதியின் முகத்தில் பார்த்தான் சித்தார்த்தன்.


நூடுல்ஸாய் அலையலையாய் தவழ்ந்த அவளின் கூந்தலும், பாலால் கழுவியது போன்ற முகமும், அதிக சதை பற்றில்லாத உடலில்- மேடிட்ட வயிற்றை லேசாக இறுக்கியபடி- மாதுளை நிற கோட், விக்யூன்யா துணியில் கால்சட்டை என்று- ஒரு உயர்குடி பெண்ணின் தோற்றத்தில் இருந்தவளை கண்டதும், உடனே அங்கிருந்து செல்லத் துடித்தன அவனின் கால்கள். சூடு கண்ட பூனை வேறென்ன செய்யும்?


அவளோ அவர்களை தடுத்து நிறுத்தினாள்.


“தாங்க் காட்! என்னை பெரிய பாவத்துல இருந்து காப்பாத்திட்டீங்க. ஆமா பொதுவா இந்தப் பாதையில யாரும் வாக்கிங் போக மாட்டாங்களே? நீங்க இந்த ஊருக்கு புதுசா?” என்றவள் சரியாக கணிக்க, அண்ணன் தங்கை இருவரும் அவளின் புத்தி சாதூர்யத்தில் ஒரு கணம் விக்கித்து நின்றனர்.


கண்களில் கர்வத்தை அம்பு மழையாய் பொழியும் அந்த ஆத்மீகா கண்ணபிரான் எங்கே? வாஞ்சையாய் கண்களில் ஆர்வத்தை தேக்கி விசாரிக்கும் இந்தப்பெண் எங்கே? ச்சே! எனக்கேன் அபஸ்வரமாய் அந்த ஆத்மீகாவின் ஞாபகம் வந்து தொலைக்கிறது என்று தன்னையே நொந்தான் சித்தார்த்தன்.


பின், அவளிடம், “ஆமா, புதுசு தான். இந்த மாதிரி நேரத்துல நீங்க இவ்வளவு வேகமா வண்டி ஓட்டிட்டு வர்றது உங்களுக்கும் சரி, உங்களுக்கு எதிர்ல வர்றவங்களுக்கும் சரி, அவ்வளவு பாதுகாப்பு கிடையாது” என்று சொல்லிவிட்டு, தங்கை பானுமதியின் கையைப் பற்றிக்கொண்டு செல்லப் பார்த்தான்.


அவள் தடுத்தாள்: “நீங்க இங்க எங்க வேலை பார்க்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”


“கட்டாயம் தெரிஞ்சிக்கலாம். எனக்கு வேலை கிடைச்ச பிறகு” என்று சொல்லிக்கொண்டே முன்னேறினான் சித்தார்த்தன்.


“அந்த யோகம் எனக்கு இன்னைக்கே வந்திடுச்சினு நெனைக்கறேன்”


அவன் நின்றான்.


“நீங்க என்ன படிச்சிருக்கீங்க? உங்களுக்கு எதுல அனுபவம் அதிகம்னு தெரி‌ஞ்சா எனக்கு வேலை போட்டுக் கொடுக்க ஈஸியா இருக்கும்” என்றவளின் புன்முறுவலில்,


“அண்ணா” என்று பானுமதி ஆனந்தப்பட்டாள்.


சித்தார்த்தன், மெதுவாக அவளை நோக்கி வந்து தன்னை பற்றிய விபரங்களை தயக்கத்துடனே தெரிவித்தான்.


மறுநாளே வேலையும், சொகுசான வீடும் அவர்களுக்கு கிடைத்தது.


விஹானின் நினைப்பில் உழன்ற பானுமதிக்கு லீலாவதியின் நிமிர்வு- தன்னம்பிக்கையை கொடுத்தது. அவளுடன் வெளியே செல்வது, வேடிக்கை பேசுவது என்று முன்னேறியிருந்தாள்.


ஏன் லீலாவதிக்குமே பானுமதியை மிகவும் பிடித்திருந்தது. தனக்கு மெனிக்யூர், பெடிக்யூர், ஹெட் மசாஜ், பாடி மசாஜ் என்று கர்ம சிரத்தையுடன் செய்பவளை நாட்போக்கில் அனைத்திற்கும் கூடவே வைத்துக்கொண்டாள்.


இதில் லீலாவதியும் சித்தார்த்தனுமே அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பமைந்தது.


காணும் போதெல்லாம் கண்ணியம் தவறாமல் நடக்கும் அந்த அழகிய ஆண்மகனை, அவனறியாமல் ரசித்தாள் லீலாவதி. பௌர்ணமி நிலவை யார் தான் ரசிக்க மாட்டார்கள்?


சித்தார்த்தனுக்குமே- துன்பம் வந்ததும் துவண்டு விழாமல்- தனது பாட்டியுடன் இணைந்து அங்குள்ள தேயிலை தோட்டங்களை பார்த்துக்கொள்ளும் லீலாவதி மேல், பெருமதிப்பு உண்டாகியிருந்தது.


ஒருநாள் வேலையாட்களின் மூலம் தான் லீலாவதியின் கடந்தகாலம் தெரிய வந்தது அவனுக்கு.


இப்படியொரு நல்ல பெண்ணை விட்டுவிட்டு, வேறு ஒருவளின் பின் செல்ல, அந்த அயோக்கியனுக்கு எப்படி தான் மனம் வந்ததோ என்று ஆத்திரப்பட்டான்‌.


அதுவும் கருவுற்றிருப்பவளை வேதனையில் உழலவிட்டதை பெரும் குற்றமாய் கருதினான். ஒரு பெண்ணுடன் உல்லாசமாய் இருந்து- குழந்தையையும் கொடுத்துவிட்டு, தப்பி ஓடிய அவனெல்லாம் ஆண்மகனா என்று அவனுள்ளம் கொதித்தபோது, ஆத்மீகா கண்ணபிரானின் உருவம் அவன் முன் நிழலாடியது. அதுவும் மேடிட்ட வயிற்றுடன்.


ஒருவேளை நூற்றில் ஒரு சதவீதமாக அவள் கருவுற்றிருந்தால்? அன்றைக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தானே அவளுடன் உறவு கொண்டோம் என்று ஒரு கணம் ஸ்தம்பித்தான்.


பின் அடுத்த விநாடியே, தன்னை போல் பலருடன் கூடிக்கழித்தவளுக்கு இது போன்ற விசயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்கத் தெரியாதா என்ன? நாம் ஏன் அவளை பற்றி நினைக்கிறோம் என்று தன்னையே நொந்துகொண்டான்.


ஆனால், அவனின் கணிப்புகள் தவறும் கணம், மரணத்தின் ரணம் என்பதை அறிவானா சித்தார்த்தன்?


*


அவர்கள் ஊட்டி வந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் ஒருநாள் லீலாவதியுடன் கோவிலுக்குச் சென்றனர் அண்ணன் தங்கை இருவரும்.


அவர்கள் அந்த பனிமலையானை கரம் கூப்பி கும்பிட்ட போது, சித்தார்த்தனும், லீலாவதியும் அருகருகே நிற்பதை கண்டு- ஒரு பெண்மணி தனது தோழியிடம், “அவங்க ஜோடி பொருத்தம் அசத்தலா இருக்குல்ல?” என்று கூற, கண்மூடி நின்றிருந்த லீலாவதி சிலிர்த்தாள்.


ஆனால், தீப்பட்டாற் போல் விலகி நின்றான் சித்தார்த்தன்.


கோவிலில் பிரசாதம் கொடுத்தார்கள். பானுமதி தன்னுடையதை வாங்கி அண்ணனிடம் கொடுக்க, அவன் சமீபகாலமாகவே உணவிலும், உடல் நலனிலும் அக்கறை கொள்ளாமல் இருப்பவளை, என்ன செய்வதென தெரியாமல் திகைத்தான்.


அதை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்த லீலாவதி இவ்வளவு நாள் நாகரீகம் கருதி கேட்டாமல் விட்டதை இனியாவது பக்குவமாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தாள்.


தானே ஒரு பெரும் நம்பிக்கை துரோகத்திலிருந்து வெளிவந்துவிட்ட பிறகு, அவர்களுக்கென்ன அதைவிட பெரிய இன்னல் இருந்து விடப்போகிறது என்றே நினைத்தாள் லீலாவதி.


அவளை பொறுத்தவரை அண்ணன் தங்கை இருவருமே குணத்தில் விலைமதிப்பில்லா ரத்தினங்கள். ஒரு வாரத்திற்கு முன்பு கூட அதை நிரூபிப்பது போல் ஒரு சம்பவம் நடந்தது.


அன்று அவர்களின் வீட்டை கடந்தபோது உள்ளிருந்து வந்த பேச்சு குரல்கள் லீலாவதியை நிறுத்தின.


“ரெண்டே ரெண்டு சுவட்டர் தான் வச்சிருக்க பானு. கூட ஒன்னு வாங்கினா தான் என்ன?”


“வேண்டாம்ணா. நீயே மது கல்யாணத்துக்கு வாங்கின கடனை இங்கயிருந்து சென்னைக்கு பணம் அனுப்பி அடைச்சிட்டிருக்க. இப்பப்போய் நான் இதெல்லாம் வாங்கிட்டு இருந்தா நல்லாயிருக்காதுண்ணா” என்க, புளகாங்கிதம் அடைந்தான் சித்தார்த்தன்.


ஒரு காலத்தில் தேவைக்கு மீறி ஆசைப்பட்ட எனது தங்கையா இன்று அத்தியாவசியத்தை கூட நிறைவேற்றிக்கொள்ள தயங்குகிறாள்? அவளுக்கு இந்த மனபக்குவத்தை கடவுள் சிறகுகளை ஒடித்து கொடுத்திருக்க வேண்டாம் என்று மனதுள் கண்ணீர் சிந்தினான்.


“நீ ரொம்ப மாறிட்ட பானு” என்று அவளின் தலையை அன்பாய் தடவி விட்டான்.


இந்த உரையாடலை கேட்ட லீலாவதி, மறுநாளே அந்த அரண்மனையில் இருந்த எல்லோருக்கும் புதிய கம்பளி ஆடைகளை வரவழைத்துக் கொடுத்தாள், பானுமதிக்கு மட்டும் கொடுத்து அது பிறர் கண்களை உறுத்தாதபடி.


சித்தார்த்தனுமே இப்படி தங்களின் தேவைகள் ஒவ்வொன்றையுமே லீலாவதி சரியாக இனம் கண்டு நிறைவேற்றுவதை உணர்ந்து, அந்த அரண்மனைக்கு மிகுந்த நன்றிகடன் பட்டவன் ஆனான். அதற்காக அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தான்.


அவனின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்கொத்தி பாம்பாக கண்காணித்துக் கொண்டிருந்தார் ராணி அஞ்சலி தேவி.


அவருக்கு தனது பேத்தி லீலாவதியை பார்த்தாலே துக்கம் தொண்டையை அடைத்தது. இறைவனிடம் ஒவ்வொரு நாளும், அந்த பேதைப் பெண்ணுக்கு ஒரு வழி செய் இறைவா என்றே வேண்டிக் கொண்டிருந்தார்.


அதுவும் முன்பெல்லாம் தெளிர்ச்சியற்று இருந்த பேத்தி- கடந்த இரண்டு மாத காலமாகவே- மனம் விட்டு பேசி சிரிப்பது, அலங்காரத்தில் கவனம் கொள்வது, இரவு நேரங்களில் பால்கனியில் நின்று அரண்மனை நிர்வாகி தங்கியிருக்கும் வீட்டின் புறம் அடாது பார்ப்பது கண்டு, மனம் அலைப்புற்றது அவருக்கு.


உடனே வசீகரனான சித்தார்த்தனின் குடும்பத்தை பற்றி விசாரிக்கச் சொன்னார் தேயிலைத்தோட்ட மேலாளரை. ஆனால், கிடைத்த தகவலோ அவரை அதிர்ச்சியடைய வைத்தது.


அவர் கனவிலும் சித்தார்த்தன் தனது குடும்ப வாரிசாக இருப்பான் என்று நினைத்துப் பார்க்கவில்லை.


தந்தை சொல் கேளாமல் திரையுலகில் கோலோச்சப்போவதாக ஜம்பம் பேசிவிட்டு சென்ற மகனை, எவ்வகையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று தனது கணவர் சொன்ன பிறகு, ஒரு நாளும் அவனை நினையாமல் இருந்ததில்லை அஞ்சலி தேவி.


ஆனால், மகன் தான் சொன்ன பெண்ணை திருமணம் புரியாமல், தங்கள் அந்தஸ்த்திற்கு ஏணி வைத்தாலும் எட்டாத ஒரு ஏழையை மணம் முடித்த போது தான், அவருக்கும் மனம் விட்டுப் போயிற்று. மருமகனின் தூண்டுதலில் மகனை குடும்பத்தைவிட்டே ஒதுக்கி வைத்து விட்டார். இப்போது அந்த மருமகனும் பரலோகத்தில்.


அதன்பின், மகன் இறந்த செய்தி வந்த போது கூட வீட்டில் மௌன அஞ்சலி செலுத்துவதோடு நிறுத்திக் கொண்டார்.


அவ்வளவு தான். ஆனால், இத்தனை வருடங்களுக்கு பிறகு அவனின் வாரிசுகள் இங்கே வந்திருப்பது குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஒருங்கே தருவித்தன அவருக்கு.


ஆனால், அவர்கள் எவ்வித உள்நோக்கத்துடனும் இங்கே வரவில்லை என்பதை அறிந்த பிறகு, அவரின் மனதில் வேறொரு ஆசை உருவானது. அது அபலைபெண்ணான லீலாவதியை சித்தார்த்தனுக்கு மணமுடித்து வைப்பது என்று தான்.


அவளை மணமுடித்தால் எனது ஆஸ்தியில் உனக்கு பங்கு. இல்லையேல் வீசின கையும் வெறுங்கையுமாக நடையை கட்ட வேண்டியது தான் சித்தார்த்தன் என்றவர் உள்ளுக்குள் தீவிரமாக திட்டம் தீட்டிக் கொண்டிருந்தபோது, சித்தார்த்தன் அனுப்பிய கைக்கடிகாரத்தை கோபமாக வெறித்துக் கொண்டிருந்தாள் ஆத்மீகா கண்ணபிரான். அது தொள்ளாயிரத்து எட்டாம் முறை.



தொடரும்…

லீலாவதியின் அறிமுகம் குறித்து உங்கள் கருத்து என்ன நண்பர்களே? அஞ்சலிதேவியின் ஆசை நிறைவேறும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
 
Top Bottom