• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 3

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 3



அன்றைய காலை அந்த ஆடம்பர பங்களாவில் வேலைப் பார்க்கும் அனைவரும் வரவேற்பறையில்‌ ஒன்றிணைக்கப்பட்டார்கள்.


ஆத்மீகா கண்ணபிரான் தனது தந்தையின் நினைவு நாளை ஞாபகம் வைத்து அனைவருக்கும் வரிசையாக, ஒரு பையை வழங்கிக் கொண்டிருந்தாள்.


அந்தப் பையில்‌ அவளின் தந்தையின் முகமும், நான்காம் வருட நினைவு தினம் என்று சில மெழுகுவர்த்திகளும் அச்சிடப்பட்டிருந்தன.


உள்ளே திறந்து பார்த்தவர்களுக்கு அவர் முகம் பொரிக்கப்பட்ட இரண்டு கிராம் தங்க நாணயம் இருந்தது பெரும் திருப்தியை தந்தது.


என்னதான் இரண்டு வாரங்களுக்கொருமுறை என அடிக்கடி‌ அந்த பங்களாவிற்கு வரும் இளைஞர்கள் அவர்களின் கண்களை உறுத்தினாலும், இதுபோல் ஆத்மீகா கண்ணபிரான் அவ்வப்போது கொடுக்கும் சன்மானங்கள் அவர்களின்‌ மனச்சுணக்கங்களை போக்கி வந்தன.


கே.கண்ணபிரானின் நெருங்கிய நண்பர் கோகுல ப்ரகாஷ். அவர் இன்று ஆத்மீகா தனது நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த- அவளின் தந்தைக்கான அஞ்சலிக் குறிப்பை பார்த்துவிட்டு, அவளுக்கு அழைப்பு விடுத்து பேசினார்.


அலைபேசியை இரண்டு விரல்களில்‌ லாவகமாக காதுக்கு கொடுத்தபடி, “சொல்லுங்க அங்கிள். எப்படியிருக்கீங்க?‌ ஆன்ட்டி எப்படியிருக்காங்க?‌ விஹான் எப்படி இருக்காரு? யா யா குட் அங்கிள். எவ்ரிதிங் ஃபைன் ஹிய. இஸிட்? உங்கப் புள்ளையாச்சே? புலிக்கு பிறந்தது பூனையாகுமா? ம்ம்ம் ஓகே. ம்ம்ம் ஓகே. அங்கிள் ப்ளீஸ். விஹான் எனக்கொரு நல்ல ஃப்ரண்ட். அவரை‌ நான் எப்படி..? நான் என் வாழ்க்கைல யாரையுமே கல்யாணம் பண்ணிக்கப்போறதில்ல அங்கிள். யெஸ், என்‌ அப்பா மாதிரினே வச்சிக்கோங்களேன். அதுல தப்பு ஏதாவது இருக்கா? நான் எப்பவும் என் முடிவுல இருந்து மாறப்போறதில்ல. ஸோ, இன்னொரு தடவை நீங்க இந்த மாதிரி கேட்டு என்னை சங்கடப்படுத்த மாட்டீங்கன்னு நம்பறேன். ஓ.. ஓ.. ஓகே அங்கிள். ஓகே அங்கிள், பை” என்றதோடு அலைபேசியை தனது கோட் பாக்கெட்டுக்குள் திணித்தாள்.


திடீரென எதுவோ ஞாபகம் வந்து தன் ஃபாஸில் கைக்கடிகாரத்தை பார்த்தவள், “ஓ மை காட்!” என்று அவசர அவசரமாக சுடிதார் ஒன்றை அணிந்துகொண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றாள்.


தனது தந்தைக்கு அங்கிருந்த குளத்தின் அருகில் திவச காரியங்களை முடித்தப் பின், கோவிலுக்குள் சாப்பாட்டு பொட்டலங்களை வழங்கிக் கொண்டிருந்தாள்.


அப்போது வரிசையில் ஒரு இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டே வந்த சித்தார்த்தனை கண்டதும், அவளின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தன.


அவர்கள் அருகில் வந்தபோது ஒரு பொட்டலம் மட்டுமே அவளிடம் எஞ்சியிருந்தது.


ஒருவரின் பின் ஒருவர் நில்லாமல் தோள்கள் உரசிக்கொண்டு அருகருகே நின்றிருந்த‌ இருவரில், யாருக்கு கொடுப்பதென்று அவள் இருவரையும் மாறிமாறிப் பார்க்க அப்பெண்,‌ “எங்கிட்ட கொடுங்க! நாங்க ஷேர் பண்ணிக்கறோம்” என்று பிடுங்காத குறையாக வாங்கிக்கொண்டு சென்றாள்.


வேஷ்டி சட்டையில் இருந்த சித்தார்த்தன் அவளை அணுவளவும் சட்டை செய்யவில்லை. இறுகிய முகத்துடன் சென்றான் எப்போதும் போல்.


அவளுக்கு அவர்களை பின்தொடர்ந்து செல்ல ஆவல். சென்றாள்.


இருவரும் சம்மணமிட்டு ஒரே பொட்டலத்தில் கைவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரே கருப்பையில் உருவானவர்களுக்கு தயக்கம் என்ன இருக்கப்போகிறது?


ஆனால், ஆத்மீகா கண்ணபிரானுக்கு அது தெரியாதே. இருவரையும் ஏளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அப்பெண்ணின் உதட்டின் ஓரத்தில் ஒட்டியிருந்த பருக்கையை அவன் தட்டிவிட்ட கணத்தில், அவளுக்கு பொசுபொசுவென்று இருந்தது.


அவன் வாயருகே தனது சாதத்தை கொண்டு சென்றபோது‌ ‘அங்கே பார்’ என போக்குக்காட்டி‌ அவனின் கையிலிருந்த சாதத்தை அப்பெண் தன் வாய்க்குள் திணித்துக்கொள்ள, அவன் அவளின் காதைத் திருகினான்.


ஆத்மீகா கண்ணபிரான் குமைந்தாள்.


‘இவன் ராமனாமே? பிருந்தா சரியான பைத்தியக்காரி. இவன் ஒரே நேரத்துல பல பொண்ணுங்களுக்கு வலை விரிக்கற காஸநோவானு தெரியாம ஏகபத்தினி விரதன், அது இதுனு ஓவர் பில்டப். இவன் அந்த நந்தினிக்கு ஏத்த நந்தன் தான். இவனை நம்ம கட்டிலுக்கு வரவழைச்சா‌ அதைவிட சுகானுபவம் எதுவுமே இருக்காது. அதுவும் பிருந்தா முகம் வெளக்கெண்ணெய் குடிச்சா எப்படியிருக்கும்னு கண்டிப்பா பார்த்தே ஆகனும். என்ன அதுக்கு விலையா இருபது லட்சம் இழக்க வேண்டி இருக்கும். அதனால என்ன? இது மாதிரி ஒரு சான்ஸ் அடுத்து அமையாதே’ என்று பலவாறு சிந்தித்தவள், பலமான திட்டத்தோடு அங்கிருந்து சென்றாள்.


அண்ணன் தங்கை இருவரும் வீட்டிற்கு செல்லும் வழியில், பானு‌மதி அவனின் இருசக்கர வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தச் சொல்லிவிட்டு, எதிரே இருந்த பேட்டா செருப்புக் கடைக்குள் நுழைந்தாள்.


அவன் வாகன நிறுத்துமிடம் கிடைக்காமல் சற்று தள்ளிப்போய் நிறுத்திவிட்டு, கடையை நோக்கி வந்தான்.


அதற்குள் ஒரு செருப்பை தேர்ந்தெடுத்து ஆளுர கண்ணாடியின் முன் நடந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பானுமதி.


அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. அவள் பதறி வண்டியை‌ நிறுத்தச் சொன்னதும் அவளின் துப்பட்டா எதுவும் சக்கரத்தில் மாட்டிவிட்டதோ என்று பயந்து தான் அவன் வேகமாக பிரேக்கை பிடித்தா‌ன். ஆனால், அவள் எவ்வளவு விவரமாக செருப்பு கடைக்குள் நுழைந்து விட்டாள்?


கடந்த இரண்டு நாட்களாகவே அவள் புதிய செருப்பு‌ கேட்டாள் தான். ஆனால், அவளின் விருப்பத்திற்கு எடுக்க வேண்டும் என்றால் குறைந்த‌ பட்சம் இரண்டாயிரம் தேவைப்படும் அவனுக்கு. தற்போதுள்ள நிலையில் அவன் அவனது ஓட்டை ஜட்டியைக்கூட மாற்றுவதற்கு தயாராக இல்லை.


நந்தினிக்கு எவ்வளவு தொகையை உயர்த்தி கொடுக்க முடியுமோ அவ்வளவு‌ உயர்த்த‌ அவன் போராடிக் கொண்டிருக்க, அவனது நிலை எதையும் அறியாமல் பகுமானம் செய்து கொண்டிருந்த பானுமதியை பார்த்து ரத்த அழுத்தம் எகிறியது.


அன்னை இறந்த பிறகு கடைக்குட்டி என இவளுக்கு அதிக செல்லம் கொடுத்திருக்கக் கூடாதோ என்று அவன் அந்த செருப்புக்கடையில் ஞானயோதயம் பெற்றான்.


அதுவும் அவனது அன்னையின் நெருங்கிய தோழி மாதவி தான் அவளது படிப்பு செலவை கவனித்துக் கொள்வது. அவர் சின்னத்திரை உலகில் நம்பர் ஒன் தயாரிப்பாளராக இருக்கிறார். அவ்வப்போது அவரது மகள் ஓரிரு முறை மட்டுமே உபயோகப்படுத்திவிட்டு தரும் விலையுயர்ந்த ஆடைகள், ஒப்பனை பொருட்கள் என்று பானுமதியிடம் வந்து கொட்டுவார்.


அந்தப் பழக்கம் கடைகளுக்கு துணியெடுக்கச் சென்றாலும் வீட்டி‌ன் வறுமையறிந்து செயல்படமாட்டாள் பானுமதி. படாடோபமாகத் தான் தனக்கு வேண்டியவற்றை தேர்ந்தெடுப்பாள்.


அவனது மற்ற‌ தங்கைகள்‌ அப்படி கிடையாது தான். ஆனால், அவனது இரண்டாவது தங்கை மதுமதி தனது வாழ்க்கைதுணையை மட்டும் பெரிய இடத்தில் தேர்ந்தெடுத்தது சற்று தாங்கலாக இருந்தது சித்தார்த்தனுக்கு.


அவள் மட்டும் ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால், நந்தினி அந்த கொக்கி பார்வைக்காரி ஆத்மீகா கண்ணபிரானிடம் கைகளை பிசைந்து கொண்டிருக்க நேர்ந்திராதே! கடந்தகாலத்தை நினைத்து என்ன செய்ய?


அண்ணன் இப்படி நின்றிருக்க, பானுமதி குதிங்கால் உயர செருப்பொன்றை காலில் மாட்டிக்கொண்டு கடைக்காரரிடம், “அண்ணா இதுக்கு பில் போட்டுடுங்க. பாக்ஸ் எதுவும் வேண்டாம். நான் கால்லயே போட்டுக்கறேன். இந்த பழைய‌ சாண்டல்ஸ டஸ்ட்பின்ல போட்டுடுங்க.” என்று மிதப்பாக சொல்ல, ஆத்திரம் தலைக்கேறியது சித்தார்த்தனுக்கு.


“பானு உன் சாண்டல்ஸ் ஒன்னும் அவ்வளவு மோசமில்ல. இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு தாராளமா சமாளிக்கலாம் அதை வச்சு. நீ இப்ப எனக்கு வீண் செலவு இழுத்து விட்டுட்டு இருக்க? எனக்கு இதைவிட முக்கியமான செலவுகள் எல்லாம் இருக்கு. கொஞ்சமாவது பொறுப்போட நடந்துக்கோ.” என்று பல்லைக் கடித்தபடி அவளின் காதருகில் வார்த்தைகளை துப்ப,


“நீ எப்ப தான் உன்கிட்ட காசு இருக்குனு‌ சொல்லியிருக்கண்ணா? எப்பவும் இதே பஞ்சப்பாட்டு‌ தான். நான்‌ வேற வீட்டுல பொறந்திருக்கணும்ணா. இல்ல நம்ம அம்மா அப்பா உயிரோட இருந்திருக்கணும்”‌ என்று கண்களை கசக்கினாள். எப்போதும் அந்த கஷாயம் விரைவாக வேலை‌ செய்யும்.


ஆனால், இன்று கல்லாய் இறுகியிருந்தவனின் முகத்தில் மருந்துக்கும் இளக்கம் இல்லை.


“அவ்வளவு தூரம் உன் இதயத்துல ஈரம் வத்திப்போச்சாண்ணா? எல்லாம் அந்த நந்தினினால தான். அவங்க தான் ஏதாவது‌ சொல்லியிருக்கனும். நீ‌ சரியில்லணா. அவங்க உன் புத்திக்குள்ள புகுந்து உன்னை ஆட்டி வைக்கிறாங்க? நீ ஆடற” என்று தன் போக்கில் குற்றச்சாட்டை அடுக்கிக்கொண்டே போக,


“பானு!” என்று அதட்டியவன், அவள் முகம் ரத்தப்பசையற்று போகவும்,


“ஆதாரமேயில்லாம ஒருத்தர் மேல பழி‌ போடுறது ரொம்ப தப்பு. அண்ணன் கண்டிப்பா ஆறு மாசம் கழிச்சு இதே ஹீல்ஸை உனக்கு வாங்கித் தரேன் ப்ராமிஸ்” என்று‌ குழந்தைக்கு சொல்வது போல் சொன்னான்.


“அதுவரை இதை உன் பேர்ல ரிஜிஸ்டர் செஞ்சு வச்சிருப்பாங்களாண்ணா?” என்றவள் நக்கலாகக் கேட்க, திகைத்தான் அவன்.


அவனிடம் அதற்கு பதிலில்லை. அவனிடம் பணம் புரளும் சமயம் வரும் வரை, அது அங்கேயே இருக்க வழியில்லையே!


என்ன சமாதானம் சொல்வதென அவன் யோசிக்க, வெறுப்பாக அந்த‌ புதிய செருப்புகளை கழற்றி வீசியவள், தனது பழைய செருப்புகளை போட்டுக்கொண்டு, தலை‌ குனிந்தபடி- அங்கிருந்த ஆட்கள் யார் முகத்தையும் பாராமல், கன்றிய முகத்துடன் வெளியேறினாள்.


அவனுக்குமே அவளைப் பார்க்க பாவமாகத் தான் இருந்தது.


வீட்டிற்கு வந்ததும் அவளுக்கு பிடித்த உணவான பாஸ்தா செய்து தரட்டுமா என்றான். அவள் அவனிடம் பேசவில்லை. முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அவளது காதலன் எவ்வளவு பெரிய பணக்காரன்! அவன் அவளை சுற்றி சுற்றி வருகிறான் என்றால், அவள் இது போல் அவனுக்கு தகுந்த மாதிரி தலை முதல் கால் வரை தன்னை தகுதிபடுத்திக் கொள்வதால் தானே? இது ஏன் இந்த மரமண்டை அண்ணனுக்கு புரிய மாட்டேன் என்கிறது என்று மனதிற்குள் கரைந்தாள்.


அப்போது அவளது காதலன் விஹானிடமிருந்து, ‘மிஸ் யூ டுடே’ என்று வாட்ஸப்பில் செய்தி‌ வர, மனக்கலக்கத்தை மறந்தாள்.


அந்த விஹான் ஆத்மீகா கண்ணபிரானுக்கு தெரிந்த அதே விஹான் தான்.


‘மிஸ் யூ டூ’ என்று பதிலுக்கு அனுப்பினாள் பானுமதி.


உடன், இந்தத் துன்பமெல்லாம் இந்த குசேலன் அண்ணாவுடன் இருக்கும் வரைக்கும் தான். எனது கிருஷ்ணனான விஹானிடம் சென்றுவிட்டால், என்னை திருமகளாக அலங்கரித்துப் பார்ப்பார். இன்னும் கொஞ்சம் நாள் தான் பானு! கொஞ்சம் நாள் தான்! என்று உருப்போட்டுக்கொண்டே சோஃபாவில் படுத்துறங்கிவிட்டாள்.


ஆனால், சித்தார்த்தனுக்கு‌ தான் மனம் கேட்கவே இல்லை. அவளுக்காக பாஸ்தா செய்து, ஹாட்பாக்ஸில் அடைத்து டீபாயில் வைத்தான். அவளுக்கு பசித்த நேரம் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என.



தொடரும்…


பானுமதியை போன்ற பெண்களை பற்றி உங்களது கருத்து என்ன நண்பர்களே? ஒரு வீட்டில் ஆண்குழந்தையாய் பிறந்த பாவத்திற்காக சகோதரிகளின் கல்யாண கடன் முழுவதும் அவன் மேல் தூக்கி வைக்கப்படுவதில் என்ன விதமான நியாயம் இருக்கிறது நண்பர்களே? பெண்களும் யோசிக்க வேண்டிய தருணம் இதுவென்று நினைக்கிறேன். நீங்கள்?


உங்கள் லைக், கமெண்டுகளை பொறுத்து தான் அத்தியாயங்கள் வேகமாக வரும் நண்பர்களே!
 
Top Bottom