ஆழியே மெளனம் ஏனோ - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,598
6,634
113
மௌனம் – 10

நித்திய மயூரியின் நீண்ட நாள் ஆசை, ஃபேஷன் டிசைனிங் மேற்படிப்பை வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்பதுதான்.

அவள் ஃபேஷன் டிசைனிங் ஊட்டியில் படிக்கப் போவதாகக் கூறிய போதே, வீட்டில் அனைவரும் அவளை பாரிஸுக்கு அனுப்பத் தயாராக இருந்தனர்.

ஆனால், அப்போது ஆழினியை விட்டுப் பிரிய மனமில்லாததால், விருப்பமின்றியே அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.

ஆனால் படிக்கப் படிக்க அந்தத் துறையின் மீது அவளுக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, மேற்படிப்பை வெளிநாட்டில் தொடர வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் வேரூன்றியது.

இதற்கெல்லாம் அவளது குடும்பமும் ஒரு காரணம். பாரீஸ்ல படிச்சா நல்லா ஃப்யூச்சர் இருக்கும். நம்ம கம்பெனிக்கும் பயன்படும் என்று அவ்வப்போது அவளிடம் கூறி, அவளது மனதில் ஆசையை வளர விட்டனர்.

ஆனால், இப்போது அதே குடும்பமே அவளது கனவுக்கு தடையாக இருக்கப் போவதை அறியாமல், ஊட்டியில் இருந்து உற்சாகமாக வீட்டிற்கு வந்தாள் நித்யமயூரி.

வீட்டிற்குள் நுழைந்ததும் அனைவரும் இவளை ஒரு பார்வைப் பார்த்து விட்டு அமைதியாக இருப்பதைக் கண்டு குழம்பிப் போனாள்.

‘நம்ம சொல்லாமல் போனதுக்கு பெரிய பிரசங்கம் பண்ணுவாங்கனு நினைப்சேன். ஆனால் எல்லாரும் அமைதியாக இருக்காங்களே. இந்த அமைதி ஆபத்தாச்சே. பாட்டி பெருசா ஏதோ பண்ணப் போறாங்க. அதை எப்படி சமாளிக்கிறது?’என்று மனதிற்குள் நினைத்தபடி,

"பாட்டி… " என்றவள் ஏதோ கூற முயல.

"நில்லு. உன்கிட்ட எந்த விளக்கமும் கேட்கல. நான் சொல்றதை மட்டும் கேளு. உனக்காகத்தான் எல்லோரும் வெயிட் பண்ணிட்டிருக்கோம்.” என்ற லட்சுமி அனைவரையும், ஒரு முறை பார்த்தார்.

"சொல்லுங்க பாட்டி." என்று நித்யமயூரி கூற.

"உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கேன்." என்ற லட்சுமியை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அவரோ அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து பேசினார்.
"உன்கிட்ட கேட்டுட்டு, உனக்கு மாப்பிள்ளையைப் புடிச்சா மேற்கொண்டு கல்யாண வேலையை ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்.

ஆனா நீ பண்ற வேலையெல்லாம் பார்த்தா, சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இப்படியே விட்டா சரிப்பட்டு வராது. அதனால நாங்களே முடிவு பண்ணிட்டோம். இன்னும் இரண்டு மாதத்துல உனக்குக் கல்யாணம்."

"பாட்டி... விளையாடாதீங்க. எனக்கு மேல படிக்கணும். ஃபாரின்ல போய் படிக்கணும்னு நினைக்கிறேன்."

"ஆமாம். நீ படிச்ச வரைக்கும் போதும். நாங்க வெளிநாட்டுக்குப் போய் படினு சொன்ன போதெல்லாம் கேட்கல. இப்ப உன்னை அனுப்பணும்னு எங்களுக்கு விருப்பமில்லை."

"ப்ளீஸ் பாட்டி..."

"எங்க கண் முன்னாடியே உன் இஷ்டத்துக்கு இருக்குற. கல்யாணத்துல ஆம்புளை புள்ளைங்களோட சேர்ந்து ஆட்டம் போடுற. இதுல வெளிநாட்டுக்கு வேற அனுப்புவாங்களா? எதுவா இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உன் புருஷன் கிட்ட கேட்டுட்டு அதுக்கப்புறம் போய் படி."

"பாட்டி... நான் படிக்கிறதுக்கு எதுக்கு கண்டவங்கக் கிட்ட அனுமதி கேட்கணும்?"

"யார் கண்டவங்க? உன்னைக் கட்டிக்கப் போறவன்தான்."

"இத்தனை வருமா வளர்த்த உங்களுக்கே என்னோட உணர்வுகள் புரியல. புதுசா வரப்போறவனுக்கு எப்படி புரியும்? அதுவுமில்லாமல் என்னோட விருப்பத்துக்கு இன்னொருத்தரோட அனுமதியை எதிர்ப்பார்க்கணுமா பாட்டி? உங்களுக்கு அதை எப்படி சொல்லிப் புரியவைக்கிறதுன்னே தெரியல?”
என்று கண் கலங்க கூறினாள்.

“உனக்குத் தான் எங்களோட உணர்வுகள் புரியல. உங்க இஷ்டத்துக்கு விட்டதுக்கு தான் ஒருத்தி நல்ல பாடம் கத்து கொடுத்துட்டு போயிட்டா. அதேபோல உன்னைய விட முடியாது. இதுதான் என் முடிவு.” என்று கறாரராக லட்சுமி சொல்லி விட

"அம்மா... ப்ளீஸ்! நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்ணுங்க.” என்று கவிதாவிடம் ஓடினாள்.

கவிதாவோ, கண்ணீரை அடக்கிக்கொண்டு,
"இந்த விஷயத்துல என்னால பாட்டியை மீற முடியாது." என்றாள்.

உடனே தந்தையையும், பெரிய தந்தையையும் பார்த்தாள். ஆனால் அவர்கள் இருவரும் பார்வையை திருப்பிக் கொண்டனர்.

அவர்களின் மௌனமே அவளுக்கு இந்த விஷயத்தில் உதவ மாட்டார்கள் என்று புரிய,

கண்ணீர் வழிய, மீண்டும் பாட்டியிடம் வந்து நின்றாள் நித்யமயூரி.

"பாட்டி... ப்ளீஸ். இனிமே நான் எங்க போனாலும் சொல்லிட்டு போறேன். இந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் எனக்குக் கல்யாணம் பண்ணாதீங்க... ப்ளீஸ் பாட்டி..." என்று கெஞ்சினாள்.

பேத்தியின் கண்ணீரைப் பார்த்து லட்சுமியின் மனமும் வலித்தது. இருந்தாலும், மனதை உறுதிப்படுத்திக் கொண்டு,

"இங்க பாரு... இது இன்னிக்கு எடுத்த முடிவு கிடையாது. உன் அண்ணா கல்யாணத்திலேயே எடுத்த முடிவுதான். ஒரு மாதமா இதுக்கான ஏற்பாடெல்லாம் நடக்குது. உனக்குப் பொருத்தமான நல்ல மாப்பிள்ளையை தேடத்தான் இவ்வளவு நாளாகிடுச்சு."

'ஒரு மாதமா?' என்று அதிர்ச்சியடைந்தாள் நித்திய மயூரி.

அவள் மட்டுமல்ல, அங்கே நின்றுக் கொண்டிருந்த ஆழினியும் அதிர்ந்து தான் போனாள்.

அவளுக்கோ மனதிற்குள் வேறு கணக்குகள். ‘திருமணமாகி ஒரு மாதமாகி விட்டதா?’ என்று எண்ணியவளுக்கு
தன்னுடைய உடல்நிலை சரியில்லாததற்கான காரணம் இப்போது புரிந்திருந்தது.

தன் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது என்பதை அறிந்ததும், அவளது மனம் இறக்கை இல்லாமல் பறந்தது.

‘தனக்கே தனக்கு என்று ஒரு உறவு. தான் அழைத்திராத அம்மா என்ற சொல், இனி என் குழந்தை மூலம் கேட்கப் போகிறேன். என்னடா அம்மு? சீக்கிரமே நீங்க அம்மானு கூப்பிடுறீங்களா!’
என்று முகம் முழுவதும் மலர்ந்த புன்னகையுடன், மனதிற்குள் அந்தக் குழந்தையோடு பேசிக்கொண்டிருந்தவளுக்கு, சுற்றி என்ன நடக்கிறது என்பதே கவனத்தில் இல்லை.

லட்சுமி,"திருமணம்தான் இறுதி முடிவு," என்று உறுதியாகக் கூறி விட்டு அங்கிருந்து செல்ல.

நித்யமயூரியோ என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

அவளை எதிர்கொள்ள முடியாமல் அனைவரும் அங்கிருந்து நழுவிச் சென்றனர்.

சிந்துஜா மட்டும் மனம் கேட்காமல் தங்கையிடம் வந்தாள்.

"மய்யூ..." என்று அழைக்க,

"அக்கா, எனக்கு நீதான் ஹெல்ப் பண்ணணும். எப்படியாவது பாட்டிக்கிட்ட சொல்லி இந்தக் கல்யாணத்தை நிறுத்து." என்றுக் கெஞ்சினாள்.

"இங்க பாரு மய்யூ. பாட்டிக் கிட்ட நான் உனக்காக ஏற்கனவே பேசிட்டேன். ஆனால் அவங்க ஒத்துக்கல. நீ சின்னப் பொண்ணுனு சொன்னதுக்கு, அவளா சின்னப் பொண்ணு. அண்ணனுக்குப் பொண்ணு பார்க்கிற அளவுக்கு அவளுக்குத் தெரிஞ்சிருக்கு.

அதுவுமில்லாமல் அவ ஃப்ரெண்டுக்கும் அதே வயசு தானே. அதனால கல்யாணம் பண்ணுறதுல ஒண்ணும் தப்பில்லைன்னு சொல்லிட்டாங்க. நீ உன் ஃப்ரெண்டு விஷயத்துல கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். பாட்டிக்கு நம்ம தனுவ செழியனுக்கு கட்டணும்னு ரொம்ப ஆசை. அவ ஓடிப் போயிட்டா. அதுவே அவருக்கு ஏமாற்றம். இதுல பெரிய மனுஷி மாதிரி வேலைப் பார்த்திருக்க. என் கிட்ட சொல்லிருக்லாம். “ என்றுக் கூறி விட்டு அங்கிருந்து சென்றாள் சிந்துஜா.

‘அவசரப்பட்டுட்டமோ‌.’ என்று எண்ணியவாறே நிமிர்ந்த நித்யமயூரி கண்டதென்னவோ, புன்னகையுடன் இருந்த ஆழினியை தான்.

'இவளுக்கு உதவி செய்யப் போய்தான் இன்னைக்கு நான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். ஆனால் இவ…’ என்று எண்ணியவளுக்கு கோபம் வந்தது.

“ஆழி…” என்று அழைக்க.

அவளோ கனவு உலகத்திலே இருந்தாள்.

“ஹேய் ஆழி!” என்றவாறே
வேகமாக அவளை உலுக்கினாள்.

“ மய்யூ! ஒரு சந்தோஷமான விஷயம்” என்று ஆழினி கூற வர.

" உனக்கு என்ன? நீ ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைச்சிருச்சு. சந்தோஷத்துக்கு என்னக் குறை? என்னைப் பத்தி எங்கயாவது கொஞ்சமாவது கவலைப்பட்டியா?" என்று கோபமாகக் கேட்டாள்.

ஆழினிக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னடி பிரச்சனை?"

"நடிக்காத! இங்க என்ன நடந்துட்டு இருக்குனு உனக்கு உண்மையிலே தெரியாதா? இல்ல தெரிஞ்சும் சிரிச்சிட்டு இருக்கியா? என்னைப் பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லல. ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைச்சாச்சு. அப்புறம் என்ன எங்க கம்பெனியோட முதலாளியே நீ தான். உனக்கு ரொம்ப பிடிச்ச வேலை. நீ நினைப்பதெல்லாம் நடக்குது. அதுக்கப்புறம் நான் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன?" என்று வார்த்தைகளை அள்ளி வீசினாள்.

அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஆழினியின் மனதை ஆழமாகக் காயப்படுத்தியது.

“மய்யூ!” என்று ஏதோ கூற வர.

“ப்ச்! எதுவும் பேசாதே.” என்ற நித்யமயூரி அழுதவாறு அங்கிருந்து ஓடினாள்.

ஆழினிக்கு அப்போது தான்
வீட்டின் சூழ்நிலையையே ஞாபகத்திற்கு வந்தது.

இந்த நிலையில் தன்னுடைய மகிழ்ச்சியான செய்தியைச் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

நல்ல நேரம் வரும்போது சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்தவள், அந்த மகிழ்ச்சியையே தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.

பாட்டி நினைத்தது போலவே நித்திய மயூரியின் திருமணத்தை நடத்தி முடித்தார்.

திருமணத்திற்குப் பிறகும் நித்யமயூரி வீட்டில் யாரிடமும் சரியாகப் பேசவில்லை. மாப்பிள்ளையான நவீனிடமும் பேச விரும்பவில்லை.

ஆனால், அவளின் நல்ல நேரமோ, நவீன் அவளது கணவனாக வந்திருந்தான்.

அவள் எப்போதும் அழுதுகொண்டும், கோபமாகவும் இருப்பதைப் பார்த்து,

"யாரையாவது லவ் பண்றியா?" என்று கேட்டான்.

"ஆமா..." என்று அவள் சொன்னதும், அவனது மனம் சுக்கு நூறாக உடைந்தது.

'கல்யாணத்துக்கு முன்னாடியே பேசணும்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன். ஆனால் ஏதோ பூஜை, விரதம் கல்யாணத்துக்கு முன்னாடி பார்க்கக்கூடாதுன்னு எல்லாரும் தட்டிக்கழிச்சிட்டாங்க. இப்போ தானே புரியுது.’என்று நினைத்தவன், இனி என்ன செய்வது என்று குழம்பிப் போனவன்,

“சாரி! நான் கல்யாணத்துக்கு முன்னாடி பேச முயற்சி பண்ணேன். வீட்ல விடல. யாரு அந்தப் பையனு சொல்லுங்க. நான் பேசி பார்க்குறேன்.” என்று குரலடைக்க பேசிய நவீனை எரிச்சலாக பார்த்தாள்.

“என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? கல்யாணத்துக்கு அப்புறம் ஓடிப் போற ஆள் மாதிரி தெரியுதா?” என்று எகிறினாள் நித்யமயூரி.

“ஐயோ அப்படி சொல்லல” என்று நவீன் பதறினான்.

நித்யமயூரிக்கு அவனைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. இறங்கி வந்தவள், அவள் மனதில் இருந்ததைக் கூறினாள்.

"நான் என்னோட படிப்பைத்தான் லவ் பண்ணேன். நான் ஃபேஷன் டிசைனிங் படிக்க வெளிநாடு போகணும்னு நினைச்சேன். இப்போ என்னோட கனவு எல்லாமே போயிடுச்சு," என்னைப் படிக்க விடாம பண்ணிட்டீங்க," என்று குற்றம் சாட்டினாள்.

"என்ன சொல்ற? நீ படிக்கணும்ங்குறதைத் தான் சொன்னியா? கொஞ்ச நேரத்தில பயந்துட்டேன். இதெல்லாம் ஒரு விஷயமா? நீ உன் இஷ்டப்படி படிக்கலாம்."என்றான்.

"நான் வெளிநாட்டுல படிக்கணும்னு சொன்னேன். எங்க வீட்ல என்னைத்
தனியா அனுப்ப விட மாட்டாங்க.”

“ நானும் உன்னைத் தனியா அனுப்ப மாட்டேன். நானும் உன்னோட அங்கே வர்றேன். எனக்கும் அங்கே வேலை தேடிக்கிறேன். இது பெரிய விஷயமே இல்லை." என்றான் நவீன்.

அவன் சொன்னது போலவே வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டு, அவளது கனவை நனவாக்கினான்.

நித்யமயூரியின் கனவும் நனவானது.

ஆனால், இந்தியாவுக்கு மட்டும் அவள் திரும்பி வர சம்மதிக்கவில்லை.

"என் கால்ல நானே நின்ன பிறகுதான் வருவேன்," என்று உறுதியாகக் கூறினாள்.

அதனால் நவீன் மட்டும் அடிக்கடி இந்தியா வந்து தன் அம்மாவையும், அவளது குடும்பத்தினரையும் பார்த்துவிட்டு செல்வான்.
பின்னர் தன் அம்மாவையும் தன்னுடன் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றான்.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவளோ, "அன்று நான் கோபத்துல சொன்ன ஒரு வார்த்தை தான் ஆழினியோட இவ்வளவு துன்பத்துக்கும் காரணம். அன்னைக்கு நான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், அவள் ஏன் புன்னகையுடன் இருந்தாள் என்பதை முதலில் என்னிடமே சொல்லியிருப்பாள். அவளை இன்னும் கொஞ்சம் கவனமாகப் பார்த்திருக்கலாம். குழந்தையும் நல்லபடியாகப் பிறந்திருக்கும்..." என்று எண்ணியபடி, பழைய நினைவுகளில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்தாள் நித்யமயூரி.
 

Author: Vishakini
Article Title: ஆழியே மெளனம் ஏனோ - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Rakshith

New member
Jul 31, 2021
2
1
3
Tamilnadu
மயூரியின் பேச்சால் தான் அவர்கள் கம்பெனிக்கு வேலைக்கு செல்லவில்லையா.