இது காதல் காவியம் - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,456
113
Germany
கிழக்கின் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருகோணமலையில் உள்ளது கந்தளாய் எனும் ஊர். இங்குதான் மிகவும் பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான கந்தளாய்க் குளம் காணப்படுகிறது. உயர்ந்த அணைக்கட்டுகளுக்கு இடையில் கம்பீரமாக வீற்றிருக்கும் அந்தகுளம் காற்றின் உற்பத்தி நிலையம் என்று கூடக் கூறலாம்.காரணம் இருமருங்கிலும் இருக்கும் பாலை வீரை போன்ற பழமையான மரங்களின் ஆதிக்கம்.சிலுசிலுவென அடிக்கும் அந்தக் காற்றை அனுபவிக்கவென்றே மாலை நேரங்களில் நிறைய பேர் வருவதுண்டு.

அணைக்கட்டின் உச்சியில் நடந்து கொண்டிருக்கும் போதே கந்தளாய்க் கிராமத்தில் தென்படும் மக்கள் நடமாட்டத்தையும் பார்க்கலாம்.ஆனால் இன்று குளமும் சரி கிராமமும் சரி யாருமின்றி வெறிச்சோடிப் போய்க்கிடந்தன.

காரணம் மாவட்டம் முழுவதும் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்.வெளியே நடமாடுபவர்களைக் கண்டால் முழங்காலுக்குக் கீழே சுடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.இதற்குப் பிறகும் யாராவது வெளியில் வருவார்களா என்ன?

ஆனால், அவளைத் தவிர. காற்றில் அசையும் அவளது இமைகளில் காய்ந்து போன கண்ணீரின் அடையாளம், பற்களால் அழுத்தப்பட்டுக் கிடக்கும் இதழ்கள் , சோகமே உருவான அவளது முகம் என யாவும் அவள் வாழ்வின் ரணங்களைக் காட்டியது. வேகமாக அடிக்கும் காற்றை விலக்கி அணைக்கட்டிலிருந்து மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தாள் மீரா.

வயதுகள் தெரியாத மரங்கள் நினைத்தபடியெல்லாம் வேர்களைப் பரப்பிக் கொண்டிருந்ததனால் மேட்டிலிருந்து இறங்குவது அவளுக்கு மிகச் சிரமமாய் இருந்ததோ? இடக் கையினை இடுப்பில் ஊன்றிக் கொண்டு மறுகையால் மண்ணை விட்டு வெளியே துருத்திக் கொண்டிருக்கும் வேர்களைப் பற்றியபடி அணைக்கட்டிலிருந்து இறங்கி வருவதற்காய் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டு வழியே அவள் பாதங்கள் படியிறங்கிக் கொண்டிருந்தது.

தனியா எங்கேயும் போகாத..

நான் எங்க இருந்தாலும் உன்னோட நினைவில் தான் வாழ்ந்திட்டு இருப்பேன்.

மெதுவா போ.. அந்தக் கைகள் அவள் இடுப்பில் படாமல் அவளைச் சுற்றி இருக்க படாத பாடுபடும்.

விழப்போறியோ?? என்று கோபப்படும் அந்த பார்வைக்காகவே வேண்டுமென்றே அவள் ஏதும் செய்வாள்

மீரா பேபி நில்லு ஓடாத

மீராராராரா...

அவள் காதுகளைப் பொத்திக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டாள். மூச்சிரைத்தது.நெஞ்சு முழுக்க ஏதோவொன்று அடைத்துக் கொண்டிருந்தது. உடல் முழுவதும் குளிரெடுக்க அனத்திக் கொண்டிருந்தாள்.

"ரொஷான் வாங்க"

“உங்களப் பார்க்கனும்போல இருக்கு”

" எனக்குப் பயமா இருக்கு.நீங்க இல்லாம நான் சாகப் போறனோ தெரியா?.பிறகு ,பாவம் நம்ம புள்ள தனியாகிடும்..நாம ரெண்டு பேரும் நிறைய வருஷம் வாழனும் ரொஷான்..ஆசையா இருக்கு.

வார்த்தைகள் சத்தமாய் வர கேவிக்கேவி அழுது கொண்டிருந்தாள்.

யார் வருவார்கள்?? இலங்கைப் போர் தனக்கென்று வரலாறுகளைப் படைத்துக் கொண்டிருந்த காலம்.கனரக வாகனங்கள் துப்பாக்கிச் சத்தங்கள், பீரங்கிக் குண்டுகள் அகதி முகாம்கள், ஏகே 47 போன்ற சொற்கள் அன்றைய காலத்தில் பிரபல்யமடைந்து கொண்டிருந்த சாபக்கேடான நாட்களவை.

மீராவின் கதறல்கள் யாருக்கும் கேட்கவில்லை.அவள் உயிரையும் அவளுக்குள் இருக்கும்
உயிரையும் சுவாசிக்க வைப்பது அவன் மட்டுமே. அவன் குரல், நினைவுகள் அந்த சிரிப்பு எல்லாம் தான்.அவனின்றி யாதுமில்லை எனுமளவு உருகிக்கொண்டிருந்தாள்.
தீக்கு நடுவில் மாட்டிக்கொண்டது போல் அந்த விழிகளில் அத்தனை பயம்?

சிலநேரங்களில் இயற்கை தான் நமக்குத்துணை. மனிதம் பொய்த்துப்போன பின்னர் இந்த உலகம் இன்னும் இருக்குதென்றால் அது இயற்கையினால் தான். அந்திகளில் சிவக்கும் வானமும், மலர்கள் தொட்டு வரும் தென்றலும் மழைச்சத்தமும் என இன்னும் எத்தனையோ நிகழ்வுகள் மனதிற்கு புரியாத ஆறுதல்கள்.

அவளைத் தேற்ற மாலைநேரத்து இளங்காற்று குறைவில்லாது அவள் கூந்தலை வருடிக் கொடுத்தது.மரத்தின் அடியில் தலைசாய்த்தபடி அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்.

நீளமான அந்தத் தார் வீதியில் பகல் சூரியனின் அத்தனை வெம்மையும் இறங்கியிருந்தது. மாலையாகிக் கொண்டிருந்தாலும் சூடு தணியாததால்
அவ்வீதியில் வேகமாய்ச் செல்லும் வாகனங்களின் புழுதி அனலைக் கக்கியது. பாதுகாப்புப்படையினரின் வாகனங்கள் மட்டுமே அனுமதி என்றபடியால் வீட்டில் இருப்பவர்களுக்கு பயத்தைத் தந்தன. எங்கு என்ன குழப்பமோ என்ற மனநிலையைத் தான் கொடுத்தது.

பின்னால் திறந்த ஜீப் வண்டியில் நான்கு படையினர் துப்பாக்கியினை ஏந்தியவாறு நின்று கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண்ணும் அடங்கும். கர்ர்ர்ர் என்ற சகிக்க முடியாத சத்ததுடன் புழுதியினை வாரி இறைத்தவாறு ரோந்து வந்து கொண்டிருந்தது.
பிரதான வீதியால் மட்டுமல்லாது உள் வீதிகளிலும் சுற்றிக்கொண்டிருந்ததனால் அவர்களின் கண்களுக்கு விழி மூடிக்கொண்டு அமர்ந்திருந்த மீரா எப்படி தப்பாமல் இருப்பாள்?

சட்டென்று நின்று விட்ட வாகனத்திலிருந்து இரண்டு பேர் குதித்தனர்.ஒரு துப்பாக்கி அவளைக் குறி வைத்திருக்க, அந்தப் பெண் அவளை நெருங்கி துப்பாக்கி முனையால் தட்டி எழுப்பினாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் காதுகளில் மிகவும் தாமதமாய்த் தான் தன்னை யாரோ அழைப்பதாய் மூளை உணர்த்த முயன்று கண்களைப் பிரித்தாள். கண்ணீரில் காய்ந்து உலர்ந்த விழி என்பதால் திறக்க சற்றுத் தாமதமாகியது.

மெதுவாய் தேய்த்து பார்வையை சரி செய்து கொண்டாள்.முதலில் அவள் பார்வையில் ஷூ அணிந்த கால்கள் தெரிந்ததால் அவசரமாய் அண்ணாந்து பார்த்தவளின் விழிகளில் ஏமாற்றத்தின் சாயல்கள்.

ஏய்... ஊரடங்குச் சட்டம் என்று உனக்கு தெரியாதா?? எழும்பு" என்று அதட்டினாள் அந்த இராணுவ உடை அணிந்த பெண்.
மிகவும் பிரயர்த்தனைப்பட்டு எழுந்தவளின் உப்பிய வயிறு எதிரே நின்றவளின் கடினத்தன்மையை மெல்லக் குறைக்க போதுமாக இருந்தது.

இருந்தும் கைகளை உயர்த்த சொல்லி முழுதாய் உருவி சோதனை செய்தே விட்டாள்.

வீட்டுக்குப் போ... என்று ஜீப்பில் ஏறப்போனவள் திரும்பி வந்து
"உன் வீட்டுல விடுறன் வா" என்க, மீரா மயங்கிச் சரிந்து கொண்டிருந்தாள்.
**************

மண்களால் நிரப்பப்பட்ட பெரிய அரிசிப்பைகளுக்கு பச்சை நிறம்பூசப்பட்டு நான்கு பக்கமும் சுவர் போன்று அடுக்கப்பட்டிருந்தது.பொதுவாக ஆர்மி கேம்ப்கள் வீதியிலிருந்து பார்ப்பதற்கு மிகவும் தாழ்வாகத்தான் தெரியும்.ஆனால் ஒருவர் எழுந்து நின்றால் நெஞ்சுவரைக்கும் அதன் உயரம் இருக்கும்.அதற்குள் ஒரு மேசையும் இரண்டு கதிரைகளும் போடப்பட்டிருந்தன.ஒரு கதிரையில் மீரா அமர்ந்திருந்தாள்.மரங்கள் அடர்ந்த பகுதியான வீதியின் ஓரத்தில் அமைந்திருந்த அந்தக் கேம்புக்குள் சிலுசிலுத்த காற்று மட்டும் சமத்துவம் பேசியது.

உடல் அயர்வால் தள்ளாடியவளை கேம்புக்குள் அழைத்து வந்திருந்தனர்.ஏனெனில் அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும பதில்கூறத் தடுமாறிக் கொண்டிருந்ததால் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

பக்கத்தில் காலியான தண்ணீர் போத்தல் அவள் குடித்ததன்அடையாளமாய் இருந்தது.
கதிரையை சர்ரென்று இழுத்து வந்து மேசையின் அருகே போட்டு அமர்ந்துகொண்டான் ஒரு ராணுவ வீரன். அகன்ற புத்தகத்தை விரித்து எழுதத் தயாரானான்.

சிங்கள தன்னவா??

இல்லை என்பது போல் தலையாட்டினாள்.

பேரு என்னா?
புதிதாகப் பயின்ற தமிழ் அவன் பேச்சில் இடறியது

மீரா...

ஊரு?
நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் யோசனை.

எதிரே இருந்தவன் புருவம் சுருக்கினான்.

"நீ புள்ள சுமக்கிறதால தான் அமைதியா பேசிகுறன்.கோபம் வர வைக்க வேணாம்" அவனின் அதட்டலில் பயந்தவள்

ம. ம..மட்டக்கிளப்பு என்றாள்.கண்கள் கலங்க

எப்படி இங்கே வந்த?

என் ஹஸ்பன்ட்ட தேடி வந்தன்.உங்களால கண்டுபிடிச்சு தர மு..முடியுமா? நீர் வழிந்து உதடுகள் நடுங்கியது.

அவன் பேரு, வயது சொல்லு. போட்டோ இருந்தால் தா.

ரொஷான் அபேவர்த்தன. 30 வயது.

ஹஸ்பன்ட் சிங்களமா??? இடுங்கிய விழிகளால் அவளை கூர்மையாகப் பார்த்தான். போட்டோ இருக்கா??

ம்ம்ம்... கழுத்தில் கிடந்த செயினில் தொங்கிக் கொண்டிருந்த பெண்டனைத் திறந்து காட்டினாள்.

குழப்பமான பார்வையோடு கதிரையில் இருந்து எழுந்தான்.

“பொய் சொல்றீங்களில்லையா??

“இது உன்க ஹஸ்பன்டா??

அவன் பேச்சில் மரியாதை ஏறியது. மெதுவாய் அவளும் எழுந்தாள்.

அவர தெரியுமா? எங்க இருக்காக?? என்னக் கூட்டிப் போங்க சார். நான் எங்க இருக்காகன்னு தெரியாம தினமும் சாகுறன்.அவர பத்தி யார்கிட்டயும் விசாரிக்காத என்டு சொன்னதால தான் இத்தனை நாள் அமைதியா இருந்தன்.இதுக்கு மேல என்னால முடியாது. கை கூப்பி குனிந்தவாறு முகத்தை மூடி அழுதாள்.

இத்தனை நாள் கோபமாய்க் கூட தன்னைப் பற்றி விசாரிக்க யாருமில்லாத அனாதையைப் போல் வயிற்றில் பிள்ளையோடு அலைந்தவளுக்கு, ரொஷான் என்ற பெயரைச் சொன்னவுடன் மாறிப்போன அவனின் செயல்களால் அவரைத் தெரிந்தவர் தான் என்ற ஐயத்தை ஏற்படுத்தியது.அதனால் தான் உணர்வுகளின் கோவையாய் அவள் உருகிக் கொண்டிருந்தாள்.

அவளது அழுகை முகாமிற்கு வெளியே நின்றவர்களின் காதுகளில் விழுந்ததால் உள்ளே வந்தனர்.

என்ன?? இந்த பெண் பிரச்சினை? எனக் கேட்டாள் பெண் சீருடை அணிந்த ஒருத்தி.

மீராவின் விபரங்களை பதிந்து கொண்டிருந்தவன் சிங்களத்தில அவர்களோடு பேசினான். எதிரே நின்றவர்களின் முகத்திலும் வியப்பின் சாயலே.பின்னர் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

எங்களுக்கு தெரியும். அவர் என்ன வேலை?

அவர் உங்கள மாதிரி ராணுவத்துல வேலை செய்றாக. ஆனா இப்ப எந்த இடம் என்று சரியா தெரியாது. கடைசியா வடக்குல டியூட்டி என்றவர்.அங்கதான் போனார்.என்றாள்.

“நீங்க இவ்வளவு நாள் எங்க தங்கி?”

“கண்டி”

“கடைசியா எப்ப சந்திச்சது?”

“ஆறு மாசம் முதல்” அந்த நினைவுகள் அவளின் ஒவ்வொரு செல்லிலும் படர்ந்து உணர்வுகள் யாவும் அவன் ஒருவனையே தளுவியது.

என்னை வடக்குக்கு அனுப்பி வைப்பீங்களா? அவரத் தேடனும்.

அவளின் சமகால நிலமையின் அறியாமையா? பக்குவமற்ற பேச்சா? என பிரித்தறிய முடியாதளவு இருந்தாள். கபடமற்ற முகஅசைவுகள்,நிமிடத்திற்கு பல முறை இமைத்துக் கொண்டிருக்கும் கறுப்பு விழிகள் அதில் தெரியும் தவிப்பு, பிங்க் நிற சல்வார் அணிந்து இருந்தவளின் உடைக்குப் போட்டியாக அவளது உதடுகள் என அனைத்தும் பார்க்க ரசனைகளாய் இருந்தது.

இடக்கன்னத்தில் விழும் அந்தக்குழி அவளோடு யாரையும் கோபப்படாதே என்று சமரசம் பேசுவதாய் அடிக்கடித் தோன்றிக் கொண்டிருந்தது.

“நீங்கள் வீடு போங்க. அவரை பார்த்தால் சொல்கிறம்.”

உங்கட அடையாள அட்டை??

வீட்டுல இருக்கு.

சீரில்லாத பாதை வழியே அந்த ஜீப் மீராவின் இருப்பிடம் நோக்கி பயணித்தது.அனைத்து வீடுகளின் கேட்களும் அடைக்கப்பட்டிருந்து. பெரிய வேப்ப மரத்திற்கு பக்கத்தில் நிப்பாட்ட சொன்னாள்.அவளுடன் ஒரு பெண் ஒரு ஆண் ராணுவ அதிகாரிகள் சென்றனர்.

“இதுதான் நான் தங்குற இடம். இதுல ஆரம்பத்தில தங்கி இருந்தம்” என்றபடி,அவர்கள் கேட்ட அட்டையை காட்டினாள். அதனை நன்றாகப் பார்த்த பின்னர் அவளிடமே திருப்பிக் கொடுத்தனர்.

“ நீங்கள் சாப்பிடலை? நல்லா சாப்பிட வேணும். அப்போதான் பிள்ளை நல்லா வரும்” என்றாள் அந்தப் பெண் அதிகாரி.

அவளிடமிருந்து போன் நம்பர் வாங்கிக் கொண்டு தகவல் சொல்வதாய் சொல்லிச் சென்றனர்.
முழுதாய் ஒரு கிழமையின் பின்னர் இன்று மீரா நிம்மதியாக இருந்தாள். அவன் பெயரை சொன்னவுடன தனக்கு கிடைத்த மரியாதையும் அக்கறையும் அவன் பக்கத்தில் வந்துவிட்டதாய் தோன்றியது.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: இது காதல் காவியம் - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.