• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 17

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-17



ஐயர் மந்திரத்தைச் சொல்ல, சுற்றியிருந்த சொந்த பந்தங்கள் அர்ச்சதை தூவி வாழ்த்த இலக்கியாவின் கழுத்தில் பொன்தாலியை அணிவித்தான் தர்சன். அதைக் கழுத்தில் வாங்கியவளின் முகத்தில் கலக்கம் நிறைந்திருக்க, அணிவித்தவனின் முகமோ கல்லாக இறுகியிருந்தது.

அவனும் மனையாள் ஆகிவிட்டவளைத் திரும்பியும் பார்க்கவில்லை. அவளும் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. அவர்களுக்கான அடுத்தடுத்த சடங்குகள் ஒருவித இயந்திர கதியில் நடந்துகொண்டிருக்க, மகளையும் மருமகனையும் வைத்தவிழி அகற்றாது பார்த்திருந்த கந்தசாமியின் முகம் சந்தோசமான உணர்ச்சிக் குவியல்களைச் சுமந்திருந்தது. சந்திராவினது விழிகள் ஆனந்தத்தில் கண்ணீரைச் சொரிந்தன.

அதுநாள் வரை ஏழைவீட்டின் ராஜகுமாரியாக இருந்தவள் இன்றுமுதல் இன்னொரு வீட்டின் மருமகள் அல்லவா!

ராஜசேகர் குடும்பத்தினருக்கோ சந்தோசமும் நிம்மதியும் பொங்கி வழிந்தது. அவர்களது குடும்பத்தில் அதுவரை காலமும் கறுப்புப் புள்ளியாக இருந்து, எல்லோர் மனதையும் உறுத்திக் கொண்டிருந்த தர்சனின் வாழ்க்கையைச் சரிசெய்துவிட்டதாக உணர்ந்தனர்.

மனதில் இருந்த பெரிய சுமை அகன்றதிலும், கடைசி மகனின் திருமணத்தை எளிமையாக என்றாலும் நல்லபடியாக நடத்திவிட்ட நிறைவிலும் அவ்வப்போது ஆனந்தத்தில் கலங்கிய விழிகளைத் துடைத்துக்கொண்டார் மஞ்சுளா.

பலவித உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்த மகேஸ்வரியின் இதழ்கள் புன்னகையைச் சிந்தினாலும் விழிகள் இடைநிறுத்தம் ஏதுமின்றிக் கண்ணீரைச் சொரிந்தபடியே இருந்தன.

அதுநாள் வரை அவரது நெஞ்சை உறுத்திக் கொண்டிருந்த, அழுத்திக் கொண்டிருந்த பெரிய பாரம் இறங்கியிருந்தது.

மகள் செய்துவிட்ட பெரும் பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்துவிட்டதாக எண்ணியவருக்கு, இப்போதுதான் மூச்சே வந்தது.

அன்று பள்ளிக்கூடத்தால் வந்த மகேஸ்வரியிடம், தர்சன் திருமணத்துக்கு மறுத்துவிட்டதையும், இலக்கியா குடும்பத்தினர் சம்மதித்து விட்டதையும் சொன்ன மஞ்சுளா, “இந்தத் தர்சனை எப்படிச் சம்மதிக்க வைக்கப் போகிறேன் என்றே தெரியவில்லை மகி. எவ்வளவு சொன்னாலும் காது கொடுத்துக் கேட்கிறானே இல்லை..” என்று புலம்பினார்.

மஞ்சுளாவின் கரத்தைப் பற்றி, “நீங்கள் கவலைப் படாதீர்கள் அண்ணி. நிச்சயம் தர்சன் சம்மதிப்பான். நான் சம்மதிக்க வைக்கிறேன். என் மகளால் தான் அவனுக்கு இந்த நிலை. அதைச் சரியாக்கவேண்டியது என் கடமை.” என்றார் மகேஸ்வரி.

“எப்படியாவது அவனைச் சம்மதிக்க வை மகி. அப்படி மட்டும் நீ செய்துவிட்டாய் என்று வை, வாழ்நாள் முழுக்க நீ செய்ததை நான் மறக்கவே மாட்டேன். என்னால் முடிந்தவரை அவனோடு போராடிப் பார்த்துவிட்டேன். இனி என்ன செய்வது என்றே தெரியவில்லை.” என்று அங்கலாய்த்தவர், “நம் வீட்டில் எனக்கு எந்தக் குறையுமில்லை. கண் நிறைந்த கணவன், நல்ல பிள்ளைகள். நல்ல மருமக்கள், அழகான பேரக்குழந்தைகள் என்று எல்லாமே இருந்தும் என்னால் நிம்மதியாக, சந்தோசமாக இருக்க முடிகிறதா பார்? இவனுக்கு ஒரு கல்யாணத்தை முடித்துவிட்டால் அவனும் சந்தோசமாக இருப்பான், நானும் நிம்மதியாக இருக்கலாம் என்றால் எங்கே? அவன் கேட்டால் தானே..”

“அண்ணி! அதுதான் சொல்கிறேனே, அவன் கட்டாயம் சம்மதிப்பான் என்று. அதனால் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதீர்கள்.” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தவருக்கும், தர்சனை எப்படிச் சம்மதிக்க வைப்பது என்று தெரியவில்லை.

ஆனாலும், எப்படியாவது இந்தத் திருமணத்தை நடத்தியே ஆகவேண்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டார்.

அன்றிரவு வேலை முடிந்து களைத்துப்போய் வந்த தர்சனுக்கு வாசலிலேயே காத்திருந்த மஞ்சுளாவையும் மகேஸ்வரியையும் கண்டதும், காலையில் நடந்த பேச்சைத் தொடரக் காத்திருக்கிறார்கள் என்று தெரிந்துவிட்டது. சட்டெனக் கோபம் மூண்டது!

அதோடு, ‘உங்களை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொன்னவளின் நினைவும் இலவசமாகத் தொற்றிக்கொள்ள, இறுகிய முகத்தோடு உள்ளே நுழைந்து அவர்களைக் காணதது போன்று சென்றவனிடம், “உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும் தர்சன்.” என்றார் மகேஸ்வரி.

பேச முடியாது என்று சொல்லிவிட மனம் துடித்தாலும், தன்னுடைய கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏனோ அவனால் அத்தையிடம் காட்ட முடியவில்லை.

கவலையைக் கூடக் கோபமாகக் காட்டும் அன்னையை எதிர்க்க முடிந்தவனால், வேதனை, வலி, ஏக்கம் என்று அனைத்தையும் விழிகளில் சுமந்து ஏக்கத்தோடு தன்னைப் பார்க்கும் மகேஸ்வரியை அலட்சியப்படுத்த முடியவில்லை.

என்ன என்று வாயால் கேட்காதபோதும் அவனது நடை நின்றது.

அதையே அனுமதியாக எடுத்து அவன் அருகில் சென்றவர், “ஏன் கண்ணா இன்னமும் கல்யாணம் வேண்டாம் என்கிறாய்?” என்று வேதனையோடு கேட்டார்.

“ஏன் என்று உங்களுக்குத் தெரியாதா?” அடக்க முயன்றும் முடியாமல் கோப வார்த்தைகள் அவனிடமிருந்து வெளிப்பட்டன.

இலக்கியாவின் பேச்சினால் உசுப்பிவிடப்பட்டு, கல்யாணத்துக்குத் தயாராக இரு என்று அவளிடம் சொன்னபோதும், இங்கே மகேஸ்வரியிடம் அதைச் சொல்ல முடியவில்லை அவனால்.

கலங்கிவிட்ட விழிகளோடு, “அதற்காக இப்படியே எத்தனை நாட்களுக்கு இருப்பாய்?” என்று கேட்டார் அவன் அத்தை.

“இப்படியே என்றால் என்ன அர்த்தம் அத்தை? இப்போது எனக்கு என்ன குறை? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்!”

“நன்றாக இருக்கும் உனக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து பார்க்கவேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இருக்கக் கூடாதா?”

“ஆசைப்படுவது எல்லாம் நடந்துவிடுவது இல்லை அத்தை!” என்றான் கசப்பும் வெறுப்புமாக.

“ஏன் தர்சா இப்படி எல்லாம் பேசுகிறாய்? வெண்பா செய்த காரியமே போதும், இனிவரும் காலம் முழுக்கக் கிடந்து நான் அழுவதற்கு. இதில் நீயும் இப்படி என்னைத் தண்டிக்கிறாயே! இந்த வீட்டை விட்டுப் போன நான் போனவளாகவே இருந்திருக்க இன்று நீ குழந்தை குட்டி என்று வாழ்ந்திருப்பாய் தானே. அதைக் கெடுத்தவள் நான் தானே. உனக்கு ஒரு நல்லதைச் செய்யாமல் நான் செத்தால் கூட என் நெஞ்சுக்கட்டை வேகாது தர்சா. நான் சாகும் முன் நீ சந்தோசமாக இருப்பதைப் பார்க்கவேண்டும் கண்ணா. அதை எனக்கு மடிப்பிச்சையாகக் கொடு..” என்று, கண்களில் வழிந்த கண்ணீரோடு கையேந்தி கேட்டார்.

அப்போதும் அவன் இறுகிப்போய் நிற்க, “இந்தத் திருமணத்துக்குச் சம்மதி தர்சா..” என்றபடி அவன் காலடியிலேயே விழுந்தார் மகேஸ்வரி.
மஞ்சுளாவே அதை எதிர்பாராமல் அதிர்ந்துவிட, “ஐயோ அத்தை..! என்ன இது.. எழுந்திருங்கள். காலில் விழுந்து என்னை ஏன் இப்படிச் சங்கடப்படுத்துகிறீர்கள்.” என்று பதறித் துடித்து அவரைத் தூக்க முயன்றான் தர்சன்.

“மாட்டேன். நீ கல்யாணத்துக்குச் சம்மதம் என்று சொல்லு. அப்போதுதான் எழுந்திருப்பேன்.” என்று அடம்பிடிக்கும் குழந்தையாகக் கண்ணீர் வடித்தார் அவர்.

“சரீ! எதையாவது செய்து தொலையுங்கள். அதற்கு முதலில் எழும்புங்கள்.” என்று பல்லைக் கடித்தபடி சொன்னவன், அவரைப் பற்றி எழுப்பிவிட்டான்.

“மெய்தானே சொல்கிறாய். திருமணத்துக்குச் சம்மதம் தானே..” என்று ஆவலும் மகிழ்ச்சியுமாக அவர் கேட்க, “மெய்யாகத்தான்!” என்றான் அவன் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.

மகிழ்ச்சியோடு மகேஸ்வரி மஞ்சுளாவைப் பார்க்க, “அதற்காக எந்த ஆடம்பரமும் இருக்கக் கூடாது. அதோடு என்னை அங்கே வா இங்கே வா என்றும் கூப்பிடக் கூடாது, சொல்லிவிட்டேன்!” என்று இரு பெண்களையும் பார்த்துச் சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாக அகன்றான் தர்சன்.

அது போதாதா அவர்களுக்கு? இதோ, இன்று திருமணத்தையே நடத்தி முடித்துவிட்டார்கள்.

அதுநாள் வரை தர்சனின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டோமே என்று இறுகிப்போய் இருந்தவரின் இறுக்கம் இன்றுதான் தளர்ந்தது! மகளின் நினைவுகள் அவரை ஆக்கிரமித்தது. கூடுதலாகப் பேரக்குழந்தையின் நினைவுகளும் சேர்ந்துகொண்டது.

முன்னரும் அவளின் நினைவுகள் எழும் தான். ஆனாலும் ஒரு தவம்போல் அதை அடக்கிவிடுவார். தன் கடமையை நிறைவேற்றிவிட்ட இன்றோ எப்போதும்போல் அந்த நினைவுகளை அடக்கவும் முடியவில்லை. அதை அவர் விரும்பவுமில்லை.

மாறாக, எப்படி இருக்கிறாளோ? சமையல் கூடத் தெரியாதே.. அவள் கணவன் அவளை நன்றாக வைத்திருப்பானா? குழந்தை யாரைப்போல இருக்கும்? என்று எண்ணங்கள் சுற்றிச் சுழன்றன.

மகளைப் பார்க்கவேண்டும் போல்.. ஏனடி இப்படிச் செய்தாய் என்று கேட்கவேண்டும் போல்.. அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்கவேண்டும் போல்.. அவரின் பேரக்குழந்தையைக் கையில் தூக்கி நெஞ்சில் சாய்த்துக் கொஞ்சவேண்டும் போல்.. இப்படிப் பலவித உணர்வுகள் அவரைத் தாக்கியபோதும் எதையும் வெளியில் காட்டமுடியாமல் புன்னகை முகமாகவே நின்றிருந்தார் மகேஸ்வரி.


மாலைப் பொழுது மங்கி இரவு பொழுது நெருங்கியிருக்க, மெல்லிசையாய் காற்றுச் சாளரம் வழியே அந்த அறைக்குள் வீச, தாயின் கையைப் பற்றியபடி அமர்ந்திருந்தாள் இலக்கியா.

விழியோரங்களில் கண்ணீரின் கோடுகள் தெரிய, முகம் கலக்கத்தில் இருக்க, இதழ்களோ விட்டால் அழுதுவிடுவேன் என்று நடுங்கிக் கொண்டிருந்தன.

“இதே ஊரில் தானே இருக்கப் போகிறோம் லக்கி. நீ நினைத்தால் பத்து நிமிடத்தில் அங்கே வரலாம். நாங்கள் நினைத்தால் இங்கே வரப்போகிறோம். பிறகும் ஏன் இப்படிக் கலங்குகிறாய்.”

அதுநாள் வரை பிரிந்திராத மகளைப் பிரியப் போகிறோமே என்று உள்ளம் கிடந்து அழுதாலும், அவளின் மனப்போராட்டத்தை, பயத்தை எண்ணி உள்ளுக்குள் கலங்கினாலும் வெளியே மகளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்துச் சொன்னார் சந்திரா. அவரது ஒரு கை மகளின் தலையை ஆதுரத்துடன் தடவி கொடுத்தது.

அந்த வீட்டை நினைத்து, வீட்டு மனிதர்களை நினைத்து, அதுவரை அவளுக்குப் பழக்கமேயிராத வசதியான வாழ்க்கையை நினைத்து, அன்றுமுதல் கணவனாகி விட்டவனுடான உறவை நினைத்து என்று, பலதை எண்ணிக் கலங்கியவள், “பயம்மா இருக்கும்மா.” என்றாள் குரல் நடுங்க.

கண்ணோரம் கண்ணீர்த் துளிகள் இரண்டு கசிந்தன.

நெஞ்சுக்குள் பிசைந்தபோதும், “அசடு! என்ன பயம்? எதற்குப் பயம்? இங்கே இருப்பவர்கள் உன் கணவனும் அவரின் வீட்டு ஆட்களும். அவர்கள் உன் சொந்தம் கண்ணம்மா. உன் மகி மிஸ் வேறு இருக்கிறார். உன் மாமியாரும் நல்ல மாதிரித்தான் தெரிகிறார். பிறகு எதற்குப் பயப்படுகிறாய்?” என்று அன்னை கேட்டபோது, என் கழுத்தில் தாலியைக் கட்டியவனை நினைத்துத்தான் அஞ்சுகிறேன் என்று சொல்ல முடியவில்லை அவளால்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
“மாட்டேன். நீ கல்யாணத்துக்குச் சம்மதம் என்று சொல்லு. அப்போதுதான் எழுந்திருப்பேன்.” என்று அடம்பிடிக்கும் குழந்தையாகக் கண்ணீர் வடித்தார் அவர்.

“சரீ! எதையாவது செய்து தொலையுங்கள். அதற்கு முதலில் எழும்புங்கள்.” என்று பல்லைக் கடித்தபடி சொன்னவன், அவரைப் பற்றி எழுப்பிவிட்டான்.

“மெய்தானே சொல்கிறாய். திருமணத்துக்குச் சம்மதம் தானே..” என்று ஆவலும் மகிழ்ச்சியுமாக அவர் கேட்க, “மெய்யாகத்தான்!” என்றான் அவன் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.

மகிழ்ச்சியோடு மகேஸ்வரி மஞ்சுளாவைப் பார்க்க, “அதற்காக எந்த ஆடம்பரமும் இருக்கக் கூடாது. அதோடு என்னை அங்கே வா இங்கே வா என்றும் கூப்பிடக் கூடாது, சொல்லிவிட்டேன்!” என்று இரு பெண்களையும் பார்த்துச் சொல்லிவிட்டு, அங்கிருந்து வேகமாக அகன்றான் தர்சன்.

அது போதாதா அவர்களுக்கு? இதோ, இன்று திருமணத்தையே நடத்தி முடித்துவிட்டார்கள்.

அதுநாள் வரை தர்சனின் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டோமே என்று இறுகிப்போய் இருந்தவரின் இறுக்கம் இன்றுதான் தளர்ந்தது! மகளின் நினைவுகள் அவரை ஆக்கிரமித்தது. கூடுதலாகப் பேரக்குழந்தையின் நினைவுகளும் சேர்ந்துகொண்டது.

முன்னரும் அவளின் நினைவுகள் எழும் தான். ஆனாலும் ஒரு தவம்போல் அதை அடக்கிவிடுவார். தன் கடமையை நிறைவேற்றிவிட்ட இன்றோ எப்போதும்போல் அந்த நினைவுகளை அடக்கவும் முடியவில்லை. அதை அவர் விரும்பவுமில்லை.

மாறாக, எப்படி இருக்கிறாளோ? சமையல் கூடத் தெரியாதே.. அவள் கணவன் அவளை நன்றாக வைத்திருப்பானா? குழந்தை யாரைப்போல இருக்கும்? என்று எண்ணங்கள் சுற்றிச் சுழன்றன.

மகளைப் பார்க்கவேண்டும் போல்.. ஏனடி இப்படிச் செய்தாய் என்று கேட்கவேண்டும் போல்.. அவளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்கவேண்டும் போல்.. அவரின் பேரக்குழந்தையைக் கையில் தூக்கி நெஞ்சில் சாய்த்துக் கொஞ்சவேண்டும் போல்.. இப்படிப் பலவித உணர்வுகள் அவரைத் தாக்கியபோதும் எதையும் வெளியில் காட்டமுடியாமல் புன்னகை முகமாகவே நின்றிருந்தார் மகேஸ்வரி.


மாலைப் பொழுது மங்கி இரவு பொழுது நெருங்கியிருக்க, மெல்லிசையாய் காற்றுச் சாளரம் வழியே அந்த அறைக்குள் வீச, தாயின் கையைப் பற்றியபடி அமர்ந்திருந்தாள் இலக்கியா.

விழியோரங்களில் கண்ணீரின் கோடுகள் தெரிய, முகம் கலக்கத்தில் இருக்க, இதழ்களோ விட்டால் அழுதுவிடுவேன் என்று நடுங்கிக் கொண்டிருந்தன.

“இதே ஊரில் தானே இருக்கப் போகிறோம் லக்கி. நீ நினைத்தால் பத்து நிமிடத்தில் அங்கே வரலாம். நாங்கள் நினைத்தால் இங்கே வரப்போகிறோம். பிறகும் ஏன் இப்படிக் கலங்குகிறாய்.”

அதுநாள் வரை பிரிந்திராத மகளைப் பிரியப் போகிறோமே என்று உள்ளம் கிடந்து அழுதாலும், அவளின் மனப்போராட்டத்தை, பயத்தை எண்ணி உள்ளுக்குள் கலங்கினாலும் வெளியே மகளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்துச் சொன்னார் சந்திரா. அவரது ஒரு கை மகளின் தலையை ஆதுரத்துடன் தடவி கொடுத்தது.

அந்த வீட்டை நினைத்து, வீட்டு மனிதர்களை நினைத்து, அதுவரை அவளுக்குப் பழக்கமேயிராத வசதியான வாழ்க்கையை நினைத்து, அன்றுமுதல் கணவனாகி விட்டவனுடான உறவை நினைத்து என்று, பலதை எண்ணிக் கலங்கியவள், “பயம்மா இருக்கும்மா.” என்றாள் குரல் நடுங்க.

கண்ணோரம் கண்ணீர்த் துளிகள் இரண்டு கசிந்தன.

நெஞ்சுக்குள் பிசைந்தபோதும், “அசடு! என்ன பயம்? எதற்குப் பயம்? இங்கே இருப்பவர்கள் உன் கணவனும் அவரின் வீட்டு ஆட்களும். அவர்கள் உன் சொந்தம் கண்ணம்மா. உன் மகி மிஸ் வேறு இருக்கிறார். உன் மாமியாரும் நல்ல மாதிரித்தான் தெரிகிறார். பிறகு எதற்குப் பயப்படுகிறாய்?” என்று அன்னை கேட்டபோது, என் கழுத்தில் தாலியைக் கட்டியவனை நினைத்துத்தான் அஞ்சுகிறேன் என்று சொல்ல முடியவில்லை அவளால்.

அப்போதும் வாய் திறவாது, பயம் விலகாத முகத்தோடு தலையைக் குனிந்திருந்தவளின் முகத்தை நிமிர்த்தினார் அன்னை.

“உன்னைப் போலத்தானே ராகினியும் ஆரணியும் இந்த வீட்டுக்கு மருமகள்களாக வந்தவர்கள். அவர்கள் சந்தோசமாக இல்லையா. கொஞ்ச நாட்கள் போனால் எல்லாம் சரியாகிவிடும். பிறகு நான் வரச் சொன்னாலும் நீ அங்கே வரமாட்டாய் பார்..” என்றார் புன்னகையோடு.

அதற்கும் ஒன்றும் சொல்லாது தாயின் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டாள் இலக்கியா. அவரும் அதற்கு மேல் ஒன்றும் பேசாது அவளின் தலையைத் தடவிக்கொடுக்கும் வேலையைத் தொடர்ந்தார்.

மனமோ, ‘கடவுளே என் மகளுக்கு நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கையைக் கொடு. இதுநாள் வரை அவள் பட்ட கஷ்டங்களே போதும்..’ என்று இறைவனிடம் வேண்டியது.

அப்போது, “அம்மாவும் மகளும் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டுக்கொண்டு அங்கே வந்தார் மஞ்சுளா.

அவரைக் கண்டதும் மரியாதையின் நிமித்தம் இலக்கியா எழுந்துகொள்ள, அவளைத் தொடர்ந்து சந்திராவும் எழுந்துகொண்டார்.

லக்கியின் முகத்தில் இருந்த சோர்வைக் கண்டுவிட்டு, “ஏன் லக்கி சோர்ந்து தெரிகிறாய். காலையில் நேரத்துக்கே எழுந்ததில் தலை ஏதும் வலிக்கிறதா? ஏதாவது குடிக்கப் போகிறாயா?” என்று அக்கறையோடு கேட்டார் அவர்.

“ஒன்றும் வேண்டாம் ஆன்ட்டி..” என்றாள் இலக்கியா மெல்லிய குரலில்.

“ஆன்ட்டி இல்லை. அழகாக மாமி என்று கூப்பிடு.” என்றார் அவர் அன்போடு அவளின் கன்னம் தடவி.

மஞ்சுளாவின் அனுசரணையான பேச்சைப் பார்த்த சந்திராவுக்கு மனதுக்கு நிம்மதியாக இருந்தது.

“நாங்கள் அவளை இங்கே விட்டுவிட்டுப் போகப்போகிறோம் என்று கொஞ்சம் பயப்படுகிறாள். அதுதான்..” என்றார் அவர்.

அதுவரை நேரமும் திடமான குரலில் மகளுக்குப் புத்திமதிகளைச் சொன்ன அந்தத் தாயின் குரலும் இப்போது தடுமாறியது.

“ஆரம்பத்துக்கு அப்படித்தானே இருக்கும் சம்மந்தியம்மா. போகப்போக எல்லாம் சரியாகிவிடும். உங்களுக்குத் தெரியாததா, அதனால் கவலைப்படாதீர்கள்.” என்று சந்திரா அம்மையாரின் மனநிலையை ஊகித்துச் சொன்னவர்,

“இங்கே பார் லக்கிம்மா. நானும் இந்த வீட்டுக்கு ஒருகாலத்தில் புது மருமகளாக வந்தவள் தான். இப்போது எல்லோரையும் அதட்டி உருட்டவில்லையா? அதை மாதிரி நீயும் தைரியமாக இருக்கவேண்டும். ஒன்றுக்கும் பயப்படக்கூடாது! சரியா? இந்த மஞ்சுளாவின் மருமகளுக்குப் பயமா? சேச்சே..!” என்றார் லக்கியிடம்.

“சரி, வாருங்கள். அங்கே எல்லாம் தயாராகிவிட்டது.” என்று அவர்களை அழைத்துச் சென்றார்.
 

Vishakini

Moderator
Staff member
அங்கே சுவாமி அறையில் விளக்கேற்றி, பெரியவர்களின் கால்களில் பணிந்து, பெற்றவர்களிடம் கண்ணீரோடு விடைபெற்று, நடுங்கும் கரங்களால் தம்பிகளின் கரங்களைப் பற்றி, “அம்மாவையும் அப்பாவையும் நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்டா.” என்றாள் தழுதழுத்த குரலில்.

“நீ கவலைப்படாதே அக்கா. நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன்.” என்றான் மூத்த தம்பி சுதன்.

பதினைந்து வயதேயான பாலனுக்கு, அதுநாள் வரை நல்ல தோழியாக, நல்லதொரு ஆசானாக இருந்து வழிகாட்டிய அக்கா அவனை விட்டுவிட்டு ஏதோ அடுத்தக் கண்டத்துக்கே போவது போன்றதொரு மாயையைக்கொடுக்க, அவன் விழிகளிலும் கண்ணீர்.

அதைப் பார்த்துவிட்டு அவள் உதடுகள் அழுகையில் துடிக்கத் தொடங்கவும் தம்பியைத் தன்னருகில் இழுத்து ஒருகையால் அணைத்துக்கொண்ட சுதன், “அவனையும் நான் பார்த்துக்கொள்வேன் அக்கா!” என்றான் திடமான குரலில்.

எல்லோரிடமும் விடைபெற்று ஒருவழியாகச் சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தாள் இலக்கியா.

ஆமாம்! அவளுக்கு அப்படித்தான் இருந்தது. அந்த அழகிய பெரிய மாளிகை பிரமிப்பை தருவதற்குப் பதிலாக ஒருவிதத் திகிலை கொடுத்தது என்றால் தர்சனின் அறை என்னவோ அவளை வேட்டையாடக் காத்திருக்கும் சிங்கத்தின் சிறையாகத்தான் தோன்றியது.

உள்ளே நகரவே மறுத்து நடுங்கிய கால்களை எடுத்து வைக்க முடியாமல் அவள் நிற்க, “உள்ளே போ லக்கி..” என்று அனுப்பி வைத்தனர் பெண்கள் எல்லோரும்.

அவள் சென்றதும் அவர்களாகவே அந்தக் கதவைச் சாத்திவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.

சாத்தப்பட்ட கதவின் ஓசையில் நெஞ்சுக்குள் திகில் பரவ, அதற்குமேலும் நடக்கும் தெம்பின்றித் தலையைக் குனிந்தபடி அப்படியே நின்றாள் இலக்கியா.

ஒருசில கணங்கள் அப்படியே கடக்க, அந்த அறைக்குள் இன்னொருவர் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லாததில் அவள் மெல்லத் தலையை நிமிர்த்த, அதேநேரம் இன்னொரு கதவின் வழியாகத் தர்சன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

மிரண்டு விழித்தவளின் விழிகளில் அவனைக் கண்டதும் மெல்ல மெல்லப் பயம் குடிகொண்டது. இப்படியே திரும்பி வெளியே ஓடிவிட்டால் என்ன என்று கூட நினைத்தாள்.

அவனோ தன் கூரிய விழிகளால் அவள் விழிகளைத் துளைத்துக்கொண்டே சென்று கதவின் தாழைப் போட்டுவிட்டு வந்தான்.

அதைக் கண்ணுற்றவளுக்குக் கைகள் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது.

நின்ற இடத்திலேயே வேரோடிப்போய் நின்றவளை நெருங்கி, அவளின் கையை அவன் பற்றியபோது, அனிச்சை செயலாக அவனிடமிருந்து கையை உருவ முயன்றுகொண்டே, “இப்போ வே.. வே..ண்டா..மே..” என்றவளின் வாயிலிருந்து சத்தமே வரவில்லை. தொண்டை உலர்ந்து உதடுகள் காய்ந்து போனது.

என்றாலும் அவளின் உதட்டசைவை வைத்துக் கணித்தவன், “அதது நடக்கவேண்டிய நேரத்தில் நடந்தே ஆகவேண்டும்!” என்றான் அழுத்தமான குரலில்.

இதயம் பயத்தில் எம்பிக் குதித்து நெஞ்சுக்குழியை அடைத்ததில் மூச்சற்றுப் போனவளுக்குப் பேச்சும் அற்றுப் போகவே, பயத்தில் படபடத்த விழிகள் மட்டும் கண்ணீரைக் கொட்டின.

“நட!” என்றான் அவன் அவளின் நிலையால் சற்றும் பாதிப்படையாமல்.

“ஆங்..” அவன் சொன்னதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியாமல், திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டவளாய் அவனைப் பார்த்துப் பேந்தப் பேந்த விழித்தாள் மனையாள்.

அதற்கு மேலும் பொறுமை அற்றவனாய், “வா!” என்று அதிகாரமாக அழைத்தவன், அவளைப் பற்றி வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு கட்டிலுக்கு நடந்தான்.


விடிகாலை வரை விழித்தே கிடந்தாள் இலக்கியா. விழிகள் அமைதியாகக் கண்ணீரை உகுக்க மனம் மட்டும் கடலுக்குள் நடக்கும் எரிமலை வெடிப்பாய் குமுறிக் குமுறி அழுதது.

கடைசியில் இரண்டாம் தாரமாகவே ஆகிப்போனோமே.. தரம் இறங்கிப் போனோமே என்று தவித்தது அவள் மனம்!

மாசு மறுவற்ற நேசத்தையும் காதலையும் சுமந்து, அவளை மட்டுமே நேசிக்கும் கணவனுக்குப் பரிசளிக்கவென்று அவள் பொத்திப் பொத்திப் பாதுகாத்த பெண்மையை, கஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்தவனின் கைகளில் பறிகொடுத்து விட்டாளே.

குடும்பத்துக்காக, கூடப் பிறந்தவர்களுக்காக அனைத்தையும் தாங்குவோம் என்று நினைத்து தாலியை வாங்கியவளுக்கு, கணவன் மனைவி உறவை பற்றித் தெரியாமல் அல்லதான். அதோடு, அதற்கும் ஒருவித இயந்திர கதியில் தயாராகத்தான் இருந்தாள்.

அது இவ்வளவு நரகமாக இருக்கும் என்று அவள் எண்ணியதில்லை. அதோடு, அவளின் மனம் மாறும் வரைக்கும் பொறுக்கமாட்டானா என்கிற நப்பாசையும் மனதின் ஒரு ஓரத்தில் இருந்ததே!

அந்த நப்பாசையை ஒரே நசுக்காக நசுக்கிவிட்டு, அனைத்தையும் நடத்தி முடித்துவிட்டானே!

அவளின் மனதைப் பற்றி யோசிக்காமல், மறுப்புகளை லட்சியம் செய்யாமல், கண்ணீரைக் கண்டுகொள்ளாமல் அரக்கனாக அல்லவோ நடந்துகொண்டான்!

இன்னொருத்தியை காதலித்தவன்.. அவளை இழக்க முடியாமல் யாரின் அனுமதியும் இன்றித் தாலியை கட்டி, அவளோடு வாழ்ந்தவன் இன்று இவளையும் தொட்டிருக்கிறான். அதுவும் வலுக்கட்டாயமாக!

வருங்காலக் கணவனிடம் கடலளவு நேசத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருந்தவளுக்கு இப்படி ஒரு கணவனா? நினைக்கவே நெஞ்சு வெடிக்கும் போல் வலித்தது.

இனி துடித்தோ, தவித்தோ, கண்ணீர் விட்டோ எந்தப் பிரயோசனமும் இல்லையே என்றெண்ணி, அதற்கும் அழுதாள்.

கீழ்வானம் மெல்ல மெல்ல சிவக்கத் தொடங்கவும் முற்றிலுமாக இருண்டுவிட்ட தன் வாழ்க்கையை எண்ணியவளின் விழிகளில் இருந்து இருசொட்டுக் கண்ணீர் உருண்டோட, சத்தம் எழுப்பாமல் கட்டிலில் இருந்து எழுந்துகொண்டாள் இலக்கியா.

இரவில் அவளை அணைத்தவனின் தேகத்தின் வாசனை இன்னும் தன்னில் வீசுவது போன்றிருக்கவே அருவருப்போடு குளியலறைக்குள் நுழைந்தவள், தலைக்குக் குளித்துவிட்டு வந்தாள்.

அப்போதும் அவன் விழிக்கவில்லை. இனி என்ன செய்வது?

அவன் மூச்சுக்காற்று உலாவும் அறையில் அவளுக்கு மூச்சு முட்டவே, முதல்நாள் இரவு அவன் நுழைந்த கதவருகில் சென்று பார்த்தாள்.

அது அந்த அறைக்கான பால்கனி. சத்தமின்றிக் கதவைத் திறந்துகொண்டு சென்றவள் அப்போதுதான் மூச்சை இழுத்துவிட்டாள்.

காற்று வெப்பம் இன்றிச் சலசலக்க, பறவைகளின் கீச்சிடல் இன்னிசை கீதம் பாட, இருள் விலகியும் விலகாத அந்தக் காலைப் பொழுது எப்போதுமே அவளுக்குப் பிடித்தமானது. இன்றோ அவளின் வாழ்க்கையோடு சேர்த்து அந்த வானமும் சூன்யம் ஆகிவிட்டது போன்று தோன்றியது.
 

Vishakini

Moderator
Staff member
அங்கே தோட்டத்தில் இருந்த ஒரு மாமரத்தின் கிளை அந்தப் பால்கனிக்குள் நீட்டிக்கொண்டு நின்றது. பறந்துவந்த குருவியொன்று அதில் சிறிதுநேரம் நின்று, அவளைப் பார்த்து கொண்டையைக் கொண்டையை ஆட்டிவிட்டு மீண்டும் கீச்சிட்டபடி பறந்து சென்றது.

ஏக்கத்தோடு அதையே தொடர்ந்தன அவள் விழிகள். அந்தக் குருவிக்கும்தான் பணமில்லை, வசதியில்லை, ஏன் தங்குவதற்கு ஆன வீடும் இல்லை. ஆனாலும் சுதந்திர வானில் எந்தத் தழைகளும் இன்றிச் சிறகடித்துப் பறக்கிறதே!

ஒரு பறவைக்குக் கிடைத்த அந்தக் கொடுப்பினை அவளுக்கு இல்லாமல் போய்விட்டதே!

அறைக்குள் தர்சன் எழுந்துகொண்ட சத்தம் கேட்கவும் இங்கே அவளுக்கு நடுக்கம் எடுத்தது. உள்ளே செல்லவும் முடியாமல் அங்கேயே நிற்கவும் முடியாமல் அவள் நிற்க, வெள்ளை பனியனும் சாரமும் அணிந்திருந்தவன் கலைந்த தலையும் சிவந்த விழிகளுமாக அங்கே வந்தான்.

தலைக்குக் குளித்து, நடு உச்சி பிரித்துக் கிளிப் மாட்டியிருந்தவளின் நெற்றியோரங்களில் கற்றைக் குழல்கள் இரண்டு புரண்டு காற்றில் அசைந்தாடின. நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் தீட்டியிருந்தவளை அவன் விழிகள் ஆராய முற்பட, பதட்டத்தோடு தலையைக் குனிந்துகொண்டாள் இலக்கியா.

“டீ கொண்டுவா!” என்றான் அதிகாரமாக.

அந்தக் குரலிலேயே மனம் நடுங்க ஒருகணம் தயங்கியவள், பின் நடக்கத் தொடங்க, “அப்படியே பேப்பரும்.” என்றான் அவன்.

அறையிலிருந்து வெளியே வந்தவளுக்கு எதை யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை. தயங்கியபடி படியிறங்கினாள்.

அவளைக் கண்ட மஞ்சுளா, “வாவா லக்கி. டீ தரவா? குடிக்கிறாயா?” என்று சந்தோசமாக வரவேற்றார். அவரின் விழிகள் மருமகளை ஒருவித எதிர்பார்ப்புடன் ஆராயத் தவறவில்லை.

அவரின் பார்வை அவளைக் குறுகுறுக்க வைக்கத் தலையைக் குனிந்துகொண்டவள், “அ..அவருக்கு..” என்று இழுத்தாள்.

“ஓ.. அவனும் எழுந்துவிட்டானா?” என்று கேட்டவர், இரண்டு கப்புக்களில் டீயை வார்த்து ஒரு தட்டில் அதை வைத்தார்.

“நீயும் அவனோடு சேர்ந்து குடி. அவன் டீயோடு பேப்பரும் படிப்பான்.” என்று, மகனின் பழக்கத்தை மருமகளுக்குச் சொல்லிக்கொடுத்தபடி தட்டையும் பேப்பரையும் அவளிடம் நீட்டினார்.

ஒரு தலையசைப்போடு அதை வாங்கிக்கொண்டு அவள் மேலே சென்றபோது, பால்கனியில் அமர்ந்திருந்தான் தர்சன். முகம் கழுவியிருக்கிறான் என்பதற்கு அடையாளமாக ஒருபக்கத் தோளில் பூந்துவாலை தொங்கிக் கொண்டிருந்தது.

அவள் தட்டையும் பேப்பரையும் சற்றே குனிந்து நீட்டவும், துவாலையை எடுத்து அவள் தோளில் போட்டுவிட்டு தன்னுடைய கப்பையும் பேப்பரையும் எடுத்துக் கொண்டான்.

ஒருவித இயந்திரத் தன்மையோடு குளியலறைக்குச் சென்று அதன் தாங்கியில் துவாலையைப் போட்டுவிட்டு, தன்னுடைய டீக்கப்போடு அறையில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டவளுக்கு, தாலி கட்டியவன் முதற்கொண்டு அந்த வீடுவரை அந்நியமாகத் தெரிய அம்மா அப்பாவைப் பார்க்கவேண்டும் போலிருந்தது.

வசதிகள் ஏதுமற்ற அவர்களின் வீட்டுக்கும், ஒற்றைப்பாய் படுக்கைக்கும் மனம் ஏங்கியது.

அப்பாவின் வேலைகளைக் கவனித்துவிட்டு அம்மா தோட்டத்துக்குப் போயிருப்பார். சுதன் படிக்கவேண்டும் என்று காலையிலேயே எழுந்திருப்பான். பாலன் என்ன செய்கிறானோ தெரியவில்லை. அவனை எப்போதுமே அவள்தான் எழுப்புவாள்.. இனி? என்று அவள் மனம் அவர்களின் வீட்டையே சுற்றிக் கொண்டிருக்க, குளித்து உடைமாற்றித் தயாராகி வந்த கணவனைக் கண்டுவிட்டுப் பதறியடித்துக்கொண்டு எழுந்தாள்.

பால்கனியில் இருந்து அறைக்குள் வந்து, குளித்து, அவன் உடைமாற்றும் வரைக்கும் அவள் உணரவில்லையே!

திட்டப்போகிறானோ என்கிற பயத்தோடு அவள் அவனைப் பார்க்க, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியே நடந்தான் தர்சன்.

அந்தப் பார்வைக்கே அஞ்சி அவனைப் பின்தொடர்ந்தாள் இலக்கியா.

கீழே வந்த மகனையும் மருமகளையும் மற்றவர்களோடு சுவாமியறைக்கு அழைத்துச் சென்ற மஞ்சுளா, இலக்கியாவின் கையால் விளக்கை ஏற்றச் சொன்னார்.

விளக்கேற்றிக் கைகளைக் கூப்பிக் கண்களை மூடியவளுக்கு அழுகைதான் வந்தது. அந்த வீட்டிலிருந்த அனைவரும் சுற்றி நின்றதில் பெரும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.

மூன்று மகன்களையும் மருமக்கள் பேரக்குழந்தைகள் சகிதம் கண்ட மஞ்சுளாவின் மனமோ நிறைந்துபோனது. கலங்கிய விழிகளோடு ராஜசேகரைப் பார்க்க அவரும் நிறைந்த மனதோடு மனைவியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

மகேஸ்வரிக்கும் அண்ணன் குடும்பத்தைப் பார்க்க நிறைவாக இருந்த அதே வேளை, அந்த இடத்தில் மகள் இல்லாமல் போனாளே என்கிற வேதனையும் எழாமல் இல்லை.

காதலித்தவனை எல்லோரின் அனுமதியோடும் அவள் கைப்பற்றியிருக்க இதே இடத்தில் இப்போது அவளும் தன் குடும்பத்தோடு நின்றிருப்பாளே!

தன் வாழ்க்கையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு தனித்து நிற்கிறாளே என்று மருகியது அவர் நெஞ்சம்.

சுவாமி அறையிலிருந்து வெளியே வந்ததும், “சாப்பிடலாம் வாருங்கள்..” என்று வீட்டுத் தலைவியாக எல்லோரையும் அழைத்தார் மஞ்சுளா.

எல்லோரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்துகொள்ள, ராகினியும் ஆரணியும் பரிமாறத் தொடங்கினர்.

அங்கே என்ன செய்வது என்று தெரியாமல் தயங்கி நின்ற மனைவியிடம், “சாப்பாட்டைப் போடு!” என்றான் தர்சன். தயங்கினாலும் அவள் அவனுக்குப் பரிமாறத் தொடங்க மகேஸ்வரியும் மஞ்சுளாவும் ஒருவரை ஒருவர் அர்த்தத்தோடு பார்த்துக்கொண்டனர்.

நடப்பது நல்லதாகவே இருந்ததில் அவர்களின் மனம் நிறைந்தது. அப்போது அங்கே ஆட்டோவில் வந்திறங்கினர் இலக்கியா குடும்பத்தினர்.
 
Top Bottom