• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 23

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-23


தோட்டத்தில் உலவி கொண்டிருந்தான் தர்சன். விழிகளோ அவ்வப்போது வீட்டுக் கேட்டை எட்டியெட்டிப் பார்த்தது. இவ்வளவு நேரமாக என்ன செய்கிறாள் என்று மனைவிமீது சற்றுக் கோபம் கூட வந்தது அவனுக்கு.

வவுனியாவில் இருந்து கிளிநொச்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஒருமாதம் கழிந்திருந்தது. இந்த ஒருமாதமாக அவன் மனதில் என்னென்னவோ மாற்றங்கள், தடுமாற்றங்கள். அதையெல்லாம் அவனுக்குள் உருவாக்கியவள் அவன் மனைவி!

அவனைக் கண்டதும் “அத்தான்” என்று கொஞ்சும் அவளின் அருகாமையை விட்டு அவனால் சற்றும் விலகியிருக்க முடியவில்லை.

இப்படி இனி யாரின் மீதும் அளவுகடந்த நேசத்தை வைக்கவே கூடாது என்று தன்னைச் சுற்றி இரும்புக்கோட்டை ஒன்றை அவன் எழுப்பியிருக்க, அன்பு என்கிற ஆயுதம் கொண்டு அதனை உடைத்துக்கொண்டு அவனுக்குள் நுழைந்திருந்தாள் மனைவி.

அதுவும் சும்மாவல்ல, அவனின் நினைவுகள் முதல்கொண்டு கனவுகள் தொடங்கி உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் ஊடுருவி நிறைந்திருந்தாள். சிந்தனைகள் அனைத்திலும் அவளே வியாப்பித்து இருந்தாள்.

இன்றும் அவளைக் காணும் ஆவலில், வழமையாக வரும் நேரத்தைவிட முன்னராகவே வீட்டுக்கு வந்தவனுக்கு, லக்கி அண்ணிகளுடன் கோவிலுக்குச் சென்றுவிட்டாள் என்கிற செய்தியே கிடைத்தது.

ஏமாற்றத்துடன் கோபமும் சேர்ந்து வந்தது. அவள் இல்லாத வெறுமை நிறைந்த அறைக்குள் இருக்கப் பிடிக்காமல் தோட்டத்துக்கு வந்தவன் அவளுக்காகக் காத்திருந்தான்.

“இங்கே தனியாக நின்று என்ன செய்கிறாய் தர்சா?” என்று கேட்டபடி அங்கு வந்தார் மகேஸ்வரி.

அவரைத் திரும்பிப்பார்த்து புன்னகைத்த தர்சன், “சும்மாதான் அத்தை..” என்றான்.

“ஏதாவது குடித்தாயா?”

“இன்னும் இல்லை..” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே,

“இன்னுமா ஒன்றும் குடிக்கவில்லை நீ. பொறு நான் எடுத்துக்கொண்டு வருகிறேன்....” என்றபடி உள்ளே செல்லத் திரும்பினார் அவர்.

“இப்போது எதுவும் வேண்டாம் அத்தை. கோவிலுக்குப் போனவள் வரட்டும், பிறகு பார்த்துக் கொள்கிறேன்.” என்று தடுத்தான் தர்சன்.

அதைக் கேட்டவரின் மனம் நிறைந்தது. திருமணமே வேண்டாம் என்று ஒற்றைக்காலில் நின்றவன் இன்று மாலைத்தேநீர் அருந்துவதற்குக் கூட மனைவிக்காகக் காத்திருக்கிறான்.

வவுனியாவில் இருந்து வரும்போது அவர்களின் முகங்களில் இருந்த மகிழ்ச்சியே இருவரும் மனதாலும் நெருங்கிவிட்டதை அவருக்கு உணர்த்தியது. அது மட்டுமல்லாமல், அதுநாள் வரை தர்சனின் அருகிலேயே வருவதற்குப் பயந்துகொண்டு, கடமைக்காகவும் கட்டாயத்துக்காகவும் அவனுக்கு வேண்டியவற்றைச் செய்த இலக்கியா இப்போது அவனுக்காக அனைத்தையும் ஓடியோடி ஆவலுடனும் விருப்பத்துடனும் செய்வதையும், அவனது முன்கோபத்தைப் பொறுத்துப் போவது மட்டுமல்லாமல் மலர்ந்த முகத்துடனேயே வளைய வருவதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.

அதோடு, தர்சனின் விழிகள் மனைவியைத் தொடர்வதையும், அவனது பார்வையில் அவள் வெட்கிச் சிவப்பதையும், நேரத்தோடு வேலை முடிந்து வருபவன் அவளோடு பெரும்பாலான நேரத்தை செலவளிப்பதையும் பார்த்தவருக்குப் பெருத்த நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகியிருந்தது.

அதோடு, அவர் தர்சனோடு பேச நினைத்த விசயத்துக்கு இவை அனைத்தும் நல்ல சகுனங்களாகவே தோன்ற, “இப்போது வந்துவிடுவாள் லக்கி.” என்றார் அவர்.

“ம்ம்..” என்று அவன் கேட்டுக்கொள்ள, “நல்ல பெண் இல்லையா தர்சா அவள்?” என்று கேட்டார் அவர்.

மனைவியின் நினைவில் அவன் உதடுகள் புன்னகையைச் சிந்த, “ம்.. ஆமாம்!” என்றான் மனக்கண்ணால் அவளை ரசித்தபடி.

“இப்படி உன்னைப் பார்க்க எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது கண்ணா. இந்த வெண்பா செய்த வேலையால் உன் வாழ்க்கை பட்டுப் போய்விடுமோ என்று பயந்தே போனேன்.” என்றார் அவர்.

மனைவியுடன் நெருங்கிவிட்டவனுக்கு இனி தன் மகளைப் பற்றிய பேச்சுத் தாக்கத்தைக் கொடுக்காது என்று எண்ணியவர் வெளிப்படையாகவே பேசினார்.

ஆனால், தர்சனின் முகமோ கறுத்துப்போனது. ஆழ்மனத்தின் ஆத்திரங்களும் கோபங்களும் மீண்டும் கிளப்பிவிடப்பட மனதின் கொதிப்பில் அவன் விழிகள் சிவந்தன. அதை அவருக்குக் காட்டப் பிடிக்காமல் அங்கிருந்த குரோட்டன்ஸ் செடிகளைப் பார்ப்பது போன்று முகத்தைத் திரும்பிக்கொண்டான்.

“லக்கியை பள்ளிக்கூடத்தில் பார்த்த அன்றே எனக்கு அவளைப் பிடித்துவிட்டது. உனக்கும் அவள்தான் மிகச் சரியான ஜோடி என்று தோன்றிவிட்டது. வெண்பாவும் உன்னை மாதிரி முன்கோபி. அவளுக்கும் உனக்கும் என்றைக்குமே பொருந்தி இருக்காது தர்சன். அப்படிப் பார்க்கையில் நடந்தது எல்லாம் நன்மைக்கே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.” என்றார் அவர்.

தர்சன் அதற்கு ஒன்றுமே சொல்லவில்லை. சொல்லும் நிலையிலும் அவன் இல்லை. அவரும் அவன் பதிலை எதிர்பார்க்கவில்லை போலும், தொடர்ந்து பேசினார்.

“இவ்வளவு நாளும் உன் வாழ்க்கையைக் கெடுத்தவளை நினைத்துப் பார்ப்பதே பாவம் என்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால் இப்போது, உனக்கும் ஒரு குடும்பம் அமைந்து மனைவியோடு நீ சந்தோசமாக இருப்பதைப் பார்த்த பிறகு என் மனம் மகளைத் தேடுகிறது கண்ணா. கடைசிக் காலத்தில் மகள், பேத்தி என்று இருக்க ஆசையாக இருக்கிறது. பெற்ற மனம் பித்துப் பிள்ளை மனம் கல்லு என்கிற மாதிரி அவள் தப்பே செய்துவிட்டுப் போனாலும் அவளிடம் போகவேண்டும், அவளைப் பார்க்கவேண்டும் என்றுதான் என் மனம் துடிக்கிறது. அம்மா வேண்டாம் என்று அவள் போய்விட்டாள். ஆனால் என்னால்? அப்படி இருக்க முடியவில்லை.” என்றவரின் விழிகள் கலங்கின.

“அங்கே எப்படி இருக்கிறாளோ தெரியாது. அவளின் புருஷன் எப்படி? புருஷன் வீட்டினர் எப்படி என்றும் தெரியாது. ஒருதடவை அவளைப்போய்ப் பார்த்தால் நிம்மதியாக இருக்கும்.” என்றவர்,

“நான் அவளைப் போய்ப் பார்த்துவிட்டு வரட்டுமா தர்சா?” என்று தயக்கத்துடன் கேட்டார்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்ற தர்சனின் மனமோ கொதிக்கத் தொடங்கியது. நடந்தவைகள் அனைத்தும் திரைப்படமாக அவனது மனதில் ஓடத்தொடங்க அவன் தேகம் விறைக்க ஆரம்பித்தது.

ஆத்திரம்! ஆவேசம்! ஆங்காரம் என்று அவன் மனது வெடித்துச் சிதறக் காத்திருக்கும் எரிமலையின் நிலையில் இருந்தது.

அதை அறியாத மகேஸ்வரியோ, “தர்சன்? நான் போகட்டுமா? உனக்கு ஒன்றும் அத்தைமேல் கோபம் இல்லையே? என்ன இருந்தாலும் அவளைப் பெற்ற தாய் இல்லையா நான்? அதோடு எனக்கு என்று ஒரு பேத்தியும் இருக்கிறாள். அவளையும் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது கண்ணா..” என்றார் குரல் தழுதழுக்க.

விழிகளை இறுக மூடித்திறந்தான் தர்சன். தன்னுடைய ஆத்திரம், கொதிப்பு, ஆவேசம் அனைத்தையும் அடக்கிக்கொண்டு அவர் புறமாகத் திரும்பினான்.

“அத்தை, அவள் உங்கள் மகள். அவளைப் பார்ப்பதற்கு எதற்கு என்னிடம் அனுமதி கேட்கிறீர்கள்? அதைவிட, எனக்கு என்ன குறை? என் மேல் உயிரையே வைத்திருக்கும் அழகான மனைவி. அவளுடனான மனமொத்த வாழ்க்கை என்று நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன். இனி குழந்தை குட்டி என்று என் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே போகும். தேவை இல்லாத குப்பைகளை நான் நினைப்பது கூட இல்லை. அதனால் என்னைப்பற்றி நீங்கள் யோசிக்கவே தேவையில்லை.”

வாழ்க்கையில் அவளால் பட்ட அடிகளையும் ரணங்களையும் அவன் மனம் இன்னும் மறக்காதபோதும், இனிமேல் உனக்குக் கல்யாணமே ஆகாது, நீ என்றுமே பிரம்மச்சாரிதான் என்று கொக்கரித்துவிட்டுப் போனவளிடம், நீ இல்லாமல் நான் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, வாழ்க்கையை இழந்து விடவில்லை என்று காட்டும் வேகம் எழுந்தது. நீ சொன்னது ஒன்றும் இங்கே நடந்துவிடவில்லை என்று காட்டி, அவள் முகத்தில் கரியை பூசவேண்டும் என்கிற ஆவேசத்தில் மகேஸ்வரியின் விழிகளை நேராகப் பார்த்தே சொன்னான் தர்சன்.

“அதோடு, உங்களுக்கு என்ன செய்ய விருப்பமோ அதை நீங்கள் தாராளமாகச் செய்யலாம். அதற்கு நானோ, அப்பாவோ, யாருமே ஒன்றும் சொல்லமாட்டோம்.” என்றான் தொடர்ந்து, அழுத்தமான குரலில்.

அதைக்கேட்ட மகேஸ்வரிக்கு விழிகள் கலங்கிவிட்டது. “என் அண்ணனும், அண்ணன் மக்களும் பெருந்தன்மை மிக்கவர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அண்ணாவிடம் கேட்டபோது அவரும் இதையேதான் சொன்னார். நீயும் அப்படியே சொல்கிறாய். எனக்கு இது மட்டும் போதும் தர்சா. பள்ளிக்கூடத்தில் வருகிற புதனில் இருந்து ஒருமாத விடுமுறை எடுத்து இருக்கிறேன். கொஞ்ச நாட்கள் என் பேரக்குழந்தையுடன் கழித்துவிட்டு வரப்போகிறேன்.” என்று நெகிழ்ச்சியுடன் ஆரம்பித்து மகிழ்ச்சியோடு சொன்னார் அவர்.

தலையசைத்து அதைக் கேட்டுக்கொண்டவன், “சரி அத்தை. நான் உள்ளே போகிறேன். கொஞ்சம் வேலை இருக்கிறது.” என்றுவிட்டு, அங்கிருந்து வேகமாக அகன்றான்.

அறைக்குள் சென்றவனோ கதவை அறைந்து சாத்திவிட்டு, மனைவி கண்ணாடி முன் அமர்ந்திருந்து தலை வாருவதற்காகப் போடப்பட்டிருந்த மோடாவை எட்டி உதைத்தான். அப்போதும் ஆத்திரம் அடங்க மறுத்தது. அதுவரை நேரமும் மகேஸ்வரியிடம் தன்னை வெளிப்படுத்தி விடக்கூடாது என்று தன்னைத்தானே அடக்கிக்கொண்டு நின்றவனின் முகமோ இப்போது பயங்கரமாக மாறியது. ஆவேசம் கொண்ட மனதோடு சீண்டி விடப்பட்ட கூண்டுப் புலியென உறுமிக் கொண்டிருந்தான்.

அவளை அவன் முதன் முதலாகப் பார்த்தது, மயங்கியது, அதிரடியாக அவளின் கழுத்தில் தாலியைக் கட்டியது, அவளின் மனமாற்றத்துக்காகக் காத்திருந்தது, அவனை ஏமாற்றிவிட்டு, நீ ஆண்மகனே இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டு, தாலியையும் கழட்டி எறிந்துவிட்டு இன்னொருவனிடம் அவள் ஓடியது என்று.. அத்தனை நினைவுகளும் அவனை நெருக்கி நெருக்கி நெருப்பில் தள்ளியதில் உன்மத்த நிலைக்குச் சென்றுகொண்டிருந்தான் தர்சன்.

அன்று அவன் பட்ட அவமானம் இன்றும் அதேயளவு வேகத்துடன் அவனைத் தாக்கியதில் நிலைகுலைந்து, நிலையிழந்து மிருகமாய் மாறி அவன் உறுமிக்கொண்டு இருக்கையில் அறைக்குள் நுழைந்தாள் இலக்கியா.

அவளைக் கண்டதும் அனைத்து ஆத்திரங்களும் அவள் மீது பாய, “எங்கே போய் ஊர் சுற்றிவிட்டு வருகிறாய்?” என்று உறுமினான் தர்சன்.

“என்னது? ஊர் சுற்றப் போனேனா? போங்கத்தான்!” என்று அதைச் சாதரணமாக எடுத்தவள், “இன்று ஏன் நேரத்துக்கே வீட்டுக்கு வந்துவிட்டீர்கள்? என்னிடம் சொல்லியிருக்க நான் வீட்டிலேயே நின்று இருப்பேனே..” என்று கேட்டபடி அவனை நெருங்கினாள்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
“வீட்டிலேயே நின்று நல்லவளுக்கு வேஷம் போடவா?”

“வேஷம் போடுவதா? என்ன சொல்கிறீர்கள்? இந்தாருங்கள் கோவில் பிரசாதம்..” என்றபடி, அவன் நெற்றியில் திருநீறை பூசுவதற்காகக் கையை அவன் முகத்தருகே அவள் கொண்டுசென்றபோது, அதை வேகமாகத் தட்டிவிட்டான் தர்சன்.

“என்னத்தான்?” மெல்லிய அதிர்ச்சியோடு லக்கி அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“கேட்ட கேள்விக்குப் பதிலை சொல்லாமல் என்ன நொன்னத்தான்?” என்று சுள்ளென்று பாய்ந்தான் தர்சன்.

அப்போதுதான் கணவனின் குரலில் இருக்கும் பேதத்தை உணர்ந்து, “கோவிலுக்குப் போனோம்...” என்றவள் குழப்பத்தோடு அவனைப் பார்த்தாள்.

“அதைக் கட்டிய புருஷன் என்னிடம் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லையா உனக்கு?”

“என்ன நீங்கள்? எல்லாவற்றையும் உங்களிடம் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா?” என்று அவள் சொல்லி முடிக்க முதலே,

“அப்படி எத்தனையை என்னிடம் மறைத்தாய்?” என்று பாய்ந்து வந்தது கேள்வி.

இப்போது கணவனின் விழிகளையே நேராகப்பார்த்தாள் இலக்கியா. “எதற்காக நான் உங்களிடம் எதையும் மறைக்கவேண்டும்?”

“அது உனக்குத்தான் தெரியவேண்டும்.” என்றான் அவன் குத்தலாக.

“அத்தான், பேசுவதை யோசித்துப் பேசுங்கள்!”

“இல்லாவிட்டால் என்ன செய்வாயாம்? இதுதான் சாக்கு என்று எவனையும் இழுத்துக்கொண்டு ஓடப்போகிறாயா?” என்று அவன் கேட்டு முடிக்க முதலே,

“அத்தான்!!” என்று காதுகளைப் பொத்திக்கொண்டு கூவினாள் இலக்கியா.

பேசுவது அவள் கணவன்தானா என்று நம்பமுடியாமல் பார்த்தாள்.

“ஏன் இப்படி எல்லாம் அசிங்கமாகப் பேசுகிறீர்கள்? நான் அப்படிப்பட்டவளா? என்னை உங்களுக்குத் தெரியாதா? கட்டிய மனைவியிடம் இப்படியெல்லாம் சொல்லலாமா?” என்றாள் அழுகையும் ஆற்றாமையுமாக.

“எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்?” என்றான் அவன்.

விக்கித்துப்போய்க் கணவனைப் பார்த்தாள் இலக்கியா. நெஞ்சில் எவ்வளவோ வேதனைகள் இருந்தாலும், அதையெல்லாம் அவன் மேல் வைத்துவிட்ட நேசத்தினால் மறைத்துக்கொண்டு அவனோடு இரண்டறக் கலந்து இன்புற வாழ்ந்தாளே, அப்படியானவளைப் பார்த்து என்ன பேச்சுப் பேசுகிறான் இவன்? இவ்வளவு நாள் இல்லற வாழ்க்கையில் அவன் அவளைப் புரிந்துகொள்ளவே இல்லையா? அவள் யாருடனும் ஓடிவிடுவாள் என்கிற பயத்துடன்தான் அவளோடு குடும்பம் நடத்தினானா? சீ!
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
“என்மேல் இவ்வளவு சந்தேகப் படுகிறவர் எதற்காக என்னைக் கட்டிக்கொண்டீர்கள்? எதற்கு என்னோடு இவ்வளவு நாளும் குடும்பம் நடத்தினீர்கள்? திருமணம் என்கிற பெயரில் எதற்கு என்னைப்போட்டு இந்தப் பாடு படுத்துகிறீர்கள்?” என்று குமுறினாள் அவள்.

மனைவியின் வேதனையை உணரும் நிலையில் இல்லை அவன். பட்ட காயங்கள் மீண்டும் கீறிவிடப் பட்டதில், அது உண்டாக்கிய கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினான்.

“ஓ! என்னுடன் வாழ்வது உனக்குஅவ்வளவு கஷ்டமாகவா இருக்கிறது? அதுசரி! என்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னவள் தானே நீ. பிடிக்காதவனுடன் வாழும் வாழ்க்கை கஷ்டமாகத்தான் இருக்கும். அதுதான் கோவிலுக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு கண்டவனோடும் ஊரையே சுற்றி வருகிறாய் போல.”

அதுவரை அவளைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறானே என்கிற கவலை போய் ஆத்திரம் வந்தது அவளுக்கு.

“உங்கள் அண்ணியோடுதான் கோவிலுக்குப் போனேன். அப்போ அவரும் கண்டவனோடு ஊரை சுற்றுகிறார் என்று சொல்கிறீர்களா?” என்று அவள் கேட்டு முடிக்க முதலே,

“ஏய்! அண்ணியைப் பற்றி ஏதாவது சொன்னாய் என்றால் அடித்துப் பல்லைக் கழட்டிவிடுவேன்! அவரின் கால் தூசு வரமாட்டாய் நீ!” என்று சுட்டுவிரலை நீட்டி உறுமினான் அவன்.

அதைக்கேட்டு பேச்சிழந்து நின்றாள் இலக்கியா. எவ்வளவு கேவலமாகப் பேசுகிறான்! அவன் பேச்சு அவளின் உயிரின் ஆழம்வரை சென்று தாக்கியது. கட்டிய புருஷன், அவளின் மானம் மரியாதையைக் காக்கவேண்டியவனே இன்னொரு பெண்ணோடு அவளை ஒப்பிட்டுக் தாழ்த்திப் பேசியதில் அவளது சுயமரியாதை முற்றிலுமாக அடிபட்டது.

கட்டிய மனைவி என்னைவிட அண்ணி அவ்வளவு முக்கியமா? அவமானக் கன்றலில் சிவந்துபோனது அவள் முகம்.

ஓருயிர் ஈருடலாய் அவனோடு வாழ்வதாக எண்ணிப் பூரித்து இருந்தாளே.. அந்தச் சந்தோசத்துக்குக் கிடைத்த பரிசு இதுதானா? அவன் அண்ணியைப் பற்றி ஒன்று சொல்லமுதல் இவ்வளவு கோபப்படுகிறவன் அவளைப் பற்றி மட்டும் கேவலமாகப் பேசலாமா?

ராகினியை விட அவள் எதில் குறைந்து போனாளாம்?

விரிந்த விழிகளால் கணவனை வெறித்தாள் இலக்கியா. அவனோ கல்லாய் இறுகிய முகத்தோடு கற்கால மனிதனாய்.. இல்லையில்லை மிருகமாய் அவள் முன் நின்றான்.

பழைய தர்சனை, அவள் திருமணமாகி இந்த வீட்டுக்கு வந்தபோது பார்த்த தர்சனை, வார்த்தைகளை விசமென வீசி அவளின் நெஞ்சை ஒடிக்கும் தர்சனை மீண்டும் பார்ப்பது போலிருந்தது இலக்கியாவுக்கு.

அதற்குக் காரணம் என்ன? அவள் அறியாள்!

ஆனாலும், நேர்கொண்ட பார்வையால் கணவனை நோக்கினாள். “கண்டவனுடனும் ஊர் சுற்றும் பழக்கம் எனக்குக் கிடையாது. அப்படி என் அம்மா அப்பா என்னை வளர்க்கவும் இல்லை!” என்று கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி சொன்னவள், அறையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

நெஞ்சமோ புண்ணாகிப் போயிருந்தது. யாரின் முகத்தையும் பார்க்கப் பிடிக்காமல் தோட்டத்துக்குள் செல்ல எத்தனித்தவளை மஞ்சுளா இடைமறித்தார்.

“தர்சன் இன்னும் ஒன்றும் குடிக்கவில்லை லக்கி. இந்தா, இதைக்கொண்டுபோய் அவனுக்குக் கொடு..” என்றபடி, சிற்றுண்டியையும் காபியையும் அவர் நீட்டியபோது, மறுக்கமுடியாமல் அவற்றை எடுத்துக்கொண்டு மனம் கனக்க மீண்டும் அறைக்கே சென்றாள் இலக்கியா.

அவனது முகம் பாராமல் அவற்றை அங்கிருந்த மோடாவில் வைத்துவிட்டு, மீண்டும் வெளியே செல்ல எண்ணி அவள் ஓரடி எடுத்து வைக்க முதலே, ‘படார்’ என்கிற சத்தத்தோடு அவளது காலடியிலேயே வந்து விழுந்து சிதறியது டீ கப்பும் தட்டும்.

திடுக்கிட்டுத் திரும்பியவள், அச்சத்தில் விரிந்த விழிகளால் அவனைப் பார்த்தாள்.

“வேண்டா வெறுப்பாக நீ கொண்டுவந்து வைத்துவிட்டுப் போக என்னை என்ன வேண்டாத விருந்தாளி என்று நினைத்தாயா?” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் அவன்.

இதென்ன மிருகத்தனம்?

எதுவும் சொல்ல இயலாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் இலக்கியா.

மீண்டும் விழிகள் நனையத்தொடங்க, அதை அவனுக்குக் காட்டப் பிடிக்காமல் அங்கே சிதறிக்கிடந்த தட்டையும் கப்பையும் ஒதுக்கி நிலத்தைத் துடைத்தாள்.

அவன் முன்னால் நிற்கவே பயந்து, அங்கிருந்து வெளியேற முயன்றவளிடம், “கட்டிய புருஷனை விட்டு ஓடுவதிலேயே குறியாக இருக்கிறாய் போல!” என்று அப்போதும் குத்தினான் அவன்.

அழுகையில் துடித்த கீழுதட்டை அழுந்த கடித்தபடி சென்று சோபாவில் அமர்ந்துகொண்டாள் இலக்கியா. மனமோ புண்ணாகிப் போனது.

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? எதற்கு இந்தக் கண்ணீர் வாழ்க்கை? அவள் செய்த பாவம் தான் என்ன? என்று எண்ணி தனக்குள்ளேயே உழன்றவள் கணவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

மஞ்சுளாவின் அழைப்பின் பெயரில் கீழே சென்று இரவு உணவை முடித்துக்கொண்டு வந்தபிறகு, நைட்டியை மாற்றியவள் கட்டிலில் கணவனுக்கு முதுகுகாட்டி ஒரு ஓரமாகப் படுத்துக்கொண்டாள்.

மின்விளக்கை அணைத்தவன் விடிவிளக்கை போட்டுவிட்டு மறுபக்கம் வந்து அமர்ந்து அவளின் கையைப் பற்றியபோது, வெடுக்கென்று கையைப் பறிக்க முயன்றாள் இலக்கியா.

பேசுவதை எல்லாம் பேசிவிட்டு அணைக்க வருகிறானே, அவள் என்ன உணர்வுகளே அற்ற ஜடமா?

அவனோ, “ஏன்? அதற்கிடையில் அலுத்துவிட்டதா?” என்று அப்போதும் வார்த்தைகளால் சுட்டான்.

அதைக் கேட்டவளின் மறுப்பு மடிந்துபோனது. மரத்துப்போய் அவனுக்கு அடங்கியவளை, தன்னுடைய தேவைகளை முடித்துவிட்டே விட்டான் தர்சன்.

இரவு முழுவதும் துளி கூடக் கண்ணுறங்காது விழித்துக் கிடந்தவளின் மனது, ஏன்? ஏன் இப்படி எல்லாம் அவளை வார்த்தைகளாலும் செயல்களாலும் சுடுகிறான்? என்று தவித்தது.

அன்று மட்டுமல்ல தொடர்ந்த நாட்களிலும் அவளைக் குத்திக் குதறினான் தர்சன். நின்றால் தப்பென்றான், இருந்தால் தப்பென்றான், ஒட்டுமொத்தத்தில் அவள் என்ன செய்தாலும் பாய்ந்தான்.
 
Top Bottom