• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 27

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-27


வராண்டாவில் இருந்த சோபாவில் இலகுவாக அமர்ந்து இருந்த மஞ்சுளா பிறக்கப்போகும் பேரக்குழந்தைக்காகத் தொப்பிப் பின்னிக் கொண்டிருந்தார்.

கைகள் தன்பாட்டுக்கு வேலையைச் செய்தாலும் விழிகள் உயர்ந்து சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தது. நேரம் காலை பத்துமணி. இன்னும் கொஞ்ச நேரத்தில் மதியச்சமையலை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தபடி மீண்டும் பின்னலில் பார்வையைப் பதிக்கப் போனவர், வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தார்.

அங்கே, வீட்டு வாசலுக்கு வெளியே நின்றிருந்தார் மகேஸ்வரி.

எதிர்பாராமல் அவரைக் கண்டதில், “மகி..!” என்று வியப்போடு அழைத்தவர், “ஏன் அங்கேயே நிற்கிறாய்? உள்ளே வா! இன்று வருவதாகச் சொல்லியிருக்கக் காரை பஸ் ஸ்டாண்டுக்கு அனுப்பி இருப்பேனே..” என்றபடி, எழுந்து வாயிலுக்கு நடந்தார்.

அப்போதும் உள்ளே வராமல் தயக்கத்தோடு மஞ்சுளாவை பார்த்த மகேஸ்வரியின் பார்வை பக்கவாட்டில் திரும்பியது.

அவரின் செயலில் குழம்பி, “உள்ளே வராமல் அங்கே என்ன பார்க்கிறாய்?” என்ற மஞ்சுளாவும், மகேஸ்வரி பார்த்த திக்கிலேயே தன்னுடைய பார்வையைத் திருப்பினார்.

அங்கே தயங்கியபடி நின்ற வெண்பாவை கண்டதும் ஒருகணம் அதிர்ந்தவருக்கு அடுத்தக் கணமே ஆத்திரமும் கோபமும் கொப்பளித்தது.

என் குடும்பத்தின் நிம்மதியையே கெடுத்து, என் பிள்ளையின் வாழ்க்கையையும் கெடுத்து இந்த வீட்டை விட்டு ஓடிப்போனவள் திரும்ப எதற்காக வந்திருக்கிறாள்? மறுபடியும் அவர்கள் வீட்டில் பிரச்சினையைக் கிளப்பி இருக்கும் நிம்மதியை பறிக்கவா?

‘போடி வெளியே!’ என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் ஆக்ரோசத்துடன், “இங்கே எங்கே வந்தாய்?” என்று கேட்டுக்கொண்டு அவளை நோக்கி நடந்தவரின் முன்னால் ஓடிவந்து நின்றார் மகேஸ்வரி.

“தயவுசெய்து அவளை மன்னித்துவிடுங்கள் அண்ணி. அவள் செய்தது மகாபாதகம் தான். மன்னிக்கவே முடியாதது தான். ஆனால், செய்த தப்புக்கு நன்றாகவே அனுபவித்து விட்டாள். அதோடு தான் செய்தது எவ்வளவு பெரிய பிழை என்பதையும் உணர்ந்துவிட்டாள்.” என்றார் மன்றாடலாக.

ஆத்திரம் மிகுந்த விழிகளை மகேஸ்வரி புறமாகத் திருப்பி, “இவளை மன்னிப்பதா? இந்த வீட்டின் மானம் மரியாதையைக் கெடுத்தவளை என்னால் என்றுமே மன்னிக்க முடியாது!” என்றார் மஞ்சுளா கோபக் குரலில்.

“உங்கள் கோபம் நியாயம்தான் அண்ணி. ஆனால், வாயும் வயிறுமாக இருக்கிறவளை மன்னிக்காவிட்டாலும் அந்தக் குழந்தைகளுக்காகவாவது கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்.”

அப்படி எதற்காகவும் அவளை மன்னிக்கத் தயாராக இல்லாத மஞ்சுளா வெறுப்பையும் ஆத்திரத்தையும் உமிழும் விழிகளோடு வெண்பாவை திரும்பிப் பார்த்தார்.

வாடிவதங்கி, கறுத்து, உருக்குலைந்து நின்றவளின் தோற்றமும் கருத்தில் பதிந்தது. அது மட்டுமல்ல, மகேஸ்வரி சொன்னதுபோலக் கையில் ஒரு பெண் குழந்தையைத் தாங்கி நின்றவளின் வயிறும் சற்றே உப்பியிருந்தது.

மனம் எரிமலைச் சீற்றத்துடன் கொதித்தாலும், கையிலும் வயிற்றிலும் குழந்தையோடு நிற்பவளை வீட்டை விட்டுத் துரத்த இப்போது அவரால் முடியவில்லை. அதே நேரத்தில் தர்சனின் அன்னையாக, அந்தக் குடும்பத்தின் தலைவியாக அவளை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்வது என்ன அவள் முகம் பார்க்கவே வெறுப்பாக இருந்தது.

இந்த மகி இவளை எதற்காக இங்கே கூட்டிவந்தாள் என்கிற ஆத்திரம் துலங்க மகேஸ்வரியை பார்த்தார் மஞ்சுளா.

அவரோ, கைகளை யாசகமாக ஏந்தி, விழிகளில் மன்னிப்பையும் இறைஞ்சலையும் தாங்கி, “நிரந்தரமாக இங்கே இருக்க வரவில்லை அண்ணி. ஒரு.. கொஞ்ச நாட்களுக்கு மட்டும் இருக்க விடுங்கள்.” என்று கேட்டார்.

மகேஸ்வரியின் அந்த நிலை மஞ்சுளாவை என்னவோ செய்தது. ‘இது என் அண்ணனின் வீடு. நான் எதுவும் செய்வேன். அதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது’ என்று தன்னுடைய உரிமையை நிலைநாட்டாமல் ஒரு பிச்சைக்காரியைப்போல் கையேந்தி நிற்கிறாள்.

கட்டிக்கொண்ட கணவனும் இல்லாமல், பெற்றுவளர்த்த மகளும் சீரில்லாமல் போனதால் வந்த நாதியற்ற நிலையல்லவா அது!

மகேஸ்வரியை நினைத்து நெஞ்சம் பிசைந்தாலும் வெண்பாவை வீட்டுக்குள் அழைக்க அப்போதும் முன்வரவில்லை மஞ்சுளா

ஆனால், அன்றொருநாள் இதே மகேஸ்வரியிடம் தர்சனின் திருமணத்தை மட்டும் நடத்தி தந்தால் சாகும் வரைக்கும் நீ செய்ததை மறக்கமாட்டேன் என்று தான் கெஞ்சியதும், அவர் தன் மகனின் காலில் விழுந்து, கெஞ்சி மன்றாடி அவனைத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்ததும் நினைவில் ஆடியது.

அதன்பிறகான அவனுடைய சந்தோசமான வாழ்க்கையும், அதன் பலனாக இலக்கியா தாய்மை அடைந்து அவர்களின் குடும்பத்தையே மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்தது எல்லாம் இந்த மகேஸ்வரியால் அல்லவோ நடந்தது.

அந்த மகேஸ்வரியின் மகளை வெளியே போ என்று சொல்ல நா எழவில்லை மஞ்சுளாவுக்கு. அதே நேரம் தர்சன் கட்டிய தாலியை தூக்கி எறிந்துவிட்டு, ஓடிப்போய் என்றும் அழியாத அவமானத்தை அவர்களின் குடும்பத்துக்குத் தேடித்தந்த வெண்பா என்கிற அந்தப் பெண்ணை வா என்று அழைக்கவும் முடியவில்லை.

சூழ்நிலை கைதியாக மாறி செய்வதறியாது தடுமாறி நின்றவரின் காலில், “என்னை மன்னித்துவிடுங்கள் அத்தை..” என்றபடி, மகளோடு விழுந்தாள் வெண்பா.

பதறித் துடித்து வெறுப்போடு விலகினார் மஞ்சுளா. “இதென்ன செய்கிறாய்? வாயும் வயிறுமாக இருக்கிறவள் என் காலில் எதற்கு விழுகிறாய். எழுந்திரு.” என்றார் ஒட்டுதல் இல்லாத வெற்றுக் குரலில்.

அவ்வளவு பதறினாலும் இரண்டடி பின்னால் நகர்ந்த அவரின் செய்கையும், அவளைப் பிடித்துத் தூக்கிவிடாத அவரது விலகலும் புரியாமல் இல்லை தாய்க்கும் மகளுக்கும்.

“உங்கள் காலில் மட்டுமில்லை அண்ணி, இந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் காலில் விழுந்தாலும் இவள் செய்த பாவம் போகாது. உங்களுக்குச் செய்த துரோகத்துக்குத்தான் அங்கே இவ்வளவு நாளும் அனுபவித்திருக்கிறாள்.” என்றார் மகேஸ்வரி, ஆத்திரமும் ஆற்றாமையுமாக.

மஞ்சுளா கேள்வியாகப் புருவங்களைச் சுருக்க, “அந்தப் பெடியனின் வீட்டில் இவர்களைச் சேர்ப்பது இல்லையாம் அண்ணி. தாலியை கழட்டி எறிந்துவிட்டு வந்தவள் என்று இவளை எல்லாச் சொந்தமும் சேர்ந்து ஒதுக்கிவிட்டார்கள். ஒழுக்கம் கெட்டவள் என்கிறார்களாம். குடும்பத்துக்கு ஆகாத பெண் என்கிறார்களாம். அதோடு, மாமாவின் மகனையே விட்டுவிட்டு ஓடிவந்தவள், உன்னை விட்டுவிட்டும் இன்னொருவனோடு ஓடிவிடுவாள், அதனால் இவளை விவாகரத்துச் செய்துவிடு என்று அவர்கள் மகனிடம் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வதிலும் பிழை இல்லையே அண்ணி..” என்று கண்கள் கலங்க மகேஸ்வரி சொன்னபோது, தலை குனிந்தபடி நின்ற வெண்பாவின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அதைப் பார்த்துவிட்டு, “இப்போது அழுது என்ன பிரயோசனம்? எல்லாவற்றையும் திமிர் எடுத்து ஓடமுதல் யோசித்து இருக்கவேண்டும். தர்சன் சின்ன வயதில் இவளை கொடுமைப்படுத்தினானாம். நீங்கள் எங்களை வீட்டை விட்டுத் துரத்தினீர்களாம். தர்சனும் தன்னை அதட்டி உருட்டினானாம். அதனால் பழி வாங்கினாளாம்.” என்றார் மகேஸ்வரி ஆத்திரத்துடன்.

“என்ன சொல்கிறாய் மகி?” என்று, வெண்பா அப்படி நடந்துகொண்டதற்கான காரணங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட மஞ்சுளாவுக்கு, அதிர்ச்சியாக இருந்த அதேவேளை ஆத்திரமும் வந்தது.

பின்னே, சின்னச்சின்ன விசயங்களுக்காக அவர்களின் குடும்ப மானத்தையே வாங்கிவிட்டாளே!

இதை நீ எங்களிடம் முதலே சொல்லியிருக்க எந்தப் பிரச்சினையும் வந்திருக்காதே என்று கேட்கத் துடித்த நாவை அடக்கிக்கொண்டார்.

இனி எதைப்பற்றிக் கதைத்தும் எதுவும் மாறப்போவது இல்லையே! அதோடு, அவளின் முகம் பார்த்து எந்தக் கேள்வியும் கேட்கவோ, விளக்கங்களைக் கொடுக்கவோ அவர் தயாராகவும் இல்லை.

என்னதான் வெண்பா கண்ணீர் வடித்தாலும், புகுந்த வீட்டினர் அவளை ஒதுக்கிவிட்டார்கள் என்று தெரிந்தாலும் மனமிரங்க மறுத்தது மஞ்சுளாவுக்கு. மகேஸ்வரி சொன்னவற்றைக் கேட்டபிறகு இன்னுமின்னும் வெறுப்பும் ஆத்திரமும் வந்ததே தவிரக் குறையவில்லை.

ஒன்றுமே சொல்லாமல் அவர் நிற்க, “இவள் சொன்னதை எல்லாம் கேட்டு எனக்கும் கோபம்தான் அண்ணி. நன்றாகப் பிடித்துத் திட்டிவிட்டேன். இவளின் கணவனுக்கு யாழ்ப்பாணத்தில் தான் வேலையாம். அங்கே கொழும்பில் துணைக்கு யாரும் இல்லாமல் இந்தக் குழந்தையையும் வைத்துக்கொண்டு தனியாக இருக்கிறாள். இதில் வயிற்றில் அடுத்தப் பிள்ளை வேறு. அதனால்தான் மனம் கேளாமல் கையோடு கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன்.” என்றார் மகி.

மஞ்சுளாவின் அதிருப்தியான முகத்தைப் பார்த்துவிட்டு வேகமாகத் தொடர்ந்தார். “நாங்கள் பழைய வீட்டுக்கே போகலாம் என்று இருக்கிறோம் அண்ணி. அங்கேயும் போய்ப் பேசிவிட்டுத்தான் வருகிறேன். ஒருமாதம் பொறுக்கச் சொல்கிறார் வீட்டுக்காரர். அதுதான் இங்கே வந்தோம். ஒரு.. ஒரு மாதத்துக்கு மட்டும் தயவுபண்ணி இருக்க விடுங்கள்.” என்று மீண்டும் கெஞ்சுதலாகக் கேட்டார் மகேஸ்வரி.

அப்போதும் சம்மதிக்க மனம் வரவில்லை. மகேஸ்வரியின் முகத்தைப் பார்த்து மறுக்கவும் முடியவில்லை. ஒரு மாதத்தில் போய்விடுவார்கள் என்பது சற்றே நிம்மதியை கொடுத்தாலும், அந்த ஒருமாதமும் இந்த வெண்பாவை வீட்டுக்குள் வைத்திருப்பதா என்று நினைக்கவே கசப்பும் வெறுப்பும் ஒருங்கே தோன்றியது.

இதில் அடுத்தப் பிரச்சினை தர்சன். வெண்பா மீதான அவனது ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் கொதிப்பையும் அறிந்திருந்தவரின் மனதில் ஒருவித நடுக்கத்துடன் கூடிய பயம் எழுந்தது.

அடுத்ததாக இலக்கியா. அவள் இதை எப்படி எடுத்துக்கொள்வாள்? இப்போதுதான் சீராகப் போய்க்கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கை இந்தப் பெண்ணின் வரவால் மீண்டும் கெட்டுவிட்டால்?

“எனக்கு என்ன சொல்வது, செய்வது என்றே தெரியவில்லை மகி. உன் அண்ணாவைத்தான் கேட்கவேண்டும்.” என்றவர், கணவருக்கு அழைக்க எண்ணித் திரும்ப, “இவருக்கு நான் அழைத்துச் சொல்லிவிட்டேன் அத்தை. மாமாவோடு வருகிறேன் என்றார்.” என்றாள் ராகினி மெல்லிய குரலில்.

“கொழும்பில் ஏன் இவள் தனியாக இருக்கிறாள்? புருசனோடு யாழ்பாணத்துக்கே போயிருக்க வேண்டியதுதானே..” அப்படி அவள் போய்விட்டால் ஒரு பிரச்சினையும் இல்லையே என்று எண்ணிக் கேட்டார் மஞ்சுளா.

மகளைத் திரும்பிப் பார்த்து முறைத்தார் மகேஸ்வரி. “செய்வதை எல்லாம் துணிந்து செய்தவளுக்கு இப்போது நம் யாரின் முகத்திலும் முழிக்க முடியவில்லையாம். யாழ்பாணம், கிளிநொச்சி, வவுனியா என்றால் எங்கள் யாரினதும் கண்ணில் படவேண்டி வரும் என்று அங்கேயே இருந்திருக்கிறாள். நான் கூப்பிட்டும் வரமாட்டேன் என்றுவிட்டாள். நான்தான் விடாமல் இழுத்துக்கொண்டு வந்தேன்.”

அதைக் கேட்டுக்கொண்ட மஞ்சுளாவின் மனம் ஒரேயடியாக அவள்மீது மட்டுமே பழியைப் போட்டுவிட முடியாது என்பதையும் எடுத்துரைத்தது.

தர்சன் அவளிடம் நடந்துகொண்ட முறையைப் பற்றி வெண்பா தாயிடம் சொல்லி, அதை மகேஸ்வரி மஞ்சுளாவிடம் சொல்லியும் அதைப் பெரிது படுத்தாமல் விட்ட அவர்மேலும் தவறு இருக்கிறதே!

அதோடு, அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல், அறிந்துகொள்ள முயலாமல் திடீரென்று தாலியை கட்டிய தர்சனின் மேலும் தவறு இருக்கிறதே!

அப்படி இருக்கையில் முழுத்தவறையும் தூக்கி அவள்மேல் எப்படிப் போடுவது?
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
அதற்காக அவள் செய்ததும் சரியல்லவே!

மனம் இரண்டுபக்கமாக நின்று வாதிட்டதில் யோசனையோடு வெண்பாவை திரும்பிப் பார்த்தார் மஞ்சுளா. இடுப்பிலிருந்து நழுவ முயன்றுகொண்டிருந்த மகளை இறங்கவிடாமல் பற்றியபடி கூனிக் குறுகிப்போய் நின்றுகொண்டிருந்தாள் அவள்.

எல்லாவற்றையும் உதறிவிட்டு ஓடிப்போய்த் தேடிக்கொண்ட வாழ்க்கையில் மகிழ்ச்சிக் கடலில் முத்துக் குளித்தவள் போலில்லை அவளது தோற்றம். ஓய்ந்து தெரிந்தாள்.

விரோதியாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்பது அல்லவா பண்பாடு. இங்கே வெண்பா அவர்களுக்கு வேண்டாதவளாக இருந்தாலும் மகேஸ்வரியின் மகளாகப் போய்விட்டாளே! அதோடு ஒரு கர்ப்பிணி பெண்ணை, களைத்துத் தெரிந்தவளை வீட்டுக்கு வெளியே நிற்க வைத்திருப்பதை நினைக்க மனதுக்கு என்னவோ செய்தது அவருக்கு.

மனமே இல்லாமல், “உள்ளே வாருங்கள்..” என்று அழைத்தார்.

“நன்றி அண்ணி. முடிந்தவரை விரைவாக அவளைக் கூட்டிக்கொண்டு போய்விடுவேன்.” என்றபடி மகேஸ்வரி வந்து அமர, தாயின் அருகிலேயே தானும் அமர்ந்துகொண்டாள் வெண்பா.

அந்த வீடு முழுவதுமே மயான அமைதி நிலவியது. சம்பிரதாயத்துக்குத் தன்னும் எதைப் பேசவும் மஞ்சுளா தயாராக இல்லை.

இனி என்ன செய்வது, இந்தப் பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்று அவர் சிந்திக்க, ராகினியும் ஆரணியும் கூடச் செய்வதறியாது அவருக்குப் பின்னால் அமைதியாக நின்றிருந்தனர்.

அப்போது மாடியிலிருந்து மெதுவாக இறங்கி வந்துகொண்டிருந்தாள் இலக்கியா.

அவளைக் கண்டுவிட்டு, “லக்கி..! வாவா. எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டபடி, அவளிடம் நடந்தார் மகேஸ்வரி.

அவரைப் பார்த்ததும் வரவேற்பாய் ஒரு புன்னகையைச் சிந்தி, “நன்றாக இருக்கிறேன் மிஸ்..” என்றவளின் காதில் குழந்தை ஒன்றின் சிணுங்கல் கேட்க, யார் என்பதாகப் பார்த்தாள்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
அங்கேயிருந்த தாயையும் மகளையும் பார்த்துவிட்டு, மகேஸ்வரியோடு வந்திருப்பதால் வெண்பாவோ என்று நினைத்த மாத்திரத்திலேயே அவள் விழிகள் அதிர்ச்சியோடு வெண்பாவிலேயே நிலைகுத்தி நின்றன.

அதேநேரம், வெண்பாவும் அதிர்ச்சியோடு அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மஞ்சளும் வெள்ளையுமாகக் கட்டம் போட்ட, பெரிய வேலைப்பாடுகள் இல்லாத சுடிதாரில் இருந்தவளின் தலைமுடி, அவ்வளவு நேரமும் படுத்து இருந்திருக்கிறாள் என்பதற்கு அடையாளமாகச் சற்றே கலைந்து கிடந்தது. களைப்பும் அயர்ச்சியும் தெரிந்தாலும் அவளின் முகம் ஒரு மினுமினுப்புடன் கூடிய அழகுடனும், மெருகுடனும் ஜொலித்தது.

சாதரணமாகவே அழகியாக இருந்தவள், தாய்மை கொடுத்த ஜொலிப்பில் பேரழகியாகத் திகழ்ந்தாள்.

தர்சனுக்கு இப்படி ஒரு அழகி மனைவியா என்று சற்றுத் திகைத்துத்தான் போனாள் வெண்பா. அதோடு, வாடி வதங்கி இருந்த தன் தோற்றமும் நினைவில் வந்து சற்று அவமானமாகவும் உணர்ந்தாள்.

முகக் கன்றளுடன் இருந்த வெண்பாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உனக்குத் தெரியுமா மகி, லக்கி இப்போது நான்கு மாதம்..” என்றார் மஞ்சுளா மலர்ந்த முகத்தோடு.

“மெய்யாகவா அண்ணி?” என்று வியப்பும் ஆனந்தமுமாகக் கேட்டவர், லக்கியின் புறம் திரும்பி, “எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது லக்கிம்மா. நான் கொழும்புக்குப் போகும்போது சொன்னதுபோலவே நல்ல செய்தி சொல்லியிருக்கிறாய்.” என்றவர், மகிழ்ச்சியோடு பெறாமகளைக் கட்டிக்கொண்டார்.

அதைப்பார்த்த வெண்பாவின் மனம் ஊமையாக அடிவாங்கியது. அவளும்தான் தாய்மை அடைந்திருக்கிறாள். ஆனால், இப்படியான ஒரு மகிழ்ச்சியை, ஆனந்தத்தைத் தாய் தன்னிடம் காட்டவே இல்லையே!

லக்கியாலும் அந்த மகிழ்ச்சியிலும் சந்தோசத்திலும் கலந்துகொள்ள இயலவில்லை. அது வெண்பாவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒருமனம் அடித்துச் சொன்னாலும் அதை உறுதிப்படுத்தத் துடித்தது இன்னொரு மனம்!

“நீ இங்கிருந்து போன அன்றுதான் மயங்கி விழுந்தாள். அவளுக்கு ஒரே தலை சுற்றலும் வாந்தியும். ஒழுங்காகச் சாப்பிடுவதும் இல்லை. காலையில் தர்சன்தான் கெஞ்சிக் கெஞ்சி கொஞ்சமாக அவளுக்குக் கொடுத்துவிட்டுப் போனான். அவளை முழுக்க முழுக்கக் கவனித்துக்கொள்வது அவன்தான். இன்னும் கொஞ்சநேரத்தில் ஜூஸ் கொடுக்கவேண்டும் என்று ஓடிவருவான் பார்.” என்றவரின் குரலில், என் மகன் மருமகளைக் கையில் வைத்துத் தாங்குகிறான் என்கிற பெருமை ஒட்டியிருந்தது.

இதையெல்லாம் அமைதியாக இருந்து கேட்டுக்கொண்டிருந்த வெண்பாவுக்கு, அந்தவீட்டில் தான் ஒதுக்கப்பட்ட நிலையில் இருக்கிறோம் என்று வலியோடு உணர்ந்த அந்த வேளையிலும் தர்சனின் மனைவியைப் பற்றிப் பேசுகையில் மலர்ந்த மஞ்சுளாவின் முகமும், ஆர்வத்தோடு அதைக் கேட்டுக்கொண்ட அன்னையின் முகமும் ஒரு தாக்கத்தைக் கொடுத்தது.

அது ஒரு பொறாமையாக அன்றி, இப்படி அவளை அவளது புகுந்தவீடு கொண்டாடவில்லையே என்கிற ஏக்கமாக இருந்தது.

போதாக்குறைக்கு, “வா.. வந்து அமர்ந்துகொள்.” என்று மஞ்சுளா அவளைக் கவனிக்க, “குடிக்க ஏதாவது கொண்டுவரவா லக்கி..” என்று ஆரணி கனிவோடு கேட்க என்று அவளை எல்லோரும் தாங்குவதைப் பார்த்தவளுக்குத் தன்னுடைய இழப்பின் அளவு பெரிதாகத் தெரிந்தது.

அவளுடைய கணவனும் அவள்மேல் வைத்திருக்கும் பாசத்தில் எந்தக் குறையும் இல்லைதான். அவன் காட்டும் காதலில் எந்த மாற்றமும் இல்லைதான். ஆனால், அவனுடைய வேலை அவளோடு அவனை நெடு நாட்களுக்கு இருக்க விட்டதில்லை. அந்தப் பாசத்தையும் காதலையும் அருகிலிருந்து காட்ட அவனாலும் முடிந்ததில்லை.

அதுவும் புதிதாகப் போலிஸ் வேலைக்குச் சேர்ந்தவன் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு ஒருதடவை மாற்றல் வந்துகொண்டே இருந்தது. அவனோடு வரும்படி அவன் கூப்பிட்டாலும் அவளுக்குத்தான் செல்ல மனம் வந்ததில்லை.

கொழும்பிலேயே இருந்து புகுந்த வீட்டினரின் மனதை மாற்றிவிடமாட்டோமா என்று எவ்வளவோ முயன்றுதான் பார்த்தாள்.

முடிவு என்னவோ பூஜ்ஜியம் தான். இல்லாவிட்டால், கணவனும் இன்றிக் கையிலும் வயிற்றிலும் குழந்தையைச் சுமப்பவளை திரும்பியும் பார்க்காமல் இருப்பார்களா?

இதோ இந்தக் குடும்பத்துக்கு அவள் செய்த துரோகம் பெரிதாக இருந்தபோதிலும், அவளை உள்ளே கூப்பிட விருப்பம் இல்லாதிருந்தபோதிலும் மஞ்சுளா உள்ளே வாருங்கள் என்று அழைக்கவில்லையா. அந்த மனம் அவளின் புகுந்த வீட்டினருக்கு வரவில்லையே..

“என்ன குழந்தை என்று எதாவது சொன்னார்களா?” என்ற மகேஸ்வரியின் விசாரிப்பில், நினைவுகள் களைய அங்கே கவனத்தைச் செலுத்தினாள் வெண்பா.

“இல்லை.. இன்னும் சொல்லவில்லை..” என்று வாய் பதிலைச் சொன்னாலும்,
விழிகள் வெண்பாவையே தொட்டுத் தொட்டுத் திரும்பின. மனம் அவள்தான் என்று சொல்லிப் பதறியது.

அவளின் பார்வையை உணர்ந்த மகேஸ்வரிக்கு, அந்தச் சூழ்நிலையை எண்ணிச் சங்கடமாக இருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்தாக வேண்டுமே!

எனவே, “வெண்பாவும் இப்போது ஆறு மாதம் லக்கி.” என்றவர், “நாங்கள் இன்னும் ஒருமாதத்தில் வேறு வீட்டுக்குச் சென்று விடுவோம்.” என்பதையும் சேர்த்துச் சொன்னார்.

ஏற்கனவே பதறிக்கொண்டிருந்தவளின் மனம் அது வெண்பாதான் என்று ஊர்ஜிதமானதில் துடிக்கத் தொடங்க, அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு மாமியாரைப் பார்த்தாள்.

மஞ்சுளாவும் மனதளவில் கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதையும், அவர்களை உள்ளே விடவே அவ்வளவு யோசித்தார் என்பதையும் அறியாத லக்கியின் பார்வை அவரைக் குற்றம் சாட்டியது.

ஓடிப்போனவளை கூப்பிட்டு நடுவீட்டில் வைத்துப் பேசிக்கொண்டு இருக்கிறீர்களே, அவள் இருக்கும் இடத்தில் என்னையும் இருத்திவைத்து என்னை அவமானப் படுத்துகிறீர்களே, நீங்கள் செய்வது நியாயமா? என்று கேட்டது அவள் விழிகள்.

அவள் வீட்டினரே அவளைப்பார்த்து, ‘நீ இரண்டாம் தாரம்!’ என்று முகத்துக்கு நேரே அடித்துச் சொல்வது போலிருந்தது. அது அவளறிந்த கசப்பான உண்மைதான்! என்றாலும் வலித்தது!

அவமானமும் அடிபட்ட தோற்றமுமாக உள்ளும் புறமும் கசங்கிப் போனாள் இலக்கியா.

கணவனின் குழந்தையை அவள் வயிற்றில் சுமக்க, அவனோ இன்னொருத்தியை மனதில் சுமக்கிறான். அந்த இன்னொருத்தி ‘கணவனின் முன்னாள் மனைவி’ என்கிற பெயரில் இவளின் கண்முன்னால் வந்து நிற்கிறாள்.

தரம் கெட்ட அவள் இருக்கும் இடத்தில் நானும் இருப்பதா? அப்படி இருந்து என் மரியாதையை நானே கெடுத்துக்கொள்வதா?

மெல்ல மெல்ல அவள் முகத்தில் ஆத்திரம், ஆவேசம், அருவருப்பு, வெறுப்பு, என்று பல உணர்வுகள் குடிபுகுந்தன. உடலின் உள்ளும் புறமும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

அந்த நொடியே அந்த வீட்டிலிருந்தே வெளியேறிவிடக் கைகால்கள் துடித்த போதிலும், மகேஸ்வரி அவளின் கையைப் பற்றியபடி அருகில் அமர்ந்து இருந்ததில் முடியாமல் போனது. முள்மேல் அமர்ந்து இருப்பவள் போல் துடித்தாள். ஆத்திரத்தையும் கோபத்தையும் அடக்கியவளின் முகத்தில் இரத்தம் பாய்ந்தது. இதயமோ மிக வேகமாக அடிக்கத் தொடங்கியது.

மருமகளையே பார்த்துக் கொண்டிருந்த மஞ்சுளாவுக்கும் பதட்டம் தொற்றிக்கொள்ளத் தொடங்க, “நீ உள்ளே..” என்று, அவளை உள்ளே போகச் சொல்லத் தொடங்கியவரின் பேச்சு, அங்கே வந்துநின்ற காரைக்
கண்டதும் நின்றுபோனது.

காரணம், வந்து நின்றது தர்சனின் கார்!
 
Top Bottom