இமைக்க மறந்தேன் உயிரே 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Stn49

Member
May 6, 2026
35
58
18
Chennai
இரவு நன்றாகவே உறங்கினாள் சாகம்பரி. மகளுடன் விளையாடியதிலா அல்லது அவளவரை பார்த்ததிலா என்று அவளது மனதுக்கு கூட தெரியாது. மனம் சமனப்பட்டு இருப்பதாக தோன்றியது. இதற்க்கு நேர்மாறான நிலையில் உறக்கம் இன்றி தவித்துக்கொண்டு இருந்தார் வித்யாசாகர்.உறக்கம் அவருடன் கண்ணாமூச்சி ஆடியது.

அவளை இப்போதே மணந்து கொண்டு மனைவி குழந்தையுடன் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க அவனது மனம் துடித்தது. 'அவள் அப்போதே சொல்லியிருந்திருக்கலாம் ' என்பதை மட்டும் அவனால் மாற்ற முடியவில்லை.இன்னமும் அவ தன்னை திருமணம் முடிப்பதற்கு சம்மதம் என்று சொல்லவில்லை. யோசிக்க வேண்டுமாம். யோசிக்க பெரியதாக என்ன இருக்கிறது? ஏற்கனவே அவள் என்னை முழு மனதாக காதலித்தாள் தானே!

தானும் அவளது மீதான காதலை உணராமல் விடுத்து ,அவளது பிரிவில் உணர்ந்தாயிற்று. இன்னமும் என்ன? எல்லோரும் திருமணம் முடித்து குழந்தை பெற்றுக்கொள்வார்கள்.இங்கே அப்படியே உல்ட்டா . குழந்தைக்கு வயது ஐந்து ஆகப் போகும் நிலையில் இன்னமும் எத்தனை வருஷங்கள் வேண்டுமாம் அவளுக்கு என்னை திருமணம் முடிக்க என்று மனது வெட்டி நியாயம் பேசி அவனது மூளையை சலிப்படைய செய்திருந்தது. எப்படியோ போராடி தூங்கிப்போனான்.

வித்யாசாகரன் அடையாறு வந்திருப்பதை பற்றி இரவே அங்கே ஏழை பார்க்கும் செக்யூரிட்டி பெங்களூருவில் தனது பெரிய முதலாளியிடம் சொல்லி விட்டார். காலை அவன் விழித்து அலுவலகம் கிளம்பும் நேரம் வரை காத்திருந்த அவனது அப்பா ,ஒன்பது மணிக்கு அவனுக்கு அழைத்துவிட்டார். உணவுக்காக டைனிங் டேபிளில் அமர்ந்தவாறே அப்பாவின் அழைப்பை ஏற்றவன்,"இன்னும் கொஞ்ச மாசம் இங்கே சென்னையில் தான் இருக்க போறேன். ஹோட்டலில் தங்குவது சரி வராது.எப்படியும் நமக்குன்னு இவ்ளோ பெரிய ப்ரொபேர்ட்டி இருக்கு தானே! அதான் இங்கேயே வந்து தங்கிட்டேன் . என்னோட காரை அனுப்பி வைய்ங்கப்பா"என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

வீட்டின் பெரியவர்களுக்கு நிச்சயம் அவன் சாகம்பரியின் விஷயமாகத்தான் சென்னையில் தங்கும் முடிவை எடுத்திருக்கிறேன் என்பது புரிந்தது.அவனது அப்பா அவனது காரை எடுத்து சென்று மகனிடம் சேர்த்துவிட்டு அங்கேயே கொஞ்ச நாட்கள் இருக்கும்படிக்கு டிரைவரிடம் சொல்லி அனுப்பினார்.அன்று மதியமே அவனது பிஎம் டபிள்யு கார் சென்னையில் அவனது அலுவலகத்தை அடைந்தது.

அவன் பெங்களூருவிலிருந்து கிளம்பும் பொழுதே கொஞ்ச நாட்கள் சென்னை என்று முடிவெடுத்து வந்தது தான். இப்போது நாட்கள் மாதங்கள் ஆகி இருக்கிறது. ஹோட்டலில் காலை வேலைக்கு வந்தவளுக்கு காத்திருந்த முதல் அதிர்ச்சி வித்யாசாகர் தனது அறையை காலி செய்து கொண்டு சென்று விட்டார் என்பது தான். அவரது அலுவலகத்திலிருந்து கணக்குகளை முடித்து கொண்டு சென்றார்கள் என்பதை கேட்டவுடனே அவளுக்குள் தூங்கி கொண்டிருந்த ஏக்கம் மீண்டும் எழுந்து கொண்டது.அவள் இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

இன்று வரும் பொழுதே அவரது பெயர் கொடுத்த மயக்கத்தில் ஒரு குதூகலத்துடன் வந்திருந்தவளுக்கு முகமே வாடி விட்டது. மனமோ,எப்படியும் உனக்கு அவர் மீது காதல் உண்டு என்றாலும் அவரை மணக்க 'சரி'என்று சொல்லப் போவது இல்லை.அப்புறம் அவர் எங்கே இருந்தால் உனக்கென்ன?என்று மானாவாரியாக அவளது ஆசையில் மண்லாரியை இறக்கி வேடிக்கை பார்த்தது.


போதாத குறைக்கு அவளை பற்றி சுற்றியிருப்போர்களிடம் எழுந்திருந்த கிசுகிசு வேறு.நேரடியாக யாரும் இவளிடம் கேட்கவில்லை தான்.அப்படி ஏதாவது நிர்வாகம் சீட்டை கிழித்துவிடும். அதற்கு பயந்து அடக்கி வாசித்தாலும் ,'அடுத்தவர் வீட்டு வம்பும், அடுத்த வீட்டு மாங்காயும் இனிப்பது போல வேறு எதுவும் சுவைப்பதில்லையே!

ஹவுஸ் கீப்பிங் செய்யவேண்டிய பெண்கள் இவள் அருகில் வரும் பொழுது மட்டும் யாரையோ பற்றி பேசுவது போல,"பாக்க எவ்வளவு நறுவிசு,பதவிசு.பவுசு.உள்ளாற அத்திப்பழம். எந்த புத்துல எந்த பாம்போ!" என்றார்கள் ஒருமுறை.

"இந்த அழகை வச்சிக்கிட்டு ஆம்பிளைங்களை மயக்க வேண்டியது,சொகமா வாழ வேண்டியது.இதெல்லாம் ஒரு பொழைப்பா " என்று யாரையோ பற்றி சொல்வது போல இவளிடமே நியாயம் கேட்டார்கள். சாகம்பரிக்கு என்னவென்று ஒன்றும் புரியாததால் அமைதியாக இருந்து விட்டாள் . வம்பு பேசி பழக்கமும் இல்லையே!

நாட்கள் வெகு நிதானமாக நகர்ந்தது. வித்யாசாகர் அவளிடம் கடைசியாக ஹோட்டலில் திருமணம் பற்றி பேசியதுடன் சரி.அதற்குப் பிறகு அந்த விஷயம் கிணற்றில் போட்ட கல் போலத்தான் இருந்தது. அன்று ஏதோ தன்னை சீண்டுவதற்கு கேட்டிருப்பார் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு ,அமைதியாக மனம் இருப்பதாக காட்டிக்கொண்டாள் . உண்மையில் அவளது மனம் ஏமாற்றத்தில் துவண்டு போயிருந்தது.

அவள் என்ன எதிர்பார்க்கிறாள்,என்ன தேவை என்பதில் துளியும் அவளுக்கு தெளிவு இல்லை என்பது நிஜம்.காதல் கொண்ட மனம் அவரின் அருகாமையை விரும்பித்தேட, ஊடல் கொண்ட இதயம் அவருடன் இணைவதை மறுதலிக்கிறது.

சனிக்கிழமை விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலேயே இருந்து விட்டாள் சாகம்பரி.அவள் இந்த வருஷம் ஆரம்பம் முதல் இதுவரை ஒருநாளும் விடுப்பு எடுத்திருக்கவில்லை.நிர்வாகமே அவளிடம் மீதமுள்ள இந்த மாத சனிக்கிழமைகளில் விடுப்பு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி இருந்தது.

சாகம்பரியின் அம்மா நிதானமாக தேங்காய் எண்ணையை சூடு செய்து மகளுக்கும் பேத்திக்குமாக தலையில் வைத்து அழுந்த தேய்த்தார்.குட்டி ஸ்ரீதயா அந்த சுகத்தில் உறங்கிப்போனது. அம்மாவின் மடியில் சுகமாக அமர்ந்த வாக்கிலேயே குழந்தை உறங்க , சாகம்பரியின் அம்மா மும்முரமாக காலை பத்து மணி சீரியல் பார்க்க அமர்ந்து விட்டார்.

அதில் ஒரு பெண் வயது குறைந்த இன்னொரு பெண்ணிடம்,"அந்தாளோட குடித்தனம் செஞ்சு புள்ளையும் பெத்துக்கிட்டே. இப்போ என்னடி ஈகோ தடுக்குது. ஒழுங்கு மரியாதையா அவனையே கல்யாணம் கட்டிக்கோ " என்று இரைய தன்னையும் அறியாமல் சாகம்பரியின் அம்மா அவளை திரும்பி பார்க்க அத்தனை நேரம் அந்த டிவி சீரியலில் நடப்பதை தன்னுடன் ஒப்பிட்டு பார்த்து நொந்து கொண்டிருந்த சாகம்பரியும் அதே நேரத்தில் தனது அம்மாவை பார்த்தாள். வெகு நாட்களாக அவள் அம்மா அவளிடம் கேட்க விரும்பிய கேள்வி.இன்று எதிர்பாராத விதமாக அமைந்து விட்டது.

என்ன பதில் சொல்ல என்று புரியாமல் சாகம்பரி உறங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு தனது அறைக்கு சென்றாள் .குழந்தையை குளிக்க வைத்துவிட்டு தானும் குளித்தாள் . அவளது நினைவுகள் வித்யாசாகரை இறுக்கியது.

இதென்ன புதியதாக இதுவரை தோன்றிராத விஷயங்களை இப்பொழுது ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் என்று தனக்கே மானசீகமாக குட்டு வைத்துக் கொண்டு வேலைகளை தொடர்ந்தாள் .

இந்தக் கூந்தலை காயவைத்து ஒரு பேண்டுக்குள் கட்டிவைப்பதற்குள் ....அவளுக்கு மூச்சு வாங்குகிறது. அதுவே ஒரு பெரிய வேலை தான். 'முடி பராமரிப்பு என்பது சாதாரண விஷயம் இல்லை.கொஞ்சம் பராமரிப்பை குறைத்தாலும்,சிக்கலாகி விடும் .பிரிப்பதே பெரிய தலைவலியை உண்டாக்கி விடும்' என்று நினைத்துக்கொண்டே அவள் தனது முடியை பிரித்து சிக்கெடுக்க,அவள் மனதை படித்தது போல,"அதே தான். இப்போ உன்னோட வாழ்க்கையை சிக்கலாக்கி வச்சிருக்கே. எப்படி சரி செய்யுவியோ " என்று அங்கலாய்த்துவிட்டு உள்ளே சென்று விட்டார். திடுக்கிட்ட சாகம்பரியின் கைகள் அப்படியே நின்று விட்டது.

அம்மாவும் அப்பாவும் சமீப காலமாகத்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள்? என்ன செய்து வைத்திருக்கிறாள் என்று அவளுக்கு வீரியம் இன்னமும் புரியவில்லை என்று பெற்றவர்கள் நினைப்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இங்கே நாம் கவனிக்க சில விஷயங்கள் உண்டு. illai;...என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில இடங்களில் பார்த்தும் இருக்கிறேன்.

பொதுவாகவே காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களது புத்திர செல்வங்கள் யாரையாவது காதலித்தால் முதல் மறுப்புக் குரல் அவர்களிடமிருந்து தான் வரும் . அதை அவர்களால் ஏற்று கொள்ள முடியாது. அப்போதுதான் தாங்கள் தத்தம் பெற்றவர்களை எதிர்த்துக் கொண்டு வந்து திருமணம் முடித்த ஹிமாலய தவறை பற்றி யோசித்து மருகுவார்கள். பெற்றவர்களை நோகடித்துவிட்டு வெளியேறிய சமயத்தில் பெற்றவர்கள் எப்படியெல்லாம் வலியை அனுபவித்து இருப்பார்கள் என்றெல்லாம் தோன்றும்.எல்லாமே தனக்கு என்று வரும் பொழுதுதான்.

இப்போது இவள் செய்து வைத்திருக்கும் காரியத்தை தனது மகள் செய்து விட்டு வந்தால் அதை ஒப்புக்கொண்டு ஏற்கும் தைரியம் சாகம்பரிக்கு உண்டா? அவளது பெற்றவர்கள் அவளுக்காக யோசிப்பதில் என்ன குற்றம் சொல்ல முடியும்? நிதர்சனத்தில் பெற்றவர்கள் கோவம் அதிகம் கொண்டு யோசிப்பதை விடுத்து இவளை வேறு ஏதாவது செய்பவர்களாக இருந்தால்? எவ்வளவு தொலைக்காட்சியிலும்,செய்திகளிலும் கேட்டு கடந்து வருகிறோம்?

இவளது நற்பலன் பெற்றவர்கள் நிதானமானவர்களாக அமைந்திருப்பது. எனக்கு வித்யாசாகரின் மீதும் அளவு கடந்த கோவம் உண்டு.அதை பிறகு பார்க்கலாம்.வித்யாசாகர் அலுவலகம் கிளம்பி சென்று விட்டான். சனிக்கிழமை ஆனாலும் இன்று அவன் அலுவலகம் சென்றாக வேணும் . வேலைகள் அதிகமாகவே இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக பிள்ளைப்பாக்கம் எஸ்டேட்டில் இருக்கும் கம்பெனிக்கு சென்று வந்த ஒப்பந்தம் இவனது கையெழுத்திற்க்காக காத்துக்கொண்டிருக்கிறது.அதை இன்றே முடித்தால் தான் உண்டு. அடுத்த வாரத்திலிருந்து வேலைகளை தொடங்கியாக வேண்டும் என்று அந்த நிறுவனத்திடமிருந்து இவனுக்கு மெயில் வந்து விட்டது.அதோடு இங்கே ஒரு பெரிய ஹோட்டலுடன் தளங்களை மாற்றி அமைப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாகவும் அந்த நிறுவனத்தின் அடுத்த தலைமுறையை சந்திக்க வேண்டும்.அந்த ஹோட்டலின் பெங்களூரு,ஹய்தராபாத் தில்லி நகரங்களில் இருக்கும் கிளைகளுக்கு வித்யாசாகரின் நிறுவனம் தான் தளங்களை புதுப்பித்து கொடுத்ததும்,இன்டெரியர் வேலைகளை செய்து கொடுத்ததும்.

அதே ஒப்பந்தம் தொடரும் என்று இவர்கள் நினைத்திருக்க , நிறுவனத் தலைவரோ ,சென்னையில் அவரது கடைசி மகன் தான் ஹோட்டலை நிர்வகிப்பதாகவும், ஒப்பந்தம் தொடர்பாக வித்யாசாகரை சந்திக்க விரும்புவதாகவும்,சில மாற்றங்கள் வரக்கூடும் என்றும் ஏற்கனவே சொல்லிவிட்டார். அது வேறு பார்த்தாக வேண்டும்.

வித்யாசாகருக்கு கொஞ்சம் ஆயாசமாக இருந்தது. நன்றாக சுழன்று கொண்டிருக்கும் சக்கரத்தில் ஏதோ குத்தியது போல ஒரு எண்ணம். ஏற்கனவே பெங்களூருவில் செய்திருந்த வேலையை பார்த்துதான் அடுத்தடுத்து அவர்கள் வேலையை கொடுத்தது. பெங்களூருவில் ஏறத்தாழ ஆறு தளங்கள் ,அதன் புனரமைப்பு வேலை,உள் அலங்காரம் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருந்தார்கள். அதன் பிறகு , அவர்களது ஹைதராபாத்,தில்லி என்று அடுத்தது அவர்களது ப்ரொஜெக்ட்டுகளை விரும்பியே வித்யாசாகரின் நிறுவனத்திடம் கொடுத்திருந்தார்கள்.

மாலை மீட்டிங்குக்கு செல்ல தயாரானான் வித்யாசாகர். அவன் அணிந்திருக்கும் ப்ளேசர் கொஞ்சம் இறுக்கமாக இருக்க தனது அந்தரங்க அறைக்குள் சென்று ஜீன்ஸ் - டி ஷார்ட் சகிதமாக வெளியே வந்தான். அவனுக்காக டிரைவர் தயாராக இருந்தார். காருக்குள் ஏறி அமர்ந்தவன் மனதில் திடீரென்று சாகம்பரியை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது. அவனது எண்ண அலைகள் சாகம்பரியை அடைந்ததுவோ என்னவோ...அவன் கிளம்பி பத்தாவது நிமிஷத்தில் அவளிடமிருந்து அலைபேசி அழைப்பு.

" சார்,எனக்கு உங்களை பார்க்க வேண்டும் .கொஞ்சம் பேசவேண்டும். மனசு ரொம்பவே குழப்பமா இருக்கு. எனக்கு உங்களோட அப்பொய்ன்மெண்ட் வேணும்.இன்னிக்கு கிடைச்சாலும் எனக்கு ஓகே தான்."

தனது கையில் கட்டியிருக்கும் கடிகாரத்தை பார்த்தவன் ,"இப்போ எனக்கு ஹோட்டல் *****ல ஆறு மணிக்கு மீட்டிங் இருக்கு. அநேகமா நைட் டின்னெர் அங்கே தான் இருக்கும். திரும்ப வீடு வர தாமதம் ஆகும்.நாளைக்கு மீட் பண்ணலாமா.. டைம் அண்ட் பிளேஸ் கன்போர்ம் செய்யுறேன். உனக்கு ஓகேயா...ஆமா ,இன்னிக்கு உனக்கு வேலை நாளாச்சு போகலையா?" என்றான்.

ஒரு நிமிஷத்திற்கும் குறைவான மௌனம் அவளிடம்.பிறகு, "எனக்கு சம்மதம் தான்.
இன்னிக்கு லீவு எடுத்திருக்கேன். சொன்னேனே..மனஸு குழப்பம்.எதுலயும் கான்செண்ட்ரட் செய்ய முடியல. "

சாகம்பரி சொன்னதை உள்வாங்கியவன்,"அதெல்லாம் சரிதான். உன்னோட குழப்பம் .. அதுக்கவெல்லாம் என்னை சார்னு கூப்பிடாதே . பிடிக்கல."என்றுவிட்டு வைத்துவிட்டான். அவனது முகத்தில் லேசாக கோவம் விரவி இருந்தது.
 

Author: Stn49
Article Title: இமைக்க மறந்தேன் உயிரே 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
ரொம்ப சரி ஶ்ரீ இப்படி செய்துட்டு வந்தா இவளால் என்ன செய்ய முடியும்?????
அதை நம்மை போல தானே என்று இருப்பாளா??????
உண்மையா இவளோட பெத்தவங்களை பார்த்தா பிரமிப்பா இருக்கு
 
  • Like
Reactions: Stn49