உந்தன் நெஞ்சில் உயிராக 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
123
33
Chennai
உந்தன் உயிராக 10

இரு கரங்களின் இணைதலுக்கு பாலமாய் உணவடங்கிய சிறு கலன்!

திகழ் இப்படி சட்டென்று நிறுத்துவானென்று செந்தாழினி நினைக்கவில்லை.

"திகழ் என்னடா?" மணி கேட்க,

"விடு... பாக்ஸை திருப்பிக் கொடுத்துப்புடுவேன்" என செந்தாழினிடம் கூறினான் திகழோவியன்.

"ஆங்... அது..." அவள் தயங்க,

"பசிக்கு ருசி தெரியாது" என்றான்.

அவளின் முகம் பார்த்து கண்கள் சந்தித்து பேசுகிறான். அன்று அவளிடம் விளக்கம் கொடுத்த போதிலும் கூட அவனின் பார்வை அவளைத் தாண்டி பின்னாலிருந்த பேருந்தின் மீதுதான் நிலைத்திருந்தது.

முதல்முறை அவனின் விழிகளுடனான சந்திப்பு அவளுக்குள் என்னவோ மாயம் நிகழ்த்தியது. ஏற்கனவே அவன் மீதிருக்கும் பிடித்தத்தின் அளவை கூட்டியது.

"இப்பைக்கு பசியில சாப்பிட்டுப்போட்டு, அப்புறம் எதுவும் சொல்லக்கூடாது" என்ற செந்தாழினி தனது கையை விட்டிருந்தாள்.

"செந்தா... நேரமாச்சுடி!" அவளுடன் வந்த மாணவி குரல் கொடுக்கவே,

"பாக்ஸ் மணிண்ணாகிட்ட கொடுத்துப்புடுங்க. நான் வாங்கிக்கிறேனுங்க" என்று செந்தாழினி ஓடியிருந்தாள்.

ஓடும் செந்தாழினியை பார்த்திருந்த திகழின் அசையா பார்வையில் மிதமிஞ்சிய ரசனை.

"என்னடா பார்வையில புதுசா என்னமோ தெரியுது" என்ற மணி, திகழின் கையிலிருந்த டப்பாவை வாங்கி திறந்தான்.

"தெரியலடா" என்ற திகழோவியன், "ஆரம்பத்துல அவள் என்னை எங்க பார்த்தாலும் குட்டியா ஸ்மைல் பண்ணுவாள். நல்லாயிருக்கும். ஆனா எனக்கு யாரும் தப்பா பார்த்துப்புடக்கூடாதுன்னு எண்ணம். அப்பைக்கு அப்புறம், அவள் என்னை பார்த்தாலும் பார்க்காதமாறியே போயிடுவாள். எனக்குதான் அவள் ஸ்மைல் பண்ணா நல்லாயிருக்கும் தோணும். மனசு போற தடம் சரியில்லைன்னு நானே நாலு தட்டு தட்டி அடக்கி வைச்சேன். ஆனா இப்போ எனக்கு ஏதோ ஆகிப்புடுமோன்னு அவள் யோசிக்கிறது, என்னவோ பண்ணுது மச்சான்" என்றான்.

"அது சரி... நீயும் லவ்வுல கவ்வூர்றன்னு சொல்லு" என்ற மணி, "அரிசிம்பருப்பும் சோறுடா. மொச்சை கொட்டையெல்லாம் போட்டு வாசமா இருக்கு" என ஒரு வாய் உணவை கையிலெடுக்க முயல,

"எனக்குன்னு தான வாங்குன" என்று டப்பாவை அவனது கையிலிருந்து பிடுங்கியிருந்தான்.

"ரொம்பத்தான்டா... இன்னும் இது லவ்வான்னே தெரியல. அதுக்குள்ள சட்டுன்னு உரிமை உணர்வை காட்டுறதெல்லாம் சரின்னுப்படல" என்ற மணி, "உனக்கொரு விசயம் சொல்றேன்" என்றான்.

உணவை வாயில் மென்றுகொண்டே,

"என்ன?" எனக் கேட்டான் திகழோவியன்.

"செந்தா ஐயனுக்கும், உன்ற மாமன் ராஜேந்திரனுக்கும் எப்பவும் ஓரியாட்டம் தான். அவங்க சண்டையை ஊரே கும்மாளமா பார்க்கும். ரெண்டு பேருக்கும் ஒத்தே வராது. இது லவ்வுதானான்னு கன்பார்ம் பண்ணிக்கும் முன்னால செட்டாவுமான்னு யோசிச்சிக்க" என்றான்.

"அவங்க ரெண்டு பேருக்கும் சண்டை, தகராறுன்னா நான் என்னடா பண்ண முடியும். அது அவங்களுக்குள்ளார" என்றான் திகழோவியன்.

"முடிவே பண்ணிட்டியா! உறுதியா பேசுற" என்ற மணிக்கே, நாராயணன், கோவிந்தன் பந்தம் தெரிந்திருக்கவில்லை.

தெரிந்திருந்தால் இந்த காதல் வேண்டவே வேண்டாமென்று அழுத்தமாக சொல்லியிருப்பானோ?

அடுத்து திகழ் எதுவும் பேசாது உணவினை உண்டு கொண்டிருக்க,

"அவ்ளோக்கு நல்லாயிருக்கா. புடிச்சு சாப்பிடுறமாறி தெரியுது" என்று கேலி செய்தான் மணி.

"நல்லாதான் இருக்கு..."

"அவள் செஞ்சன்னு சொன்னதாலா?" என்று மணி கேட்க, திகழோவியனின் அதரம் நீண்டு விரிந்தது.

அந்நேரம் ஒரு மாணவன், "டேய் திகழ்... உன்ற அம்மா வந்திருக்காங்க" என்றான்.

"இக்கட்டிக்கா டா?" என்றவன், டப்பாவை மணியின் கையில் கொடுத்துவிட்டு, "முழுங்கிடாத. வந்து சாப்பிடுவேன்" என்றவனாக கல்யாணி காத்திருப்பதாக அம்மாணவன் சொல்லிய இடத்திற்கு சென்றான்.

"என்னங்மா... காலேஜ் வரைக்கும். நீங்க ஸ்கூல் போவலைங்ளா?" என்று கேட்டுக்கொண்டே அவரின் அருகில் சென்றான்.

"சாப்பிடாம வந்துபுட்டியே கண்ணு. அதான் சாப்பாடு குடுத்துப்போட்டு போலான்னு. ஸ்கூல் போனாலும் எனக்கு இருப்புக்கொள்ளாதே சாமி" என்றவர், உணவடங்கிய பையை அவனிடம் கொடுத்தார்.

"இதுக்காம்மா இம்மா தொலைவு வந்தீங்கங்" என்றவன், "நான் ஃபிரண்ட் சாப்பாடு சாப்பிட்டேனுங்க" என்றான்.

"அடுத்தவங்க சாப்பாட்டை நீ ஏன் சாமி சாப்பிடணும்" என்றவர், "அந்த தொண்டாமுத்தூர் பையன் சாப்பாடா?" என முகத்தை சுளித்தவராக வினவினார்.

"அது ஏங்க மொவம் அப்படிப்போவுது. உம்மட அண்ணனும் அந்த ஊரு தானுங்களே! நீங்களும் பொறந்து வளர்ந்த ஊரு..." என்று திகழோவியன் முடிக்கும் முன்பு,

"அந்த ஊர் பேச்சே வேணாம் தங்கோ! அவன்கிட்டவும் பேச்சு வச்சிக்காத" என்றார் கல்யாணி.

கல்யாணிக்கு, மணியின் மூலமாக ராஜேந்திரன் குடும்பம் பற்றிய தகவல்களை திகழோவியன் அறியக்கூடுமோ எனும் பதைபதைப்பு.

ராஜேந்திரன் தாய் மாமன் எனும் அவளிவில் மட்டுமே திகழோவியனுக்குத் தெரியும். நெருக்கமான சொந்தமாக இருந்தாலும், அவர்களைப்பற்றி மகன் ஒன்றும் தெரிந்துக்கொள்ளக்கூடாது என்பதில் அதிக கவனம். பெரும் சிரத்தை.

"நமக்கு ஒரம்பரைன்னு இருக்கிறது அவுங்க மாட்டும் தாங்மா... ஆனாலும் ஏன் ஒட்டுதல் இல்லாம இருக்கீங்க தெரியல. மாமா உம்மட மாறியில்லை... ஏதுமாச்சம் விசேசம், நல்ல நாள்னா உங்களை பார்க்க வந்துப்புடுறாரு" என்ற திகழோவியனிடம்,

"வேலையத்தப் பேச்சு நமக்கெதுக்கு" என்றவர், "காலேஜ் முடிஞ்சதும் வூடு வந்துப்புடனும். பசங்ககிட்ட பேசிக்கிட்டு நின்னுப்புடாத" என்றார்.

'அவர் எந்த சொந்ததுக்காக வராருன்னு தெரியும்.' மனதில் நினைத்தவருக்கு, நெஞ்சுக்கூடு வற்றும் உணர்வு.

'நின்னுட்டாலும்... நீங்க விட்டுப்போட்டாலும்' என மனதில் நினைத்தவன், "நீங்க பார்த்துப்போங்கங்" என்றான்.

"இன்னும் மூணு மணி நேரந்தான கண்ணு. நான் வேணும்னா வெயிட் பண்ணி உன்னை கூட்டிக்கிட்டு போவட்டுமா?" எனக் கேட்டார்.

"ஏங்ம்மா..." என்ற திகழோவியன் முதல் தடவை அப்பட்டமான ஆயாச உணர்வை முகத்தில் காட்டினான்.

"அம்மா உன்னைய பாசங்கிற பேர்ல இம்சை பண்றனா தங்கோ" என்றார். கலங்கிவிட்ட கண்களில்.

"நீங்க ஏங்ம்மா என்னைய இவ்ளோ பேம்பர் பண்றீங்க... என் விருப்பம்ன்னு ஒன்னு இருக்கோமில்லங்க" என்றான். இருக்கும் இடம் மறந்து தன்னுடைய மனநிலையை சிறிதாக வெளிக்காட்டியிருந்தான்.

"உன் விருப்பம் என்னன்னு எனக்கு தெரியாதா சாமி..."

இவரிடம் இதுகுறித்து பேசுவதே வீணென்று அவன் அறிந்த நொடி அவை.

இதுநாள் வரை அன்னையின் சொல்லிலிருக்கும் அக்கறை தன்மீதான அன்பின் வெளிப்பாடாக நினைத்தவனுக்கு, அக்கணம் யாவும் அவரின் விருப்பங்களின் திணிப்பாகத் தெரிந்தது.

அன்பு என்கிற பெயரில் அவரின் விருப்பங்களுக்கு ஏற்ப தன்னை அவரின் கைச்சிறைக்குள் அடக்கி வைத்திருக்கிறார் என புரிந்தது.

வயதிற்குரிய சுதந்திரம் வேண்டுமாய் இருப்பவனுக்கு அன்னையின் அன்பு பெரும் பாரமாய் மனதை சூழ்ந்து அழுத்தியது.

"எதுவாயிருந்தாலும் வீட்ல பேசிக்கலாங்மா! நீங்க போங்க" என்று அவரை கெஞ்சி அனுப்பி வைத்தவனுக்கு மலைப்பாக இருந்தது.

'அவனவன் அம்மா பாசம் கிடைக்கலையேன்னு புலம்புறான். நான்...' என விரக்தியாகப் புன்னகைத்த திகழோவியன், தளர்ந்த நடையோடு மணி இருக்குமிடம் வந்தான்.

"என்னடா... அம்மா எதுக்கு வந்தாங்?"

"சாப்பாடு கொடுக்க!"

"இந்த காய்ச்சலுலயா (வெயில்)?" என்ற மணி திகழின் கையிலிருந்த உணவுப் பையினை வாங்கிட,

"செந்தாழினிகிட்ட குடுத்துப்போடு" என்றான் திகழோவியன்.

"அப்போ எனக்கு சாப்பாடு தரமாட்ட நீ" என்று மணி கேட்டதில் இறுக்கம் தளர்ந்து திகழோவியன் சிரித்திருந்தான்.

"காலையிலே சாப்பிடல... மதியத்துக்கும் சேர்த்துதான் ரெண்டு பாக்ஸா வைச்சிருப்பாங்க. செந்தாழினிகிட்ட ஒன்னு குடுத்துப்போட்டு, நீ ஒன்னை முழுங்கு" என்ற திகழோவியன், மணி மூடி வைத்திருந்த, தான் மிட்சம் வைத்த செந்தாழினி கொடுத்த உணவின் மீதியை உண்ணத் துவங்கினான்.

"கொடுத்துவச்ச மகராசன்டா நீ! உன்ற அம்மா பாரு காலேஜ் வரைக்கு வந்து சாப்பாடு குடுத்துட்டுப்போறாங்க" என்று மணி வியந்துக்கூற,

"எதுவுமே அதிகமா கிடைச்சா திகட்டிடும் மணி" என்று அவனுக்கு பொருள் விளங்கா வார்த்தைகளை உதிர்த்துச் சென்றிருந்தான் திகழோவியன்.

"கொள்ளை பாசம் கிடைக்குது. அப்புறம் என்னத்துக்கு மொவம் தொங்கிப்போறான்" என்ற மணிக்கு நண்பனுக்கு கிடைக்கப்பெறும் அதீத அன்பு தான், அவனின் கவலைக்கு காரணமென்று தெரியவில்லை.

***************

அடுத்தநாள் கல்லூரிக்கு மணி வரவில்லை.

முந்தைய தினம், "திகழுக்கு அவன் அம்மா சாப்பாடு கொண்டு வந்தாங்க! அவன் உனக்கு கொடுக்க சொல்லிப்புட்டான்" என்று மணி கொடுத்த உணவு டப்பாவை இன்று திகழோவியனிடம் கொடுக்க அவனது வகுப்பிற்கு வந்திருந்தாள் செந்தாழினி.

இடைவேளை நேரமென்பதால் ஒரு சில மாணவர்கள் மட்டுமே வகுப்பிலிருந்தனர்.

செந்தாழினியை கண்டுவிட்ட ஒரு மாணவன்,

"மணி இன்னைக்கு வரல செந்தா" என்று முந்திக்கொண்டு பதில் வழங்கினான்.

"சரிங்ண்ணா" என்றவள் திகழைப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்தான். கூடுதலாக அவளின் கையிலிருந்த டப்பாவை.

"ஏதே அண்ணனா... அழகா இருக்க பொண்ணுலாம் அண்ணான்னு சொன்னா பசங்க நிலைமை" என்று நெஞ்சில் குத்திக்கொண்டு அதிர்வதாய் காட்டிக்கொண்ட அம்மாணவன், "நல்லாயிரும்மா தங்கச்சி" என்று ஆசீர்வாதம் செய்வதைப்போல் பாவனை செய்தான். மற்ற மாணவர்களிடம் சிரிப்பின் ஆர்ப்பரிப்பு.

செந்தாழினி திகழை நோக்கி அடி வைத்திட, வேண்டாம் என்பதைப்போன்று விழிகளாலே அவளைத் தடுத்திருந்தான்.

செந்தாழினியும் மணியை பார்ப்பதற்காக வந்ததாகவேக் காட்டிக்கொண்டு திரும்பிச் சென்றிருந்தாள்.

என்ட்ர கண்ணசைவும் புரியுதா அவளுக்கு!' சன்னமாக முறுவலித்துக் கொண்டான்.

மதிய உணவு இடைவேளைக்கு முன்னதான வகுப்பு செந்தாழினிக்கு நூலக நேரம். அவள் வகுப்பு மாணவர்கள் யாவரும் கேன்டீன், மைதானமென சென்றுவிட, செந்தாழினி மட்டும் தன்னுடைய தோழியுடன் நூலகம் சென்றாள்.

அவள் கூட்டமின்றி செல்வதை கவனித்த திகழோவியன், தனது நண்பர்கள் பார்வையில் விழாது தானும் நூலகம் சென்று செந்தாழினி அமர்ந்திருந்த மேசைக்கு எதிர் மேசை இருக்கையில் அமர்ந்தான்.

புத்தகத்தை திருப்பிய செந்தாழினி தனக்கு முன்னால் அரவம் உணர்ந்து யாரென்று பார்க்க, திகழோவியன் புத்தகங்கள் அடுக்கி வைத்திருக்கும் ராக்குகளுக்கு இடைவெளியில் சென்று நின்றான்.

தன்னுடன் வந்த வசந்தி எங்கென்று பார்த்த செந்தாழினி, அவள் அந்த வரிசையிலேயே இறுதியில் புத்தகம் தேடிக்கொண்டிருக்க, இவளும் வேறொரு புத்தகம் எடுப்பதைப்போன்று திகழோவியின் சென்ற அடுத்த இடைவெளிப் பகுதிக்குள் சென்றாள்.

திகழோவியன், செந்தாழினி இருவருக்கும் நடுவில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட உயரமான ராக்குகள்.

அந்தப்பக்கமிருந்து கீழாகத் தெரியும் திகழின் பாதத்தை வைத்து அவனுக்கு நேரெதிர் சென்று நின்று, அவ்விடத்தில் புத்தகம் ஒன்றை எடுத்தாள். அதற்கு அருகிருந்த மற்றொரு புத்தகத்தை அந்தப்பக்கமிருந்து திகழ் எடுத்திட, கிடைத்த இடைவெளியில் இருவரும் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொண்டனர்.

அவளே பேசட்டுமென்று அவன் பார்த்திருக்க, அவன் தன்னிடம் பேச வந்ததன் காரணமறிந்த செந்தாழினி, கையிலெடுத்த புத்தகத்தை புரட்டிக்கொண்டே, மெல்லிய ஒலியில்,

"உம்மட லஞ்ச் பாக்ஸ் கொடுக்க வந்தேனுங்" என்றாள்.

"ஹோ..." என்ற திகழோவியன், "நேத்து அரிசிம் பருப்பு சாதம் நல்லாயிருந்துச்சு" என்றதோடு, "இன்னொரு நாள் கிடைக்குமா?" எனக் கேட்டான்.

அவன் கேட்டதில் செந்தாழினி விலுக்கென நிமிர்ந்து, இமைகள் விரிய அவனை ஏறிட்டாள்.

"வாழ்க்கை முச்சூட உன்ற கையால சாப்பிட முடியுமான்னு கேட்கத்தான் ஆசை. இதை கேட்டதுக்கே இப்படி ஷாக் ஆனா, அதை எப்படி கேட்கிறது?" என்றான்.

எவ்வித பூசலுமின்றி காதலை சொல்லிவிட்டான். அவள் தான் அலமலந்துப் பார்த்து வைத்தாள்.

"உன் லவ் தெரிஞ்சவாட்டிதான் நான் சொல்லனுன்னே முடிவெடுத்தேன். இப்போ சொல்லியும்போட்டேன்" என்றான்.

"நான்..." அவளால் இன்னமும் அதிர்விலிருந்து வெளிவர முடியவில்லை. ஒருவித இனிய படபடப்பு அவளுள். எதிரெதிர் முகம் பார்த்து புன்னகைக்கவே யோசிப்பவன், இன்று நேரடியாக காதலை சொல்வது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

'பேசவே கடன் கேட்கிற ஆளு... நாம லவ்வை சொன்னா மறுக்கத்தான் செய்வாங்க!' என நினைத்திருந்தவளுக்கு தானாக வந்து அவன் சொல்லியதில் நம்ப முடியாத ஆர்ப்பரிப்பு.

"வசந்தி உன்னை என்கூடால வச்சு ஓட்டுறது தெரியும். அதோட நீ என்னை பாக்குற பார்வையோட வித்தியாசம் கூடவா எனக்கு புரியாது" என்ற திகழோவியன், அவள் மீது தனக்கு காதல் வந்ததற்கு காரணமாக மணியிடம் சொல்லியதை அவளிடமும் கூறினான்.

"இனிமே என்னை பாக்குற நேரம் நீ ஸ்மைல் பண்ணலாம்" என்றதோடு, "என்ட்ர மனசுமே அதை ரொம்பவே தேடுது" என்றான்.

"யாரும் என்ட்ரகூட உங்களை சேர்த்து வச்சு பேசினா, உம்மட பிரண்ட்ஸ் ஓட்டினா ஒண்ணுமில்லையா?" எனக் கேட்டாள். அன்று அவன் இதைத்தானே காரணமாக சொல்லியிருந்தான். இதில்தானே அவனின் மீதான பிடித்தம் கூடுதல் பெற்று காதல் எல்லைக்குள் நுழைந்திட்டது. ஆதலால் அதே காரணம் இப்போதும் உள்ளதே என சுட்டிக்காட்டியவளாக வினவினாள்.

"என்னைய ஒரு பொண்ணுக்கூட வச்சு ஓட்டுறாங்க அப்படின்னா, அந்தப்பொண்ணு என் மனசுக்கு புடிச்சவளா இருக்கணும். எனக்கானவளா இருக்கணும்" என்ற திகழின் குரலில் விவரிக்க முடியா உணர்வுகள் குவிந்து நின்றன.

அவனிடத்தில் இப்படியொரு பதிலை செந்தாழினி எதிர்பார்க்கவில்லை.

"வெளிய கப்போர்டில் என் பேக்ல லஞ்ச் பாக்ஸ் இருக்கு எடுத்துக்கோங்" என்றாள்.

திகழோவியன் ஒற்றை புருவம் உயர்த்திட,

"என்னோடது எடுத்துக்கோங்" என்றாள்.

அவளின் சம்மதம் அவளது மறைமுக தெரிவித்தலில் பிடிபட, சிறு சிரிப்போடு பின்னந்தலையை அழுந்த வருடிக்கொண்டான்.

"செந்தா இங்க என்ன பண்றவ? புக் கிடைச்சிடுச்சு" என்று வசந்தி வரவே, அவனுக்கு மென் தலையசைப்பைக் கொடுத்தவள், வசந்தியிடம் சென்று அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்த திகழோவியன், அவளை கடைக்கண்ணால் பார்த்தவாறு வெளியேறினான். செல்லும் அவனை மேல் விழிகளால் நெஞ்சம் பரவிய குளிரோடு விழுங்கி வைத்தாள்.

நூலகத்திற்கு வெளியில் உள்ள கப்போர்டில், உள்ளே செல்வதற்கு முன்பு பேனா மற்றும் குறிப்பேட்டைத் தவிர்த்து மற்ற உடமைகளை மாணவர்கள் வைத்திட வேண்டும். அங்கு வந்த திகழோவியன் செந்தாழினியின் பை எதுவென்று பார்த்தும் கையிலெடுத்திருந்தான்.

தன்னுடைய பையிலிருந்த உணவு டப்பாவை அவளது பையில் வைத்தவன், அவளுடையதை தான் எடுத்துக்கொண்டான். எடுத்த இடத்தில் அவளின் பையை வைக்கும்போது தான் நினைவு வந்தவனாக, மீண்டும் பையை ஆராய்ந்து அவளின் அலைபேசியை எடுத்தான்.

"பாஸ்வோர்ட் போட்டிருப்பாளோ!" நினைத்துக்கொண்டே திகழோவியன் அலைபேசியின் திரை தொட்டிட, கடவு வழிமுறையின்றி திறந்து கொண்டது.

"அநியாயத்துக்கும் நல்லவளா இருப்பப்போல" என பற்கள் தெரிய இதழ் விரித்தவன், அவளுடைய எண்ணை அறிவதற்காக தன்னுடைய எண்ணை அழுத்திட,

"ஓவி" என்ற பெயரில் திரையில் மிளிர்ந்தது.

அவனின் காதல் மனம் புதுவித உணர்வில் தத்தளித்தது.

தன்னுடைய அலைபேசிக்கு அழைப்பு விடுத்து அவளின் எண்ணை பதிவு செய்து கொண்டவன், தான் செய்ததை குறுஞ்செய்தியாக அவளுக்கு அனுப்பி வைத்தான்.

நூலக நேரம் முடிய ஒருவித படபடப்புடன் வந்து பையை திறந்தவளுக்கு, திகழோவியனின் லஞ்ச் பாக்ஸ் இருக்கவே முகமெல்லாம் ஒளிர்ந்தது.

இதுவே தினமும் வாடிக்கையானது.

இருவரும் நேசத்தை உணவு கலன் பரிமாற்றத்தில் வளர்த்துக் கொண்டிருந்தனர்.

அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக கொங்கு பிரியாணியை அடிக்கடி தானே செய்து கொண்டு வருவதை வழக்கமாக்கியிருந்தாள்.

அன்று தன்னுடைய அலைபேசி எண்ணை தெரிந்துகொண்டான் என்பதை அவன் அனுப்பி வைத்திருந்த குறுந்தகவல் மூலம் அறிந்துகொண்டவளுக்கு தினம் தினம் அவனிடமிருந்து குறுஞ்செய்தி வருமா என்ற எதிர்பார்ப்பது நீண்டது.

எண்ணை எடுத்துக்கொண்டதோடு சரி... அன்று தனது செயலை அவளுக்கு செய்தியாக அனுப்பி வைத்ததோடு சரி... அதன் பின்னர் மூன்று மாதங்கள் சென்றும் அவனிடத்திலிருந்து ஒற்றை அழைப்போ, தகவலோ வந்ததில்லை.

"நெம்பரெல்லாம் எடுத்தாங்க. லவ்வெல்லாம் சொன்னாங்க. தினமும் சாப்பாடெல்லாம் மாத்தி வைக்கிறாங்க. ஆனா பேச மட்டும் மாட்டாங்க" என்று தினமும் புலம்புவளுக்கு அவனை பார்க்கும் வரை தான் இந்த ஏமாற்றம், ஏக்கமெல்லாம்.

தினமும் காலை அவளை பார்ப்பதற்காக தங்களது துறை காரிடாரில் நின்றிருப்பவனின் காத்திருப்பு, தன்னைக் கண்டதும் அவனது கண்கள் காட்டும் காதல், இதழ் சிந்தும் துளி புன்னகை, இவை அவளுக்கு போதுமானதாக இருந்தது.

எதுவொன்றென்றாலும் கண்ணுகேத் தெரியாத தலையசைப்பில் அவளின் நலனை கேள்வியாய் முன் வைத்து அவளை அறிந்திடும், அந்த புரிதலில் அவளின் காதல் முழுமை கொண்டது.

நாள் முழுக்க பேசிட்டே இருக்க வேண்டும். இருவரும் கைக்கோர்த்து இந்த காலேஜ் முழுக்க சொல்ல வேண்டும். எல்லாருக்கும் எங்க காதல் தெரிய வேண்டும். அவனிடம் தன்னை உன் ஆளென்று மற்றவர் குறிப்பிட வேண்டும். இப்படி பல வேண்டும்கள் அவளிடத்தில் வேண்டுமாய் இருக்க, அவன் காட்டும் இந்த மொழியற்ற காதல் அவளுக்கு அதிகம் பிடித்தது. பல வேண்டும்களை விட, அவனது புரிதலுடனான, விழி சிந்தும் காதல், பார்வையில் தெரியும் அக்கறை நிறைவாக இருந்தது.

*******************
தொடர்ச்சி கீழே
👇🏻
 

Author: STN - 03
Article Title: உந்தன் நெஞ்சில் உயிராக 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
123
33
Chennai
"இன்னைக்கு எப்படியும் பஸ் மிஸ் பண்ணப்போறேன்" என்று முனகியவனாக திகழோவியன் வேகமாக கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

"பஸ் மிஸ் பண்ணா... அவள் முன்னாடி போயிடுவாள். அப்புறம் அவளை பார்க்க பிரேக் வர வெயிட் பண்ணனும்" என்று புலம்பியவனாக கிளம்பி நின்றவன், தன்னுடைய அலைபேசி எங்கென்று தேடினான்.

"ம்மா... என்ட்ர மொபைல் பார்த்தீங்களாங்?" கேட்டுக்கொண்டே அவன் தனது அறையையே சல்லடையாக அலசிட, அவனுக்கு பதில் சொல்லாமலே சாவதீனமாக அவனருகில் வந்தார் கல்யாணி.

"என்னங்மா பார்த்தீங்ளா?" என்று நிமிர்ந்தவன், அவரின் கையில் தனது அலைபேசி இருக்கவே, "தாங்கங்... நீங்க வச்சிருக்கேன்னு சொல்ல வேண்டியதானங்" என்றவனாக அவர் நீட்டிக் கொண்டிருந்த அலைபேசியை வாங்கி சட்டைப் பைக்குள் வைத்து, கல்லூரி பையை தோளில் மாட்டியவனாக, "வர்றேனுங்மா" என்று நகர்ந்தான்.

அறையை தாண்டியவன், கல்யாணி கேட்ட கேள்வியில் அடுத்த அடி வைக்காது நின்றிருந்தான்.

"என்னங்மா?"

"உன்ற காண்டாக்ட்ல மூணு புது நெம்பர் சேர்ந்திருக்கே கண்ணு யாரு?" எனக் கேட்டார்.

"அதெல்லாம் ஏங்மா பாக்குறீங்க?" என்றவனிடத்தில் அன்புக்கு அடிபணியும் அமைதி எல்லையை கடக்கும் வேகம்.

"அம்மா பார்க்கக்கூடாத அளவுக்கு அப்படியென்ன தங்கோ அதுல மறைச்சு வச்சிருக்க?" என்றவர், "இந்த மொபைலாலதான் சமூகம் சீரழியுது. என்ட்ர புள்ளை மேல எனக்கு அதிக அக்கறை கண்ணு. அதான் ஜாக்கிரதையா இருக்கியான்னு பார்த்தேன் சாமி" என்று அவனின் கன்னம் தட்டினார்.

"உங்களுக்கு தெரியாம என்னங்மா பண்ணிப்போடப்போறேன்" என்றவனுக்கு தொண்டையெல்லாம் அடைத்து வலிக்கும் உணர்வு. சொல்ல முடியா அழுத்தம் அவனை உள்ளுக்குள் கவ்விப்பிடித்தது.

"அதான் என்னமோ பண்றியாட்டுக்கு கண்ணு" என்ற கல்யாணி, "செந்தாழினின்னு புதுசா பொண்ணு பேரு பதிஞ்சிருக்கு" என்றார்.

அவரின் அந்தக் கேள்வியில் சுத்தமாக அவனுக்கு வெறுத்தேவிட்டது.

மேற்கொண்டு அவர் பேசிய,

"இந்த காலத்துல பொண்ணுங்க யாரும் ஒழுக்கம் கிடையாது தங்கோ. சேர்ந்து சுத்திப்போட்டு கழட்டி விட்டுப்போடுவாளுங்க. நீ ஏமாந்துடாத கண்ணு. உனக்கு அம்மா நானு இருக்கேன். உன்னை கடைசி வரைக்கும் அம்மா உள்ளங்கையில் தாங்குவேன்" என்றது அவனுள் அவர் காட்டும் அக்கறையென்ற அன்பில் சலிப்பை உண்டாக்கியது.

அவரும் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு எப்படி இப்படி பேச முடிகிறதென்று வருந்தியவனுக்கு அவரிடம் வாதிட மட்டும் வாய்வரவில்லை.

கல்யாணி அதிருப்தி அடையும் வகையில் திகழோவியன் எதாவது சொல்லிவிட்டாலோ அல்லது செய்துவிட்டாலோ,

"நீ அம்மா கைமீறி போவனும் நினைக்கிறியா தங்கோ?" எனக் கேட்டு, "உன்ற ஆசைக்கு எப்பவும் குறுக்க வரமாட்டேன் சாமி. என் கன்னுக்குட்டி சந்தோஷமா இருந்தா போதுமாட்டுக்கு" என்று அன்றைய நாள் முழுக்க கண்ணீர் சிந்தி, உணவு உண்ணாது படுத்தே கிடப்பார்.

அதற்காகவே முடிந்தளவுக்கு தனது பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறான்.

"பொம்பளப்புள்ள சவகாசமெல்லாம் வேணாம் தங்கோ."

"ம்மா" என்று இரைந்தவன், தலையை பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

அன்னையிடம் தன்னுடைய மனதை சொல்லி, செந்தாழினியையும் அறிமுகம் செய்து வைத்த பின்பே, தான் காதல் கொண்டவளிடம் நெருக்கம் காண்பிக்க வேண்டுமென, அவரிடம் சொல்லும் சந்தர்ப்பத்திற்காக அவன் காத்திருக்க, அவனுக்கோ அவரின் இந்த செயல், பேச்சுக்கள் அப்பட்டமான வெறுப்பை உண்டாக்கியது.

பொதுவாக பதின்பருவ பிள்ளைகள் அதிகம் விரும்பும் பிரைவசி எனும் தனியுரிமை சிறு சிறு விடயத்திற்கும் திகழோவியனுக்கு அன்னையின் அன்பு எனும் பெயரில் முற்றிலும் மறுக்கப்பட, அந்த அன்பின் மீதே வெறுப்பு வந்துவிடுமோ என்று பயந்துப்போனான்.

"நான் கேட்டு நேரமாகியும் இன்னும் அந்தப்பொண்ணு யாருன்னு நீ சொல்லல கண்ணு. அம்மாக்கு நீதான் சாமி உலகம். இப்போலாம் என்ட்ர கைவிட்டு நீ போயிடுவியோன்னு கெதக்குன்னு இருக்குது தங்கோ" என்றார்.

"ம்மா அப்படிலாம் இல்லங்மா... உம்மட விட்டுப்போட்டு நானெங்கங்மா போவேனுங்க" என்ற திகழோவியனிடம், "அந்தப்பொண்ணு யாரு சாமி?" என்றார் கல்யாணி.

அவனுக்கு அவரிடம் மறைக்க வேண்டுமென்ற எண்ணம் சற்றுமில்லை. ஆனாலும் இக்கணம் சொல்லிட ஏதோவொன்று தடுத்தது. இயல்பான அன்னையாக இருந்திருந்தால் சொல்லியிருப்பானோ? ஆனால் இந்த நொடி, உங்களைத் தாண்டி தனக்கு வேறொரு பெண்ணைப் பிடித்திருக்கிறதென்றால் அவர் எப்படி எதிர்வினை ஆற்றுவார் என்று யோசிக்கவே பயந்தான்.

அன்னை எனும் வரமுறைக்கு அதிகப்படியான பாசம் தனக்கு விலங்காகி நிற்கிறது எனும் கசப்பான உண்மையை உணர்ந்துகொண்டவனுக்கு விழுங்கவும் முடியவில்லை. வெளியே உமிழவும் முடியவில்லை.

"ஜூனியர் பொண்ணுங்மா. நோட்ஸ் வேணும்னு கேட்டிருந்தாள். அனுப்புறதுக்காக நெம்பர் வாங்கினேன்" என்றான்.

"என்ட்ரகிட்ட பொய் சொல்றியே தங்கோ" என்றவர், "நீதான் அவள் போன்ல இருந்து உன் நெம்பருக்கு கூப்பிட்டு அவள் நெம்பர் எடுத்ததா மெசேஜ் அனுப்பியிருக்கியே" என கேட்க, தன் மீதான அன்பெனும் கவனித்தல் எவ்வளவு தூரம் விஷமாக மாறியுள்ளதென்பது திகழோவியனுக்கு விளங்கியது. பெரும் அதிர்வாய் அதனை உள்வாங்கியிருந்தான்.

வழக்கமான, எதார்த்தமான அம்மாவாக இருந்திருந்தால் காதல் வந்த அன்றே அவரிடம் சொல்லியிருப்பானோ? அவர்தான் அவனை சிறுவயது முதல் அவனை நெருங்கிய சொந்தங்களுடன் கூட பேச அனுமதிப்பதில்லையே. நண்பர்களென யாருடனும் சேரவிட்டதில்லை. வெளியில் விளையாடவிட்டதில்லை. இருபது வயது ஆகப்போகின்ற நிலையிலும் அவையெல்லாம் அப்படியேதான் இருக்கின்றன. எவ்வித மாற்றமுமின்றி. இப்போதும் நண்பர்கள் வேண்டாம், யாரிடமும் அதிகம் நெருக்கம் கொள்ளாதே என்பது தானே அவரின் அறிவுரையாக இருக்கிறது.

'தந்தை தன்னிடமிருந்து ஒதுங்கியிருக்கவும் அன்னையின் இந்த அளவற்ற அன்பு தான் காரணமோ?' அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

"என்ட்ரகிட்ட நீ உண்மையை சொல்ல வேணாம் தங்கோ. அம்மா உனக்கு வேணாம்னு முடிவுபண்ணிப்போட்ட நீ. நானெங்காவது போறேன் சாமி" என்று அவர் அழுது முணுமுணுக்க...

"நோட்ஸ் கேட்ட பொண்ணு நெம்பர் தராமலே போயிட்டாளுங்மா. அதென் அவளை லைப்ரரியில பார்க்கவும், அவள் பேக்கிலிருந்து நானே எடுத்துக்கிட்டு, எடுத்துக்கிட்டதை மெசேஜ் பண்ணேனுங்க" என்றான். வெறுமையான குரலில்.

"உண்மைதானா சாமி?"

"ஆமாங்மா!" உணர்வற்ற பாவம் அவனிடம்.

"நீ நோட்ஸ் அனுப்புன மாறியே அதுல மெசேஜ் இல்லையே கண்ணு?"

திகழோவியன் நொந்தே போனான்.

முதல் முதலாய் அவளது எண்ணிற்கு அனுப்பிய தகவலென அழிக்காது வைத்திருந்த தனது மடமையை நிந்தித்தான்.

"நோட்ஸ், ஃபோட்டோ வேணாம்... உங்க நோட் கொடுங்க பிரிண்ட் போட்டுகிறேன் சொல்லி நேர்ல வாங்கிட்டாளுங்மா" என்றவன், தனது பதிலில் கல்யாணியின் முகம் இயல்புக்கு திரும்பவே, மேற்கொண்டு வேறெதுவும் கேட்பாரோ என அஞ்சி,

"வாரேனுங்மா" என்று வேகமாக வெளியேறியிருந்தான்.


எதிரே வீட்டிற்குள் வந்த ராஜேந்தினை இடித்ததுக்கூட கருத்தில் பதியாது, அங்கிருக்கும் மூச்சு முட்டும் உணர்வில் விரைந்து சென்றிருந்தான்.

நெஞ்சில் உயிர் நிறையும்...
 
Last edited:

Kalai Karthi

Active member
Sep 21, 2025
409
141
43
Madurai
திகழ் அம்மா ஓவர் அன்பு பாவம் திகழ். திகழ் அம்மா வேற வளர்ப்பு பையனை தத்து எடுத்து இருந்தால் பயம் இல்லாமல் இருந்து இருக்கலாம். கணவன் சூப்பர். மனைவி செய்வதை பொருத்து போகிறார்.
 
  • Love
Reactions: STN - 03

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
123
33
Chennai
திகழ் அம்மா ஓவர் அன்பு பாவம் திகழ். திகழ் அம்மா வேற வளர்ப்பு பையனை தத்து எடுத்து இருந்தால் பயம் இல்லாமல் இருந்து இருக்கலாம். கணவன் சூப்பர். மனைவி செய்வதை பொருத்து போகிறார்.
நன்றி அக்கா 😍😍
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
இப்ப கல்யாணி insecurity பீல் la இருந்து psycho நிலைக்கு போயிட்டு இருக்காங்கன்னு தோணுது.....
முதலில் இவங்களை பாவமா பார்த்தா இப்ப பயந்து வருது.....
நமக்கே இப்படின திகழ் நிலை?????