உந்தன் நெஞ்சில் உயிராக 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
125
33
Chennai
உந்தன் உயிராக 15

சில அடிகளுக்கு முன்னதாக செந்தாழினியை திகழோவியன் கண்டுகொண்டான்.

உயிர்ப்பற்ற வெறும் உடலாய் தெரிந்த அவளின் தோற்றம் மனதை கனக்கச் செய்தது.

வண்டியை நிறுத்தியவன் அவள் அமர்ந்திருந்த கல்மேடையின் மற்றைய பக்கம் அமர்ந்தான்.

இருவருக்குமான இடைவெளி மனதின் தூரத்தை சுட்டியது.

அவன் அமர்ந்த பிறகே அவனின் அரவம் உணர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

முகம் பொலிவிழந்து, கேசம் திருத்தப்படாது, தாடி மழிக்கப்படாது, கசங்கிய ஆடையுமாக ஏனோதானோவென்று காணப்பட்டான்.

உள்ளம் சிதிலமடைந்திருக்கும் போது, வெளிப்புறத் தோற்றம் எப்படி பளிங்குக்கொள்ளும்.

"ஏனுங் இப்படி இருக்கீங்?" ஆத்தமாட்டாமல் கேட்டிருந்தாள்.

"எப்படி இருக்கேன்?"

அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கேவல் ஒன்று பொங்கி கரையுடைக்க முயல, கட்டுப்படுத்தியிருந்தாள்.

இருவருக்கும் இடையே பெருத்த அமைதி மட்டுமே.

சுத்தமாக அவனுக்கு என்ன பேச வேண்டுமென்றே தெரியவில்லை. எது பேசினாலும் வாதம் தான் துவங்கும். அதற்காகவே வாய் திறக்காது, வெகு நாட்களுக்குப் பின்னர் அவளுடனான நேரத்தை மனதில் சேமித்துக் கொண்டிருந்தான்.

"ஏன் வர சொன்னன்னு கேட்கமாட்டீங்களாங்?" அவளே அமைதியை உடைத்தாள்.

"எதுவோ முடிவெடுத்துட்ட. ரெண்டு பேருக்கும் நல்லதா இருந்தா சரி. இல்லைன்னா... அதுக்குத்தான் கேட்காம இருக்கேன்!" உள்ளத்தை உள்ளபடி கூறினான்.

"எல்லாமே மாறிடுச்சுங்களா நமக்குள்ள! முன்ன இருந்தது இப்பவும் இருக்குங்ளா?"

"இதுக்கு நானென்ன பதில் சொல்லோணும் உன்ற மனசு நினைக்குது?"

"தெரியலங்கங்!"

தலையை இருபக்கமும் அசைத்தவனாக தங்களுக்கு முன்னிருந்த ஏரியில் பார்வையை குவித்தான்.

நிமிடங்கள் கரையத் துவங்க, மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்து வெளியேற்றியவள்...

"என்னைய கல்யாணம் பண்ணிக்கிறீங்களாங்?" என கண்களை மூடிக்கொண்டு கேட்டிருந்தாள்.

அவள் கேட்டதை நம்ப முடியாது அத்தனை வேகமாக தலை திருப்பி அவளின் முகம் பார்த்திருந்தான்.

ஒரு கணம் அப்படியொரு மகிழ்வு ஊற்றாய் அவனது உள்ளம் சுரந்தது.

எந்தவொரு சூழலிலும் தன்னை அவளால் விட முடியவில்லை என்று அவளது காதலில் கர்வம் கொண்டான்.

அந்த மகிழ்வும், கர்வமும் நொடி நேரம் கூட நீடிக்கவில்லை...

"நானு அப்படி கேட்டதையே ஜீரணிக்க முடியலதானுங்... அசிங்கமா இருக்குங்க!" என்று அவள் சொல்லியதில் அவனின் நெற்றி சுருங்கியது.

"இப்போ நீங்க என்ட்ர அண்ணன். ஆனாலும் என் மனசும், நெனைப்பும் வேறயா உம்ம சுத்துறதுல என்னைய நெனச்சே அருவருப்பா இருக்குங்க."

அவளது குரல் உடைந்து வெளியேறியது.

"அருவருப்பா?" அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. சூழ்நிலை பேச வைக்கிறதென்றாலும், இம்மாதிரியான வார்த்தைகளை சொல்லாமல் இருக்கலாமே என்று துடித்தான்.

"நம்ம ரெண்டு பேரும் ஒரே ரத்தமுங்க."

"அதுக்கென்ன?"

அவன் கேட்ட நொடியே செந்தாழினி அதிர்ந்து போனாள்.

"என்ன கேட்டீங்?"

"அதுக்கென்னன்னு கேட்டேன்."

அவளின் அசையா பார்வையில், அவன் வேதனையோடு சிரித்தான்.

"நான் உன்னை முதல்ல பார்த்தப்போ தங்கச்சின்னு பார்க்கல. நீயும் என்னை அண்ணன்னு பார்க்கல. நாம காதலிச்சோம்" என்று அவன் அடுத்து தொடரும் முன்பு,

"அது தெரியாம நடந்த தப்புங்க" என்றிருந்தாள் செந்தாழினி.

"தப்பா?" அவன் கண்களில் வலி கூடியது. 'என்ன உறவென்று தெரிவதற்கு முன்னர் வரை அத்தனை அழகாய் தெரிந்த காதல் இப்போது அருவருக்கிறது, தப்பாகத் தெரிகிறது... அப்படியே பேசாமலே விட்டிருக்கலாமே! நாள்போக்கில் இதையும் பழக ஆரம்பித்திருக்கும் மனது. எதற்கு வரவழைத்து தங்கள் காதலை கொச்சைப்படுத்த வேண்டும்.' தீயாய் தகித்தான். இதையெல்லாம் வெளிப்படையாய் அவளிடம் கேட்க முடியவில்லை.

"நம்ம காதலிச்சது தப்பா?"

"அப்படி சொல்லலங்."

"பொறவு?"

"தெரிஞ்ச பொறவும் அதே மாதிரி இருக்கிறது தப்புதானுங்க?" என்று செந்தாழினி அழுத்தமாக மொழிந்தாள்.

திகழோவியன் உறைபனியாய் உறைந்து ரத்தம் சுண்டினான்.

"காதலிச்சிட்டோங்கிறதுக்காக உறவு நெறி மீறி ஒண்ணு சேருரது நல்லாயிருக்காதுங்."

கசப்பாக சிரித்தான்.

"புதுசா முளைச்ச உறவெல்லாம் என்ட்ர கண்ணுக்கும், மனசுக்கும் தெரியல... அதுக்காக உறவை சீரழிக்கிற முடிவை எடுக்கணும்னும் நான் சொல்ல வரல... ஏனோ, இப்போ எந்த முடிவும் எடுக்க வேணாங்கிறதே சரிங்கிற முடிவா இருக்கும் தோணுது" என்றான்.

மெதுவாக வழிந்த கண்ணீரைத் துடைத்தவள், "காதலிச்சேன்" என்றாள்.

அவன் விழிகள் அவளை நோக்கின.

"உம்மட மனசை உயிரா காதலிச்சேனுங். இப்பவும் காதலிக்கிறேனுங். ஆனாலும் தெரிஞ்ச உறவை அவமதிக்க முடியலங்." அவள் குரல் நடுங்கியது. கண்களை மூடிக்கொண்டாள்.

"நாளைக்கு நான் உம்மட கைய பிடிச்சு நின்னா... என்ட்ர ஐயன் தலை குனியணுமுங்க. உம்மட அப்பா தலை குனியணுமுங்க. நம்மள பெத்தவங்க முகம் பார்க்க முடியாம போவுமுங்க. அதனால அந்த காதல் எனக்கு வேணாங்."

"கல்யாணம் பண்ணோணும் நான் சொல்லலயே! சட்டுன்னு ஒரு முடிவுக்கு வர வேணாம். பொறுமையா இருப்போம்." இனி இருவரும் சேர்வதற்கான வாய்ப்பே இல்லையென நன்றாகத் தெரிந்தாலும், ஏனோ அவனால் அவளை விடமுடியவில்லை. விட்டுவிட முடியாதெனும் அழுத்தம்.

"பொறுமையா இருந்தா மட்டும் இந்த உறவு மாறிப்போடுமாங்!"

பதிலற்ற கேள்விக்கு எங்கனம் விடை கொண்டுவருவான்.

"நம்மளையே வெறுக்கிற நிலை வரக்கூடாதுங்."

அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் குத்தீட்டியாய் திகழோவியனின் நெஞ்சில் நேராக இறங்கியது.

முதல் முறையாக...

இந்தப் போராட்டத்தில் செந்தாழினி அவனைவிட வலிமையானவள் என்று அவனுக்குப் புரிந்தது.

ஆனால் புரிந்ததால் வலி குறையவில்லை.

இழுத்த கோட்டின் ஒரு பக்கத்தில் உறவு நின்றது. மறுபக்கத்தில் அவனது காதல் நின்றது.

அந்தக் கோட்டை தாண்ட முடியாமல் திகழோவியன் இதயம் பிளந்து நின்றான். 💔

அவளைப்போன்று அவனால் தெரிந்த உறவை ஏற்றுக்கொள்கிறேன், கொண்டிருந்த உறவை முறித்துக்கொள்கிறேன் என்று தீர்க்கமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

உள்ளுக்குள் ஒரு குரல். 'அவசரப்படாதே! காலத்தின் கைகளில் உந்தன் நெஞ்சில் உயிராக நிறைந்திருக்கும் காதலை ஒப்படைத்துவிட்டு, அமைதியாக இரு. பொறுமையாகக் காத்திரு. எல்லாம் மாறுமெனும் தீனமான குரல்.'

காதலை விட முடியாததால் மனம் அவ்வாறு ஓலமிடுகிறதென நினைத்தாலும், ஏனோ அவன் உறவு மீறிய பந்தத்தில் இணையவும் விரும்பவில்லை.

சரியோ? தவறோ?

இருவரின் நெஞ்சமும் சுமந்தது உயிர்க்காதலே!

தற்போது அந்த காதல் வேண்டுமென்பதற்கு தகுந்த காரணமிருப்பினும், தன்னால் உதற முடியாத நிலையில், அவளால் எப்படி முடிகிறதென அணுக்கள் உடைய சிதறினான்.

அவ்வலியை பொறுக்க முடியாது,

"கல்யாணமாகி, குழந்தையே பொறந்து, இந்த உண்மை தெரிஞ்சிருந்தா என்ன பண்ணியிருப்ப?" எனக் கேட்டிருந்தான்.

அவளெப்படி தங்கள் காதலை விட்டுக்கொடுக்கலாம் எனும் கோபம். காதல் கொண்டவனாக நியாயமான கோபம்.

"இப்பைக்கு இப்படியான நெனைப்புக்கூட தப்புன்னு உங்களுக்கு தோணுலையாங் மா..." தன்னைப்போல் சொல்ல வந்தவள், சுதாரித்து நிறுத்தியிருந்தாள்.

"உங்களை மாமான்னு கூப்புட்டதெல்லாம் நெனச்சாலே அசிங்கமா இருக்குங்..." அவள் சொல்லி முடிக்கும் முன்பு, வேகமா எழுந்திருந்தவன் காலை தரையில் எத்தினான்.

குறுக்கும் நெடுக்குமாய் அத்தனை வேகமாய் நடந்தவன், அவளின் முகத்திற்கு அருகே குனிந்து, சுட்டுவிரலை காண்பித்து,

"மூச்..." என்றான். கண்களில் கனல் தெறித்தது.

"உன்னை ஏமாத்திக்கிறது மட்டுமில்லாம என்னையும் ஏமாத்தாத" என்ற திகழோவியன்,
"என்னைப் பார்த்தா எப்புடி தெரியுது. அன்னைக்கு பார்க்க வந்தது கூட, காதலுக்காக உறவையும், உறவுக்காக காதலையும் போட்டு குழப்பிக்காம... நடந்ததை அங்கேயே விட்டுட்டு அமைதியா இருப்போம். எல்லாத்துக்கும் காலம் தான மருந்து. நமக்கான மருந்தாவும் காலம் மாறும். தப்பு பண்ணிட்டோம் அப்படின்னு நெனச்சு வெம்பாதன்னு சொல்லத்தான் வந்தேன். கல்யாணம் பண்ணிக்கலாமா கேட்க இல்லை. காதல் முக்கியமானதா இருக்கலாம், ஆன நமக்குள்ள புனிதமான ரத்த பந்தம் இருக்குங்கிறப்போ, அந்த புனிதத்தை நான் மட்டும் எப்படி மீறுவேன் நெனைச்ச" என்றான்.

"நாம சேரவேப் போறதில்லைதான். அதுக்காக ஏதோ தெரிஞ்சுப்போச்சுன்னு, நமக்குள்ள இருந்த காதல் போயேப்போச்சுன்னு நீ சொல்லுறதும்... நமக்குள்ள நடந்த அழகான நேரமெல்லாம், பேச்செல்லாம் அசிங்கம் சொல்றதும் ரொம்ப வலிக்குதுடி... இங்க வலிக்குது" என்று தன்னுடைய இதயத்திலே ஓங்கி குத்தியிருந்தான்.

"எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். சிலதை ஏத்துக்க சிலதை ஒதுக்கித்தான் ஆவணும். இங்க காதலை ஒதுக்க வேண்டிய கட்டாயம்... அதுக்காக நமக்குள்ள வந்த காதலே பாவமுங்குற மாதிரி பேசுற... உண்மை தெரியாம இருந்திருந்தாக்கா, இதோ இப்போ... இப்பைக்கு எப்படி இருந்திருப்போம்?" என்றவன், "மூனு மாசத்துக்கு முன்னாடி இக்கட்டிக்கு நமக்குள்ள என்ன நடந்துச்சு நினைவிருக்கா...?" என்றான். அன்றைய நிகழ்வில் சட்டென்று குளிர்ந்திருந்தான்.

தெரிந்த உறவை மதிக்காது உதறித்தள்ள அவன் நினைக்கவில்லை. உயிரில் நிறைந்த நேசத்தை ஒதுக்கி வைக்க முடியாமலே தவித்துப்போகிறான்.

நொடி நொடியாய் ரசித்து மனப்பெட்டகத்தில் பொத்தி வைத்த காதலை, அவள் அருவருப்பாய் நினைப்பதே அவனை சில்லு சில்லாய் சிதைக்கிறது.

"இனி நமக்குள்ள இல்லைன்னு ஆன ஒண்ணை என்ன சொன்னா என்னங்?" என்றவள், "அண்ணன், தங்கச்சி ரெண்டு பேரும் காதலிச்சோம் சொல்றது அசிங்கம்தானுங்?" என்றாள்.

"அய்யோ தாழினி" என்று வெறிப்பிடித்தவனாகக் கத்தியவன்,

"திரும்பத் திரும்ப அப்படி சொல்லாதடி... இப்போ தப்பாயிருந்தாலும், அதெல்லாம் அவ்ளோ சந்தோஷத்தை கொடுத்தது. உன்னால எப்படிடி முடியுது" என்றவன், "ஒண்ணுமில்லன்னு ஆகிப்போச்சுல... கெளம்பு நீ" என்று பாதையை கை காண்பித்தான்.

அவளுக்கு வேண்டுமாய் இருந்ததும் அதுதானே! வேகமாக திரும்பியும் பாராது சென்றுவிட்டாள். அவன் அவளையே பார்த்து, அவ்விடத்திலே நின்றுவிட்டான்.

உள்ளம் கதறும் கதறலை அவள் மட்டுமே அறிவாள்.

தெரிந்தேதான் தங்களின் காதலை பல்வேறு வார்த்தைகளால் கொலை செய்தாள்.

அப்போதுதானே அவன் அவளை மறப்பான். தள்ளி வைப்பான். நினைவுகளை துறப்பான். காதலை புதைப்பான். அடுத்தெனும் வாழ்வை நோக்கி நகர்வான்.

திகழோவியன், "பொறுமையா இருக்கலாம்" என்று சொல்வதிலே, அவன் எப்போதும் அந்த காதலை விடமாட்டான், உறவுக்காக வேண்டாமென்று இருப்பானேத் தவிர, காதலை மறந்து வாழ்வில் அடுத்த அடி வைக்கமாட்டானென்று அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்ததாலே அவளின் பேச்சுக்கள் யாவும் அவ்வாறு இருந்தன.

கை சேரப்போவதில்லை எனும் பந்தம் முறிந்து வாழ்வு சீராவது தானே நியதி. அதனை ஏற்க முடியாது தத்தளிப்பவனை கரை சேர்க்க நினைத்தவள், தானும் அவனைப்போன்றுதான் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணராமல் போனாள்.

அவன் தன்னை வெறுத்தால் போதுமென்ற எண்ணம் அவளுக்கு. ஆனால் அது அவனால் முடியுமா என்று யோசித்துப் பார்க்க தவறிவிட்டாள்.

இதில் திகழோவியனையோ, செந்தாழினியையோ குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. அவர்களை இப்படியொரு நிலையில் நிற்க வைத்த விதியை மட்டுமே நொந்துக்கொள்ள வேண்டும்.

விதியின் மூலம் ராஜேந்திரனும் கல்யாணியும். அவர்களே அறியாது காலத்தின் கைகளில் சுழன்று, பெரும் பாவத்தை செய்திருந்தனர். அந்த பாவம் கை சேர்ந்ததோ ஒரு உண்மையான காதலை அழித்திட.

இனி வரும் நாட்கள் யாவும் இருவருக்கும் வலி சுமந்து ஜீவிப்பவையாகவே!

****************

காலமும் நேரமும் யாருக்காகவும் நிற்பதில்லை... நிலையற்ற வாழ்வில் நிலையானது காலம் மட்டுமே!

வெகு விரைந்து எட்டு மாத காலங்கள் ஓடியிருந்தன.

இப்போதெல்லாம் உயிரோடு இருக்கும் நாட்களுக்காக வாழ்கிறோம் எனும் மனநிலை தான் திகழோவியனிடமும், செந்தாழினியிடமும்.

அன்றைய சந்திப்பிற்கு பிறகு, இருவரும் பார்த்துக்கொள்ளவே இல்லை.

பெயருக்கு உண்டு நடமாடிக் கொண்டிருந்தனர்.

திகழோவியனுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது மணி மட்டுமே!

கல்யாணியின் சத்தமெல்லாம் தற்போது மெல்ல குறைந்திருந்தது. திகழோவியனுக்கு உண்மை தெரிந்துவிட்டதென்ற அவரின் தவறான கணிப்பே அவரை அடங்கிப்போக வைத்தது. அதோடு அவரின் உடல் நலனிலும் பெரிதான மாற்றம்.

மகன் தன்னைவிட்டு சென்றுவிடுவானோ எனும் பயத்திலே உடல் நலனில் அக்கறையின்றி இருந்துவிட்டார்.

திகழோவியனுக்கு தன்னை கவனிக்கவே நேரமில்லை. எப்போதும் தனியுலகில் சோகமே வாழ்வாக வலம் வந்தவனுக்கு சுற்றி இருப்பவர்களை கவனித்து பார்க்குமளவிற்கு கூட கருத்தில்லை.

அன்றைய தினம் கோவிந்தன் பணிக்குச் செல்ல கிளம்பிக்கொண்டிருக்க, திகழோவியன் கூடத்தில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தான்.

"கல்யாணி எழுந்துக்கலையா?" கோவிந்தன் கேட்க, "தலை வலிக்குதுன்னு சொன்னாங்கங்பா. டீ போட்டு கொடுத்தேங். படுத்து எழும்பியாறேன் சொன்னாங்கங்" என்றான்.

"அடிக்கடி தலை வலிக்குதுன்னு சொல்றாள். ஹாஸ்பிட்டல் வான்னா, நானே காட்டிப்புட்டேன். வலிக்கிற நேரம் போட்டுக்க மாத்திரை கொடுத்தாங்க சொல்றா... என்னன்னு நீ கேளு. உன்றகிட்ட சொல்லுவா!" என்றார்.

"கேட்டுப் பார்த்துட்டேனுங்... சரியாப்போவும்... சரியாப்போவும் மட்டும்தாங் சொல்றாங்கங்" என்ற திகழோவியன், "நீங்க ஒரு நல்ல ஹஸ்பெண்டா நடந்திருக்கலாமுங்பா" என்றான்.

விரக்தியாய் சிரித்த கோவிந்தன்...

"சிலதுக்கு பதில் தேடாம இருக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது" என்று கல்யாணியின் அறைக்குள் சென்றார்.

உள்ளே சென்றவர் இரண்டு நிமிடங்களில் முகம் முழுகக் வேதனையை அப்பிக்கொண்டு வெளிவந்தார்.

அவரின் நடை தள்ளாடியது. உடலெல்லாம் வியர்த்து சரியப்போனவரை ஓடி வந்து தாங்கியிருந்தான் திகழோவியன்.

"என்ன பண்ணுதுங்பா?" என்றவன் அவரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தி, பருக தண்ணீர் கொடுக்க மெல்ல ஆசுவாசமானார்.

"என்னாச்சுங்பா?" கவலை படிந்து திகழோவியன் கேட்க...

"அவள்... " தொண்டையை செருமியவர், "போயிட்டாள்!" என்றார்.

"போயிட்டாங்களா?" என்ற திகழோவியன், "நான் தானுங் உள்ளாற படுக்க வச்சேன். கொஞ்சம் முன்னக்கூட எட்டிப்பார்த்தேன், நல்லா தூங்கிட்டு இருந்தாங்கங்களே!" என்றான்.

"கல்யாணி போயிட்டாள்" என்றவர் இருக்கையில் பின் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.

எதுவோ புரிந்திட, வேகமாக அறைக்குள் ஓடியவன்,

"அம்மா" என்று பெருங்குரலெடுத்துக் கத்தியிருந்தான்.

அவனது கத்தலில் கோவிந்தனின் உடல் துடித்து அடங்கியது.

அன்புச் சிறையில் ஆயுள் கைதியாக வைத்திருந்தாலும், கல்யாணி திகழோவியனுக்கு நல்ல அன்னையே! அவர் அவனிடம் காட்டிய அன்பின் பிரதிபலிப்புத்தான் அவனது இந்த ஓலம்.

சுற்றத்தாருக்கு தகவல்கள் சொல்லப்பட... அடுத்த ஒருமணி நேரத்தில் கூட்டம் கூடியிருந்தது.

வந்திருந்தவர்களில், ராஜேந்திரன், நாராயணன் குடும்பமும் அடக்கம்.

அன்று தான் மீண்டுமொரு அதிர்வாக செந்தாழினிக்கு, திகழோவியன் ராஜேந்திரனின் தங்கை மகன் என்பது தெரிந்தது.

முந்தைய உண்மை பெரிதாய் இருந்திட, இதன் தாக்கம் சற்று குறைவு தான். தன்னை தேற்றிக்கொண்டாள். அவ்வாறு நினைத்துக்கொண்டாள். அவ்வளவே!

கல்யாணியின் காலடியில் தலை வைத்து சுருண்டு கிடப்பவனின் தோற்றம் பெரும் வதை கொடுக்க, ஒரு தூணில் சாய்ந்தவளாக அமர்ந்துவிட்டாள் செந்தாழினி.

அவனை தூக்கி தனது மடி கிடத்தி தேற்றி ஆறுதல் படுத்த உள்ளமும், கைகளும் பரபரத்தன.

ஆனால்...

ஆனால் எனும் உறவு முன்னால் நிற்க அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அண்ணன் எனும் உறவாக அறிமுகமாகி பந்தம் கொண்டிருந்தால், தங்கையாய் மடி தாங்கியிருப்பாள். நேசம் கொண்ட பந்தம் நீடித்திருந்தால் காதலியாய் அரவணைத்திருப்பாள். தற்போது எந்த உறவில் நின்று அவனை நெருங்குவதென தெரியாது எட்ட நின்றுகொண்டாள்.

படுக்கையறையில் இறந்தவரின் உடலை கூடத்தில் வைப்பதற்காக தூக்கியபோதுதான் அவரின் தலையணைக்கு அடியில் கிடந்த மருத்துவ கோப்புகளை பார்க்க முடிந்தது.

தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்து போயிருந்ததை கவனிக்காமல் விட்டதோடு, அறுவை சிகிச்சையில் சரி செய்யும் நிலையையும் தாண்டியிருக்க பிழைக்க வழியின்றிப்போனது.

எப்போது அடி பட்டிருக்குமென்று கோவிந்தனுக்கு ஒரு அனுமானமிருந்தது.

கிணற்றில் விழுந்த அன்று தான், படியில் நின்றவர் முதன் முதலாக தலை வலிக்கிறதென அழுத்திப் பிடித்தார்.

அன்றைய நடிப்புக்கான தண்டனை அன்றே கிடைத்திருந்ததுப்போலும்.

உண்மை தெரிந்ததும், தன்னிடம் கூட சொல்லவில்லையே என்று மருகி மருகி திகழோவியன் கதறும் கதறலை யாராலும் கண்கொண்டு பார்த்திட முடியவில்லை.

அழுது அழுதே மூர்ச்சையாகி கண் விழித்தவன் தான் தற்போது அழவும் தெம்பற்று துவண்டு கிடக்கின்றான். அவனுக்கு துணையாக அருகிலே மணி அமர்ந்திருக்கிறான்.

மாலை வீடு நடப்புக்கு மீண்டிருந்தது.

ராஜேந்திரன், நாராயணன் குடும்பத்தார் மட்டும் எஞ்சியிருந்தனர். திகழோவியனுக்காக மணி அவனுடனே இருந்தான்.

கோவிந்தன் அப்போது உணர்வற்று அமர்ந்தவர் தான்... இன்னமும் யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. ஒதுக்கி வைத்த மனைவியென்றாலும் காதல் மனைவியாயிற்றே... துயர் அவரை வதைக்கத்தான் செய்தது.

வேண்டாமென்றாலும் உடனிருந்த பந்தம்... கல்யாணியின் இறப்பை அவரால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இரவாகியிருந்தது...

"காலையில வர்றேனுங் மாப்பிள்ளை" என்ற ராஜேந்திரன், தனது குடும்பத்துடன் வெளிவாயில் நோக்கி அடி வைத்திட...

"உன்ற மகனை கூட்டிக்கிட்டுப்போங்கங்" என்றார் கோவிந்தன். தனது நிலையில் மாற்றமில்லாது.

"சுகிர்தன் என்ட்ர கூடலாதாங் வர்றானுங்" ராஜேந்திரன் நின்று பதில் சொல்ல...

"நான் உம்மட ரெண்டாவது மகனை சொன்னேனுங்" என்றார் கோவிந்தன்.

"மாப்பிளை" என்ற ராஜேந்திரனின் முகம் வெளிறியது.

அன்று மனைவியிடமாவது உண்மையை சொல்லிவிடலாம் என்று தோன்றியிருந்தாலும், சொன்னால் அடுத்து என்னவாகுமென்பதை இடைப்பட்ட நாட்களில் யோசித்திருந்தவருக்கு, தெரியாமல் இருப்பதே நல்லதெனப்பட்டது.

காலத்திற்கும் மூடி மறைக்க நினைத்த விஷயம் சபை வருவதில் அரண்டு நின்றார் மனிதர்.

அத்தனை எளிதான காரியமா அவர் செய்யதது. தங்கைக்கு நல்லது செய்கின்றேன் என, ஒரு தாய்க்கும் மகனுக்குமான உறவையே முறித்து, மாற்றியமைத்து, இன்று அதனால் அந்த மகனின் வாழ்வே சூறைக்காற்றில் முறிந்த கொடியாய் துவண்டு நிற்கிறதே! காரணம் ராஜேந்திரன் என்பதே சரியாக இருக்கும். அவரின் அன்றைய செயலே இன்றைய பல அனர்த்தங்களுக்கு மூலம்.

கோவிந்தன் சொல்லியதில் அங்கிருந்த அனைவரும் புரியாது ராஜேந்திரனை ஏறிட்டனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த கல்யாணியின் புகைப்படத்திற்கு அருகே சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்த திகழோவியன் கூட அவரின் பேச்சினை இப்போதென்ன பூதம் கிளம்பப்போகிறதோ என்று கவனித்தான்.

"ரெண்டாவது மகனுங்ளா?" என்று கணவரின் கையை பிடித்து ஆட்டிய காமாட்சி, "என்னங்ண்ணா சொல்றீங்க?" என்று கோவிந்தனிடம் கேட்டார்.

"இருவது வருஷத்துக்கு மேல, பொறந்ததும் செத்துப்புட்டதா நெனச்சி, உன்ற மகனுக்காக இன்னமும் வருந்தி அழுவுறியே... அந்த மகன் அக்கட்டி உட்கார்ந்திருக்கான் பாரு. அவன் தான்" என்று திகழோவியனை கை காண்பித்தார்.

நெஞ்சில் உயிர் நிறையும்...

 

Author: STN - 03
Article Title: உந்தன் நெஞ்சில் உயிராக 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Kalai Karthi

Active member
Sep 21, 2025
409
141
43
Madurai
கல்யாணி ராஜேந்திரன் இருவரின் பாசத்தால் அம்மா மகனும் பிரிச்சது டூ மச்.
 
  • Love
Reactions: STN - 03

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
Hmm கோவிந்தன் முன்னாடியே சொல்லி இருந்தாலும்....கல்யாணி விட்டு இருக்கணுமே.....
உண்மையாவே ஏதும் செய்துப்பாங்களோனு பயத்தில், சின்ன காதலில் சொல்லாம விட்டுட்டாங்க கோவிந்தன்......

அச்சோ காமு நிலை????? தேவகி ஃபேமிலி அங்கையா இறுக்கி
 

Suheera Nusry

New member
Sep 16, 2026
9
0
1
Sri Lanka
சிலரின் சுயநலங்கள் மற்றவரின் வாழ்வில் பயங்கர விளையாட்டாய்...